ஈவ் இன்ஸ்லரின் ”சுவர்” கவிதை – அடையாளமாதல் மற்றும் இருப்பாதல் பற்றிய ஒரு வாசிப்பு.

பெருந்தேவியின் ”இன்ன பிற”-வில் அவரால் மொழிபெயர்த்து செய்யப்பட்ட கவிதை குறித்த ஒரு வாசிப்பே இப்பதிவு. கவிதையும் குறிப்பும் ”இன்ன பிற”-வில் இருந்து. முதலில் அதை வாசித்துவிடுங்கள்.

s-EVE-ENSLER-large ஈவ் இன்ஸ்லர்-ன் “நானொரு உணர்வுபூர்வமான பிறவி” I am an emotional creature (2010) என்கிற புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட ஒரு “தனிமொழி” (monologue) இது. அமெரிக்க பெண்ணிய எழுத்தாளரான அவரது “The Vagina Monologues” என்ற தலைப்பிடப்பட்ட நாடகம் புகழ்பெற்றது. உலகின் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டதும்கூட.

(சமீபத்தில் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த கவிதை/மொழி இது, பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன்.)


சுவர்
ஜெருசலம், இஸ்ரேல்
என் தோழி அதீனா என்னை மேற்குக்கரைச் (West Bank) சுவரின்
அந்தப்பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கே அது இருக்கும்விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன்.
உயரமாக இருக்கிறது அது இன்னும்.
தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.
கடினமான சிறுமைகொண்ட சிமெண்ட்டின் பிரிவுச்சக்தி, வீடுகள்,
நிலம், மற்றும் நண்பர்கள்
திரும்பப் போகிறேன்
நிறைய கதைகளைக் கேட்கிறேன்.
இந்தப்பக்கத்தில் தண்ணீர் இல்லை
கிணறுகள் இல்லை
மாதுளையோ அத்தியோ இல்லை
வேலைகள் இல்லை
வெளியேபோக வழியுமில்லை.
வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு
போராட்டம் செய்கிறேன்.
ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்
என்பது புரியவில்லை அவர்களுக்கு.

ரகசியமாக அது.
வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.
மாதங்களாக தொடர்கிறது.

சுவர் என்னை மாற்றுகிறது.
நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.
மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.
அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.
என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்
அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.
திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
முன்பெல்லாம்போல என் தந்தை
என்னைப் பார்ப்பதில்லை.
அண்ணனோ உரத்துப் பேசுகிறான்
என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்
இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.
இப்போதும் முடியாது என்கிறேன்.
எனக்கு உளச்சிக்கல்கள் இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.
துப்பாக்கிசுட நான் பழகமாட்டேன்.
சிறைக்குப் போகிறேன்.
ராணுவத்தின்/சிறையின் சீருடையை அணிய மறுக்கிறேன்.
தனிச்சிறையில் வைக்கப்படுகிறேன்
அது என்னை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறது என்பதைச் சொல்லவில்லை.
ஒவ்வொரு இரவும்
என் வயதொத்த ஒரு இளம்பெண், பதினெட்டுபோல வயதிருக்கும்,
என் செல்லில் உலாவுகிறாள்.
அவள்தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.
அவள் நிர்வாணமாக இருக்கிறாள். பசியோடு இருக்கிறாள்.
எனக்கு எதையோ தெரியப்படுத்த நினைக்கிறாள்.
அவளுக்குத் தொண்டை அடைக்கிறது.
எலும்பின் அவள் கைகள் 
சுவரைப் பிறாண்டுகின்றன.
அவள் ஒரு கனவா, இல்லை ஒரு நினைவா,
சொல்லத் தெரியவில்லை எனக்கு.
என்னை அவள் பீடிக்கிறாள்
அல்லது
விடுவிக்கிறாள்.

- ஈவ் இன்ஸ்லர்

ஈழப் போராட்டத்துடன் தமிழ்சூழலுக்கு அறிமுகமான கதையாடல் வகைப்பட்ட கவிதை இது.  பொதுவாக, அரசியல் கவிதைகள் கதையாடல் வழியாகவே ஒரு தன்னெழுச்சி உணர்வை உருவாக்கக் கூடியவை. இவ்வகைக் கவிதைகள் பிரச்சாரமாக ஓங்கி ஒலிப்பதோ, தனது அரசியலை நேரடியாக வைப்பதோ இல்லை. ஒரு கதையாடலை பிரதியாக முன்வைத்துவிட்டு நகர்ந்துவிடும் கதைசொல்லி, பிரதியின் வாசல்களை திறந்து வைத்து விடுகிறாள். ஒவ்வொருவரும் ஒரு வாசல் வழியாக நுழையலாம். அப்படி ஒரு வாசல்தான் இது. மற்றபடி கோணார் உரை போடுவதாக கருதவேண்டியதில்லை. 

INCwall18பாலஸ்தீனிய ”தீவரவாதி”-களிடமிருந்து 'யூதர்களை பாதுகாப்பதற்காக' என்ற காரணத்தை சொல்லி, சர்வதேச விதிமுறைகளையும், மனித உரிமைகளையும், சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி இஸ்ரேலிய அரசால் கட்டப்பட்ட மிக நீளமான சுவரே ”மேற்குகரை சுவர்”. சுமார் 650 கி.மி. நீளமும் (மேலதிக விபரங்கள் இங்கு) 25 அடி (8 மீட்டர்) உயரமும் உள்ள கான்கிரீட் சுவர். ஒரு நாட்டிற்குள் நடத்தப்பட்ட பாகப்பிரிவினை இது. இனவெறி சுவர் (Apartheid Wall) என்று பாலஸ்தீனியர்களாலும், பாதுகாப்பு சுவர் (Security Wall) என்று இஸ்ரேலியர்களாலும் அழைக்கப்படும் இச்சுவரை, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட உலக-அமைதிக்கான அமைப்புகள் “சுவர்” என்ற சொல்லால் மட்டுமே கவனமாக அழைக்கின்றன. அதையே தலைப்பாகக் கொண்ட,  இக் கவிதை சொல்லாடல் அரசியலின் முதல் தடத்தை பதிக்கிறது. “சுவர்“(1) யூதர்களின் மத-இன-தொன்ம அடையாளத்துடன் உறவு கொண்ட வழிபாட்டு அடையாளமாகவும், வரலாற்று அடையாளமாகவும் மட்டுமின்றி ஒரு நில அடையாளாகவும் மாற்றப்பட்டுள்ளது கவனப்படுத்தப்பட்டுள்ளது கவிதையில். மதம், இனம் என்கிற கருத்துருவங்களால் பிரிக்கப்பட்ட பாலஸ்தீன்-இஸ்ரேல் வரலாற்றை, மேற்குக்கரையில் பிரிக்கப்பட்ட ஒரு சுவரை உருவகப்படுத்தி பேசுகிறது இக்கவிதை. 

அதீனா என்ற தோழியால் அழைத்துச் செல்லப்படும் கவிதையின் “நான்“ என்ற அடையாளம், இப்படிக் கூறுகிறது, அந்த பக்கச் சுவர் உயரமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது என்று. அதாவது, இந்த பக்கச் சுவர் உயரமாக இல்லை என்பதுடன், இப்பக்கச் சுவருக்கு பழகிய நானாக உள்ளது என்பதே உட்பொருள். நிலத்தை அபகரித்தவனுக்கு சுவர் பாதுகாப்பு என்பதால் உயரம் குறைவானது, நிலம் அபகரிக்கப்பட்டவனுக்கு சுவர் தடுப்பு என்பதால் உயரமானது. ஒரே சுவரின் இருபுறப் பார்வைகளால்  உருவாகும் உயர வேறுபாடு முக்கியம். இந்த வேறுபாட்டை உணர்ந்த மாத்திரத்தில் “நான்“ இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து பாலஸ்தீனிய அடையாளத்திற்கு மாற்றமடைகிறது. 

”உயரமாக இருக்கிறது அது இன்னும்.
தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.”

வாசிக்கும் நாம் தாண்ட ஹெலிகாப்டர் வேண்டுமெனில், கவிதையின் நான் எப்படி போனது என்கிற கேள்வி உள்ளது. அந்த நான் சுவருக்கு அப்பாலான அடையாளமாக மாறியதால், அதன் இருப்பும் சுவருக்கு அப்பாலானதாக உள்ளது.  இந்த சுவர் தாண்டல் அடையாளமாதல் எனும் மொழிச் செயலால் நடக்கிறது. அதாவது, கவிதையின் நான் தன்னடையாளத்தை அழிக்கிறது. அது மற்றமையாக மாற்றமடைகிறது. அதனை விவரிக்கும் விவரணைகள் வருகின்றன. அதன் தொடர்ச்சியாக,

ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்
என்பது புரியவில்லை அவர்களுக்கு

என்பதுவரை இந்த மற்றமையாகவே நான் செயல்படுகிறது. இங்கு சிறுமி என்கிற பெண்-அடையாளம் பெறும் நான், இனம் என்கிற மற்றொரு அடையாளத்தையும் பெறுகிறது. பெண் மற்றும் பாலஸ்தீனியவள் என்ற இரண்டு மற்றமைகளாக இங்கு அடையாளப்படுகிறது.

“இந்த ரகசிய செயல்பாடு பல மாதங்களாகத் தொடரப்படுவதன்” வழியாக, அதாவது, சுவருக்கு அப்பால் சென்று அங்கு நிகழும் செயல்களி்ல் பங்கு பெறுவதால், ஒடுக்கப்பட்ட இன-அடையாளமான பாலஸ்தீனிய அடையாளத்திலிருந்து பாலஸ்தீனிய “இருப்பு“-(2)க்கு மாற்றமடைகிறது. இதற்குபின் கவிதை ஒடுக்கப்பட்ட-இருப்பு அல்லது சிறுபான்மை-இருப்பு என்கிற வெளியிலேயே பயணிக்கிறது. கவிதையின் நுட்பம் இந்த தளமாற்றம்தான். இது பிரதிநிதித்துவ அரசியல் அல்ல என்பது முக்கியம். இக்கவிதையில் உள்ள நான் வழக்கமான கவிதைகளில் காணப்படும் ஒடுக்கப்பட்டவரின் பிரதிநிதியாக இல்லாமல், சூட்சமமாக ஒடுக்கப்பட்ட மற்றமையின் இருப்பாக மாறிவிடுகிறது. அடையாளமாதலில் இருந்து இருப்பாதலை நோக்கி நகரும் இந்த மாற்றம் முக்கியமானது.

INCwall9j ”சுவர் என்னை மாற்றுகிறது” என்பதற்குப்பிறகு எல்லா நிகழ்வுகளும் மற்றமையின் இருப்பிலிருந்து விவரிப்பதாக மாறிவிடுகிறது. குரலில் நுட்பமான மாற்றங்கள் ஏற்படுவதை கவிதை மொழியில் உணரலாம். அதாவது ஆதிக்கத்தை மறுப்பது என்பதாக குரல் இறுக்கமானதாக மாற்றமடைகிறது. இங்கு கவிதையின் “நான்“ தனது மற்றமை இருப்பையே தனது தன்னிலையாக உணர்கிறது. இந்த “நான்“ என்கிற யூத தன்னிலைக் கட்டமைவிற்கான அரசு, மதம் மற்றும் இராணுவம் சார்ந்த சடங்குகளை நிறுத்திக் கொள்ள முனைகிறது,

”நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.
மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.
அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.”

இவ்வரிகளில் உள்ள சவரம் செய்தல், மாமிசம் உண்ணாமை இவற்றிற்கான கலாச்சார சங்கேதங்கள் நமக்கு புரிபடவில்லை. ஒருவேளை இவ்வரிகளில் இராணுவ ஒழுங்கமைப்பிற்கான சடங்குகளான வலு, நேர்த்தி என்பதை மறுப்பதற்கான குறிப்பாக இருக்கலாம்.

இதற்கு பிறகு, கவிதை பல நுட்பமான வரலாற்றை உள்ளடக்கி எழுதிச் செல்கிறது. இதனுள் இயங்கும் அமைப்பு, உருவாக்கும் வரலாற்றுக் காரணிகள் பற்றிய புரிதல்தான் முக்கியம் எனக் கருதுகிறேன். இக்கவிதையில் சுவர் துவங்கி கவிதைக்குள் வரும் பாலஸ்தீனப் புரட்சியாளர்கள், தாத்தா, அப்பா மற்றும் அண்ணன் என்கிற ஆணடையாளங்கள் வரலாற்றின் இயக்க சக்தியாக காட்டப்படுகிறது. வரலாறு என்பது ஆண்களுக்காக கண்டடையப்பட்ட ஆணிய கதைசொல்லல் என்பதை சொல்வதைப்போல உள்ளது.

இதற்கு பிந்தைய வரிகள் யூத வரலாற்றின் 3 முக்கியக் காலகட்டங்களை குறிப்பதாகப் படுகிறது. யூதர்கள் மோசஸ் காலத்தில் எகிப்திலிருந்து இன்றைய இஸ்ரேல்/பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியேறி, அங்கிருந்து ரோமப்பேரரசால் துரத்தப்பட்டு புலம்பெயர்ந்த காலகட்டம். அதன் குரலாக இருப்பவர் தாத்தா. இழந்துபோன நிலம் பற்றிய உடைந்த இதயங்களைக் கொண்டவராக,  அந்த தலைமுறையின் சொல்லொண்ணா வேதனைகளை உடையவராக உள்ள அவரது இதயத்தை பரிவுடன் காண்கிறாள். அவரோடு அவளுக்கு உரையாட முடிகிறது. இஸ்ரேல் என்கிற நாடு உருவாக்கப்பட்டதிற்கான அடிப்படையான உரையாடல் இது.

”என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்
அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.
திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம். ”

இந்த வரிகளின் வழியாக அவள் பாலஸ்தீனிய அடையாளத்திற்குள் இருப்பதை கவிதையில் உள்ளவர்கள் புரிந்துகொள்கின்றனர். அதாவது ஒடுக்கப்பட்ட தன்னிலையாக அவள் மாறிவிட்டிருக்கிறாள். இது ஒருவகை ”சிறுபான்மை இருப்பாதல் (becoming-minor)” என்கிற நிலை. சிறுபான்மை இருப்பாதல் என்பது எண்ணிக்கை சார்ந்த சிறுபான்மை அல்ல. எந்த ஒரு அமைப்பிலும் ஆதிக்கத்தினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையாக இருத்தல். அப்படி இருப்பதின் வழியாகவே பாசிசமாதலில் இருந்த ஒரு தன்னிலை தன்னை தப்ப வைத்துக் கொள்ளமுடியும். கவிதையின் “நான்“ யூத பாசிசமயமாதலில் இருந்து தப்பவே தன்னை சிறுபான்மையாக ஆக்கிக் கொள்கிறது.  கவிதையில் சொல்லப்படும் “திருப்பித் தரவில்லை“ என்ற வரி, இஸ்ரேலியர்களுக்கு நிகழ்த்தப்பட்ட வரலாற்றுக் கொடூரத்தை, அதாவது அவர்களது பூர்வீக நிலத்தை திருப்பித் தரவில்லை என்பதாக பொருள்கொள்ளமுடியும். ஆக, அவள் இஸ்ரேலிய அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்படுகிறாள். அதாவது அவளுக்கு அவர்களது மண் பாலஸ்தினிய-அரபிகளின் அபகரிப்பாக சொல்லப்படுகிறது.

“முன்பெல்லாம்போல என் தந்தை
என்னைப் பார்ப்பதில்லை.”

இங்கு தந்தை என்பவன் இரண்டாவது காலகட்டத்தின் அதாவது இஸ்ரேலியர்கள் புலம்பெயர்ந்த நிலையில் உள்ளவன் என்பதால், அவளை புறக்கணிக்கிறான். இந்த தந்தைதான் “தாய் நாட்“-டை உருவாக்குபவன். இந்த தந்தையுடன் அவளுக்கு உரையாடல் சாத்தியமற்றதாகிவிடுகிறது. அவள் புறக்கணிக்கப்படுகிறாள்.

”அண்ணனோ உரத்துப் பேசுகிறான்
என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்
இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.”

அண்ணன் இஸ்ரேல் உருவாகிய பிறகானவன் என்பதால் முழுக்க இராணுவமாக இருக்கிறான். கொலை என்பது அவனிடம் மறமாக வெளிப்படுகிறது. ஆதிக்க இனத்திற்கான அறமாக மாற்றப்படுகிறது. இங்கு வரலாற்றில் நிகழ்ந்த வன்முறை முறைப்படுத்தப்பட்ட அதிகார எதிர்-வன்முறையாக தொன்மக் கதையாடல்கள் வழியாக மாறியுள்ளது. கவிதையில் உள்ள சொல்லாட்சியானது பிரதியின் ஆழ்தளத்தில் உள்ள அரசியலை வெளிப்படுத்திக் காட்டுகிறது. முதல் பகுதியில் அவளுக்கு பாலஸ்தீனியனாக உள்ள புரட்சியாளர்கள்.. அண்ணனால் அரேபியனாக எடுத்துரைக்கப் படுகிறார்கள். முறைப்படுத்தப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் என்கிற வார்த்தை பிரதியில் இங்கு அரேபியனாக  மாற்றீடு செய்யப்படுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனை என்பது நிலம், நாடு அதன் இறையாண்மை என்பதிலிருந்து, இனம்-மதம் என்பதற்குள் அடக்கப்பட்டுவிடுகிறது. அதாவது

'வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு
போராட்டம் செய்கிறேன்"

என்று முன்பு இஸ்ரேலிய-தன்னிலையாக  கவிதையில் துவங்கிய “நான்“ போராடியதை சொன்ன பிரதியானது, சுவரின் மூலம் அடைந்த மாற்றத்தால், அண்ணனின் யூத-இனவாத(ஜியோனிச) குரலை அம்பலப்படுத்திவிடுகிறது. இந்த வரிகளில் உள்ள வெள்ளிக்கிழமைகளில் என்கிற சொல்லின் தேர்வு நுட்பமானது. இஸ்லாம் மதம் முன்வைத்த புனிதநாள்.  இது பாலஸ்தீனிய புரட்சியாளர்களின் மதம் சார்ந்த உணர்வை வெளிப்படுத்தும் சொல் மட்டுமின்றி அப்பையன்களுடன் போராட்டம் செய்வதற்கான நாட் தேர்வாக சொல்லப்படுவது  அதன் மத தன்மை குறித்த ஒருவகை விமர்சனம் எனலாம். பாலஸ்தீனிய இனப்பிரச்சனை, சர்வதேச மற்றும் இஸ்லாமிய சமூகங்களால் ஒரு மதப்பிரச்சனையாக குறுக்கப்பட்டுவிட்டதன் ஒரு அடையாளம்தான் கவிதையில் சொல்லப்படும் வெள்ளிக்கிழமைப் போராட்டம் எனலாம்.

பிறகு தன்னினத்திற்குள்ளேயே மற்றமையாக இருப்பவள் உளச்சிக்கல் உள்ளவளாகவும், தண்டிக்கப்பட வேண்டியவளாகவும் கருதப்படுகிறாள். தனிமைப்படுத்தப் படுகிறாள். வரலாறு விளிம்புகளை இப்படித்தான் உருவாக்குகிறது. கட்டாய இராணுவமாக்கலை மறுத்ததால், சிறைக்குள் அடைக்கப்பட்ட அவள், இங்கு மற்றமை என்கிற பாலஸ்தீனிய பெண்ணிருப்பாக முழுமையாக்கம் பெறுகிறாள். இதற்கு பிந்தைய கவிதை வரிகளை உணர்வுகளால்தான் புரிந்துகொள்ளமுடியும். இறுதியில் நான்-மற்றமை என்கிற எதிர்-இருப்புகளை சிதைத்து, கவிதை மொழி, பிரதியை துவங்கியபோது வந்த அதீனா என்கிற பாலஸ்தீன தோழியாகவே கவிதை சொல்லியாகிய நானை உருமாற்றிவிடுகிறது. தனிமைச்சிறையில் உள்ள அவள், அவளுக்கே அந்நியமாக மாறி, ஒடுக்கப்படுகிறாள். கவிதை மொழி இங்கு மனச்சிதைவின் மொழியாகிவிடுகிறது. வேறு என்ன செய்யமுடியும், மழிக்கப்பட்ட தலையுடன், நிர்வாணமாக, சிறைச்சுவரை பிராண்டுவதை தவிர.
 
Eve_Enslerஅதாவது, கவிதைக்குள் செயல்படும் நான் இப்படியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதியாக இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களது இருப்பாக மாறிவிடுகிறது. கவிதை எழுதியவர் அமேரிக்க-யூதர் என்பதை மறக்கடித்துவிட்டு, ஒரு இஸ்ரேலியப் பெண் என்பதாக துவங்கி, அவள் தன்னை ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியவளாக மாற்றிக் கொள்கிறாள். அதாவது சிறுபான்மை-இருப்பாதல் என்கிற நிலையை அடைகிறாள்.  “ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண், ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்தவளை பீடிக்கிறாள் அல்லது விடுவிக்கிறாள்“. இங்கு சுதந்திரம் விடுதலை என்பதெல்லாம் வேறு பொருள்கொள்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைதான் ஒடுக்குபவர்களையும் விடுவிக்கும் என்கிற இந்த செய்திதான் முக்கியம். வேறுவிதமாகச் சொன்னால், ஒடுக்குபவன், ஒடுக்கப்பட்டவன் என்கிற பிரிவனை தகர்க்கப்பட்டால்தான், மனிதவாழ்தல் என்பது அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

பின்குறிப்பு - யூதராக பிறந்த ஈவ் இன்ஸ்லர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உலகெங்கிலும் கவிதைகள், நாடகங்கள் வழியாக ஒலித்துக் கொண்டிருப்பவர். ஒரு யூதராக பாலஸ்தீனியர்களது ஒடுக்கமுறைக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது இக்கவிதை. பிரதிகளை விட்டுவிட்டு எழுதியவரின் அடையாளங்களை தேடும் நமது இலக்கியப் பார்வைக்கு சவாலாகவும், மாற்றாகவும் உள்ளது.

குறிப்புகள்

1. சுவர் (மேலதிக விபரங்களை இங்கு படிக்கலாம்) என்பது யூதர்களின் ஒரு தொன்ம-wailing_wall_crowd  வரலாற்று-நம்பிக்கையாகும். கி்.பி. 70-ல் ரோமானியர்கள் யூதர்களின் எழுச்சியை அடக்கி இடித்து தள்ளிய  சாலமன் மன்னால் கட்டப்பட்ட யூதர்களின் புனித ஆலயத்தில், இடிபாடுகளுக்கிடையே மிஞ்சிய ஒரு சுவர்.   இந்த சுவர் இஸ்லாமியர்களுக்கா? யூதர்களுக்கா? எனபதில் பெரும்போரே நிகழ்ந்தது.  காரணம், முகமது நபி முதலில் இந்த ஆலயத்தை மையமாகக் கொண்ட - அல் குத்ஸ் என்பதை இறை ஆலயமாக நோக்கித் தொழுது கொண்டிருந்தார். அவரது மெஹராஜ் எனப்படும் வானியல் பயணம், மெக்காவில் துவங்கி வெண்மைநிற இறகு முளைத்த புர்ஹா என்கிற குதிரை இந்த இடத்தில் முதலில் அவரை இறக்கியது. இங்கு அல்லாவை தொழுதுவிட்டு, அதன் பின்னே 7 வானங்களைத்தாண்டி அல்லாவை சந்தித்து இஸ்லாமிய 5 நேர வழிபாடு மற்றும் 30 நோன்பு போன்றவற்றை பெற்று வந்ததாக இஸ்லாமிய நம்பிக்கை. அதனால் இஸ்லாமியர்களுக்கு காபாவிற்கு பிறகான ஒரு புனிதத் தலமாக இது உள்ளது. ஆனால், இச் சுவரை யூதர்கள் அவர்களது கடவுளின் இருப்பிடமாக புனிதத்திலும் புனிதமாக கருதுகிறார்கள். இடிபாடுகளில் மிஞ்சிய இச்சுவர் அவர்களது இடிந்துபோன வரலாற்று அடையாளமாக இருப்பதாலும், இதில் யூதர்கள் தங்களது பிரார்த்தனைகளை முன்வைத்து அழுது வழிபட்டதாலும், இது Wailing Wall  என அழைக்கப்படுகிறது.

2. இருத்தல், இருப்பு என்பது இருத்தலியல் வாதம் முன்வைக்கும் existence என்கிற புரிதலில் இங்கு பயன்படுத்தவில்லை.  becoming-minor என்கிற கோட்பாட்டு அடிப்படையில் becoming என்பதற்கு இருப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. Being, Existence போன்ற சொற்களுக்கு இருத்தல், இருப்பு  என்கிற தமிழ் சொல்லை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்த நாகார்ஜீனனின் இந்தப் பதிவில் உள்ள விவாதத்தை வாசித்தறியலாம்.

- ஜமாலன் 28-04-2010.

அனைவருக்குமான அறிவியல் மற்றும் எனது அறிவியல் தமிழ் கல்வி

“Data banks are the encyclopedia of tomorrow; they are ‘NATURE’ for postmodern men and women” -  Lyotard.

நண்பர் கையேடு அனைவருக்குமான அறிவியல் என்று ஒரு பதிவு துவக்கி, மிகத் தயக்கத்திற்கு பிறகு இப்பொழுது அதனை பதிவிடத் துவங்கியுள்ளார்.  அறிவியலை எளிய தமிழில் அறிமுகப்படுத்துவதற்கான பதிவு.  அறிவியல் மாணவர்கள்,  ஆய்வாளர்கள், அறிவியல் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்கள் என பதிவுலகில் நிறைய பதிவர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் இதில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.  அறிவியலை தமிழில் அறிமுகம் செய்வதும், அறிவியல் கலைக்களஞ்சியங்கள் உருவாக்குதலும், தமிழ்-விக்கியில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதும், வருங்காலத் தலைமுறைக்கு அறிவியலை கொண்டு சேர்த்த பெரும்பணியை செய்ததாக இருக்கும்.  தமிழ் சமூகத்தை நவீனப்படுத்துவதற்கு இத்தகைய முயற்சிகள் ஒரு குறைந்நதபட்ச செயல்திட்டமாக அமையும்.


இது குறித்து கையேடும் நானும் சிலமுறை உரையாடி உள்ளோம். அறிவியல் ஆய்வு மாணவராக உள்ள அவர் தமிழில் அறிவியல் அடிப்படைகளை, அதன் வளர்ச்சியை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமானவர்.  ஆர்வம் உள்ள நண்பர்களைக் கொண்டுக் கூட்டுப்பதிவாக இதனை செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது.  முதலில், கையேடு  முன்முயற்சி எடுத்து அறிமுகமாக சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.   என்னைப்போன்ற சோம்பேறிகளைச் சேர்த்துக் கொண்டு கூட்டுப்பதிவாக இயங்குவதைவிட.. அவர் தனியாக முயன்றிருப்பதும் சரியானதுதான்.  தமிழ் அறிவியல் சிந்தனைக் குறித்த பதிவு எங்களது பொதுவான ஏக்கம் என்றே சொல்லலாம். நண்பர் அதில் முன்முயற்சி எடுத்துள்ளதைப் பாராட்டலாம்.

நானும் அறிவியல் படித்த மாணவன் என்றவகையில் அறிவியலில் எனக்கு அளப்பறிய ஆர்வம் உண்டு.  செயல்பாடுதான் வழக்கம்போல் ஒன்றுமில்லை. அந்த ஆர்வக்கோளாறால் சில அறிவியல் கட்டுரைகளும் எழுதியதுண்டு. அதை பதிவிட துணிச்சல் இல்லை. காரணம் பதிவுலகில் உள்ள அறிவியல் தெரிந்த ஆய்வாளர்கள் இருப்பதால் ஏற்பட்ட பயம்தான்.  சிந்தனை என்பது மொழிச்செயல்பாடு என்றவகையில், தாய்மொழியில் அறிவியல் சிந்தனைகளை பயில்வது, சுயசிந்தனைகளை வளர்க்கும். அறிவியல் தமிழின் வளர்ச்சியின்மையால், ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடிந்த அவஸ்தைகள் என்று  நான் அறிவியல் படித்த கதைதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

நான் இளம் அறவியல் இயற்பியல் வரை தமிழில்தான் படித்தேன். தமிழ்வழிக்கல்வி. பெயர்தான். புத்தகங்கள் தேர்விற்கு படிப்பது எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள்தான்.  ஓருமுறை எக்மோர் அருகில் உள்ள தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனத்தில் போய் தேடினன். பல புத்தகங்கள் மறுபதிப்புக் கூட செய்யப்படவில்லை. வெப்பவியலும், வெப்ப இயங்கியலும்  என்பதை தமிழில் வாசிப்பதைவிட ஆங்கிலத்தில் Heat and Termodynamics என்று வாசிப்பது எளிமையாக ஆக்கப்பட்டுள்ளது. தமிழ-அறிவியல் கலைச் சொற்கள் மற்றும் அவற்றின் புழக்கமும் குறைவு. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்  கலைச்சொல் உருவாக்கத்திற்கென தனித்துறை உருவாக்கி  கவனம் செலுத்திவருவது மகிழ்ச்சியான விடயம்.  தமிழில் அடிப்படை புத்தகங்கள்கூட கொண்டுவரப்படவில்லை என்பது, ”தமிழ் என் மூச்சு” என்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயம். போகட்டும்... அறிவியல் பதிவில் அரசியல் வேண்டாம்.

முது அறிவியல் என்பதில் தமிழ்வழியே கிடையாது. அதனால் படிப்பவர்களுக்கு தமிழ் வலிதான் அதிகம். ஆச்சர்யம் என்னவென்றால் படித்த 20 மாணவர்களில் நான் ஒருவன்தான் தமிழ்வழிக் கல்வி மாணவன். ஆனாலும், சிரமத்திற்கு இடையில் படிப்பைக் காப்பாற்றிக் கொண்டேன். ஆங்கிலம்தான் தெரியாது.. கொஞ்சம் அறிவியல் தெரியும் என்பதால்.. பிழைத்தேன். எனக்கு வாய்த்த பல ஆசிரியர்கள் ஒரு காரணம். குறிப்பாய் ஐன்ஸ்டின், பௌலி, டார்வின், ஹைசன்பர்க், ஸ்டிரோடிஞ்சர் என கனவுக் கதாநாயகர்கள் வழிநடத்திய கற்பனை உலகம் மற்றொருக் காரணம்.   இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது, எனது ஊர் மற்றும் கல்வி படிப்பு என எங்கோ பல நினைவுகளுக்குள் கொண்டு சேர்க்கிறது. இவை, எனது ஆசிரியர்கள் அனைவரையும் நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது. 

ஒவ்வொரு பள்ளியிலும் எனது கல்வியை கவனித்துக்கொண்ட ஆசிரியர்கள். என்னை ஊக்கப்படுத்தி தனிக்கவனம் செலுத்திய ஆசிரியர்கள்.  2-ஆம் வகுப்பில் தொடைகளைத் திருகி கணக்கு சொல்லித்தந்த “செவிட்டு சார்”, சுப்பையா சார், ஜான்சி டீச்சர் துவங்கி மேல்நிலைப் பள்ளியில் உன்னிப்பாக கவனித்து கணிதம் சொல்லித்தந்த வெங்கட்ராமன் சார், இயற்பியலை நடனம் ஆடியப்பாடியே துகள், வெளி, பிரபஞ்சம் என  கற்பனைகளை மனக்கண்ணில் உருவாக்கிய சேதுராமலிங்கம் சார். கல்லூரியில் இயற்பியல் விதிகளை மண்டைக்குள் தள்ளுவதற்காக தொண்டை வரள கற்பித்த ஆசிரியர்கள். குறிப்பாக இயற்பியல் படிப்பதற்கு அசாத்திய கற்பனைத் திறன் வேண்டும். 

சான்றாக, பெருவெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சம் பெருவெடிப்பில்தான் உருவாகுகிறது என்றால், பெருவெடிப்பு எங்கு நிகழ்ந்தது? என்று கேட்க முடியாது. எங்கு என்கிற இடம் பெருவெடிப்பிற்குள்தான வருகிறது. பெருவெடிப்பிற்கு வெளி என்று ஒன்று கிடையாது. பெருவெடிப்பிற்குள்தான் வெளி. அதாவது உள்ளேதான் வெளி. இதை கற்பனை செய்ய நமது மனமோ, மூளையோ சாத்தியமற்றதுதானே. இங்குதான் God does not play dice என்று ஐன்ஸ்டின் சொன்னதின் விளக்கம் புரியும். இயற்கையின் ஒழுங்கு அத்துனை அற்புதமானது. அது விளையாட்டு அல்ல. என்ன செய்யலாம் கையையும் காலையும் உதைத்து பரக்க பரக்க விழித்துதான் இதனை சொல்ல முடியும். அதன் பிறகும் தலை சுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது.  இயற்பியல் புரிவதே கடினம் என்பதால் எங்கள் ஆசிரியர்கள் ஒருவித ஆட்டத்துடனும் சைகைகளுடனும்தான் கற்பித்தார்கள்.  இயற்பியல் எண்களை எழுத்தாக மாற்றும் ஒரு அறிவியல் என்பதால், கணிதம் அதன் அடிப்படையானது.  அதனால்தானோ என்னவோ,  எல்லா பள்ளிகளிலும் கணித ஆசிரியருடன் ஒரு நட்பு ஏற்பட்டுவிடுகிறது. 

இயற்பியல்-கணித சிந்தனைக்கு ஒரு சின்ன கதை உண்டு. ஒரு குடுவையில் 20 இருப்புக் குண்டுகள் உள்ளது. பௌதீக தராசைப் பயன்படுத்தி ஒரு இருப்பு குண்டின் எடையை  அளந்து சொல்லவும் என்றால். முதலில் பௌதிக தராசை தயார் செய்துகொண்டு, அளந்து கீழ்கண்ட சமன்பாட்டின்படி விடை சொல்லலாம்-

[(குடுவை+20 இருப்பு குண்டின் எடை) – குடுவையின் எடை] / 20 = 1 இருப்பு குண்டின் எடை

இதே கணக்கை ஒரு மளிகை கடை நடத்தும் அல்லது சாதரணமான ஒருவரிடம் கேட்டால். ஒரு இருப்பு குண்டை எடைபோட்டு நேரடியாக சொல்லிவிடுவார். இது அறிவியல்-கணிதவியல் சிந்தனையில் உள்ள சிக்கல். கழுத்தை சுத்தி காதை தொடுவது. கணித-அறிவியல் சிந்தனை என்பது abstraction-ஐ அடிப்டையாகக் கொண்டது. இது அறிவியல் பற்றி எழுதுவதிலும் சிக்கலாக மாறிவிடுகிறது.

பொதுவாக, பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்கள் இல்லை.  ஊரும் பள்ளியும் ஆசிரியர்களும் தெருப்பிள்ளைகளும்தான்.  பறவைகளைப்போல பெற்றோரிடமிருந்து எச்சமாக விழந்து விடுகிறோம் தெருப்புழுதிக்குள். அப்பறம் யாரோ ஊற்றிய தண்ணியில், தானாக வளர்கிறோம். கனிகளுக்காக காத்திருக்கு்ம் பெற்றோர். ஊரும், மக்களும் நம்மிடம் எதை எதிர் நோக்குகிறார்கள்.  எல்லாம் எதையாவது நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதுகூட நமது கற்பிதம்தான். உலகம் ஏதுமற்றிதிலிருந்து உருவாகி ஏதுமற்றதை நோக்கித்தான் போகிறது. இடையில்தான் இத்தனை சிக்கல்கள். இல்லை என்பதற்குள்ளும் இல்லை என்றொரு சொல்லோ சப்தமோ இருக்கத்தானே செய்கிறது. காரண-காரியங்கள் பற்றிய வெதாந்த-சித்தாந்த விளையாட்டுகள் நம்மை காரணங்களில் நங்கூரமிட்டு காரியங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறது. இது நவீனத்துவத்தின் குழந்தையான பகுத்தறிவிற்கும் பொருந்தும். அறவியல் பதிவு தத்துவத்தை தள்ளிவைப்போம்.

உலகின் மிகச்சிறந்த அற்புத உணர்வு எது என்றால் நமது குழந்தைமைக்கு நாம் திரும்பிச் செல்வதுதான்.  உலகின் ஆகப்பெரும் புரட்சிகரச் சிந்தனைகளை பசியிலும், பட்டினியிலும், பிள்ளைகள் பிறந்தபோது பாலும், இறந்தபோது சவப்பெட்டியும் வாங்ககூட காசில்லாத நிலையிலும் எழுதிக்கொண்டிருந்த மாபெரும் சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் கூட “கிரேக்க புராணங்கள் இனிமையாக இருப்பதற்கு காரணம், அவை இலக்கியத்தின் குழந்தைப் பருவத்தி்ல் உருவாகியதுதான்” என்று சொன்னதாக படித்த நினைவு.  குழந்தைமையின் ஒரே லட்சியம் இனிமை மட்டும்தான். நாம் இப்பவும் இனிமை என்று உணர்வது குழந்தைமையி்ல் உருவான இனிமையின் ஒரு நினைவுத்தடம்தான். நமது இதிகாசங்கள், புராணங்களின் இனிமையைக் கூட அப்படி சொல்லலாம். ஆனால், அவற்றை மதங்கள் களவாடி தங்களது அறத்தை போதிப்பதற்கானதாக மாற்றியதில்தான் சிக்கல்கள் துவங்குகிறது என எண்ணத் தூண்டுகிறது.

எனது அறிவியல் ஆர்வத்திற்கு இன்னொரு காரணம்,  ஜமால் முகமது கல்லூரி எஸ். சுப்புரத்தினம் என்கிற “எக்சென்டிரிக்“ ஆசிரியர்தான்.  டென்சார் கால்குலசை தனது பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் எழுதிக்கொண்டு வந்து 1 மணிநேரம் பாடம் நடத்துபவர். ஆங்கிலத்தில் நடத்திக் கொண்டிருக்கும்போதே குவாண்டம் மெக்கானிக்ஸை 5 நிமிடம் தமிழில் சரளமாக விளக்கிவிட்டு, என்ன சார் நாவலர் நெடுங்செழியன் மாதிரி இருக்கா என்று கிண்டலாக சொல்வார். டீ-பிராக்லி கடவுள் சார். எவனக்கு சார் வரும் அலையையும், துகளையும் இணைத்து சிந்திக்க என்பார். ஆற்றல் அலையா துகளா என்கிற ருசிகரமான ஒரு சர்ச்சை இயற்பியலில் உண்டு. ஹைசன்பர்க் எல்லாம் கையெடுத்து கும்புடனும் சார் என்பார். நிச்சயமின்மைக் கோட்பாடு என்று தத்துவம் சார்ந்த ஒரு இயற்பியல் கருத்தாக்கத்தை முன்வைத்தவர்.  ஒருகாலத்தில் தத்துவம், அறிவியல், கணிதம் எல்லாம் தத்துவம் என்ற ஒற்றைத் துறையாகத்தான் இருந்தது. அப்புறம்தான் மேற்-திசை உலகின் பகுப்பாய்வு முறை உருவாகி, இவற்றை  பெட்டி பெட்டியாக பிரித்து, தத்துவம் என்கிற ரயில் இன்ஜீனுடன் இணைத்து வைத்தது. பெட்டிக்குள் இருப்பவனுக்கு இன்ஜீன் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால் பெரும்பாலான அறிவியல் ஆய்வாளர்கள் தத்துவத்தை பார்ப்பதில்லை. சமூக உணர்வும் இருப்பதில்லை.

நமது எஸ். எஸ். எனறு அழைக்கப்படும் சுப்பபுரத்தினம் சார் கதைக்கு வருவோம். அவருக்கு வயது 58 அல்லது 59 இருக்கும்.  அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் ஓய்வுப் பெறப்போகிறவர். என்னை “வாங்க சார்“.. காப்பி சாப்பிடப் போகலாம் என்று தோளில் கைபோட்டு அழைத்துச் செல்வார்.   எல்லோரையும் சார் என்றுதான் அழைப்பார். அது சாதரணமாக புழக்கத்தில் உள்ள ஒரு நட்புச் சொல் அவ்வளவே. எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  மற்ற 19 மாணவர்களும்.. நல்ல கூட்டணி என்பார்கள். அவர்கள் பார்வையில் இருவருமே தலை சீவாத.. சோல்னாப் பை என இருப்பது வெறு என்ன உருவகத்தை தந்துவிடப்போகிறது பைத்தியம் என்பதைத் தவிர. 1985-களில் “சோல்னாப்பையர்கள்“ என்கிற ஒரு சிறப்பான பதமே புழங்கியது தமிழ் அறிவுத்தளத்தில்.   அதன் உள்ளர்த்தம் என்பது “பைத்தியங்கள்“ என்பதுதான். நானும் அப்போ தமிழ் சிறுபத்திரிக்கை மோஸ்தரில் ஜிப்பா, சோல்னாப்பை எனத் திரிந்தவன்தானே. அதிலும் மாணவப் புரட்சியாளன் என்ற கற்பனையில் திளைத்தவனுக்கு, ஜோல்னாப் பை இல்லை என்றால் எப்படி?

ஒரு டீ ஆர்டர் பண்ணி 1 மணிநேரம் டீக்கடையில் உட்கார்ந்து இலக்கியம் அலசுவது என்பதுதான் அப்போதைய போக்கு.  பெரும்பாலும் சென்னை திருவல்லிக்கேணி டீக்கடைகளில் இரண்டு மூன்று சிறுபத்திரிக்கை இலக்கியவாதிகளையோ அல்லது புரட்சிகர மார்க்சியவாதிகளையோ  காணலாம் அந்த நாட்களில். இப்பொழுதோ டீக்கடையின் இடத்தை பார்கள் கைப்பற்ற, இலக்கிய வம்புகளும் சண்டைகளும் சகஜமாகிவிட்டது. நமது நண்பர் ஒருவர் கூறியதைப்போல மது இறைவனின் பானம். அதை திருடிக் குடித்தால். நாமும் இறைவன்தானே. அப்பறம் எதிரில் உள்ளவனை எதற்கு  மதிக்க வேண்டும் என்பதால் இருக்குமோ? எதிர் கருத்து சொன்னால் ஆட்களை ஆட்டோவில் அனுப்பும் “அற்புத“ கலாச்சாரம் வேறு உருவாகி உள்ளது. இல்லாவிட்டால் இருட்டில் அழைத்துபோய் மூக்கை உடைக்கும் கலாச்சாரமும் உள்ளது. முன்பெல்லாம் தலைமறைவு புரட்சியாளர்கள்தான் முகவரி சொல்ல மாட்டார்கள். இப்போ பிரபலங்களே முகவரி மறைப்பதும், முகவரிகளை மறைக்காமல் தருபவர்கள் இப்படி அடிபட்டு பிரபலமாவதும் நடக்கிறது. அரசியல் பதிவில் கலாச்சாரம் வேண்டாம்.

அவர்தான் எனது புராஜக்ட் கைடும்கூட. சக மாணவர்கள் எல்லாம் டீவி துவங்கி.. எலக்ட்ரானிக் உபகரணங்கள் செய்து கொண்டிருக்க.. அவர் மட்டும் திருச்சி பாலக்கரையில் உள்ள குதிரை வண்டிக்காரர்களிடம் போய் குதிரை மூத்திரம் வாங்கிட்டு வாங்க சார். NMR ஸ்பெக்ட்ராஸ்கோப்பியைக் (உபகரணம் பற்றி இங்கு வி்க்கியில்  வாசிக்கலாம்)  கொண்டு அதில் உள்ள கிளைசின் மூலக்கூறு வடிவத்தை வரையலாம் என்றார். நாங்கள் 3 பேர். ஒருவர் சேலம், மற்றொருவர் கருர், நான் கும்பகோணம். குதிரை மூத்திரம் ரெடி. ஸ்பெக்ட்ராஸ்கோப்பிக்கு எங்கு போவது? அது சென்னை ஐஐடியில் மட்டும்தான் உள்ளது. அதற்கும் அவர் ஒரு வழி தந்தார். அவரது மாணவி ஒருவர், பவானியோ பத்மாவோ என்பதாக பெயர்-நினைவு, ஐஐடியில் லேப்பில் பணிபுரிகிறார். அவருக்கும் துறைத்தலைவருக்கும் ஒரு கடிதம் தந்தார். நாங்கள் மூவரும் சென்னை ஐஐடியின் முன்பு 3-குதிரை மூத்திர பாட்டில்களுடன் ஒன்று கூடி.. அக்கடிதத்தின் வழியாக லேபை அடைந்து... ஒருவழியாக அந்த சோதனைகளை முடித்து வரைபடங்களை வாங்கிக் கொண்டு வெளியேறியபோது மாலை 5 மணி. 

படங்களைக்கொண்டு அம்மூலக்கூறின் வடிவத்தை ஒருவழியாக வரவழைத்துவிட்டோம்.  ஆய்வுகளிலும் முடிவுகளிலும் சிக்கல் இல்லை. அந்த புராஜக்ட் ரிப்போர்ட் எழுதுவதில்தான் சிக்கல். ஆங்கிலத்தில் எழுத வேண்டும். வழக்கம்போல் பல ஆங்கிலப் புத்தகங்கள் படித்து ரெப்ரென்ஸ் ஸ்டெடி எல்லாம் செய்து குறிப்புகளும் ரெடி. ஆங்கிலத்தில் எழுதுவது.. கணிப்பொறியில் அச்சடித்து பைண்டிங் செய்வது என.. அதை தயாரிப்பதற்கு பட்டபாடுதான் அதிகம். காரணம் ஆங்கிலத்தில் ரிப்போர்ட் எழுதும் அளவிற்கு.. எனக்கு ஆங்கில அறிவு போதாது என்பதால்.. நான் தமிழில் எழுதியும் சொல்லியும் எனது நண்பன் கான்-தான் அதை எழுதினான். அவனக்கு உள்ள சிக்கல் டெக்னிகல் வார்த்தைகள். காரணம் அவனுக்கு அறிவியல் என்றாலே அலர்ஜி மட்டுமல்ல, அவன் ஒரு பொருளாதார மாணவன். பி.ஏ.கிருஷ்ணனின் வரிகளான  ‘கணிதம் என்பது பாவப்பட்ட மனிதர்களின்மீது செலுத்தப்படும் பயங்கரவாதம்’ என்கிற நண்பர் ஆபீதின் ரகம் அவன். என்ன சென்னை வாசி என்பதால் ஆங்கிலம் அவனுக்கு சிக்கல் இல்லை.

என்னைப்போல காளியாட்டம், நாடகம், சிவன்கோவில், உப்பியலியப்பன் கோவில், அக்ரஹாரம், மார்கழிக் காலையில் பரங்கிப்பூ வைத்து கோலம்போடும் இளம் பெண்களை பார்க்கவென சேக்கிழார் வாரவழிப்பாட்டுக் குழுவுடன் பஜனைபாடிக் கொண்டு போவது, காலையில் எழுந்து குளத்தங்கரைக்கு ரகசியமாக திருடப்பட்ட பீடிகள் சகிதம் போவது, மாலையில் பனந்தோப்பிற்குப் போவது, இரவுகளில் தென்னை மரத்தில் கள் திருடி குடிப்பது என அலையும் நூறுசதமான கிராமத்தானுக்கு சென்னையே அதிர்ச்சியான விஷயம்.  கோணங்கியின் ரசமட்டம் போல் சென்னை என்பது முதலில் பார்க்கும்போது மனதிற்குள் ஏற்படுத்தும் நடுக்கம் அச்சமூட்டக்கூடியது. இதில் ஆங்கிலம் என்பது நள்ளிரவிலும் பய முறுத்தும் கொள்ளிவாய்ப் பிசாசுதான். 

கிராமமும் நகரமும் இரண்டு தனித்த தீவுகள், தனித்த குடிமக்களைக் கொண்ட நிலவெளிகள்தான்.  நகரங்களின் உருவாக்கம் நாகரீகத்தின் சின்னமாக கருதப்படுகிறது. உண்மையில் நகரங்கள் அழிவின் பல உட்கூறுகளைக் கொண்டவைதான். அவை முதலில் மனிதத்தை அழிக்கிறது. நாகரீகம் என்பதே அழிவின்மீதும், ஏற்றத்தாழ்வின் மீதும்தானே கட்டப்படுகிறது. நாகரீகத்தின் புறவடிவம்தானே நகரம் என்பது. ”நகரம் என்ற புலத்தை ஒருவிதத் திணை என்று கொண்டால் அதன் அழிவு என்ற சாத்தியமான உள்ளுறையின் விரிவாக்கம்தான் கொள்ளைநோய்.” என்பதை காம்யுவின் “கொள்ளை நோய்” நாவலைக் கொண்டு விவரிக்கிறார் நாகார்ஜீனன். அறிவியல் பதிவில் வரலாறு வேண்டாம்.

ஒருவழியாக புராஜக்ட் முடிந்து பரிட்சை முடிந்து வெளியேறிவிட்டோம். அப்புறம் ஒரு நாள் சுப்புரத்தினம் சாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. உங்களுக்காக திருச்சி இந்து கல்லூரியில் எம்.பில். சொல்லிவைத்திருக்கேன் சார். வாங்க, கிளப்ஸ்-கார்டன் கோயெப்பிசியன்ட் பற்றி என்னிடம் முடியாத ஒரு ஆய்வு உள்ளது. அதை நீங்கள் தொடரலாம் சார் என்று. எனக்கு இருந்த வேறு பல சிக்கல்களால் ஊர்விட்ட ஊர் போய், ஓடி ஆடி திரும்பிவந்து அக்கடிதத்தை நான் படித்துக் கொண்டிருந்தபோது அட்மிஷன் முடிந்து புதிய கல்வியாண்டு ஆரம்பமாகி  விட்டிருந்தது.  என் நண்பர்கள் சிலர் படிப்பபை தொடர்ந்து கல்விப் பணியாற்றி சமூகத்தை கடைத்தேற்றிக் கொண்டிருக்கலாம். என்னைப்போல யாரேனும், இந்த வறண்ட பாலையில் வந்து வாழ்க்கையை (அப்படி ஒன்னு இருக்கா? என்ற கேள்வியை விட்டுவிடலாம்) அடகுவைத்து. படிப்பிற்கு சம்பந்தமில்லாத ஒரு துறையில் பணியாற்றி, மனைவி-மக்களுடன் கடிதம், தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்-அஞ்சல், உரையாடிகளில் என வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

அனைவருக்குமான அறிவியல் என்று எழுதப்போய் சுயபுராணத்தை கடைவிரித்திட்ட காரணத்தினால் பின்குறிப்பாகவாவது இதை சொல்லி வைக்கலாம்.

தமிழில் அறிவியல் பற்றிய புத்தகங்களில் எனது நினைவில் உள்ள சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். தமிழில்  80-களில் வெளிவந்த கலைக்கதிர் மற்றொரு விஞ்ஞானப் பத்திரிக்கை (பெயர் நினைவில் இல்லை) இந்த பணிகளை செய்தன. கலைக்கதிர்-காரர்கள் தமிழில் விஞ்ஞானக் கலைக்களஞ்சியம்கூட வெளியிட்டுள்ளனர் பல தொகுதிகளாக. விஞ்ஞான விளக்கம் என்று மற்றொரு தொகுதிகளாக நூட்கள் வந்துள்ளன. தமிழ்-அறிவியல் என்பது தொகுக்கப்படாமலேயே உள்ளது. அறையைத் தாண்டி சிந்திக்கும் விஞ்ஞானிகள், விஞ்ஞான ஆர்வலர்கள் இணைந்துதான் தமிழில் இத்துறைசார்ந்த நூட்களை தொகுப்பதும், பரவலாக்குவதும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். யோசிப்போம்..  ஊர்கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்.

பதிவைத்துவக்கிய லியோதார்த் குறிப்பின்படி.. நாம் இவ்வாறாக அறிவியல்தான் எதிர்காலத்தின் நம்பிக்கை என்கிற சில தொல்கதைகளை உருவாக்கி வைத்தால்தான், எதிர்கால பின்-நவீனத்துவ ஆண்களும் பெண்களும் “இயல்பானதாக” இதனை எண்ணி ஏற்றுக்கொள்வார்கள், கடந்தகாலத்தின் உண்மையாகவும் நிகழ்காலத்தின் யதார்த்தமாகவும் எதிர்காலத்தின் நம்பிக்கையாகவும்.

அன்புடன்
ஜமாலன் – 27-04-2010

கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’: கடிதமும் பதிலும்

எங்களின் “கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’” பதிவுக்குப் பதிலாக கவிஞர் லீனா மணிமேகலை ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் பகுதிகளாக பிரசுரித்து பதில் எழுதினோம். இப்போது அவரிடமிருந்து ஏப்ரல் 17ம் தேதியிட்ட இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. அதை இப்போது தனியாகவே பிரசுரிக்கிறோம், எங்கள் பதிலையும் எழுதியிருக்கிறோம்.இதற்குமேல் அவரது கவிதைகள் பற்றி எங்களுக்குக் கூற ஒன்றுமில்லை.

லீனா மணிமேகலையிடமிருந்து வந்த கடிதம் இதோ:

ஜமாலன் தோழரின் மெயில் படித்தேன்.

"பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?"

உங்கள் கட்டுரையின் இந்த கடைசி பாராவுக்கும் நம் உரையாடலுக்கான உங்கள் விழைவுக்குமான மன அமைப்பில் கடுமையான முரண் இருக்கிறது. அய்யய்யோ, வருங்காலத்தில் நம்மை விமர்சித்துவிடுவார்களே என்றெல்லாமா ஒரு பிரதியை அணுகமுடியும்? அப்புறம் ஒரு பிரதியை ஏன் எதிர்ப்பு வருகிறது என்ற கேள்வியின் வழி அணுகி விமர்சிக்கும் பாணி ஒருபுதுவித துப்பறியும் விமர்சன பாணியா என்ன?

பிரதியை யார் எதிர்த்தார்கள், ம.க.இ.கவும், இந்து மக்கள் கட்சியும்! சமூக ஒழுங்கை கட்டிக்காத்து படைப்பாளிகளை அரசாங்கத்துக்கு காட்டிக் கொடுப்பதில் ஒன்று சேர்ந்திருக்கும் இந்த அடிப்படைவாதிகள் ஏன் இந்தப் பிரதியை எதிர்க்கிறார்கள் என்பதை துப்பறிந்து புரிந்துக் கொள்ளும் மட்டத்திலா ஜமாலனும் பெருந்தேவியும் இருக்கிறீர்கள்.

ஒரு கவிதையை கவிதையே இல்லை என்று விமர்சனம் செய்வது உங்கள் உரிமை.ஆனால் அந்த புள்ளிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் வழி என்னை தொந்தரவு செய்கிறது.

எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம். வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.

ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.

நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.

அப்புறம் கூட்டத்தில், ம.க.இ.க கூலிப்படைத் தாக்குதலெல்லாம் முடித்து வெளியேறியபின், கே.ஏ.ஜி தோழர் ஒரு அருமையான விசயம் சொன்னார்.

"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்து திருவாலவாய் அருள்
பெண்ணகத்து எழில் பேயமன் சாக்கியத்
தென்னர்க் கற்பழிக்கத் திருவுளமே"

தேவாரம், மூன்றாம் பதிகம், திருஞானசம்பந்தர், "திருவாலவாய்".

சமணப்பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ள சிவனின் அருளை வேண்டுகிறார்கள் நம்ம சைவர்கள்.

அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

எனது பன்னிரெண்டு வயதில் சோவியத் யூனியனுக்கு யங் பயணியராக சர்வதேச குழந்தைகள் முகாமிற்கு சென்றபோது சாஷா என்ற குழந்தை கம்யூனிஸ்ட் தோழனோடு நெருக்கமான தோழியானேன். புரட்சி மட்டும் தான் அவனின் கனவு, மூச்சு எல்லாம். அப்புறம் பிரஸ்திரோய்கா வந்தது, கிளாஸ்நாஸ்ட் வந்தது, கோர்பசேவ் கதவுகளை திறந்தார், சோவியத் உடைந்தது, அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவன் அமெரிக்காவில் ஏதோ பார்மேன் வேலையில் இருப்பதாக அறிந்தேன்.தொடர்பு கொண்டேன். புரட்சியைப் பற்றி அவனிடம் கேட்க வில்லை.

பெர்லின் திரைப்பட விழாவுக்கு என் தேவதைகள் ஆவணப்படத்தை திரையிட சென்றபோது ஒரு தோழி கிடைத்தாள்., கிழக்கிலிருந்து மேற்குக்கு சுவர் தாண்டி தன் உறவுகளைப் பார்க்க வருவதற்கு தன் கன்னிமையை ஒரு அதிகாரிக்கு பலியிட்டுவிட்டு வந்த கதையை எனக்கு சொன்ன போது உறைந்துபோனேன்.

என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.

குழந்தை தொழிலாளி ஆவண நாவலின் நாயகி சீனா போராளிக்குழுவின் பெண்கள் பற்றிய என் எல்லா பிம்பத்தையும் உடைத்தவள்.

எவன் எதற்காக வல்லுறவு கொண்டால் தான் என்ன, வல்லுறவுக்குப் பிறகான பெண்ணுடலின் சிதைவு ஒன்றுதானே? ஒன்றை ஓங்கி சொல்லும் விருப்புறுதியில் அதீதத்திற்கு கவிதை இடம்கொடுக்க வில்லையென்றால் கவிதையை கைவிட வேண்டியது தான்.

இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.

ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன?


*******
எங்கள் பதில்:

அன்புள்ள லீனா மணிமேகலை,

நீரோ மற்றும் புலிகேசி பாணி இறுதி வரிகள் ஒரு நெகிழ்வான எழுத்துமுறையாக இந்த விமர்சனத்தை மாற்றும் நோக்கில் எழுதப்பட்டதே. அல்லது, வரலாறு என்கிற ரயிலை தவறவிடாமல் தொற்றிக் கொள்ளலாம் என்கிற ஆதங்கம் என்றும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். என்ன கடைசிப்பெட்டியில் ஏறிக் கொள்ளும்படி ஆகிவிட்டது.  எங்களை யாரும் விமர்சித்து விடுவார்கள் என்பதற்காக பிரதியை அணுகவில்லை. பிரதியை யாரும் விமர்சிக்கவில்லையே என்பதால்தான் பதிவை எழுதினோம்.

//எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம்.//

இதைப் படித்தபின் வருந்தினோம். ஊரின் பெயரைப்போட்டு இதை நீங்கள் எழுதியிருக்கவேண்டிய தேவையில்லை.

பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கிக் காட்டுவது குறிப்பிட்ட சூழலில் வரும் அதீத கோபத்தில், ஆத்திரத்தில், எதிர்ப்பு உணர்ச்சியில் நடந்திருக்கலாம். அத்தகைய செயலில் அதிகாரத்தை subvert செய்கிற ஒரு தன்மை உள்ளது. அந்தச்செயலை decontexualize செய்து, உங்கள் கவிதைகளுக்கான “நியாயமாக” ஒரு குறிப்பிட்ட ஊர்ப்பெண்களின் “நடப்பாக,” அதை இணையப் பொதுவெளியில் நீங்கள் பேசியிருக்க வேண்டாம். உண்மையில், இந்த உங்களின் கருத்துக்காகவே இந்தக் கடிதத்தை எங்கள் பதிவில் வெளியிட நாங்கள் மிகவும் யோசித்தோம்.

நீங்கள் சொல்லியிருக்கிற பெண்களின் அப்படியொரு செயல் அந்தச்செயலுக்குச் சம்பந்தமான சூழலில் ஒரு உடனடித்தன்மை கொண்டது. மோசமான அனுபவத்தை (அதாவது அவள் மீதான வன்முறையை, அடக்குமுறையை) அவள் எதிர்கொள்ளும் விதமாக, எதிராளியை விரட்டுவதற்கான ஆயுதம் போன்றது. குறிப்பிட்ட சமூகச்சூழலில், அதைப் பற்றிய நேரடியான பதிவில்தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், உங்கள் முதல் கவிதை பொதுப்படையாக எல்லாப்பெண்களையும் யோனி என்கிற ஒருவார்த்தையில் அடக்கிவிடுகிறது. உங்கள் இரண்டாவது கவிதையிலோ, ”பழிப்பு காட்டுவதன், ஓலமிடுவதன்” சூழல் என்பது மார்க்சியர்களைப் பற்றி பொதுப்படையான சித்தரிப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.

தவிர, அந்தப்பெண்களைப் போலன்றி, உங்கள் கவிதைகளில் ”யோனி,” வன்முறையை passive ஆகவே எதிர்கொள்ளுகிறது. எதிர்ப்புணர்ச்சியின் தளங்கள் உங்கள் கவிதையின் பிரதியில் தென்படவில்லை என்பது பிரச்சினை. இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறோம்.

//வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.//

பெண்ணுக்கு மொழியில்லை, வரலாறு இல்லை என்றால், சங்ககால பெண் கவிஞர்கள், ஔவையார், காரைக்கால் அம்மையார் துவங்கி ஆண்டாள், ஆவுடையக்காள் என உள்ள குரல்களை அவர்களது மொழியை என்னவென்று சொல்வது? Hermeneutics of recovery என்கிற சாத்தியங்களோடுதான் இருக்கின்றன பெண்களால் எழுதப்பட்டிருக்கிற எழுத்துகள்.

மேலும் “கச்சாவாகவும், துறுத்தலாகவும்” மொழியை முன்வைப்பது பற்றி நாங்கள் எங்குமே பேசவில்லை. உங்கள் கவிதைகளுக்கு விமரிசன வாசிப்புகளை எல்லாம் “இவர்கள் கச்சாவான வார்த்தைகளுக்கு எதிரிகள்” என்று ஒற்றைப்புள்ளியில் நீங்கள் சுருக்கி எளிமைப்படுத்துகிறீர்கள் என்றே கருதுகிறோம்.

//ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.

நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.//

எதற்காக ஞானக்கூத்தனைப் பற்றிய இந்தச் ”செய்தி” இங்கே? மேலும், உங்களின் ”உணர்ச்சிவசப்பட்ட அறிவு” என்பதைப் பேசும்போது மற்றவர்களுக்கும் அதேபோன்ற “உணர்ச்சிவசப்பட்ட அறிவை” நீங்கள் மறுக்கமுடியாது.

//அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.//

நீங்கள் முன்வைத்திருக்கிற, சோவியத் கம்யுனிஸ்ட் தோழன், பெர்லின் தோழி சம்பந்தமான நிகழ்வுகள்...என்ன சொல்ல வருகிறீர்கள், சோவியத் கிளாஸ்நாஸ்ட், கோர்பச்சேவ் இவற்றுக்கும் ”புரட்சியாளர்கள்” ஒரு பெண் உடலை ஆணாதிக்க நிலையில் மட்டுமே அணுகி உங்கள் பாணியில் சொன்னால் “வல்லுறவு” கொள்வதற்கும் என்ன தொடர்பு, சோவியத்தின் சரிவிற்கும் ஒடுக்கப்பட்ட பெண்ணிய பாலியலுக்கும் என்ன தொடர்பு, இதெல்லாம் புரிபடவில்லை. இந்நிகழ்வுகளிலிருந்து நீங்கள் புரட்சிக்கான சித்தாத்தங்கள் தோற்றுவிட்டதாக எழுதினால்கூட ஒருவகையில் புரிந்துகொள்ளலாம். ஆனால் சோவியத்தின் வீழ்ச்சி, மார்க்சியம் இன்னபிற கோட்பாட்டு பிரச்சனைகளைப் பற்றியதல்ல உங்கள் கவிதைத்தளம். உடனே நான் கட்டுரை எழுதவில்லை என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறோம்.

எல்லை தாண்டும் ஒரு பெண் தனது கன்னிமையை அதிகாரியிடம் பலியிடுகிறாள் என்பது உறைந்து போகச் செய்யும் நிகழ்வுதான். இது போன்ற எண்ணற்ற கொடுமையான நிகழ்வுகள் நடந்துவருகின்றன இன்றைய உலகில். சரி, ஆனால், ஒரு பிரதியை வாசிக்கும்போது, கவிதைகளை ”எதற்காக” கவிஞர் எழுதியிருக்கிறார், அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் ”பின்னணி” என்பதெல்லாம் பிரதியை வாசிப்பவருக்கு தெரிய எந்த சாத்தியமும் இல்லை. (நீங்கள் இதைப்பற்றி கட்டுரை எழுதினாலேயொழிய அல்லது துண்டறிக்கை கொடுத்தாலேயொழிய).

//என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.//

இதை எல்லாம் எதற்காக சொல்கிறீர்கள்? இதற்கும் இந்த உரையாடலுக்கும் என்ன பொறுத்தப்பாடு உள்ளது? எங்கள் விமர்சனத்தை உணர்ச்சி வசப்படாமல் வாசித்துப் பாருங்கள். பாலியல், வல்லுறவு, ஆணாதிக்கம் இவை எல்லாம் நாங்கள் எங்கும் மறுக்கவுமில்லை. அதை மறுப்பது எங்கள் அரசியலும் இல்லை. நாங்கள் ”ஒழுக்கம்” பேணும் தூய்மைவாதிகளும் இல்லை.

//இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.//

ஞானக்கூத்தனை முன்பு சுட்டிக்காட்டியதிலும், பார்ப்பனியம் என்று இங்கு நீங்கள் எழுதுவதிலும், உரையாடலுக்குரிய பிரச்சனைகளை திசைதிருப்ப முயற்சிக்கிறீர்கள் என்றே நினைக்கத்தோன்றுகிறது. உங்கள் கவிதைகள் ஆண் பெண் என்று வலிந்து இருக்கும் இருமைக்கட்டமைப்புகளைத் தாண்டியதாக இல்லை என்றோம். இப்போதோ நீங்கள் அதன் தொடர்ச்சியாக பார்ப்பனியம்-பார்ப்பனிய எதிர்ப்பு என்பதாக வழக்கமாக சொல்லப்படும் பொதுபுத்தி சார்ந்த இருமைகளை முன்வைக்கிறீர்கள். பார்ப்பனியத்தின் கருத்தாடல்களை கேள்விக்குட்படுத்தும், எதிர்க்கும் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புத்த, சமண, தாந்திரீக நூல்கள் ஒருபுறம் இருக்கட்டும். கவிதைப் பிரதியில் சமஸ்கிருத வார்த்தைகள் பார்பனியத்தை நிலைநிறுத்தும் என்றால், நீங்கள் உங்கள் கவிதைகளில் பயன்படுத்தும் காமம் துவங்கி கிரஹணம் போன்ற வார்த்தைகளை என்னவென்று சொல்வது? முக்கியமாக, உங்கள் கவிதைகளில் வருகிற “யோனி,” இது சம்ஸ்கிருத வார்த்தைதானே.

ஒரு கவிஞரின் (அவர் பெருந்தேவியாக இருக்கட்டும் அல்லது ஞானக்கூத்தனாக இருக்கட்டும்) கவிதையை, பிரதியில் கிடைக்கும், பின்னிப்பிணைந்த இன, மொழி, பால் என்கிற அடையாளக் கட்டமைப்புகளை அகழ்ந்து எடுத்து பேசுவதை ஒரு வாசிப்புப்பாணியாகக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு நீங்கள் பார்ப்பனியம், தமிழன், பெண், ஆண் என்கிற அடையாளங்களை வரையறுக்க வேண்டும். அந்த வரையறைகளைச் செய்தபின்பு தான் பிரதி, அர்த்தம், அதன் செயல்பாடுகள் இவற்றைப் பேச முடியும். அதைவிட்டுவிட்டு, போகிற போக்கில் வசதி கருதி, ஓரிரு வார்த்தைகளை எடுத்துவிடுவது, விமரிசனங்களை சரியான விதத்தில் எதிர்கொள்ள உங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதையே காட்டுகிறது.

பெருந்தேவி
ஜமாலன்

//ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன? //

இந்தக்கட்டுரை, உங்களின் இந்த இரு கவிதைகளுக்கான இந்துமக்கள் கட்சியின் புகார், அதற்காக உங்கள்சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் சம்பந்தமானது. ஆகவே, இவை தொடர்பாக விவாதத்தில் இருந்த உங்கள் இரு கவிதைகளையும் பற்றி எழுதினோம். மேலும், ஒருவர் பல படைப்புகளை படைக்கிறார். அவரது முதல் படைப்பும் அடுத்த படைப்பும் ஒன்றுபோலவே இருக்க வேண்டியது எப்படி சாத்தியம், படைப்பாளிக்கு என்று ஒரு சாராம்சம் இருக்கிறதா என்ன, இந்த படைப்பாளி என்றால் இதைதான் படைப்பார் என்று. அப்படி ஒரே மாதிரி படைத்தால் அது படைப்பு அல்ல, சரக்கு.

அன்புடன்
ஜமாலன்

பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் மணிவிழா

தமிழ் கணினிக்கு பங்காற்றியவரும், தமிழ் அறிஞரும், தமிழ்மொழித்துறை தலைவராக சென்னைப் பல்கழைக் கழகத்தில் பணிபுரிபவருமான பேராசியர் ந. தெய்வசுந்தரம் அவர்களுக்கு மணிவிழா. பேராசிரியர் அவர்களை 1985-ல் சிலமுறை அவரது துறை அலுவலகத்தில் சென்னை பல்கழைக்கழகத்தில் சந்தித்திருக்கிறேன். பொதுவான தமிழ் மொழி ஆர்வத்தில் இலக்கிய பற்றி அறிந்துகொள்ள அவரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  இன்று என்னை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பேராசிரியருக்கு அவை முக்கியமான சந்திப்புகள் இல்லை என்றாலும், என்னால் அவை மறக்க முடியாத சந்திப்புகள் என்பதை நினைவுகூர்கிறேன்.

புதியவர்கள், சிறியவர்கள் என்றெல்லாம் தகுதி பார்க்காது சமமாக பாவித்து உரையாடுபவர் பேராசிரியர். சமூகவியல் நோக்கு கொண்டவர். சிறந்த மொழியியல் அறிஞர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டு கருத்தரங்குகள் போடுவதை மட்டுமே பணியாகக் கொள்ளாமல், தமிழ் மென்பொருள்கள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தி தமிழ் மென்பொருட்களை உருவாக்கியவர். பேரா. கணேசனுடன் இணைந்து தமிழ்ச்சொல் திருத்திகள், இலகணத் திருத்திகள் மென்பொருள்களை உருவாக்கி உள்ளார். அவரது மணிவிழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பற்ற கடல்கடந்த தேசத்தில் இருப்பதால், இதனை வாசிக்கும் நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இங்கு நான் முனைவர் ப. குமார் பற்றி குறிப்பிட வேண்டும். எனது பதிவுகள் வழியாக அறிமுகமாகி, என்னுடன் வாய்ப்புள்ளபோது உரையாடியில் பேசிக்கொண்டிருப்பவர்.  அவர்தான் இந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார். அவருக்கு நான் பேராசிரியர் பற்றி விசாரித்தபோது, இருவருக்கும் ஆச்சர்யம். காரணம் அவரிடம்தான் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருப்பதாக அவர்கூறியது. நண்பர் முனைவர் ப. குமாருக்கு நன்றிகள்.

எனது அஞ்சலுக்கு வந்த அவரது அறிவிப்பு
மதிப்பிற்குரியீர்....

வணக்கம்....

பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் மணிவிழா 19.04.2010 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். தாங்கள் தவறாது வருகைதருமாறு வேண்டுகிறேன். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால் ndsmanivizha@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

நன்றி.

அன்புடன்
முனைவர் ப. குமார்
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசியரை வாழ்த்தும் வயது இல்லை என்பதால், தமிழி கணினியிலும், தமிழ் மொழி குறித்த கோட்பாட்டு சிந்தனைகளிலும் இன்னும் மிகச்சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்று ஒரு மாணவனாக வேண்டுகோள் வைக்கிறேன்.


அன்புடன்
ஜமாலன் (17-03-2010)

அழைப்பிதழ்




கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்.

”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்
கவிஞர் லீனா மணிமேகலையின் கவிதைத்தொகுப்பை, வலைத்தளத்தை தடைசெய்யக்கூறி இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததற்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 15-ல் ஒரு கண்டனக்கூட்டம் நடக்க இருப்பதாக அறிகிறோம். தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களால் நடத்தப்பட இருக்கிறது இக்கூட்டம். இது சம்பந்தமாக எங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

லீனா மணிமேகலை இலக்கியம், கவிதை என்று ஒரு பிரதியை தமிழ் இலக்கியச்சூழலின் வாசிப்புக்கு முன்வைக்கும்போது, அப்பிரதியின் சொற்பிரயோகங்கள் பாடுபொருள்கள் ஆகியவற்றை இலக்கியம் என்கிற வகைமையில்தான் நாம் அணுகவேண்டும் என்று நம்புகிறோம். இதில் எழுத்தாளரின் நோக்கம் (அதிர்ச்சி மதிப்பீட்டை முன்வைத்து புகழ்பெற நினைப்பது என்று கருதப்படுபவை உட்பட) இலக்கியத்தைப் படைப்பதுதானா என்பதை மதிப்பிட  அளவுகோல் எதுவும் கிடையாது. ஒரு படைப்பாளி  எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும். தனது உள்நோக்கங்கள் வழி உருவாக்கப்படும் சில வலைப்பின்னல்கள் வழியாக ஒரு எழுத்தாளர்  ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூக அமைப்பு ஒரு எழுத்தாளாரை மேலாக வைத்து கொண்டாடுவதும், நிராகரிப்பதும் இந்த வலைப்பின்னல் விளையாட்டில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலம் அந்த இடத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது, பின்னர் ஒரு நாள் வரலாறுகளின் ஆற்றங்கரையில் படைப்பின் ஆதார ”சுருதி” கண்டடையப்படும் என்று வேண்டுமானால்  நாம் ஆறுதல் அடையலாம்.

இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை  நிராகரிப்பது தவறு.   இதற்கு அர்த்தம், எழுத்தாளரின் வாழ்க்கையில் அவர் செய்ததாகக் கூறப்படும் அநீதிகள், ஏமாற்றல்கள் (அவை நடந்திருந்தால்) போன்றவை முக்கியமில்லை என்பதோ, அவரது பிரதியின் மேல்விழும் இலக்கிய முத்திரை இவற்றையெல்லாம் புனிதப்படுத்திவிடும் என்பதோ இல்லை.  அந்த சம்பவங்களை அதற்குத் தகுந்த நடைமுறைத் தீர்வு தருகிற தளங்களில், சம்பந்தப்பட்டவர்கள் அணுகித் தீர்வுகாணுதல் நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து. 

இதன்பொருள் இலக்கியமும், எழுத்தும் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவை என்பது அல்ல. கண்டிப்பதற்காக எழுத்தைக் குறிவைத்து காவல்துறையில் புகார் கொடுப்பது, எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றவை மோசமான முன்னுதாரணங்கள் ஆகிவிடும். மேலும் கண்டனத்தை எதிர்கொள்வதாக செய்யப்படும் செயல்களிலும் (இக்கூட்டம் உட்பட) வேறுபிரச்சனைகள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவியலாது. இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.

நிற்க.

இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளான லீனா மணிமேகலையின் கவிதைகள் (பார்க்க, http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html)  பற்றி சிலவார்த்தைகள்:

நான் லீனா என்று தொடங்குகிறது முதல் கவிதை, இலங்கையில், இந்தியாவில் ஆரம்பித்து துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் என்றெல்லாம் வன்கொடுமைப்படுத்தப்படுகிற பெண்கள் “நான் லீனா” என்கிற சுயம்-சுட்டும் (self-referential) பெயருக்கு கீழே கொண்டுவரப்படுகிறார்கள். இதன்மூலமாக இப்படி கொடுமைக்கு ஆளாகிற பெண்கள் எல்லாருக்குமான பிரதிநிதியாக லீனா என்கிற பெண் காட்டப்படுகிறார். முதல் கேள்வி, ஏன் லீனா என்கிற பெயர் மீனா என்றோ வேறொன்றாகவோ இருக்கக்கூடாது? எழுத்தாளர் தன் பெயரை கவிதைசொல்லியின் ’நானாக’ இப்படி கொண்டுவரும்போது, உலகத்தின் எல்லாக் கொடுமைப்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. கவிதைசொல்லியின் ‘நானுக்கும்’ எழுத்தாளரின் ‘நானுக்குமான’ வித்யாசத்தை கவிதை அழித்துவிட்டது.  இந்த இரு நான்கள் ஒன்றா இரண்டா என்று தெரியாத அளவுக்கு—--பின்னிப்பிணைந்து கிடக்கும் இரண்டு பாம்புகள் ஒன்றா இரண்டா என்பது போல--தோற்றம் தருகிறபோது, எந்தத் தளத்திலிருந்து  ‘எழுத்தைப் பாருங்கள், எழுத்தாளரைப் பார்க்காதீர்கள்’ என்று நாம் சொல்லமுடியும்? பிரதிநிதித்துவ அரசியலில் (representational politics),  “நான்“ என்கிற எழுத்தாளரின் சுயம் அப்படியே தன்னடையாளத்துடன் நிற்கிறது இக்கவிதையில்.

கவிதை வன்புணர்ச்சி விஷயத்தில் அறிவாளி ரோகியிலிருந்து தொடங்கி புரட்சிவேண்டுபவன் வணிகம் செய்பவன் மாலுமி விவசாயி ஈறாக இழுத்துப் பேசுகிறது.  எழுதப்பட்டிருக்கிற விதம் இவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பதாக. “எவனா இருந்தா என்ன, ஆம்பிளை தானே” என்கிற தொனியே கவிதையின் தொனி. வன்புணர்ச்சி என்கிற அபாயத்தையும் நிகழ்வையும் தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், கட்டாயங்கள், உலகளாவிய முதலீட்டிய நுண் அதிகாரங்கள், அரசியல்கள் பற்றி எந்தப்புரிதலும் இல்லாமல், இவை அனைத்தையும் ’ஆம்பிளை’ என்கிற ஒரு பதத்துக்குள் இந்தத்தொனி இட்டுநிரப்புகிறது. வன்புணர்ச்சி என்பது ஆண்களின் விழைவால், விழைவு தருகிற குறிவிரைப்பால் மட்டுமே நடப்பதில்லை என்பதுதான் பாரிய உண்மை. எண்ணற்ற கொடுமைகளுக்கு பெண்களை ஆளாக்கின பல்வேறு அரசியல்களையும் போர்களையும் ஆணின் பாலியல்-விழைச்சில் அடக்கிவிட முடியுமா என்ன?

ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின்,  அரசின்,  இறையாண்மை அரசியல்களின்  அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண்  உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது.  ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும்.  இத்தகைய பல்வேறு சூழ்நிலைகளின் பாலியல் வன்முறைகளை குடும்ப பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு சமனாக அல்லது அவை போல ஒன்றாக பார்த்துவிடமுடியாது.  இக்கவிதையில் வன்புணர்ச்சி என்கிற புள்ளியில் இவ்வித்யாசங்கள் பிரித்தறியப்படவில்லை.

மேலும் கவிதையில் பெண்கள் அனைவரும் தொடைகளின் இடைவழிக்காகவே, அதை ஆக்கிரமிப்பதன் மூலம் அச்சுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசதிகாரம் பெண்ணுடலை கையாளும் அதே முறைகளைத்தான் புரட்சியாளர்களும், கலகக்காரர்களும் கையாளுகிறார்கள் என்பதும் பொதுபுத்தியின் “அறம்“ சார்ந்த பார்வைதான். அதாவது ஒரு உடலின் பாலியல் சார்ந்த இச்சை என்பது கீழானதாக, அதை செய்யும் உடல் புரட்சிபேசத் தகுதியற்றதாக சொல்லப்படுவதாகவும் இதை வாசிக்கலாம். தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன.

வன்புணர்ச்சிக்கான ஒரு களமாக பெண்ணுடல் கட்டப்பட்டுள்ளது என்றால், களத்தில் ”விளையாடுவதற்கான” ஆணுடலும் தயாரிக்கப்பட வேண்டும் அல்லவா. அப்படி தயாரிக்கப்பட்ட ஆணுடல்கள் மட்டும் என்னவித நெகிழ்வை இச்சமூகத்தில் அனுபவித்துவிடப் போகிறது? ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த  விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது. 

வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக அவர்களின் உடன்பாடின்மை என்பதற்கோ இடமே கவிதையில் இல்லை. உலகெங்கும் துயருறும் வன்புணரப்படுபவர்களின் பிரதிநிதியாக “நான் லீனா” Vs. உலகின் எல்லாவகை ஆண்களும் என்பதே கவிதையின் ஒன்லைனர். பல்வாசிப்புத் தளங்களைத் தராத, தக்கையான முரணை விதந்தோதுவதாலேயே இது கவிதையா என்று கேள்வி எழுகிறது.

லீனாவின் இரண்டாவது கவிதை, சே, பிடல், பெர்லின் சுவர், சோவியத், அமெரிக்கா போன்றவை, புணருகிற ’நான்’ உடலின் மார்பகம், அல்குல் போன்ற அங்கங்களின் பெயர்கள் அல்லது உருவகங்களாகின்றன. பல இடங்களில் அங்கம், பெயர்-உருவகத்துக்கு தொடர்புறவு இல்லை அல்லது வெறும் மோனை வலிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது (உதாரணம், ”மனம்பிறழ்ந்த குழந்தைபோல மம்மு குடித்தாய்” )  கவிதையில் சொல்லப்படும் “நீ“ அல்லது  எதிர் உடல், வெறும் பாலியல் புணர்ச்சி எந்திரமே. குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது.

எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும்,  பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது.   கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் என்பது என்ன புரட்சி பேசுகிறாய், ஒரு அதி-யோனியின் புணர்ச்சிக்கு முன் இதெல்லாம் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான். இப்படிச் சொல்வதன் வழியாக, பாலியல் செயல்பாட்டைப் பற்றி பொதுவாக சமூகமனம் கொண்டுள்ள கீழ்மை மதீப்பீடே உள்ளுரையாக உள்ளது. பாலியல் அல்லது புணர்ச்சி குறித்த இந்தக் ”கீழ்மை” மதிப்பீடு கடவுள் துவங்கி இன்னபிற பிம்பங்களின் மீது சுமத்தப்படும்போது இவற்றைத் தாங்கிப்பிடிப்பவர்களின்  எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது என்பதைச் சொல்ல அவசியமே இல்லை.

சரி, இந்த பிரச்சினைகள் குறித்து பெரும் பத்திரிக்கைகள் துவங்கி பதிவுலகம் வரை பல மாதங்களாகப் பேசப்பட்டுவரும் நிலையில் இப்பொழுது இதனை முன்வைப்பதன் தேவை என்ன என்கிற கேள்வி உங்களைப்போலவே எங்களுக்கும் தோன்றியதுதான். நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம்  நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். அதேநேரத்தில் ஒரு கவிஞருக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நமது குரலை பதியவைப்பதும் அவசியம் என்று கருதியே இதனை எழுதினோம்.

பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?

அன்புடன்

பெருந்தேவி
ஜமாலன்

1 முட்டாள் தினமும் 361 அறிவாளிகள் தினமும்.

ஏப்ரல்-1. பெரும்பாலான நாடுகளில் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  காதலர் தினம் போல, அன்னையர்தினம் போல.. இது முட்டாள்களுக்கான தினமல்ல, நம்மை நாமே முட்டாளாக்கக்கூடிய பல அனுபவங்களை உருவாக்கி, சக மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கான தினம் என்று கூறலாம். அல்லது 361 நாட்கள் அறிவாளிகளாக கழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நமது முட்டாள்தனத்தை, எண்ணிப்பார்த்து மனமுவந்த ஒரு நாளையாவது முட்டாளாக கழிப்பதற்கான நாள் எனலாம்.

முட்டாள்கள் என்று யாரும் இல்லை, ஆனால் முட்டாள்தனங்கள் உண்டு.  அது எல்லோருக்குமான ஒரு அனுபவம் அல்லது ஒரு நிகழ்வு. பள்ளிகளில் படிக்கும் காலங்களில் “ஏப்ரல் பூலா“-க ஒருவரை ஆக்க பல திட்டங்கள் போடுவோம். முடியாதபட்சத்தில், ஒருவர் சட்டையில் ஒருவர் இங்க் அடித்துக் கொள்வோம். அறிவு தோற்கும் இடங்களை ஆயதம்தானே கைப்பற்றும். இது வரலாறு. மாற்றமுடியுமா? ஏப்ரல்-1ற்கு என்றே பிரத்யேகமான ஒரு பழைய் கந்தல் சட்டையை பாதுகாத்து வைத்து போட்டுச் செல்வோம். அன்றுதான் ஒரு வகுப்பில், ஒரு பள்ளியில், ஒரு வீட்டில், ஒருவனுக்குள்ளேயே எத்தனை குழுக்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள முடியும். அது ஒரு போர்தான். அதற்காக 3 நாட்களுக்கு முன்பே காட்டாமணக்கு பால் எடுத்து பாட்டிலில் சேகரித்து, அதனை இங்கில் கலந்து அடிப்போம்.  அப்பொழுதுதான் கறை போகாது என்று. எங்கள் ஊரில் இன்று காட்டாமணக்கே அழிந்துவிட்டது. பல இளம் தாவரவியல் விஞ்ஞானிகள அத அன்று உருவாக்கிக் கொண்டிருந்தது. மருத்துவக் குணம் கொண்ட அந்த செடிக்கு பதிலாக, நெய்வேலி காட்டாமணி எனப்படும் பார்த்தீனியம் என்கிற ஒருவகை விஷச்செடி பரவிவி்ட்டது. அரசு மானியமாக தந்த உரங்கள் மற்றும், விதைநெல்களுடன் கலந்து அந்நிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்பட்டது அச்செடி. பசுமைபுரட்சி என்றால் விவசாயிகளை அழிப்பது, வெண்மைப் புரட்சி என்றால் பசுமாடுகளை அழிப்பது, என்பதுதானே  அரசாங்க அகராதியில் உள்ள பொருள். அச்செடி பார்ப்பதற்கே, அதன் செயற்கை தன்மையுடன்தான் இருக்கும். விளைநிலங்களை தரிசுகளாக மாற்றியதில் யூகலிப்டசைப்போல அச்செடிக்கும் முக்கிய பங்கு உண்டு. நமது சூழலை விஷமாக்கிய அரசியல் அது. சரி.. நாம் பதிவிற்கு வருவோம்.

ஏப்ரல்-1 முட்டாள்கள் தினமட்டுமல்ல வேறு சில சிறப்புகளும் உண்டு. 2004 ஏப்ரல் 1-ல்தான் நாம் பதிவு எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணமான கூகுல் குழுமம் ஜி-மெயிலை அறிமுகப்படுத்தியது பரிச்சார்த்தமாக. முடடாள் தினத்தை வலைக்கும் ஏற்றிய பெருமை என்கிற உள்ளர்த்தம் ஒன்று உள்ளதோ இதில். 2001 ஏப்ரல்-1 ல் நெதர்லாண்ட் உலகில் முதல் தேசமாக ஓரினத்-திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, சதாம் உசேனின்  ராஜதந்திரியாக இயங்கிய  அமேரிக்காவின் இரட்டை-உளவாளி ஒருவரின் சங்கேதப் பெயர் April Fool. இவர் அமேரிக்க படை வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்த உள்ளது என்கிற தவறான தகவல் தந்து, ஈராக்கிய படைகளை வடக்கிலும் மேற்கிலும் நகரச் செய்துவிட்டு, குவைத் வழியாக அமேரிக்கபடை நுழைந்ததே பாக்தாத்தை பிடிப்பதற்கு வசதியாகிவிட்டது.  ஈராக் படைபிரிவின் தலைவர்களை தவறான தகவல்களில் குழப்பியது அந்த அமேரிக்க அதிகாரிதான். 

மேலதிக தகவலுக்கு-

  • American 'double agent' sold Baghdad false war plans, Telegraph.co.uk, August 2, 2004
  • Agent April Fool tricked Saddam, TimesOnline, August 1, 2004

    இப்படியாக பல சிறப்புகளைக் கொண்ட “முட்டாள்கள் தினமான“ இன்று எனது புத்தக அறிமுகக் குறிப்பை வெளியிடுவது பொருத்தமே. 

    மொழியும் நிலமும் 2003-ல் வெளிவந்தது. ஏழு ஆண்டுகளுக்குப் cover-front-01பிறகு இரண்டாவது தொகுப்பு வெளிவருகிறது.

          •             
          •              இனவாதம் என்கிற
                         விஷப்பற்களால்
                         அழித்தொழிக்கப்பட்ட 
                         ஈழத்தமிழர்களுக்கு...

    அர்ப்பணிக்கப்பட்ட இந்நூலின் பின்னட்டையில் வெளியிடப்பட்டுள்ள அறிமுகக் குறிப்பை பதிவில் நூலறிமுகமாக வெளியிடுகிறேன். இதை வாசித்தபின் புத்தகம் வாங்கும் எண்ணத்தை கைவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. எழுதியவரும், பதிப்பகத்தாருமே பொறுப்பு.

     

    தனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கcover-back-01ப்பட்டது நவீன சமூகம்.  இச்சமூகம் உருவாகும் செயல்போக்கில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணற்ற கதையாடல்களால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே நவீனதொன்மங்கள்.  பண்டைய சிந்தனைகளை தொன்மம் என்று அடையாளப்படுத்தியதன் மூலம், அச்சமூகங்களை முற்றிலும் அறிவிற்கு புறம்பான உணர்ச்சிமிக்க மனித உடல்களாக குறியிட்ட இந்நாகரீக சமூகம் தன்னை உறுதி செய்துகொண்டு பேரமைப்பாக விரவியிருப்பது அறிவுசார் தொழில் நுட்பம், வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு என்கிற நவீன தொன்மங்களின் கதைவெளிகளில்தான். இக் கதைவெளிகளை சிதைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், திரை இலக்கியம் மற்றும் ஈழம் என்கிற பிரிவுகளில் தொகுக்கப்பட்ட இக்கட்டுரைகள் இத்தகைய தொண்மக் கதையாடல்களை பன்முகப் பரப்பில் விசாரணைக்கு உட்படுத்துகின்றன. காந்தி, புள்ளியல், நீலப்படங்கள், குடி, இஸ்லாமியப் பெண்ணியம், தமிழில் வெளிவந்த புதியவகை நாவல்கள், மண்டோவின் கதைவெளி, பயங்கரவாதம், கிரிக்கெட், மதவாதம், இனவாதம், குடிமகனாதல், தமிழ் ஈழம், ஈரானியத் திரைபடங்கள் துவங்கி தமிழின் வெகுசனப் படங்கள்வரை இவ்விசாரணையை நிகழ்த்திச் செல்கின்ற இக்கட்டுரைகள், உடல்கள் மனிதர்களாகி, மனிதர்கள் குடிமகன்களாக ஆன கதைகளை வெவ்வேறு பரப்புகளில் வைத்து உரையாடுகின்றன..... 

    வெளியீடு

    புலம்
    332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
    திருவல்லிக்கேணி
    சென்னை - 600 005
    தொலைபேசி - 0091-44-4556 7517

    மின்னஞ்சல்: pulam2008@gmail.com

    விலை ரூ 300 -  பக்கம் 432

    சில நண்பர்கள் இணையத்தில் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் மற்றொரு “முட்டாள்தினப் பதிவு” போட்டுவிடலாம். இந்த பதிவின் முட்டாள்தனமான தலைப்பைப்போல….))

    நன்றி

    ஜமாலன். (01-04-2010)

  • Share |
    ஜமாலன். Blogger இயக்குவது.