ஊழலற்ற தேசிய அரசுகள் – உபயம் உலக முதலாண்மை நிறுவனங்கள்.

”அரசு என்ன செய்தது என்று கேட்காதீர்கள், அரசு உங்களுக்கு என்ன செய்தது என்று கேளுங்கள்.” இது மக்களை ஒரு ஒழுங்குபடுத்துவதற்கு அழைக்கும் ஒரு சரியான பரஸ்பர இடையீட்டிற்கான ஒருவகை தந்திரமான சூத்திரம், எல்லா பிரச்சனைகளையும் இறுதியாக பெறுபவருக்கு மாற்றிவிடும் ஒன்று. ஒருவரது சொந்த விதியை மறுஒதுக்கீடு செய்வதற்கான கருத்தியல் பற்றிய நையாண்டியே இது.” - [1]ழான் போத்ரியார்

மீண்டும் இங்கு, திரும்பவருகிறது நவீனத்துவத்தின் துயரமான கோட்பாட்டுச்சொல்லின் எதிர்பார்ப்பு – அந்த கோட்பாட்டுச்சொல் வளர்ச்சி மற்றும் நலவாழ்வு. ஆதிக்கம் வகிக்கும் தாரளவாத-சந்தைப் பொருளாதாரத்தின் பார்வையில் நுகர்வை எதிர்ப்பது ஒரு திருத்தல்வாதம், ஒரு சமூகரீதியான ராஜதுரோகம். ஒரு புதிய வர்க்கப்போராட்டம் துவங்கியுள்ளது. (ஆட்டு மந்தை புல் வேண்டாம் என்றால், எப்படி ஒருவன் தனக்கான வெண்ணையைப் பெறமுடியும்?) – [2]ழான் போத்ரியார்.

imageசொற்பாடு-1: ”நாயை கொல்வது என்றால்கூட நாங்கள் சட்டப்படித்தான கொல்வோம்” என்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஒரு கோட்பாட்டு வாக்கியம் ஒன்று உண்டு. ஏனென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற 17-ஆம்நூற்றாண்டு ஜனநாயக வாதத்தின் அடிப்படையில் உருவான பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகை தனது காலனிகளாக பிடித்து ஓர் உலகாக மாற்றியபோது முன்வைத்து இயங்கிய ஒரு சொற்பாடு இது. இதனை அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்றால், ஒரு நாயை கொல்ல முடிவெடுத்தால் முதலில் அந்த நாயை எல்லோரையும் தாறுமாறா கடிக்கும்படி தூண்டுவது. அதன் பின் அந்த நாய் சமூகத்திற்கு கேடானது என்ற கருத்தை உருவாக்குவது. அந்த நாய் பற்றிய பல புகார்களையும், ஆய்வுறிக்கைகளையும் உருவாக்கும்படி சமூகத்தின் பொதுமனநிலையை கட்டமைப்பது. சமூகமனசாட்சியின் முன் அந்த நாயை குற்றவாளியாக உருவாக்குவது. இறுதியாக அந்த நாய்க்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ஒரு மருத்துவ அறிக்கை தயாரித்தளிப்பது. சட்டரீதியான வாதாடல்கள் மூலம் அந்த நாயை கொல்ல அனுமதி பெற்று பிறகு அந்த நாயை கொல்வது. இதுதான் சட்டரீதியானதாக சொல்லிக் கொள்ளும் ஒரு அரசின் சமூக நடவடிக்கை. சிவில் சமூகம் என்று சொல்லக்கூடிய குடியாண்மை சமூகத்தின் மனசாட்சிகள் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஊடகங்கள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள் போன்றவர்களின் பங்களிப்பு எப்படி நாயை குற்றவாளியாக்குகிறது என்பதும், அப்படி மாற்றுவதற்கான பின்னணியில் அரசு என்கிற பெரும் எந்திரத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதும் இதில் கவனிக்கப்படுவதில்லை.

சொற்பாடு-2: ”நாடு நமக்கு என்ன செய்தது என்பதைவிட நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.” என்ற கென்னடியின் பிரபலமான வாசகம். இந்த வாசகம் 1972-ல் தமிழகத்தின் ”புரட்சித் தலைவர்” எம்ஜியாரின் ”நான் ஏன் பிறந்தேன்” என்ற படத்தில் புலமைபித்தன் அவர்களால் பாடலாக எழுதப்பெற்று டி.எம்.எஸ். குரலில் பிரபலமான பாடல். ”நாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு, நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு. நான் ஏன் பிறந்தேன் இந்த நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன் என்று வாழும்வரையில் கேட்டிடு என் தோழா, உடனே செயல்படு என் தோழா” அதே ஆண்டு உடனடியாக செயல்பட்டு எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பித்து தனது பாடலுக்கு ஏற்ப தமிழகத்தை தொடர்ந்து ஆச்சி செய்து பதிலாக ஜெயலலிதா என்கிற முதல்வரை தந்துவிட்டு போய் உள்ளார். நாடு அவருக்கு தந்தது முதல்வர் பதவி. நாட்டுக்கு அவர் தந்திருப்பது வருங்கால பிரதமபதவி(?). இதன் பின்னணி அரசியல் இங்கு முக்கியமல்ல. அதன் பின்னுள்ள வலைப்பின்னல்பற்றி விரிவாக பேசப்பட வேண்டி உள்ளது. தற்போது அது நமது நோக்கமும் அல்ல. நமது நோக்கம் மேற்கண்ட அமேரிக்க ஏகாதிபத்திய உருவாக்கத்தின் முக்கிய கர்த்தாக்களில் ஒருவரான ஜான் எப். கென்னடி கூறிய வாசகத்தின் உந்துதலாக எம்ஜியாருக்கு இப்பாடல் இயற்றப்பட்டுதும் அது எம்ஜியாரின் அரசியலுக்கு ஒரு முன்னறிவிப்பாக அமைந்ததுமே முக்கியம்.

இந்த இரண்டு சொற்பாடுகளின் ஊடாக இந்த கட்டுரை நகர்ந்து இன்றைய அரசியல் போக்குகள் பற்றிய சில வர்ணிப்புகளை செய்ய முயல்கிறது.

முதல் சொற்பாடு, அரசியல் போக்கு ஏகாதிபத்தியங்கள் தனக்கான குடியாண்மை சமூகத்தை உருவாக்குவதற்காக உலக அளவில் செலவிடப்படும் அரசுசாரா நிறுவன நிதிகள். அந்த நிதிகளைப்பெற்ற தன்னார்வ நிறுவனங்கள் உள்ளுர் அளவில் உருவாக்கும் வேர்க்கால்மட்ட சமூக சேவை மையங்கள் தற்போது ஒரு புதிய அரசியல் பரிணாமத்தை பெற்று உள்ளது. அதாவது சட்டரீதியான ஆட்சி. சட்டத்தின் உரிமைகளை அளிக்கும் ஆட்சி. தொண்டு மற்றும் சேவை என்பதிலிருந்து இந்த அரசுசாரா நிறுவனங்கள் எப்படி அரசியல் அதிகாரம் பெறும் கட்சிகளாக மாறியது என்பதை சொல்வது. அந்த பரிணாமத்தின் கருத்தியல் மற்றும் கோட்பாட்டு பின்புலத்தை தருவதே இரண்டாவது சொற்பாடு. அதாவது சட்டரீதியான உரிமைகளைப்பெற அரசில் பங்குபெறுவது மக்கள் உரிமை.

இதைதான் சுருக்கமாக போத்ரியாவின் முதல் இரண்டு குறிப்புகள் சுட்டுகின்றன. மக்களுக்கான அரசு என்ற இடத்தில் மக்களின் அரசு என்பதை முன்வைத்து ஜனநாயகத்தின் மக்கள் உரிமை என்பதை மக்கள் பங்குபெறுதல் என்பதாக மாற்றுவது. அரசு என்பது கள்ளமற்றது என்பதாகவும், அதில் மக்கள் பங்குபெறவதற்கான உரிமையை முன்னிலைப்படுத்துவது போன்ற கவர்ச்சியான கோஷங்களை முன்வைத்து அரசு அதிகாரத்தை பெறுவது. முதலாண்மையின் முகவர்களாக இருந்துவந்த அரசியல்வாதிகள், முதலாண்மையின் தொண்டுநிறுவன அறிவுஜீவிகள் மற்றும் அதிகாரிகளால் பதிலீடு செய்யப்படுவது. இதனால் திரைமறைவில் உள்ள முதலாண்மை நிறுவனங்கள், அதன் தாராளவாத பொருளியல் நலன்கள் மூடி மறைக்கப்படுகிறது. அவை தங்களது நலன்பேணும் அரசுகளை உருவாக்குகின்றன. அதாவது ஊழலற்ற அரசுகளை உருவாக்கும் உபாயமாக அந் நிறுவனங்களை பயன்படுத்தி தற்போது ஒரு நாட்டின் அரசாங்கத்தையே உபயம் செய்கின்றன.

அரசில் மக்களின் பங்களிப்பை அறிவித்த ஜான் எப் கென்னடி அமேரிக்க முதலாண்மை (கார்பரேட்) நிறுவன உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். உலகை ஆண்ட பிரத்தானிய ஏகாதிபத்தியத்தை இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகத்தின் மீப்பெரு அரங்கிலிருந்து நீக்கி, ஐ.ந., உலக வங்கி, உலக செலாவனி நிதியம் (ஐ.எம்.எஃப்) போன்ற உலக அமைப்புகள் வழியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நாடகத்தை துவங்கி நடத்தவும் காரணமாக அமைந்தவர்களில் ஒருவர். இவர் காலத்தில் உருவாக்கப்பட்டதே ராக்பெல்லர் பவுண்டேஷன் என்கிற ஒரு சமூகநலநிதி அமைப்பு. இந்த அமைப்பு தோன்றிய வரலாற்றில் கென்னடியின் பங்கு முக்கியமானது. இந்நிறுவனம் மேற்கத்திய முதலாளித்துவத்திற்கு எதிரானவர்கள் எல்லோரும் அமேரிக்க எதிர்ப்பாளர்கள் என்றும், அதனை மாற்ற ”அறிவு வலைப்பின்னல்” (Knowledge Network) ஒன்றை பல்கலைக்கழக அறிவுஜீவிகள், சிந்தனை செம்மல்கள் (think tanks), அரசு முகாமை நிறுவனங்கள், மற்றும் ஊடக வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்குவது. இவர்கள் நிலவும் உலகின் படிநிலை வரிசைளை நிர்வகித்துக்கொண்டே நிறுவனங்களின் அதிகார மையங்களை உருவாக்குவதே அடிப்படை. இந்த ராக்பெல்லர் நிறுவனத்தின் முதல் செயலாளர் அமெரிக்க அரசுச் செயலாளரான டீன் ரஸ்க் என்பரே. இவர் போருக்கு பிறகு ஜப்பானால் அழிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்வதாக கொரியாவை பிரித்து அமேரிக்க சார்பாக மாற்றியதில் முக்கிய பங்காற்றியவர். சோவியத் சார்பான கம்யுனிஸ நாடுகளக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றிற்கு காரணமாக அமைந்தவர்[3].

இந்த தொண்டு நிறுவனங்கள் அமேரிக்க ஏகாதிபத்தியங்களின் நிதியில் உலகெங்கிலும் பரவலாக்கப்படுவது என்பது அடிப்படையில் கம்யுனிஸ சிந்தனைக்கு பலியாகிவிடாமல், மக்களை முதலாளித்துவ தொண்டுகளில் தக்கவைப்பதே. குறிப்பாக 1950 முதல் போர்ட் பவுண்டேஷனும், இந்நிறுவனமும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இப்பணியை செவ்வனே செய்துவருகின்றன. சீனாவின் கம்யுனிஸம் பக்கத்து நாடுகளுக்கு பரவிவிடும் அயாயத்தை தடுப்பதே இவற்றின் நோக்கம் என்பதை விவரிக்கிறார் பாபு சி.டி. சுனில் என்கிற ஆய்வாளர்[4]. இந்த நிதிகள் நேரடியாக வழங்கப்பட்டன. அவற்றில் கட்டுப்பாடுகள் உள்ளுர் தேசிய அரசுகளாலும், மற்றும் இடதுசாரி அமைப்புகளாலும் அம்பலப்படுத்தப்படுவதால் இப்போது சில அரசியல் சார்ந்த அமைப்புகளுக்கு அந்த நிதிகள் இத்தகைய நிறுவனங்களால் விருதுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ராக்பெல்லர் பவுண்டேஷன்தான் பிலிப்பைன்ஸ் அரசு வழியாக வருடாவருடம் ஆசிய நோபல் பரிசு எனப்படும் ரோமன் மகாசேசே விருதை வழங்கிவருகிறது. இது ஆசிய நாட்டைச் சேர்ந்த தங்களது துறையில் சாதனைப் புரிந்தவர்களுக்கும், இயக்கங்களுக்கும் தரப்படுகிறது. போதுவாக தொண்டு நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர்கள் என குடியாண்மை சமூகத்தினை மேம்படுத்தும் அரசுசாரா நிறுவனங்கள், அல்லது அந்த நிறுவனங்களினை வழிநடத்தப்படுபவர்களுக்கு தரப்படுகிறது. 2001 முதல் தலைவராக உருவாகும் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தரப்படுகிறது. ஒருவகையில் இந்நிறுவனம் ஆசியாவிற்கு மட்டும் வழங்குவதும், அதுவும் குடியாண்மை சமூக மேம்பாட்டிற்கு பாடுபடுபவர்களுக்கு தருவதும் இதன் அடிப்படை அரசியலை தெரிவிப்பதாக உள்ளது. ஆசிய நாடுகளின் அரசியலில் தலையிடுவதும், தனக்கு ஏற்புடைய நிறுவனங்கள் வழியாக தனக்கான கருத்தியலை பரப்புவதும் இதன் அரசியல். இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னணி என்பது ஆசிய சமூகங்களுக்கு அமெரிக்க நிதியமைப்பு மறைமுக வருவதற்கான வழிமுறையாகவே தெரிகிறது.

இந்நிறுவன விருதுகளைப் பெறுபவர்கள் தங்கள் கையை அந்நிய நிதிபெற்றதாக காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம் விருது என்பதன்மூலம் அத்தகைய நிறுவனங்களை ஒரு பரவலான அமைப்பாக நிறுவனப்படுத்தமுடியும் என்பதே. ஊடக விளம்பரம் வழியாக அவர்கள் விருதுபெற்ற புகழைவைத்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிடுவது. ஆகவே அவர்களை எப்போதும் தனிமனிதர்கள் அல்லாமல் ஒரு நிறுவனம் என்பதாக கவனத்தில் கொண்டே அணுகவேண்டும். ஆக அரசுசாரா நிறுவனம் என்பது அடிப்படையில் அந்நிய நிதியை பெற்று உள்ளுர் மக்களிடம் ஒரு மேற்கத்திய குடியாண்மை சமூகத்தை நிறுவுவதே. (இதற்கு முன்பு அடவியில் இது குறித்து விரிவாக எழுதி உள்ளேன்.) அந்த சமூகத்தை மேற்சொன்ன அமேரிக்க ஆதரவாக மாற்றுவதே. அல்லது உலக முதலாண்மை நிறுவனங்களுக்கான மன அமைப்பை உருவாக்குவதே. இந்த முயற்சியை செய்வதே அரசுசாரா நிறுவனங்களின் அடிப்படை.

உலகமயமாதலுக்கு முன்பு இத்தகைய அமைப்புகள் வேர்க்கால்மட்ட கிராமங்களினை சீர்திருத்தக்கூடிய தொண்டுநிறுவனங்களாக, அரசின் உதவிகளை பெற்றுதருவதும், கிராமங்களை நாகரீகப்படுத்துவது என்பதாக செயல்பட்டன. அதாவது, அடிப்படையில் தொண்டு நிறுவனங்களாக செயல்பட்டன. இவற்றில் ஒரு அடிப்படை மாற்றத்தை நிகழ்த்தியது உலகமயமாதல். காரணம் உலகமயமாதல் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியில் கிராமங்கள் ஓரளவு நாகரீகமடைந்தன ஆனால் மற்றொரு புறம், தேசிய அரசுகள் முழுக்க அந்நிய மூலதனத்தை அண்டி பிழைக்கும் நிலைக்கு ஆளானபோது, உலகமயமாதலின் உள்ளுர் முகவர்கள், அவர்களால் வளர்க்கப்பட்ட அரசியல்வாதிகள் பெரும் ஊழல்கள் செய்பவர்களாக மாறினார்கள். முதலாண்மை நிறுவனம் இப்படி உலகெங்கிலும் உள்ளுர் அரசியலை பெரும் ஊழல்கொண்டதாக மாற்றியது. அது காலூன்ற அரசையும், அரசு அதிகாரிகளையும் ஊழல் மயப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சுதேசியம் பேசும் இவர்களிடம் கையூட்டும், கமிஷனும் இல்லாமல் அவர்களது “தேசபக்தியை” விலைபேசமுடியாது என்பதால்.

இந்த ஊழலால் உடனடியாக பாதிக்கப்பட்ட உள்ளுர் ஏழைகள், கூலி உழைப்பாளர்கள், சிறு வியபாரிகள், மத்தியதரவரக்கத்தைச் சேர்ந்தவர்கள், சிறுமுதலாளிகள் என அனைவரும் வாழ வழியற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். தங்களது வாழ்வுரிமை பரிக்க காரணம் முதலாண்மை நிறுவனங்ளின் வருகையும் அவற்றினால் கட்டுண்ட அரசுகளின் புதிய தாராளவாத பொருளாதராக் கொள்கையும், அதன் உலமயமாதல் அரசியலுமே என்பதை புரிந்துகொள்ள முடியாமல் திசைதிருப்ப எல்லாவற்றிற்கும் ஊழலே காரணம் என்பதான பொதுஜன அரசியல் மனநிலை கட்டமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்தது. அதை ஒட்டி உலகின் பல தொண்டு நிறுவனங்கள் ஊழல் எதிர்ப்பு உள்ளுர் அரசியல் கோஷத்தை முன்வைத்து அரசியல் இயக்கங்களாக மாறின.

கடந்த சில ஆண்டுகளாக உலக அரசியலில் இந்த உள்ளுர் ஊழல் என்பது ஒரு பெருந்தீமையாக காட்டப்படுகிறது. இது சந்தேகத்திற்கிடமின்றி பெருந்தீமைதான். இதைக்களைய இதன் வேர்களை வெட்டி எறிய வேண்டும். மாறாக ஆட்சிமாற்றத்தை முன்வைப்பது தீர்வாகாது. 1982-ல் மகாசேசே விருது வாங்கிய அருண்ஷோரிதான் அப்துல் ரஹ்மான் அந்துலே என்கிற மஹாராஸ்டிர முதல்வர் ஊழலை அம்பலப்படுத்தி பதவி இறக்கம் செய்தார். ராஜிவ் காந்தியின் போர்பர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தி அதை ஒட்டி ஆட்சிமாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர் என்பதையும் பிறகு பிஜேபி அமைச்சராக ஆக்கப்பட்டார் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சம்பவம்-1: 2002-ல் கோத்ராவில் கரசேவர்களின் ரயில் பெட்டி எரிக்கப்பட்டதை வைத்து குஜராத்தில் மிகப்பெரும் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தின்மூலம் ஒரு பேரச்சம் இஸ்லாமியரிடம் கட்டமைக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் பொருளாதாரம் பெருமளவில் அழிக்கப்பட்டன. ஒரே நாளில் அனைத்து இஸ்லாமியார்களும் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டார்கள். எண்ணற்ற இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள் என்பதைவிட நாடெங்கிலும் பயந்து நடுங்கும் அளவிற்கு மூர்க்கமான கொடூரமான தாக்குதலாக அது நடத்தப்பட்டது. கருவில் உள்ள குழுந்தையை வயிற்றைக்கிழித்து பொது இடத்தில் தீயில் கருக்கியது போன்ற கொடுரங்கள் ஒரு குறியீட்டு நிகழ்வாக மறக்கமுடியாத ஒரு பேரச்சமாக இஸ்லாமியர்கள் மனதில் படியும்படி நிகழ்த்தப்பட்டது. வரலாற்றில் ஒரு நிர்கதியற்ற நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை நிகழ்த்தி காட்டியது. அதற்கு எதிராக கிளர்ந்த சமூகமனசாட்சி என்பது சட்டவழியானதாகவும், தனிமனித இஸ்லாமிய பங்கரவாத வெடிகுண்டு தாக்ககுதலாகவும் இருந்தது.

தனிமனித பயங்கரவாத தாக்குதலும், கோத்ரா கொடூரமும் ஒன்றிற்கு ஒன்று சளைக்காத வன்முறையின் வெளிப்பாடாக இருந்தது. வன்முறை பற்றிய ஒரு பேச்சுக்களன் கட்டமைக்கப்பட்டது. அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணில் இத நிகழத்தப்பட்டது என்பது மற்றொரு குறியீட்டு நிகழ்வு. இதன் குறிப்பீடு என்னவென்றால், காந்தியம் என்பது இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதான செய்தியே. எந்த மதத்திற்கு சார்பாக இருக்கிறார் என்று கா்நதி படுகொலை செய்யப்பட்டாரோ அந்த மதத்தினரை அவரது மண்ணிலே ரத்தப்பலி எடுத்தார்கள். இந்நிலையில்தான் காந்தியம், அஹிம்சை அதன் தேவைகள் மறுபடியும் உணரப்பட்ட ஒரு தளம் சொல்லாடல்களில் மீண்டெழுந்து வருகிறது.

2009-ல் இந்து சுவராஜ் என்கிற காந்தியின் முக்கியமான சித்தாந்த நூலின் நூற்றாண்டு விழா தலாய் லாமாவால் துவக்கி வைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. காந்தி மீள்வாசிப்பிற்கு உள்ளாகும் அறிவுச் செயல்பாடுகள் நிறைய நடைபெறுகிறது. காந்தியின் அஹிம்சைவழியின் வழியாக காங்கிரஸ் பேரியக்கத்தின் ஊழல் என்பது சமூகத்தீமை என்பதாக வடிவம் கொள்கிறது. ஊடகங்களால் காந்தி காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இடதுசாரிவாதம் அதாவது மாற்று அரசியல் காந்தியவாதமாக அதாவது இடது வலது அற்ற மையவாதமாக மாறுகிறது. அதை ஒட்டி காந்தியை தனது குறியீடாகக் கொண்டு இந்திய ஊழல் ஒழிப்பு இயக்கம் உருவாகுகிறது அரசுசாரா நிறுவனமாக.

சம்பவம்-2: 2011-ல் அன்னா ஹசாரே லோக்பால் பில் எனப்படும் ஊழலுக்கு எதிரான மன்றத்தை அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்கிறார். காந்தியம் பற்றி உருவாக்கப்பட்ட கருத்தமைவுகளின் விழிப்புணரச்சியில் ஹசாரே காந்திக்கு திரும்புதல் என்பதை நினைவூட்டுகிறார். அவரோடு ஊழல் எதிர்ப்பில் பங்குபெற்ற அரசுசாரா நிறுவனத்தைச் சேர்ந்த மகாசேசே விருதுபெற்ற அறிவஜீவிகள், அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் நடத்திய தலைவர்களான அரவிந்த கேஜ்ரிவால் உள்ளிட்ட குழுவினர் இணைகின்றனர். டீம் அன்னா எனப்படும் அன்னா குழுவினர் காந்தியின் சுயராஜ்ஜியம் என்கிற தன்னாட்சிக் கொள்கையை ஏற்று ஊழலை ஒழிப்பதற்கு, அதை கண்காணிப்பதுற்கும், ஊழல் செய்தவரை தண்டிப்பதற்குமான லோக்பால் பில்லை பாராளுமன்றம் என்ற அமைப்பிற்குமேல் அதிகாரம் செலுத்தும் ஒன்றாக உருவாக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதாவது ஒரு இணைஅரசாக, சட்டத்தை கண்காணிப்பதாக செயல்படும் அமைப்பாக அவர்களால் முன்வைக்கப்படுகிறது. இதன் உட்பொருள் அரசு அதிகாரத்தை தாண்டிய ஒரு அதிகாரத்தை பெற முனைவதே அவர்களது நோக்கம் என்பது. அதிகாரத்தை மையமற்றதாக ஆக்குவதாகக்கூறி, ஒரு பலம் பொருந்திய அதிகார அமைப்பை உருவாக்குவதே. இதை ஒட்டி நாடெங்கிலும் ஊழல் ஒழிப்பு என்கிற கருத்தாக்கம் அரசியல் வடிவம் கொள்கிறது.

சம்பவம்-2: 2012-ல் டெல்லியில் ஒரு மாணவி ஆறுபேர்கொண்ட குழுவால் கடுமையான பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு பிறகு இறந்து போகிறார். அந்த பெண்மீது செலுத்தப்பட்ட வன்முறை கோத்ராவிற்கு பிறகான குஜராத்தில் கர்ப்பினி வயிறு கிழிக்கப்பட்டதைப்போல, பேண்குறியில் கம்பிகளை விட்டு கிழிப்பது என்கிற கொடூரமாக நடக்கிறது. மனிதமனம் இம்சை என்கிற வன்முறைக் கொண்டதான ஒரு மனப்படிவம் வெளிப்பாடு கொள்வதே இந்த நிகழ்வின் குறிப்பீடு, காந்தியின் அஹிம்சையும், பெண்ணிற்கான பாதுகாப்பும் அவசியம் என்பதை உறுதிபடுத்தும் ஒன்றாக மாறுகிறது. இதில் அந்த வன்முறையை நடத்தியவன் பெண்கள் இந்தியப் பண்பாட்டு உடை அணியவில்லை என்பதை சொல்லி அதற்கான தண்டனையே அது என்று பேசியது முக்கியமானது. அந்த வாக்குமூலத்திற்குள் உள்ள இந்தியப்பண்பாடு என்ற சொல் முக்கியமானது. இந்தியப்பண்பாட்டை காப்பதன் பின்னணியில் உள்ள கொடுர வன்முறையாக அது வெளிப்பட்டது என்கிற செயல் ஊடகங்களால் பெரிதுபடுத்தவில்லை.

இந்தியாவில் இதுதான் முதல் சம்பவம் என்பதைப்போல ஊடகங்கள் இதை தேசம் தழுவிய பிரச்சனையாக்குகின்றன. நாடெங்கிலும் எதிர்ப்பலை கிளம்புகிறது. ஆனாலும் இந்தியாவில் இதைவிடவும் நடந்த கொடுமையான பாலியல் பலாத்காரங்கள் எதுவும் இத்தனை வெளிச்சம் பாய்ச்சப்படவில்லை ஊடகங்களால். இது காந்தியின் நள்ளிரவில்கூட பெண் பாதுகாப்பாக செல்வதே சுதந்திரம் என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரான ஒன்றாக எங்கும் வாசிக்கப்பட்டது. காந்தி தேசமே உனக்கு காவல் இல்லையா? என்ற தமிழ் சினிமாப்பாடலைப்போல இது பிரபலமானது. இவ்வாசிப்பின் வழியாக காந்தியம் என்பது அரசியல் தளத்தில் இருந்து சமூகத்தளத்திற்கும், மக்களின் பொது மனத்தளத்திற்கும் மாறுகிறது.

சம்பவம்-3: 2013-ல் ஊழல் மலிந்த இந்திய அரசின் குறிப்பாக காங்கிரஸிற்கு எதிராக காந்தியம் உருவாக்கிய மனத்தளத்தின் அரசியல் வடிவத்தை அரவிந்த் கேஜ்ரிவால் கையகப்படுத்தி அன்னாவிடமிருந்து விலகி ஆம் ஆத்மி அதாவது பொதுஜனம் என்கிற பெயரில் ஒரு அரசியல் கட்சியை துவக்குகிறார். இக்கட்சி டில்லியின் எல்லா சேரிகள், அடித்தட்டு மக்களிடம் ஊழற்ற ஆட்சி பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. முழு ஆம் ஆத்மி (கேஜ்ரிவாலின் என்ஜிவோ) தொண்டர்களும் அதில் இறங்கி பணியாற்றுகின்றனர். இவர்களது காந்திய குல்லா என்பது மற்றொரு குறியீடு. இதன்வழியாக காந்தியின் அமைதிப்புரட்சியை நிகழ்த்துவதான பாவனையில் இக்கட்சி டெல்லி சட்டமன்றத்தை 2013-இறுதியில் பிடித்து அதிகாரத்தை பெறுகிறது. இக்கட்சி மக்களுக்கான அரசை மக்கள் அரசு என்கிற வாதத்தின் வழியாக தனதானதாக ஆக்குகிறது.

இந்தப்பின்னணிகளை புரிந்துகொள்ள உலக அரசுசாரா நிறுவனங்கள் எப்படி உருவாகிவரும் உலகப்பேரரசு ஒன்றிற்கான குடிமக்களை உருவாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இந்த உலகப் பேரரசு தேச எல்லைகள் அற்றது. அதன் அரசியில் எல்லைதாண்டிய ஜனநாயகம், அரசியல் பங்கேற்பு என்பதாக, நேருக்கடிக்குள்ளான உலக முதலாளித்துவ முதலாண்மை நிறுவனங்களை அரசு அதிகாரத்தில் பங்கேற்ப வைப்பதே. அதற்கான அரசுசார செயல்பாட்டாளர்களாக பங்களிப்பதே இந்த அரசுசார நிறுவனங்களின் பணி. இது இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு 1950-களில் இந்தியாவின் கிராமப்புறங்களை ஆராய்வது என்கிற மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களால் முதலில் துவங்கப்படுகிறது.

இந்திய கிராமங்கள் குறித்த இந்த ஆராய்ச்சியில், கிராமங்களை நாகரிகப் படுத்தப்படுதல், நவீனப்படுத்தப்படுதல் என்கிற முடிவுகளாக இந்த ஆய்வுகள் ஒரு அறிவுப்புலத்தை கட்டமைக்கின்றன. 1950 முதல் 1970 வரை போர்ட் பவுண்டேஷன் இந்தியாவில் கம்யுனிட்டி டெவலப்மெண்ட் புரோகிராம் எனப்படும் கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தை இந்திய மண்ணில் ஊன்றியதாக பாபு சி.டி. சுனில் என்கிற ஆய்வாளர் விரிவாக விவரிக்கிறார்.[5]போர்ட் பவுண்டேஷன் இந்தியாவில் நுழைந்த முக்கிய காரணம் அமேரிக்க மேலாண்மையை சோவியத் கம்யுனிஷத்திற்கு எதிராக நிறுவுவதே போர்டு பவுண்டேஷனின் அரசியல் என்கிறார் பலரது நூல்களையும், அவர்களது திட்டவரைவு, ஆய்வுமுடிவுகளை ஆராய்ந்து. இந்நிறுவனம் எப்படி அரசு, வியபார மற்றும் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் திறமையானவர்களை தனது பணியாட்களாக் கொண்டு செயல்படுகிறது என்பதை விவரிக்கிறார்.

அமேரிக்காவின் சுதந்திரம் பற்றி ஆதரவாக எழுதி கேட்டு அதற்கு நிறைய பணம் தருவதாக ஒரு அமேரிக்க அதிகாரி தன்னிடம் பேசியதை சதாத் ஹசன் மாண்டோ தனது அங்கிள் சாம் கடிதங்களில் குறிப்பிடுகிறார். இப்படி இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், கல்லூரி பேராசிரியர்கள், பொதுநலத் தொண்டர்கள் என அறிவார்ந்த தளத்தில் மற்றும் செயல்தளத்தில் உள்ளவர்கள் வழியாக கருத்துப் பரவலை உருவாக்குவதே இத்தகைய நிறுவனங்களின் முக்கியப்பணி. ஒருபுறம் ஆசிய நாடுகளின் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களதேஷ் போன்ற நாடுகளின் மூலவளங்களை கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் அறிவை சேகரித்து உலக முதலாண்மை நிறுவனங்களிடம் பகிர்ந்துகொள்வதும் இதன் மற்றொரு பணி எனலாம். அதாவது ஒருவிதமான அறிவை கட்டமைப்பதும் கையகப்படுத்துவம் இத்தகைய நிறுவனங்களின் அறிவுமட்டத்திலான செயல் என்றால், பொதுமக்களிடம் வளர்ச்சி, நலவாழ்வு. சுகாதாரம் என்ற பெயரில் அவர்களை தங்கள் நிதியில் பயிற்றுவிப்பது மற்றொரு செயலாகும்.

இந்த வளர்ச்சி என்கிற நிலையிலிருந்து குடியாண்மை சமூகத்தின் வாக்களிப்பில் தேர்தல் பங்கேற்பில் பயிற்றுவித்தல் என்கிற நிலையை உலக என்ஜிஓ நிறுவனங்கள் தங்களது செயல்பாடாக தற்சமயம் மாற்றி உள்ளன. அதாவது அரசியலற்ற இயக்கமாக தொண்டு நிறுவனங்களாக இருந்த அவை, அரசியலில் பங்குபெறும் ஒன்றாக மாறுகின்றன. அதன் ஒரு சோதனைச்சாலையாக உருவாக்கப்பட்டதே டில்லி ஆம் ஆத்மியின் அரசியல் தலையீடு. ஆம் ஆத்மி நேரடியாக உலக நிதி நிறுவனங்களின் நிதியை பெறவில்லை என்று கூறினாலும், அதன் செயல்பாடு அத்தகைய நிறுவனங்களின் செயலை ஒட்டியதே. முதலாண்மை நிறுவனங்களுக்கு எதிராகவோ, பெருமுதலாளி அமைப்புகளுக்கு எதிராகவோ அது பேசுவதில்லை. அரசை சீரமைப்பது மட்டுமே தனது பணி என்பதாகவும், அதை பயன்படுத்தி மக்களநலனை பேணுவது என்பதுமே அதன் அரசியலாக உள்ளது. இங்கு குறிப்பாக அந்த அமைப்பின் 3 முக்கியமான தலைவர்கள் முன்பு நாம் சொன்ன ராக்பெல்லர் பவுண்டேஷனின் மகாசேசே விருது வாங்கியவர்கள் என்பது முக்கியம். பிரபல எழுத்தாளரும், சமூக சேகவரமான அருந்ததிராய் தனது கட்டுரை[6] ஒன்றில் 400,000 அமேரிக்கன் டாலர் போர்ட் பவுண்டேஸனில் இவர்கள் பெற்றதாக முன்வைக்கும் சந்தேகங்களை நிராகரித்துவிட முடியாது. இந்திய அரசும்கூட அவர்கள் அந்நியநிதி பெறுவதாக அறிவித்து, அதில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.

இந்நிலையில்தான் சமீபத்தில் நடந்த டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றிக்கு வழக்கத்திற்கு விரோதமாக ஊடகங்கள் இந்திய அளவில் ஒரு மூன்றாவது சக்தியாக வர்ணித்து இக்கட்சியை உருவாக்கி வருவதன் பின்னணியை புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. தொடர்ந்து இக்கட்சியின் செயலை அறிவிப்புகளை ஊதிப் பெருக்குகின்றன. ஊடகங்களின் இச்செயலுக்கு உதாரணம், இத்தேர்தல் முடிவுகள் வழியாக மோடி அலை வீசுகிறது என்பதை கட்டியமைத்து காட்டியதைக் கூறலாம். இப்போதோ டில்லிக்கு தாவி ஆம் ஆத்மி அலைவீசகிறதாக மாற்றி வாசிக்கின்றன. சமூக வலைத்தளமான முகநூல், டுவிட்டர் உள்ளிட்டவற்றில் பல அலசல்கள், விவாதங்கள் எழுதப்பட்டு வருகிறது. இப்படி எழுதும் அனைவரும் ஒன்றை நன்றாக அறிந்தவர்கள். அது காங்கிரஸ் எதிர்ப்புதான் இந்த தேர்தலினை நடத்திய காரணி என்பது.

காரணம், காங்கிரஸ் ஆட்சி ஏற்படுத்திய விளைவுகள் எல்லோரும் அறிந்ததே. மக்களிடம் அது அதிருப்தியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இப் பின்னணியில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பலை சுணாமி போன்று வீசிக்கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மீதான மக்கள் அதிருப்தியை பிரதிபலிப்பதாக அக்கட்சியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள சோனியா காந்தியே சொல்லி உள்ளார். ஆக, எல்லோருக்கும் தெரிந்த உள்ளங்கை நெல்லிக்கனி காங்கிரஸ் எதிர்ப்பலை வீசுகிறது என்பது. ஆனால் இந்த பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப்போல மோடியின் அலை வீசுகிறது என்று எழுதினார்கள்.

இந்திய தேர்தல்களில் அலைவீச்சு என்பது எப்போதும் எதிர்மறையாவே நிகழ்ந்து உள்ளது. இந்திராவின் எமர்ஜென்சி, ராஜிவ் கொலை போன்றவற்றில் அலை என்பது பிரதமர் யார் என்று அறியாமலே வீசியது. அந்த இரண்டு அலையிலும், எந்த தனிநபர் அலையும் வீசவில்லை. அலை என்பது ஒரு தனிமனிதனை முன்வைத்து வீசுவது என்பதே மாயை. காரணம், மோடியை பிஜேபி இறக்கியிருப்பதே, அதனிடம் சரியான ஒரு பாரம்பரிய தலமை இல்லை என்பதால்தான். அக்கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி மோடியை முன்வைக்க இரண்டு காரணம். 1. காங்கிரஸீக்கு எதிராக வீசும் இந்த பேரலையில் மீன் பிடித்தால்தான் உண்டு. 2. காங்கிரஸிடம் சரியான தலைமையோ, பிரதம வேட்பாளரோ இல்லை என்பதால், ஓரளவு பிரபலமான (இதுகூட ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உருவானதே) மோடியை முன்வைக்கின்றன. இதன்மூலம், பிரதம வேட்பாளரை களத்தில் நிறுத்தி முண்டா தட்டும் மல்யுத்த அரசியலை செய்ய முனைகிறது பிஜேபி. எது எப்படி இருந்தாலும், இது பிஜேபிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்பதால் தங்களது ரஜகததுரகபதாதிகளுடன் (ரஜம், கதம் எல்லாமே ஊடகங்கள்தான்.. அரசியல் மெய் உலகிலிருந்து நகர்ந்து ஊடகங்களின் மெய்நிகர் உலகில்தான் நடக்கிறது.) களம் இறங்கி உள்ளனர். ஆனால், ஊடகங்களோ டில்லியில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றியை இப்போது ஊதிப் பெருக்குகின்றன. காரணம் ஆம் ஆத்மி பெறும் வாக்குகள் அதிகம் காங்கிரஸ் அதிருப்தி குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளே. அவை காங்கிரஸிடமிருந்து பிரிந்தால் பிஜேபி சாதரணமாக நிறைய தொகுதிகள பிடித்துவிடலாம் என்பதே ஒரு அரசியல் கணக்கு. இப்போ முதலாண்மை நிறுவனங்களுக்கு, காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பின்னணி தேவைப்படுகிறது. காரணம் காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்திருப்பதே. மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியாக அது பிஜேபியை முன்வைக்கிறது. அதற்கான மறைமுக ஆதரவாகவே ஆம் ஆத்மியின் வருகை அமைந்து உள்ளது.

ஆம் ஆத்மி வெற்றிபற்றி பேசுபவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். முதலில் அது காங்கிரஸ் வாக்குகளை பிரித்ததுள்ளது என்பதை. இதன்மூலம் அது தனது பிஜேபி விசுவாசத்தைக் காட்டி உள்ளது. காங்கிரஸ் வலுவாக உள்ளதாக நம்பப்படும் இடங்களில் இதுபோன்ற கட்சிகள் தேர்தலில் பங்குபெற்று, வாக்குகளை பிரிப்பது என்பது சாதரண வாக்கு-கணக்கு அரசியலில் சகஜமானது. ஆம்-ஆத்மி இரண்டு புதிய வாக்காளர்களை கவர்ந்து உள்ளது. குறிப்பாக நகர்ப்புற படித்த இளைஞர்களை. அல்லது காங்கிரஸ் மற்றும் பிஜேபியிற்கு வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்காளர்களை. இந்திய அளவில் வர இருக்கும் தேர்தலில் இந்த வாக்குகள் கணிசமாக உள்ளன. ஆனால் அந்த வாக்குகளைப்பெறும் ஒரு தேசியக்கட்சியும் இன்று இல்லை. காங்கிரஸ் மற்றும் பிஜேபி என்பது "Deep and Devil sea" என்பார்கள். மேலே பூதம், கிழே ஆழ்கடல் நடுவில் தொங்கும் இந்திய மக்கள். இரண்டு கட்சிகளும் ஒரே கொள்கை நோக்கம் செயல்பாடுகளைக் கொண்டவை. ஒன்று வெளிப்படையாக பேசுகிறது. மற்றது மௌனம் சாதித்து அதை செயல்படுத்துகிறது. காரணம் இரண்டும் கார்பரேட் என்கிற முதலாண்மை நிறுவனங்களின் நலனை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. அவற்றின் போட்டி தொழில்போட்டியைப் போன்றதே தவிர அதில் பெரிய மக்கள்நல அரசியல் எதுவுமில்லை. இவ்விரண்டின் மீதும் நம்பிக்கை இழந்த மக்களுக்கு தற்காலிக ஆறுதல் தரக்கூட ஒரு 3-வது அமைப்பு இல்லை என்பதுதான் சோகக்கதை.

இந்திய அரசியலின் மிகப்பெரும் கேடும் தோல்வியும் இடதுசாரிகளின் வீழ்ச்சியும் சரிவும்தான். இடதுசாரி இயக்கம் இத்தகைய நிலையை அடைவதற்கான திட்டம் சுதந்திர போராட்டத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது. அதன் விளைவே இன்று மக்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். நாம் மேலே விவரித்த என்ஜிவோ வலைபின்னல் அமைப்புகள் அமேரிக்காவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அது காளான்களாக கிராமங்களில் முளைத்து, அனைத்து மக்களின் பிரச்சனைகளையும் திருப்பி, அவர்களை தன்னுணர்வு அற்ற, தன்மானமற்ற கையேந்தி யாசிக்கும் நிலைக்கு, உதவி கேட்டு ஒப்பாரி வைக்கும் நிலைக்கு ஆளாக்கி உள்ளது. உண்மையில் தனது இருப்பை அழித்து, தனது வாழ்வை சூறையாடிய அரசு மற்றும் முதலாண்மை நிறுவனங்ளுக்கு எதிரான கிளர்ச்சியை, வெறும் நலவாழ்விற்கான உதவி கேட்டு கையேந்தி நிற்கும் அவலநிலையாக மாற்றியுள்ளது இந்த என்ஜிவோ நிறுவனங்கள். அரசுகளும் பல இலவச திட்டங்கள் மூலம் இலவசங்களை வழங்கி அந்த என்ஜிவோக்கள் உருவாக்கிய பிசசைமனநிலையை பயன்படுத்தி மக்களுக்கு தீனிபோடுகின்றன. உரிமைகள் என்பது யாசித்துப் பெறுவதாக மாற்றியுள்ளன.

மக்களிடம் கிளர்ச்சி உணர்வை, அவர்களது தன்னுணர்வை,. உண்மைநிலையை உணர்த்திய இடதுசாரி இயக்கங்களை, கடந்த 60 ஆண்டுகளாக என்ஜிவோ அமைப்புகள் செயல்பட்டு சுத்தமாக துடைத்தெறிந்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது. அதாவது இந்திய மையநீரோட்ட அரசியலில் 3 போக்குகள் கொண்ட கட்சிகள் மட்டுமே செயல்படும்படி ஆக்கி உள்ளன. 1. தீவிர வலதுசாரிகள். 2. வலதுசாரிகள் 3. வலதுசாரியை நோக்கி நகர்பவர்கள். உண்மையில் இடதுசாரி இயக்கம் இந்தியாவில் காலவதியாகிவிட்டது என்று சொல்வதை தவிர வேறுவழியற்று உள்ளது. இடதுசாரிகளாக இருப்பவர்கள் சிந்தனைத்துறை, மற்றும் மாவோயிஸம் பேசும் அமைப்புகள், தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம் பேசும் தனிப்பட்ட குழுக்கள் என சிதறுண்டு உள்ளது. இவர்கள் ஒரு தேசிய இயக்கமாக பிரதிநித்துவம் செய்வதற்கான வாய்ப்பற்றவர்கள். இந்த உருவாக்கப்பட்ட வெற்றிடத்தில் தன்னை நிரப்புகிறது ஆம் ஆத்மி. இந்நிலையில் ஆம் ஆத்மி போன்ற அமைப்புகள் மத்தியதரவர்க்க கோபங்களுக்கான ஒரு தற்காலிக தீர்வாக அமைகின்றன.

உண்மையில் அரசியல்வாதிகளை நம்பலாம். ஆனால் அரசியலற்றதாக கூறும் நடுநிலைவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள். குறிப்பாக ஆம் ஆத்மி போன்ற கட்சிகள். காரணம். உலகில் உருவாகிவரும் பேரரசு என்கிற அரசியல் அமைப்பின் முக்கியமான முகவர்களாக உள்ள என்.ஜி.ஓ.க்கள் அமைப்பின் ஒரு அங்கம்தான் ஆம் ஆத்மி. இவர்கள் உலகெங்கும் சிவில் சொஷைட்டி எனப்படும் குடியாண்மை சமூகத்தை, நல்லதொரு உலகக் குடிமகனை உருவாக்கும் நோக்கம் கொண்டவர்களாக காட்டிக்கொண்டு, உள்ளுரில் சரியான இடதுசாரி அமைப்புகள் உருவாகவிடாமல் தடுப்பவர்கள். இவர்கள் ஒரு மாற்று கிடையாது. மாற்றுகளை இல்லாமல் செய்பவர்கள். இவர்களது நோக்கம் மக்கள் நலன் அல்ல. ஒரு சர்வதேச முதலாண்மை நிறுவனங்களின் ஆளுகைக்கும், உள்ளுர் மக்களுக்கும் ஒரு பாலமாக அமைவது மட்டுமே. நுட்பமாக சொன்னால், சர்வதேச கருத்தியல் பண்டங்களான ஊழற்ற அரசியல், ஜனநாயகம், மனித உரிமை, மனிதநேயம், நாகரீகம், சார்பின்மை, நடுநிலமை, மக்கள் நலன் உள்ளிட்ட பலவற்றை இறக்குமதி செய்து அதை பரவலாக மக்களிடம் விநியோகம் செய்வது.

ஆம் ஆத்மி வழியாக உலக என்ஜிவோ நிறுவனம் ஒரு புதிய செய்தியை சொல்கிறது. அரேபிய வசந்தம் எனப்படும் உள்ளுர் கலகங்கள் வழியாக புரட்சிப் புயலை வீசிய என்ஜிவோக்கள், இந்தியா போன்ற நாடுகளில் அரசியலில் நேரடியாக ஈடுபடும் நிலைக்கு மாறுகிறார்கள் என்பதுதான். ஜனநாயகமற்ற அரேபியாவில் தெருமுனைக்கிளர்ச்சி, ஜனநாயக இந்தியாவில் ஓட்டுப்பெட்டியின் அமைதிப்புரட்சி. உலகப் பேரரசின் முகவர்களின் முதல் தேர்தல் பங்கேற்பு என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த வெற்றி என்பது ஒரு பெரும் தோல்விக்கு நம்மைத் தள்ளிச் சென்றுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை அவசியம்.

ஆம் ஆத்மி ஊழல் என்பது அரசுக்கு வெளியில் நடப்பதான மாயையை உருவாக்குகிறது. அரசு என்பது பரிசுத்தமான ஒரு அமைப்பு என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அரசு என்பது அதிகாரவர்க்கம். அந்த அதிகாரவர்க்கத்தை கடிவாளமிட்ட அரசியல் வாதிகளை அதாவது மக்கள் பிரதிநிதிகளை நீக்கிவிட்டு அதையும் அதிகார வர்க்கம், நிர்வாகத் துறையினர் பிடிக்க முயல்வதே ஆம் ஆத்மியின் அரசியல். அதனால், ஒரு குறிப்பிட்ட அமைப்பு ஊழலை ஒழிப்பதாக சொல்வது என்பது சாத்தியமற்றது. ஏனெனில் அரசு எந்திரம் ஊழலை தனது பற்றசக்கர இயக்கமாகக் கொண்டதே. அது முதலாண்மையால் ஊழல் மயப்படுத்தப்பட்டுவிட்டது. ஊழல் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. அது ஒரு நிர்வாகப்பிரச்சனை. அதை அரசியல் பிரச்சனையாக குழப்புகிறார்கள். அரசில் மக்கள் பங்குபெறுவது என்பதை மாற்றி மக்களை பங்குதாரர்களாக மாற்றுவதாகக்கூறி ஆட்சியை பிடிக்கும் அதிகார வர்க்கமே ஆம் ஆத்மி.

முதலில் கூறிய இரண்டு சொற்பாடகளின் பொருத்தப்பாட்டுடன் இதை முடிக்கலாம். பல ஆண்டுகள் முதல் சொற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்து, இடதுசாரி இயக்கத்தை பயனற்றதாக மாற்றி, அதை கொல்வதற்கான அதிகாரத்தை பெற்றுவிட்டார்கள். இப்போ மக்களை பிரதிநித்துவ அரசியலில் இருந்து பங்கேற்கும் அரசியல் அதாவது நாட்டிற்கு செய், நாடு செய்யும் என எதிர்பார்க்காதே என்று மக்களிடம் போக்கு காட்டி ஆட்சியை பிடிக்கிறார்கள். ஊடகங்கள் எம்ஜியார் தானே உருவாக்கியது போன்ற ஒரு கவர்ச்சியை கேஜ்ரிவாலுக்கு உருவாக்குகிறது. அதற்கு சமூக வலைத்தள அறிவாளிகள் வழக்கமான தங்களது விர்ச்சுவல் (கற்பணார்த்த) ஆதரவை தருகிறார்கள். உண்மையில் கேஜ்ரிவால் குழுவினர் அணிந்திருப்பது காந்தியின் கதர் குல்லா அல்ல எம்ஜியாரின் கவர்ச்சிக் குல்லா என்பதை எதிர்காலம் உணர்த்தும் போது, நமது தலைகளில் அங்கிள் சாமின் கௌபாய் குல்லாய் மாட்டப்பட்டிருக்கலாம்.

- ஜமாலன் 04-01-2014 (jamalan.tamil@gmail.com)

அடவி – பிப்ரவரி 2014 இதழில் வெளிவந்த கட்டுரை.

அடிக்குறிப்புகள்


[1] “Don't ask what the State can do for you, ask what you can do for the State”. The perfect formula for interactivity as a strategy for calling the population to order, for transferring all problems on to those on the receiving end. Parody of the ideal of the reappropriation of one's own destiny. - Jean Baudrillard

[2] Here' again, an agonizing revision of the watchwords of modernity is in prospect – the watchwords of growth and welfare. It's a revisionism, this refusal to consume, a social treason in the eyes of the dominant free-market liberalism. A new class struggle is beginning" (if the herd doesn't want to graze, how is one to make one's butter?) (Volume 5, Number 1 (January, 2008). International journal of Baudrillard study). Present Considerations: The Uncertainty of All Value Systems - Jean Baudrillard)

[3] மேலதிக விளக்கத்திற்கு இந்த வலைத்தளத்தை வாசிக்கவும் http://dissidentvoice.org/2013/10/jfk-americas-admired-corporatist-imperialist-and-interventionist/

[4] Sociology, Village Studies and the Ford Foundation – Babu C T Sunil, Econamic and Political Weekly – December 28, 2013 – Vol XLVIII No52.

[5] Sociology, Village Studies and the Ford Foundation – Babu C T Sunil, Econamic and Political Weekly – December 28, 2013 – Vol XLVIII No52.

[6] I'd rather not be Anna - Arundhati Roy – The Hindu - October 2, 2011. http://www.thehindu.com/opinion/lead/id-rather-not-be-anna/article2379704.ece

7 comments:

Unknown சொன்னது…

It should have been "Between the Devil and the Deep blue sea" joe anand ப்ளஸ்ஸில் உள்ள நண்பர் எழுதியிருந்தார்.தங்களின் பார்வைக்கு ஜாமலன்

ஜமாலன் சொன்னது…

நன்றி Mohamed Sadiq தகவலுக்கு.

சாமானியன் சொன்னது…

உலக முதலாண்மை நிறுவன அரசியலை மிக ஆழமான கட்டுரையாக கொடுத்துள்ளீர்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் பாடல் மயக்கத்திலிருந்து இன்னும் மீளாத சமூகத்துக்கு உங்களின் இந்த கட்டுரை புரியுமா ?!

கெஜ்ரிவால் ஒன்றும் தேசத்தை சுத்தம் செய்ய வந்த மாமணி அல்ல. தலைக்கு மேலே துடைப்பத்தை தூக்கி பிடித்தாலும் முதுகுக்கு பின்னால் மறைத்திருப்பது என்னவோ நீங்கள் கூறிய அங்கிள் சாமின் கெளபாய் தொப்பிதான் !!!

நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகை தந்து, உங்களின் எண்ணங்களை பதியவும்.நன்றி
saamaaniyan.blogspot.fr

ஜமாலன் சொன்னது…

சாமானியன் உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் வலைப்புவை பார்த்தேன. வாசித்தபின் கருத்துக்களை எழுதுகிறேன்.

Unknown சொன்னது…

இடதுசாரி அமைப்புகள் ஏற்கனவே இல்லாமல் ஆக்கப்படும் திட்டத்தில் சிக்கி இருக்கின்றன. மிச்ச சொச்ச இடதுசாரிகளையும் இல்லாமல் ஆக்கும் செயல்பாடுகள் விஸ்தாரணம் பெற்று இருக்கின்றன. அதன் பின்னணி தெளிவாகவும் விபரமாகவும் தரப்பட்டு இருக்கிறது.

ஆம் ஆத்மி குல்லா , காந்திக் குல்லா குறியீடு அல்ல. அது எம்.ஜி.ஆர் குல்லாவின் வசீகரம் என்ற ஜமாலன் கருத்து எனக்கு முழுவதுமான உடன்பாடு.

ஜமாலனிடம் இன்னொரு விரிவான அலசலை நான் எதிர்ப் பார்க்கிறேன்.
“பிரெஞ்சுக்காரன் வீதியும், பிரிட்டிஷ்காரன் நீதியும்”
இந்தச் சொல்லாடல் பிரிட்டிஷ் ஏதாதிபத்தியத்தினுடைய அரசியல் பின்னணியையும், சமூகப் பின்னணியையும் வெளிப்படுத்தும் ஒரு கேப்சூயூலாக இருக்கிறது. அதே நேரம் பிரெஞ்சுக்காரனின் அரசியல் பின்னணியும், சமூகப் பின்னணியும் பிரிட்டிஷ் பின்னணியோடு இணைத்துப் பேசப் படுகிறது.

இரண்டு எதிரெதிர் கருத்தாக்கங்கள் கொண்ட சமநிலை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எந்தெந்த இடத்தில் இணைந்து கொள்கிறார்கள். எந்தெந்த இடத்தில் தனித்துக் கொள்கிறார்கள் என்ற ஒரு பார்வையும் இன்றையத் தலைமுறைக்குக் காட்டப்பட வேண்டிய முக்கியமான ஒரு கருதுகோள்.

ஜமாலன் இது பற்றி ஒரு விசாலமான பதிவை முன்வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

Hilal Musthafa உங்கள் விரிவான கருத்திற்கு நன்றி. நீங்கள் கூறிய பிரஞ்சு மற்றும் பிரித்தானிய முதலாளித்து சக்திகள் பற்றி எழுதப்பட வேண்டும்தான். வாய்ப்புள்ள போது விரிவாக எழுதுகிறேன். உங்கள் எழுத்துக்கள் பல அரசியல் விஷயங்களில் கூர்மையான பார்வை கொண்டவை. நீங்களும் விரிவாக எழுதலாம். குறிப்பாக திராவிட ஆரிய அரசியல் சிக்கல்கள் பற்றி...

Unknown சொன்னது…

ஆலோசனைக்கு நன்றி! வாய்ப்பிருக்கிறது. எழுதுகிறேன்!

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.