யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்.

ஈழப்போரில் தமிழர்களை கொண்று குவித்து உடல்களை ஏற்றிச் செல்லும் மிகக் கொடுமையான பாசிசத்தை வெளிப்படுத்தும் சிங்கள பேரிணவாத அரசு 1996-ல் ஈழமக்களை வெளியேற்றியபோது எழுதப்பட்டு காலக்குறியில் வெளியிடப்பட்டது. நகலச்சாக காலக்குறி மிகக் குறுகிய வட்டத்தை மட்டுமே அன்று கொண்டிருந்ததால். இங்கு அதனை தற்சமயம் வெளிப்படும் சிங்களப் பேரிணவாத அரசின் பாசிசப் படுகொலைகளைக் கண்டித்து மீள்பதிவடுகிறேன்.

யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்.

தினவாழ்வு என்கிற மலங்கழிக்கும் வேலைகளுக்கு மத்தியில் தமிழக மக்கள் யாழ்நகரில் நடைபெறும் போரைக் கண்டித்து ஒருநாள் முழுகதவடைப்பு (1996-ல் செய்தது. இன்று கண்டன அறிக்ககைள்கூட வெளிப்படவில்லை.) நடத்தியிருக்கிறார்கள். பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். நம் 'தமிழ்ழ்த்த்த.... தலைவர்கள் தங்களது ஆட்சிபீட அபிலாஷைக்கு ஏற்ப 'காய்தல், உவத்தல் இன்றி...' ஒன்றுகூடி வடம் பிடித்திருப்பது பெரிய விஷயம்தான். இப்படி சில அதிசயங்கள் எப்பொழுதேனும் நிகழ்ந்துதான் தொலைத்து விடுகிறது. மனத்துணிவை இழக்கச் செய்யும் இப்போரும்கூட ஒருநாள் மறதி எனும் போதையில் ஆழ்த்தப்பட்டுவிடும். ஆனால், குழந்தைகளை தங்கள் மார்புகளிலும், தோளிலும், வயிற்றிலும் சுமந்தபடி நகரைவிட்டு வெளியேறும் எண்ணற்ற ஈழத்தமிழ் மக்களுக்குள் ஒரு கொடுங்கனவாய், நினைவாய் காலமெல்லாம் உள்ளுக்குள் இறங்கி வன்முறையில் ஆழ்த்தப் போகும் துயருக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? மனிதன் இழப்பதற்கு தன் உடல்களைத்தவிர ஏதுமற்றவனாக ஆக்கப்பட்டுவிட்ட இந்த கொடூரம் நமக்குள் மெளனமாய் உறைந்துபோனது எப்படி? எதன் பொருட்டு மனிதர்கள் அழிக்கப்பட்டாலும் அதன் மீது காறி உமிழும் துணிச்சல் அற்றுப் போனது ஏன்? சுத்த ஆரிய இரத்த வெறியன் ஹிட்லரால் அன்று ஜொமனியல் யூதர்கள் விஷ வாயுவிற்கு பலியாக்கப்பட்டதை, ஏதுமறியாத, இன்னும் பிறக்கக்கூட இல்லாத ஜப்பானிய எதிர்கால சந்ததியினரை அமேரிக்க ஆணு ஆயுதம் தாக்கி அழித்ததை போரின் வெற்றியாக கண்டுகளித்த நம் சுரணையற்றத்தனம், இன்று மனிதர்களை மனநோயாளிகளாக ஆக்கும் போரின் கொலைவெறி மூர்க்கமாக வளர்ந்து நம்மை அழிக்கத் துவங்கி உள்ளது. இதனை அன்றே அடியோடு துடைத்தழிக்க முடியாமல் போனது ஏன்? அணு ஆயுதங்களாலும், உயிர்பறிக்கும் கொலைவெறி தொழில்நுட்பங்களாலும் அளவிடப்படும் நாகரீகமும், அறிவும், வளர்சியும் நமக்கு தேவையா? யாழ் மட்டுமல்ல இன்னும் பல நகர்கள் வரலாற்றின் கோர நாடகத்தில் அழிந்தும், அழிக்கப்பட்டும் வருகின்றன. இதனை எதிர்க்கும் உணர்வற்று இருப்பது எதனால்? கடைசியில் மதங்களாலும், அரசியலாலும், அதிகார வெறியாலும் பாதுகாப்பற்றவனாக தனியனாக ஆக்கப்பட்டிருப்பது ஏன்? மனித உடலை காப்பாற்ற லாயக்கற்ற இந்த அரசுகளும், ஆட்சிகளும், வாழ்க்கை முறையும் தேவையா? எங்கிருந்து துவங்கியது இந்த அழிவு? யார் தந்த உரிமை இது? எதை நோக்கி இந்த அழிவு? மனித வளர்ச்சிக்கா? அல்லது தேசப்பற்றா? தியாகமா? மனித வளர்ச்சிக்காகவெனில், மனிதனை அழித்து மனிதனை வளாக்கும் இந்த உலகும், இதன் அறிவும், நாகரீகமும் தேவையா?

உலக மக்கள் அனைவரையும் சிக்கவைக்கப்பட்டுள்ள இந்த பொறியில் இருந்து தப்ப, ஏகாதிபத்திய சதிவலையை அறுத்தெறியப்போகிறோமா? அல்லது நாமும் ஒருநாள் ஈழத்தமிழனைப்போல, போஸனியனைப்போல, பாலஸ்தீனியனைப்போல, சோமாலியனைப்போல, ஆப்பிரிக்கனைப்போல ... அதிகாரவர்க்கத்தால் அனாதையாக ஆக்கப்படும் நாளை எதிர்நோக்கி உள்ளோமா? ஒரு ஆப்பிரிக்கன் ஒடுக்கப்பட்டபோது, ஒரு கருப்பன் இழிவுபடுத்தப்பட்டபோது, தாழ்த்தப்பட்டவன் என்று சகமனிதனுக்கு சாணிப்பால் புகட்டியபோது நாம் சாதித்த மெளனம் இன்று நம்வீட்டு கொல்லையில் சொந்த இனத்தினர் மீதான போராக வந்து நிற்கிறது. என்ன செய்யப்போகிறோம்?
போஸ்னிய முஸ்லிம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கடத்திச் செல்லப்பட்டு "Concentration Camp"-களில் செர்பிய விந்து பாய்ச்சி, செர்பிய இனவிருத்திக்காக "செட்னிக்குகளைப் பெற்றுத்தா"-வெனச் சொல்லிச் சொல்லிக் கூட்டமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, துப்பாக்கி முனையில் குழந்தைகளை பிரசவித்து, அப்பிள்ளகைளை தனியாக பிரித்து செர்பியராக வளர்த்து வரும் கொடுமைக்கு நாம்தான் மெளனசாட்சி. இன்று அது யாழ் நகரிலும், நாளை அது உலகெங்கும் நடைபெறலாம். இக்கொடுமைகள் தொடர வேண்டுமா? இவையெல்லாம் நம்மிடம் வெறும் இரக்கத்தையும், பரிவுணர்ச்சியை மட்டுமே உருவாக்கமெனில், அதிகார வர்க்கத்தைவிட மிக மோசமான வன்முறையை அம்மக்கள் மீது நாம் செலுத்துகிறோம் என்றே பொருள். அவர்களுக்கு தேவை நம் பரிவுணர்ச்சி அல்ல? நமது எதிர்ப்புணர்வு! நமது பலம்! கடைசி மனிதனாக ஆக்கப்பட்ட போதிலும், சக மனித உடலின் மீது வாஞ்சையும், காதலும் கொண்டு அதைக் காக்கத் துடிக்கும் நம் உணர்ச்சி! இவையெல்லாம் அமுக்கப்பட்டு, மெளனப்படுத்தப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, காயடிக்கப்பட்ட ஒரு பிண உடலை சுமந்து திரிவதும், அதற்கு நாகரீகம் என்கிற அரிதாரம் பூசி அறிவு என்கிற ஆடை அணிவித்து அரசியல், ஆட்சி இன்னபிற பெயரிட்டு ஏகாதிபத்தியம் கட்டுவித்துள்ள மன அமைப்பு தரும் எச்சில் சுகத்திற்காக இன்னும் நாம் இந்த சவ உலகில் வெறும் சதைப்பிண்டமாய் சமையப்போகிறோமா? அல்லது உயிர்ப்புள்ள மனிதனாக வாழப்போகிறோமா?

என்றேனும் ஒருநாள் 'மனித வாழ்வு' அமையாதா? என்கிற ஏக்கத்துடன் எத்தனை நாள் ஏங்கித் தவிக்கப் போகிறோம்? ருவாண்டா உள்நாட்டுப் போரில் கொலைசெய்யப்பட்ட கறுப்பின உடல்களை 'புல்டோசர்' வைத்து வாரிக்கொட்டி (இன்று ஈழத்தில் லாரிகளில் குவிக்கும் தமிழரின் உடல்களைப் போல்) மூடியபோது மனித உடல்கள் வெறும் குப்பைகளாய் ஆக்கப்பட்டுவிட்ட கோரத்தை, கெள்வி எழுப்பாமல் போனதன் காரணம் என்ன? கொடுமைக்கெதிராக குரல் கொடுப்பதும் போராடுவதும் 'தீவிரவாதம்' என முத்திரைக் குத்தி நம் போராட்டத்தை செல்லாக்காசுகளாக்கி வரும் அதிகாரத்திற்கு இனயும் நாம் பணிந்துதான் போகவேண்டுமா? 'வளர்ச்சி' என்கிற பெயரால் நாகரிகம் போர்த்திய நகரத் தெருக்களில் கூக்குரலிட்டு ஊர்வலம் போவது அநாகரிகம் எனக்கூறி எலும்பும் தோலுமாய் ஆக்கப்பட்ட கிராம வயல்வெளிகளில் ஒதுக்கித் தள்ளும் 'நாகரிகத்தை' நாம் ஒதுக்குவோம். நமக்கான வாழ்வை, நமக்கான நாகரிகத்தை, நமக்கான சாலைகளை நம் இடங்களில் நாம் உருவாக்குவோம். 'இதுதான்' என உருவாக்கி நம்மீது திணிப்பதை எதிர்பதையன்றி வேறு வழியில்லை. இன்று 'வதை' கொண்டு மனித வாழ்வைக் கட்டுப்படுத்தும் உலகத்தை நாம் அமைதி கொண்டு மாற்றிட இயலாது. 'மாறிடும்' என மாறாமல் சோம்பியிருந்து கொண்டு மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் நாம் மாறினால் ஒழிய 'மாற்றம்' மாற்றமற்ற நம் உடல்களை பலிவாஙகிக் கொண்டேயிருக்கும், மாற்றம் நம் வெளிகளி்ல் ஏற்படாதவரை.

-ஜமாலன்-கான் (காலக்கறி ஜனவரி 1996)

15 comments:

தமிழ்நதி சொன்னது…

'ம்...!'வாசித்தேன் எனச் சொல்லிச் செல்கிறேன்... இது எக்காலத்துக்கும் பொருந்தும் கட்டுரை. மிக உணர்ச்சிமயமான எழுத்து... எழுத்தின் மீதிருக்கும் நம்பிக்கையும் சிறிது சிறிதாக வற்றிவருகிறது நண்பரே!

ஜமாலன் சொன்னது…

தமிழ்நதி said...

நண்பர்.. சரிதான் மனச்சிதைவு இதிலிருந்து தப்பிச் செல்வதற்கு சரியான மார்க்கம்தான். என்ன செய்வது?

வெற்றி சொன்னது…

ஜமாலன்,
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பல சத்திகளில் தமிழகம் மிகவும் முக்கியமானது. இது பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவு எழுதுகிறேன்.

காலமறிந்து, தேவையறிந்து சரியான நேரத்தில் தக்க முடிவுகளைத் தமிழகத் தலைவர்களும், தமிழக மக்களும் எடுக்க வேண்டும் என்பது பல ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பும் அங்கலாய்ப்பும்.

கட்சி பேதமற்று,தமிழக மக்களும் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேணும் என்பது என் அவா.

"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணி" வேலுப்பிள்ளை பிரபாகரன் காலத்தில் ஈழத் தமிழினம் விடிவு பெற தமிழகத்து உறவுகள் உதவ வேண்டும் என உரிமையுடனும், அன்புடனும் பல ஈழத்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜமாலன் சொன்னது…

வெற்றி said...

//ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பல சத்திகளில் தமிழகம் மிகவும் முக்கியமானது. இது பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவு எழுதுகிறேன்.//

பதிவிற்காக காத்திருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

பெயரில்லா சொன்னது…

ஜமாலன்,
இலங்கைத்தமிழர்களின் தேசிய விடுதலைக்கு மாத்திரமன்றி ஜனநாயக விடுதலைக்கும் உங்கள் ஆதரவினை அளியுங்கள்.
கரும்புலி சடலங்களின் நிர்வாண ஊர்வலம் தொடர்பாக தயவுசெய்து இந்தக்கட்டுரையைக் கொஞ்சம் படிக்கவும்.
http://www.thenee.com/maveerar1.pdf


செ.குணரத்தினம்

ஜமாலன் சொன்னது…

அணாணி என்கிற குணரத்தினத்திற்கு..

//இலங்கைத்தமிழர்களின் தேசிய விடுதலைக்கு மாத்திரமன்றி ஜனநாயக விடுதலைக்கும் உங்கள் ஆதரவினை அளியுங்கள்.//

எனது பதிவை சரியாக வாசியுங்கள். அது எல்லா ஒடக்குமுறைக்கும் எதிரானதுதான்..

பெயரில்லா சொன்னது…

ஜமாலன்,
உங்கள் பதிலுக்கு நன்றி.
தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டமென்ற பெயரில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக்குரலை நசுக்கும் பாசிச ஒடுக்குமுறைக்கெதிராகவும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராடும் தமிழ் பேசும் மக்களின் தேசிய ஜனநாயகப்போராட்டத்தினை ஆதரிக்க வேண்டுமென்று வேண்டுகின்றேன்.

செ.குணரத்தினம்

Unknown சொன்னது…

ஜமாலன்,

இலங்கையின் அரசியலமைப்பும் அரசாங்கத்தை அமைக்கும் கட்சிகளின் கொள்கை /சிந்தனை நிலையும் சிங்களப்ப்பேரினவாத கருத்தியலில் இருந்து விடுபட
முடியாத நிலையுள் உள்ளன.
அதிகாரத்தைப் பகிர்வது சிங்கள இனத்தினது அழிவுக்கு வழிவகுக்காது என்பதை சிங்களமக்களுக்குச் சொல்ல எந்த சிங்களக்கட்சியும் தயாரில்லை. சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மறுப்பது அதன் இயங்கியல்.
ஆக சிங்களதேசியவாதத்தின் இயங்கியல் தெளிவானது ஆனால் முட்டாள்த்தனமானது சிங்கள இனவாதம் என்னும் புற்று நோயால் அழிவது தாங்கள் வாழும் இலங்கையே என்பதை அவர்கள் அறியவிலை.அறிந்தவர்கள் அரசியற்தளமற்றிருக்கின்றனர்.
மேலும் ஊழலும் எதேச்சாதிகாரமும் ஜனநாயக மறுப்பும் நிறைந்த அடித்தளத்தில் கட்டப்பட்ட நீதி நிர்வாக அமைப்புக்களும் இன்னும் நிலைமையை மோசப்படுத்துகின்றன
மறுபுறத்தில் தமிழ்த்தேசியம் என்னும் கருத்துருவத்திற்கு அரச வடிவம் கொடுக்கும் நடைபயணத்தில் விடுதலைப்புலிகள் உள்ளார்கள். தமிழ் தேசியத்தின் இயங்கியலும், அதன் அர்ப்பணிப்பும் வேட்கையும் நிறைந்த இயக்கத்திற்கப்பால் முரண்பாடுகளைக் கொண்டதாகவேயுள்ளது. தமிழ்தேசியத்தின் உள்ளக முரண்பாடுகள் அதன் அரசியல் அளிக்கையில் குறைபாடுகளைத்தோற்றுவிக்கின்றன.
ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் மேற்கூறிய இரண்டு சக்திகளும் தாங்கள் மட்டுமே மோதி ஒரு முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலைகள் இருந்திருப்பின் இலங்கைப்பிரச்சனையின் பரிமாணம் வேறுபட்டதாகவிருந்திருக்கும். தமிழ்த்தேசியம் தன் தலைவிதியை எப்பொழுதோ தீர்மானித்திருக்கும்.
இலங்கைப்பிரச்சனை பிராந்திய மற்றும் சர்வதேச் வல்லரசுகளின் கொள்கைகளினதும் நலன்களினதும் இயங்கியலுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் என்பதும் அதில் பலிகடாவாக மீண்டும் சிறுபான்மையினமே ஆகுமென்பதும்
புதிய உலக ஒழுங்கை அவதானிப்பவர்களுக்குப்புரியும்.
ஆக இடியப்பச்சிக்கலாகியிருக்கும் இலங்கைபிரச்சனை ( இலங்கையில் மட்டுமல்ல எங்கெல்லாம் சிறுபான்மையினர் அல்லது ஒடுக்கப்படுபவர்கள் போராடுகிறார்களோ அங்கேல்லாம் முதன்னிலைப்படுவது அந்தமக்களின் நலன்கள் அல்ல)
இன்னும் இரத்தத்தையே காணப்போகிறது.
இடியப்பமும் சொதியும் போல
பிரச்சனையும் இரத்தமும்!!

தேவஅபிரா

ஜமாலன் சொன்னது…

தேவஅபிரா said...

வாங்க. நன்றி.

இவை தீர்க்கமாக யோசிக்க வேண்டிய விடயம்தான்.

கானா பிரபா சொன்னது…

ஜமாலன்

பதிவைப் படித்தேன், மிக்க நன்றிகள்

ஜமாலன் சொன்னது…

வாங்க கானா பிரபா..

நன்றி.

கையேடு சொன்னது…

//மெளனப்படுத்தப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, காயடிக்கப்பட்ட ஒரு பிண உடலை சுமந்து திரிவதும், அதற்கு நாகரீகம் என்கிற அரிதாரம் பூசி அறிவு என்கிற ஆடை அணிவித்து அரசியல், ஆட்சி இன்னபிற பெயரிட்டு ஏகாதிபத்தியம் கட்டுவித்துள்ள மன அமைப்பு தரும் எச்சில் சுகத்திற்காக இன்னும் நாம் இந்த சவ உலகில் வெறும் சதைப்பிண்டமாய் சமையப்போகிறோமா? அல்லது உயிர்ப்புள்ள மனிதனாக வாழப்போகிறோமா?//

என்னை வெகுவாக பாதித்த வரிகள் பதிவில் பல இருப்பினும் இதை மட்டும் குறிப்பிடுகிறேன்.
__________
போலித் தலைவர்களுக்கும் அவர்கள் நிழலில் குளிர்காயும் அரசு இயந்திரத்திற்கு மக்களும்,
சுரண்டல் மற்றும் சுயநலக் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களும்,
ஆதிக்க மனோபாவம் மட்டும் கொண்ட குடும்பத் தலைவர் தலைவிகளுக்கு குடும்பமும்,
ஒரு அத்தியாவசிய அனாவசியமாகிப் போகனது வேதனையான விசயம்தான்.

//நாம் மாறினால் ஒழிய 'மாற்றம்' மாற்றமற்ற நம் உடல்களை பலிவாஙகிக் கொண்டேயிருக்கும், மாற்றம் நம் வெளிகளி்ல் ஏற்படாதவரை.//

ஜமாலன் சொன்னது…

கையேடு said...

//போலித் தலைவர்களுக்கும் அவர்கள் நிழலில் குளிர்காயும் அரசு இயந்திரத்திற்கு மக்களும்,
சுரண்டல் மற்றும் சுயநலக் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களும்,
ஆதிக்க மனோபாவம் மட்டும் கொண்ட குடும்பத் தலைவர் தலைவிகளுக்கு குடும்பமும்,
ஒரு அத்தியாவசிய அனாவசியமாகிப் போனது வேதனையான விசயம்தான்.//

அருமையாகச் சொல்லலியுள்ளீர்கள். அருமை என்கிற வார்த்தை எல்லாம்கூட அர்த்தமற்றவைதான். உங்கள் உணர்வில் எனது ஒத்ததிர்வைக் காணமுடிகிறது.

உங்கள் பதிவில் அனுஆயத ஒப்பந்தம் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு பதிவு வழியாக பேசலாம். நீங்கள் நுட்பமான ஆள்தான் என்பதை ஜன்னலில் புரிந்து கொண்டேன். தொடர்வோம்....

அசுரன் சொன்னது…

//கொண்று// //பேரிணவாத///

உங்களது கட்டுரைகள் வாசிக்க ஆர்வத்தை தூண்டுவதாகவும், சிந்திக்க தூண்டுவதாகவும் உள்ளது ஆயினும் 'ன' க்கு பதில் 'ண' தட்டச்சு செய்து விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இது எழுத்துப் பிழை என்பதை விட தட்டச்சு பிழை என்பதாகவே தோன்றுகிறது.

பிரச்சனை என்னவென்றால் 'காலனி' என்று வரும் இடத்தில் எல்லாம் 'காலணி' என்று தட்டச்சியுள்ளீர்கள். இது அர்த்தத்தை ஒட்டு மொத்தமாக மாற்றிவிடுகிறது. உங்களது அறீமுகப் பகுதியிலும் கூட இந்த தவறு உள்ளது.

அசுரன்

ஜமாலன் சொன்னது…

அசுரன் said...

தோழர். உங்களை பின்னோட்த்தில் பார்ப்பது மகிழ்சியாக உள்ளது. நன்றி.

//உங்களது கட்டுரைகள் வாசிக்க ஆர்வத்தை தூண்டுவதாகவும், சிந்திக்க தூண்டுவதாகவும் உள்ளது ஆயினும் 'ன' க்கு பதில் 'ண' தட்டச்சு செய்து விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இது எழுத்துப் பிழை என்பதை விட தட்டச்சு பிழை என்பதாகவே தோன்றுகிறது.//

இரண்டுமே. பொதுவாக இது எனது கவனக்குறைவுதான். தட்டச்சில் நான் 95-லிருந்து இன்றுவரை பயன்படுத்தும் 4 வது பாஃண்ட் இது. அதனால் மூளையில் தட்டச்சுக் குழப்பமும் இருக்கிறது. சமீபத்தில் பழகியது ஒரு காரணம். தவறை திருத்திக் கொள்கிறேன்.

//பிரச்சனை என்னவென்றால் 'காலனி' என்று வரும் இடத்தில் எல்லாம் 'காலணி' என்று தட்டச்சியுள்ளீர்கள். இது அர்த்தத்தை ஒட்டு மொத்தமாக மாற்றிவிடுகிறது. உங்களது அறீமுகப் பகுதியிலும் கூட இந்த தவறு உள்ளது.//

திரும்ப ஒருமுறை என் எல்லா பதிவுகளையும் படித்து "ண" "ன" வை சரி செய்தவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.