பொதியவெற்பன் மணிவிழா நிதி--ஒரு வேண்டுகோள்

image

பொதி என்று நண்பர்களால் அழைக்கப்படும் தோழர் வெ.மு. பொதியவெற்பன்தான் சீரிய இலக்கியம் எனப்படும் தமிழின் சிறு பத்திரிக்கை இலக்கியத்தை எனக்கு 1983-84 களில் அறிமுகப்படுத்தியவர். குடந்தையில் அவருடன் 10 ஆண்டுகளுக்குமேல் பல இலக்கியக் கூட்டங்கள், இயக்கப் போராட்டங்கள் என ஒன்றாக இயங்கி உள்ளேன். எனது கல்லூரிக் காலத்தின் பெரும்பாலான மாலைகள் அவரது சிலிக்குயில் புத்தகப் பண்ணையில்தான் கழிந்தது. இதுவரையில் இலக்கியம் சார்ந்தும், இலக்கியத்திற்கு அப்பாலுமான நட்பு உண்டு அவரிடம். பாப்புலோ நெரூடாவை தமிழில் மொழி்பெயர்த்து அவரது பெயரிலேயே சிலிக்குயில் என்கிற பதிப்பகத்தையும் நடத்தி வந்தவர். சிலிக்குயிலுக்கு ஒரு செங்கவிதாஞ்சலி என்கிற பாப்லோ நெருடா பற்றிய அஞ்சலி நூலை வெளியிட்டவர்.

குறிப்பிடத்தக்க கவிஞர், புதுமைபித்தன் குறித்து முழுமையாக ஆராய்ந்து தனது ஆய்வை நிறைவு செய்த தமிழ் அறிஞர், சமூகப்பொறுப்புள்ள இயக்கப்போராளி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், கலை இலக்கிய பெருமன்றத்தில் இயங்கியவர் மற்றும் புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தவர். சிலிக்குயில் என்கிற பதிப்பு நிறுவனத்தையும் முனைவன் மற்றும் பறை போன்ற இதழ்களையும் கொண்டுவந்தவர். சிறுபத்திரிக்கை இயக்கத்தின் முன்னொடியும் முதல் சிறபத்திரிக்கையுமான மணிக்கொடியின் பொன்விழாவை தனிமனிதராக இருந்து முனைப்புடன் (அதில் நான், தோழர் அ. மார்க்ஸ் மற்றும் போ. வேலுசாமி போன்றவர்கள் பங்கு பெற்றிருந்தாலும்) கொண்டாடியவர். அதற்காக மணிக்கொடி பொன்விழா மலரை வெளிக்கொண்டுவந்தவர்.  குடந்தையில் உள்ள இலக்கியவாதிகளின் ஒன்று கூடல்களுக்கும், தீவிர விவாதத்திற்கும் களமாக அமைந்தது அவரது சிலிக்குயில் புத்தகப்பண்ணை. 1983-ஜுலைக் கலவரத்திற்குப் பிறகு, ஈழத் தமிழ்க் கவிதைகளை வெளிக்கொண்டுவந்தவர். தமிழில் “கவிதாநிகழ்வு“ எனகிற நிகழ்வை அறிமுகப்படுத்தி நடத்திவந்த அவர், பர்வீன் சுல்தானாவின் தீவிர இசைப்பிரியர். இசைக்கோவையாக ராகத்துடன் கவிதைகளை மேடைகளில் அரங்கேற்றும் திறன் கொண்டவர். தமிழில் தத்துவம் குறித்து நூட்களை சமீபத்தில் எழுதி வெளிக்கொண்டு வந்துள்ளார். அவரது பொன்விழா இதழில் அவர்பற்றிய எனது அனுபவங்களையும், இலக்கியத்தை வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் சொந்த வாழ்வை இழக்கிறார்கள் என்பது குறித்த ஒரு விசாரமாகப் பகிரும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அது ஓரிருநாட்களில் பதிவேற்ற முயல்கிறேன். கடைசிவரை இலக்கியம், புத்தகப் பதிப்பு, விற்பனை என வாழ்ந்து தனது சொந்த வாழ்வையே சூன்யமாக்கிக் கொண்டவர் என்றால் மிகையாகாது. அவரது மணிவிழா குறித்து அவரது பதிவிலும், தனிப்பட்ட முறையில் எனக்கு அஞ்சலிலும் அனுப்பப்பட்ட இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுகிறேன். தற்சமயம் கார் விபத்தில் காலில் அடிபட்ட நிலையில் சிகச்சையில் இருக்கிறார்.  இலக்கிய நண்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்வார்கள் என்கிற வேண்டுகோளுடன்..

சமூக ஓர்மைப் பதிப்பாள முன்னோடியும், சமூக மனசாட்சியான பன்முக ஆளுமையுமான வே.மு.பொதியவெற்பனின் 'பொதிகை--60' மணிவிழா நிகழ்வுகள் 10.05.08 அன்று 'வம்சி புக்ஸ்' சார்பில் திருவண்ணாமலையிலும், 29.08.08 அன்று கலை இலக்கிய பெருமன்ற கிளை சார்பில் குடந்தையிலும் நடைபெற்றன. மணிவிழா குழு சார்பில் சக பயணியர் தோழமைக் கெளரவிப்பாகவும், மருத்துவநல பராமரிப்பிற்காகவும் (கார் விபத்தில் கால்பாதிப்பு) நிதி திரட்டப்படுகிறது. நிதியளித்து உதவ வேண்டுகிறோம். நிதியளிப்பு நிகழ்ச்சி தஞ்சையில் முக்கூடல் ஏற்பாட்டில் தமிழ்ப்பல்கலை அரண்மனை வளாகத்தில் 07.12.08 ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.
தங்கள் பங்களிப்பினை அளித்து உதவுக.

இங்ஙணம்

ஞானி, அ.மார்க்ஸ், இன்குலாப், கல்விமணி, த.பழமலை, தொ.பரமசிவம், வீ.அரசு, சி.மோகன், திலீப் குமார், கால.சுப்பிரமணியன், நா.விச்வநாதன், எம்.ஜி.சுரேஷ், மு.ராமசாமி, இளமுருகன், பா.மதிவாணன் , அரங்க.சுப்பையா, சுதீர் செந்தில், தேவேந்திர பூபதி, ந.முருகேச பாண்டியன், பிரேம், ரமேஷ், மாலதி மைத்ரி, அரச.முருகுபாண்டியன், இரத்தின கரிகாலன், வேலு சரவணன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் புது எழுத்து, முக்கூடல், ட்ரீம்ஷாப், மருதா, பொன்னி

பொதியவெற்பன் தொடர்பு முகவரி:

வே.மு. பொதியவெற்பன், சிலிக்குயில் புத்தகப்பயணம்,
சாஸ்தா நிவாஸ் மாடி, மனை எண்:31 , ராஜேஸ்வரி நகர், தஞ்சாவூர்-613005
கைபேசி: 98947 74213

வங்கிக்கணக்கில் செலுத்த:
V.M.POTHIYA VERPAN, A/C NO: 1854101031269 Canara Bank, Arul Nagar Branch , Thanjavur
http://chilikkuyil.blogspot.com/

குறிப்பும் அறிவிப்பும் ஜமாலன். 24-11-2008

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.