”தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல்.

எனது தீராநதிக்கட்டுரையான “கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.”  என்கிற கட்டுரைக்கு விஜி“ஸ் என்பவரால் முன்வைக்கப்ட்ட விவாதம் எனது முந்தைய பதிவான ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” வில் சொல்லப்பட்டது. அப்பதிவிற்கான அவரின் நீண்ட பின்னொட்டத்தின் தொடர் உரையாடலுக்கான எனது பதில் நீண்டுவிட்டதாலும்,  பொது விவாத நோக்கிலும் இங்கு தனிப்பதிவாக இடப்படுகிறது.

நண்பர் viji's ற்கு..

நீங்கள் இந்த விவாதத்தை INFORMATION_IS_POWERதொடங்கவெண்டியது கவிதாசரணில்தான். அதன் சுட்டி எனது பதிவில் தந்துள்ளேன். அவர்களுக்கு அஞ்சல் அனுப்பி இதனை நீங்கள் விவாதிக்கலாம். எனது ”கண்ணிவெடிக்” கட்டுரையில்.. தமிழன் பற்றிய வரையறையை ஆய்வளாரும் முனைவருமான எஸ். வையாபுரிப் பிள்ளையை முன்வைத்துப் பேசி உள்ளேன். அதனால் கால்டுவெல் பற்றிய பதிவை மீள எனது பதிவில் இடவேண்டி வந்தது. நீங்கள் என்னடாவென்றால் என்னை ஒரு “ஆழ்ந்த அகன்ற” தமிழ் ஆய்வாளனாக கருதி விவாதத்தை தொடங்குகிறீர்கள். இருப்பினும் பொன் வைக்கும் இடத்தில் புவாவாது வைக்க முயல்கிறேன்.

//"உண்மையில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை அடியாதாரமாகக் கொண்டுதான் செம்மொழித் தமிழின் கருத்தியல் களம் பரந்து விரிகிறது"

There is little connection between a the classical Tamil literaure or the knowledge of it and the comparitive linguistic studies. Even in the absense of comparitive language studies, Tamil literature stands on it's own.

Caldwell was the first man to synthesize the amount of knowledge gathered by mid 19th century. His scholorship shows the possibilities and limitations of 19th century linguistics. But to glorify Caldwell or his work as a historical figure who uplifted the status of Tamils or Tamil borders on the ridiculous//

ஒப்பிலக்கியம் என்பது பிரதிகள் மீதான ஒரு அரசியல் செயல்பாடு. இச்செயல்பாடு இந்திய காலனிய அமைப்பிற்கு பின் பரவலாகியது. இந்த கால்டுவெலின் நூல் சமஸ்கிருதம்தான் இந்தியாவின் ஒரே மொழிக்குடும்பம் என்று கட்டமைக்கப்பட்ட மாக்ஸ்முல்லரின் கருத்தை மறுத்து திராவிட மொழிகள் என்கிற தனித்ததொரு மொழிக்குடும்பம் சமஸ்கிருத துணையின்றி உள்ளதை எடுத்துக்காட்டியது.  ஆரிய திராவிட முரணை கட்டமைத்த இக்கூற்று ஆரிய மேலண்மைக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கியது என்பது முக்கியம். தமிழ் இலக்கியம் பற்றி இங்கு யாரும் பேசவில்லை. நீங்களாக இலக்கியம் ஒப்பிலக்கணம் இல்லாமல் உயர்ந்து நிற்கும் என்று இலக்கியத்தைக் கொண்டு வந்து மொழி விவாதத்தில் முடிபோடுகிறீர்கள். உண்மையில் ஒப்பிலக்கியம் என்பது தமிழ் இலக்கியப் பெருமிதம் பற்றியது அல்ல. அது திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஒரு கண்டுபிடித்தலை முன்வைத்தது. அல்லது டிராட்ஸ்மென் கூறுவதுபோல “கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை தனது நூலில் தொகுத்ததே மிகப்பெரும் பங்களிப்பாகும்“. இதில் என்ன வேடிக்கை உங்களுக்கு? தமிழ் என்கிற கருத்துருவத்தை அல்லது திராவிடம் என்கிற கருத்துருவத்தை கண்டடைந்து அதற்கான நில எல்லைகளை திராவிட மொழிக்குடும்பம் என்று காட்டித் தந்தது அவரது ஆய்வுதான். இது தமிழ் பற்றிய அடிப்படையான விஷயம்.

ஒருவேளை கால்டுவேல் இல்லாவிட்டால் வேறு ஒருவர் அதை செய்திருக்கக்கூடும். உண்மையில் இந்த திராவிடக் கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர் சென்னை மாகாண ஆட்சியாளராக இருந்த எல்லிஸ் என்பவர்தான் (சென்னை எல்லீஸ் சாலை அவர் பெயரால்தான் உள்ளது.) இது குறித்து விரிவாக டிராட்ஸ்மெனின் சமீபத்திய நூலான, ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்ட “திராவிடச்சான்று“ (காலச்சுவடு வெளியீடு) பேசுகிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

மேலும் கால்டுவெல் பற்றி படிக்க.  

http://www.sangam.org/articles/view2/?uid=1033
http://www.tamilnation.org/heritage/muller.htm

//"கால்டுவெல் மட்டும் இந்த நூலை எழுதாமல் இருந்திருந்தால் இன்றைய இந்தியப் பெருவெளியில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது"

Whether Caldwell lived or not would have made no difference on the status of Tamil. Tamil lives or dies by the use or the nonuse by each generation. Tamil is no more developed than Malayalam or Hindi or Punjabi as of today since there are no good books especially in Science in Tamil. Till such time there are original research papers in Tamil or original thoughts published in Tamil, Tamil is no more developed today than it was in the time Caldwell//

என்ன பிரச்சனை உங்களது பிரச்சனை? தமிழ் என்கிற தண்ணுணர்வை தந்தது தமிழ் என்கிற கருத்துருவம்தான். அந்த கருத்துருவத்தை உருவாக்கியது கால்டுவெல்லிற்கு முக்கிய பங்கு உண்டு. நிச்சயமாக கால்ட்வெலின் இந்த கண்டுபிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் என்கிற உணர்வே அற்றும் தமிழ் ஒரு தனித்துவமிக்க மொழியாக இல்லாமல் அழிந்துபட்டிருக்கலாம், அல்லது இதைவிடவும் உன்னத நிலையை அடைந்திருக்கலாம். பிரச்சனை அது அல்ல. கால்டுவெல் வந்தபின் தமிழ்நிலை என்ன என்பதுதான்? மலையாளம் இதர மொழிகளில் வளர்ச்சி உள்ளது என்பது அவர்கள் வெளியிடும் புத்தக எண்ணிக்கைகளை வைத்து அளவிடப்படுவதில்லை. தமிழில் விஞ்ஞான சிந்தனை வளரவில்லை என்பது ஒரு வாதம் அல்ல.  விஞ்ஞான சிந்தனை வளர்ந்த நல்ல புத்தகங்கள வெளியிட்டு விட்டதால் அந்த மொழிகள் எந்த அளவிற்கு வளர்ந்து செம்மொழியாகி உள்ளது என்று கூற முடியுமா? மலையாளம் என்பது தமிழின் சேய்மொழிதான் என்பதும் அதற்குள் சமஸ்கிருதம் என்பது பாதிக்கு பாதி தமிழுடன் கலந்தும் உள்ளது என்பதும் ஆய்வாளர்கள் காட்டும் முடிவு. அறிவை உருவாக்குவது மட்டுமல்ல உருவான அறிவைக்கொண்டு வாழ்க்கையை இடையீடு செய்வதும்தான் அறிவின் பணி. அதனால் கால்டுவெல் வெளிவந்துவிட்ட ஒரு யதார்த்தம். அதனை எதிர்கொண்டுதான் வேண்டும்.

தமிழில் நல்ல நூட்கள் வரவில்லை என்பது ஒரு அடிப்படையான நழுவல். விஞ்ஞான சிந்தனை வளரவி்ல்லை என்பதும் அப்படியே. அதற்கு பல சமூகக் காரணங்கள் உள்ளது. குறிப்பாக ஆரிய மேலாண்மையை எதிர்த்து கேள்வி கேட்ட தன்மானம் மிக்கதாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது தமிழ் சமூகம். (இந்தவகை அடையாள அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இன்றைய அரசியல் அவசியம் கருதி அதை முன்வைக்க வேண்டி உள்ளது.) தமிழ் கால்டுவெல் காலத்திற்குப்பிறகு வளரவேயில்லை என்றால் முதலில் இரண்டு காலத் தமிழையும் ஒப்பிட்டு வளராததை ஆதாரத்துடன் சொன்னால் புரிந்து கொள்ள நலமாக இருக்கும். தமிழ் வளரவில்லை என்கிற சவளைப் பிள்ளைவாதம் எல்லாம் இப்பொழுது எடுபடாது. ஆகச்சிறந்த பல இலக்கியங்கள், உலகச் சிந்தனைகள் தமிழில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. முதலில் கால்டுவெல் காலத்து அறைக்குள் உடகார்ந்து கொண்டில்லாமல் சன்னலையாவது (windows - google search and blogs) திறந்து பாருங்கள். 

//"சிந்துவெளி நாகரிகம் தமிழ்ச் சமூகத்தினுடையது என்று சொல்வதுகூட எளிதாய் இருந்திருக்க முடியாது"

Nobody except rabid Tamil fanatics accepts that Sindhu Nagarigam was Tamil.//

இந்தக் குதிரைக்கதை எல்லாத்தையும் ஓட்டியாச்சு முன்பே. தமிழ் பானடிக்ஸ் பற்றிய ஆரிய பானடிக்ஸ்களின் காய்ப்பு எரிச்சல் எல்லாம் இந்த சிந்துவெளி குதிரைக் கதையில் அம்பலப்பட்டு அந்தோ கதியானதைப் பற்றி பல பதிவுகளும் கட்டுரைகளும் வந்துவிட்டது. கதவை திறங்கள் காற்று வரட்டும். சிந்துவெளி நாகரீகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக உள்ளது. அதேசமயம் அது ஆரிய-வேதகால நாகரீகத்தைச் சேர்ந்தது அல்ல என்பதும் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகம் எதைச் சேர்ந்தது என்பது வேர்தேடி அரசியல் சார்ந்ததாக உள்ளது. அதன் வெளிப்பாடுதான் கவிதாசரணின் கூற்றும் அதை எதிர்த்து வந்துள்ள உங்கள் கூற்றும். சிந்துவெளி நாகரீகம் யாரைச் சேர்ந்தது என்பதன் வழியாக பெறப்படும் பெருமிதங்கள் மற்றொரு வரலாற்று வன்முறைக்கான விதையைக் கொண்டவைதான்.

//"இந்திய ஒற்றைத் தேசியத்தில் தமிழ்ச் சமூகம் ஆகக் கீழான தலித் சமூகமாக மிதிபட்டு நசுங்கிப் போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது"

Utter rubbish//

இது ரப்பிஸ்தான். தலித்துகளை காலில் போட்டு மிதிப்பதை 3000 ஆண்டுகளாக ஒரு மதக் கடமையாக ஒரு மனுக் கடைமையாகச் செய்து வருவது ரப்பிஸ் இல்லை. இதுதான் ரப்பிஸ்??? தலித்துகளை மிதிப்பதைப்போல தமிழ் சமூகத்தை ஒடுக்கவும் அதனை வளரவிடாத இனப்பிரச்சனையும் இல்லை என்கிறீர்களா? தமிழ் இனத்தின் வாழ்வுரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கை இல்லையா? அது அங்கீகரிக்கப்பட் வேண்டாமா?

//" இன்றைய அரசியல் களத்தில் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து செம்மாந்து நிற்க வைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும். "

This is utterly false. If all the achivements of Tamils over the last 150 years can be traced to a book written by a foreigner in a foreign language for the benefit of his fellow countryman, then there is nothing more demeaning for Tamils. This is a patent nonsense.//

அய்யா என்ன புரிதலில் இதை எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் ஆங்கிலேயர் இல்லை ஆனாலும் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். அப்பிடியிருக்க இந்த  நூல் அந்நியரான ஒருவரால் ஆங்கிலத்தில் வந்ததால் இதனை பின்பற்றுவது தவறாக தெரிகிறதா? அப்படி எனில் கிழக்குலகச் சிந்தனைகள் பற்றி பல வால்யும்கள் மாக்ஸ் முல்லர் போட்டிருக்காவிட்டால் நமது “உன்னதங்கள்” எல்லாம் ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி குண்டு சட்டியில் ஓட்டிய “குதிரை” (சிந்துவெளிக்குதிரை அல்ல) ஆகியிருக்கும். இத்தகைய சிந்தனைகள் உலக அளவிலானவை. ஆங்கிலேயக் காலனிய அரசியலுடன் இந்த “உலகலாவிய“ காப்புரிமை என்பது உறவு கொண்டது. இன்று ஆங்கிலேயக் காலனியம் கட்டமைத்த பார்வையின்றி உலகைப் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் அதீத அரசியல் புரிதலின்றி சாத்தியமில்லை. பின்காலனியச் சிந்தனைகள் இதன் மீதுதான் தங்களது கவனத்தைக் குவிக்கின்றன. தமிழ் என்கிற இனக்கட்டுமானம் ஒரு காலனிய அரசியல் கட்டுமானம் என்பதுடன் அதற்கு ஆரிய பார்ப்னீய மேலாண்மையை எதிர்த்து விழிப்புக்கொண்ட ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியுமா?

//" "வெள்ளையின மக்களே மேன்மை யானவர்கள், கறுப்பினத்தார் கீழானவர்கள்" என்னும் சமஸ்கிருதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியவர் கால்டுவெல். "

After tracing all the Tamils history to a white man writing in a white man's language for the benefit of other white men, the above statement is ironic and contradictory.//

என்ன சொல்ல வருகிறிர்கள்? வெள்ளையினத்தவரான கால்டுவெல் எழுதியதால் அது வெள்ளையினத்தவருக்கும் சாதகமானதாக உள்ளது என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் அது இங்கு நிலவிய சமஸ்கிருத மேலாண்மைக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியத என்பது உண்மை. பிரச்சனை அது சரியா தவறா என்பது அரசியல் சார்ந்தது. ஒருவேளை ஆரிய-திராவிட முரண் என்பதை நிராகரிக்கும் மனிதேநேயமிக்கவராக நாம் இருந்தால், உடனடியாக தலித் உள்ளிட்ட அனைவரையும் தமிழ் போன்ற இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட மொழிகளையும், நாகரீகத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஆதிவாசிகளையும் அதிகாரத்திற்கு கொணடு வந்து நாம் பார்த்து இனபுறுபவராக இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் கால்டுவெலும் தேவையில்லை தமிழ் இனஉணர்வும் தேவையில்லை. அது சாத்தியமில்லை எனும் போது இவை எல்லாம் அவசியமானவைதான். இப்படி ஒரு நிலையை அங்கீகரிக்கவே நமக்கு இத்தனை மனத்தடைகளும், சங்கடங்களும் உள்ளபோது எப்படி தமிழினம் தனது தன்மானத்தை விடும். வெள்ளைக்காரர் என்றவகையில் அவர் எழுதியதில் அவருக்கு ஒரு அரசியல் உள்நோக்கம் இருந்திருக்கலாம், அதைவிடவும் அப்பிரதி தமிழக அரசியலில் ஒரு பங்களிப்பை செய்துள்ளது. நீங்கள் கால்டுவெல்லை மறுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக திராவிட மொழிக்குடும்பம் என்கிற கருத்தாக்கமே தவறு அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.  இஙகு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், இனம் பற்றிய எனது கருத்தை கண்ணிவெடிகள் பற்றிய எனது கட்டுரையில் படித்திருப்பீர்கள். 

//"சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே தமிழுக்குக் கடன்பட்டது என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவிக்காட்டியவர் அவர்"

This is a plain lie. He considers such a possibility as one of the hypotheses. He is not sure of the prehistory of languages. He was only an amatuer in linguistics and he was not a historian or archeologist by inclination. Caldwell does not make wild claims in his book.

Caldwell Bhajanai may suit the dravidian politicians, but it won't give them any extra knowledge. The Dravidian bajanai of Caldwell has not given them any mastery of language or sciences can be seen from the fact that THERE IS NO TAMIL TRANSLATION OF CALDWELL'S BOOK. The only things dravidians can do is bajanai.//

இந்த பஜனை யார் செய்கிறார்கள்? ஆரிய மேண்மை என்கிற 3000 ஆண்டுகால பஜனைக்கு பதிலாக, பாவம் தமிழர்கள் சம்மா 150 ஆண்டுகள் செய்தவுடன் ஏனிந்த கொலைவெறி? நீங்கள் கவிதாசரண் கூறுவதை மறுக்க முதலில் கால்டுவெல் படித்து அப்படி நிரூபித்துக் காட்டப்படவில்லை என்பதை சொன்னால் என்னைப்போல பமரர்களுக்கும் புரியும். சமஸ்கிருதம் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதை மறுக்க மாடடீர்கள் என நினைக்கிறேன். (செமட்டிக் மதமான யுதர்களுக்கும் பிராமணர்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும் இருவருக்கும் மூலம் ஒன்றுதான் என்றும் கூறும் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். எனது கட்டுரையில் குறிப்பு உள்ளது.) அப்படி நுழையும்முன் தமிழ் அல்லது தமிழின் மூல மொழி அல்லது திராவிட மொழி என்பது இருந்திருக்கும்.  வேண்டாம் ஏதொ ஒரு மொழி இருந்திருக்கும். ஏன் வேதத்தி்ல் தஸ்யுக்கள் எனப்படும் கருப்பர்கள் ஏதோ எழுதுவதாக ஒரு சுலோகம் சொல்கிறதாம் எங்கோ படித்த நினைவு. எனவே வேதமொழியான சமஸ்கிருதம் வாய்மொழியாகவும், கருப்பர்கள் மொழி எழுத்து மொழியாகவும் இங்கு இருந்திருக்கிறது. அதனால் மொழி என்பது ஒன்றுடன் ஒன்று கலந்தும் இணைந்தும் விலக்கியுமே இயங்கக் கூடியது. தூய மொழி என்பது ஒரு பாசிசக்கனவு. எப்படி தூய இனம் என்பது பாசிசவடிவமோ அப்படித்தான் இதுவும். தூய மற்றும் ஒழங்கு என்பதே பாசிசத்திற்கான முன் ஒட்டுத்தான். பன்மையும் கலவையும்தான் எல்லாம்.

ஆகையினால் நண்பரே.. ஆரிய-திராவிட முரண் என்பது ஒரு காலனியக் கட்டுமானம் என்பதும்.. கால்டுவெலின் இந்த நூலே “மறவர்கள்“ மற்றும் தமிழர்களை ஆங்கில இராணுவத்தில் இணைப்பதற்கான ஆய்வாகத் துவங்கியதே என்றும் சில குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக திருநெல்வேலி பற்றிய கால்டுவெல்லின் ஆய்வு நூல். கால்டுவெல் நூல் தமிழில் இதுவரை வெளிவரவில்லை என்பது ஒரு முக்கியமான அவலநிலைதான். அதற்கான காரணங்களழல் ஒன்று பல்கலைக்கழகஙகள்கூட முன்மஙற்சி எடுக்கவில்லை என்பதுதான். இதுவே தமிழினம் கருத்தியல் அளவில் ஒடுக்கப்ட்டுள்ளதற்கான சான்றாக கொள்ளலாம். அதாவது அந்தநூலை வெளியிடுவதில் ஆதிக்கம் வகிக்கும் சாதியினரக்கோ அல்லது அதிகார வர்க்த்திற்கோ ஏதொ பிரச்சனை இருக்கலாம். 800-பக்க நூலை முழுமையாக மொழி பெயர்த்து வெளியிடுவது என்பது இன உணர்வள்ள சின்ன நிறுவனங்களால் சாத்தியமா? என்பதும் இதனுடன் இணைத்துப் பார்கப்பட வேண்டியதாக உள்ளது. ஆனால் டிராட்ஸ்மெனின் “திராவிடச்சான்று“ பேராசிரியர் இரதம. சுந்தரம் மொழிாயர்ப்பில் தமிழில் வந்துள்ளது காலச்சவடு பதிப்பக வெளியீடாக.

அதனால் எல்லாவற்றையும் விதந்தோந்தி ஏற்பதும் கண்மூடி நிராகரிப்பதும் என்வரையில் சரியான நிலைப்பாடு இல்லை. எனக்கும் இனம், மொழி, மதம், பாலினம் போன்ற எல்லா அடையாளத் தன்னிலைகள்மீதும் உடன்பாடில்லைதான், அதற்காக அவை முன்வைக்கும் ஜனநாயகக் கோரி்க்கைகளை நிராகரித்துவிட முடியாது. தமிழினம் ஒடுக்கப்படும்போது அதற்கான இனக்கோரி்க்கையை முன்வைப்பதில் அதன் அடையாள அரசியல் வரலாற்றுப் பெருமிதம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.  ஆரியமேலாண்மை அல்லது ஆரியமேண்மை என்பது வரலாற்றில் முன்வைக்கப்பட்ட ஒரு அவலம் என்பதை உணர்வதின் வழியாகவே தமிழினம், திராவிடம். தலித்தியம் போன்ற கருத்தாக்கங்களின் அறிகுறிகளை நீக்க முடியும். அதைவிட்டு யார் முன்னாடி என்கிற பழம்பெருமை பேசவதில் யாருக்கும் பயனில்லை.

//(My Vista machine does not take in Murasu fonts, so I cannot write in Tamil now) //

நீங்கள் NHM Writer என்று ஒரு தமிழ் எழுதி உள்ளது. அதை முயற்சித்துப் பாருங்கள் விஸ்டாவில் வேலை செய்யலாம். அப்பப்ப தமிழும் கொஞசம் பொழச்சிப் போட்டுமே.. :)

நன்றி உங்களது நீண்ட விவாதத்திற்கு.

அன்புடன்
ஜமாலன்.

2 comments:

வன்பாக்கம் விஜயராகவன் சொன்னது…

>நீங்கள் இந்த விவாதத்தை தொடங்க வேண்டியது கவிதாசரணில்தான்.

சரி, ஆவன செய்ய முயல்கிறேன்.. ஆனாலும் நீங்கள் சில கருத்துகளை முன்வைத்து சில கேள்விகளை கேட்பதால் சில பதில்களை சொல்லவேண்டுயுள்ளது.

>இந்தியாவின் ஒரே மொழிக்குடும்பம் என்று கட்டமைக்கப்பட்ட மாக்ஸ்முல்லரின் கருத்தை மறுத்து


மாக்ஸ்முல்லர் சமஸ்கிருதத்தைப் பற்றி எழுதினாறே தவிற எல்லா இந்திய மொழிகளைப் பற்றி கருத்து கூறவில்லை.

>“கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை தனது நூலில் தொகுத்ததே மிகப்பெரும் பங்களிப்பாகும்“. இதில் என்ன வேடிக்கை உங்களுக்கு?

என் வேடிக்கை அதல்ல. தமிழ் கலாசார, அரசியல் வளர்சிக்கே கால்ட்வெல்தான் வித்திட்டார், அவர்தான் ரட்சகன் என்ற துதிபாடல் பஜனைதான் வேடிக்கை.


>சிந்துவெளி நாகரீகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக உள்ளது.


இதெல்லாம் ஒரு யூகம், ஸ்பெகுலேசனே தவிர, திட்டவட்டமாக யாராலும் சிந்து நாகரீகத்தைப் பற்றி பேசமுடியவில்லை. முப்பது வருடம் ஆய்வுக்கப்புரம், 1998லேயே ஐராவதம் மகாதேவன், சிந்து எழுத்துகள் யாராலும் இண்டர்ப்ரெட் செய்யவில்லை; அவர் சாகும் வரை நிலமை அப்படி இருக்கலாம் என்கிறார். தமிழர்கள் தன்மானத்திற்கு ஏன் இப்படிப்ட்ட ஸ்பெகுலேசன்க்ளும், 19ம் நூற்றாண்டு மொழியியல்களும். அவை தேவையே அல்ல.. மொழியியல், தொல்லியல் ஆய்வுகளை, அதன் நிபுணர்கள் பரிசீலித்து கொள்ளட்டும்.


>அப்படி எனில் கிழக்குலகச் சிந்தனைகள் பற்றி பல வால்யும்கள் மாக்ஸ் முல்லர் போட்டிருக்காவிட்டால் நமது “உன்னதங்கள்” எல்லாம் ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி குண்டு சட்டியில் ஓட்டிய “குதிரை” (சிந்துவெளிக்குதிரை அல்ல) ஆகியிருக்கும்


மாக்ஸ்முல்லர் இந்தியக் கலாசத்திற்கு அளித்த கொடை ஒன்ருமில்லை. அவர் ஒரு வரி எழுதாமல் இருந்தாலும் இந்திய கலாசரம் தன் போக்கில் போய்கொண்டுதான் இருக்கும்.. இன்னொன்று, அவர் இந்தியாவிற்க்கு வரவில்லை, ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி ஒடினார் என்பது கற்பனை.


>தமிழ் என்கிற இனக்கட்டுமானம் ஒரு காலனிய அரசியல் கட்டுமானம் என்பதுடன் அதற்கு ஆரிய பார்ப்னீய மேலாண்மையை எதிர்த்து விழிப்புக்கொண்ட ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியுமா?

மறுக்க முடியும். சிலப்பதிகாரம் முதலிய காப்பிய காலங்களில் கூட தமிழ் என்ற இனக்கட்டுமானம் இருந்தது. ஆனால் ஆரிய பார்ப்னீய மேலாண்மைக்கு எதிரானது அல்ல. ஆங்கில, மேற்கத்திய சிந்தனை முறைபடி – அதுவும் 19ம் நூறாண்டு சிந்தனைப் படி, இந்தியா போன்ற அடிமை நாடுகள் தங்களால் சுய அரசாங்கம் செய்ய முடியாதவை; ஏனெனில் அடிமைநாடுகளில் நடக்கும் (ஆரிய-திராவிட)இன சுரண்டல்களை தடுக்கவே கடவுள் ஆங்கிலேயர்களை அதிகார வர்கமாக அனுப்பினான். அதனால் நீங்கள் சொல்லும் சரித்திர தேவை இந்தியர்களுக்கு வந்தது அல்ல; ஆங்கிலேய அதிகார வர்கத்துக்கு வந்தது.

> நீங்கள் கால்டுவெல்லை மறுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக திராவிட மொழிக்குடும்பம் என்கிற கருத்தாக்கமே தவறு அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்
நீங்கள் பெரிய தவறு புரிகிறீர்கள்.

கால்ட்வெல் எதோ எழுதிவிட்டு போனார். அதை மறுக்க நான் யார். மொழியியல் அடிப்படையில் நான் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றுள்ளது என்பதை ஏற்கிறேன். ஆனால் அதனால் தமிழ் சமுதாயத்திற்க்கு எதோ பெரிய சுபிட்சம் ஏற்பட்டுள்ளது என்பது உளரல், கால்ட்வெல் பஜனை மடத்தனம். அதைத்தான் சொல்கிறேன். உதாரணமாக, ஒரு இலங்கியல் விஞ்ஞானி, புலி, பூனை, மற்றும் பல விலங்குகள் அவற்றின் நடை, எலும்புகள், மூளை வளர்ச்சி, வால் நீளம் ஆகியவற்றை கோள் காட்டி , அந்த விலங்குகள் ஒரு `விலங்குக் குடும்பம்` என்கிறார். அந்த விஞ்ஞான தீர்ப்பினால் அவ்விலங்குகளுக்கு எதாவது நன்மை உண்டா? உங்கள் லாஜிக் அதைப்போல் உள்ளது.


> சமஸ்கிருதம் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதை மறுக்க மாடடீர்கள் என நினைக்கிறேன்.


இந்தியாவில் பல மொழிகள் பல காலங்களில் நுழைந்தன. ஆரிய , திராவிட, திபெத்திய, ஆஸ்திரோ-ஆசிய, இன்னும் இனம் தெரியாத மொழிக் குடும்பங்கள் கிமு 8000 முதல் கிமு 3000 வரை நுழைந்தன தமிழ்நாட்டில் தொன்தமிழ் 2700 ஆண்டுகள் முன்னால் நுழைந்தது


> அதனால் எல்லாவற்றையும் விதந்தோந்தி ஏற்பதும் கண்மூடி நிராகரிப்பதும் என்வரையில் சரியான நிலைப்பாடு இல்லை.


துதி மனப்பான்மையை கண்னை மூடி நிராகரிக்கிரேன். எவ்வித பஜனாவளிகளையும், அது தமிழ்நாட்டு `பகுத்தறிவி`லிருந்து, உற்பத்தியானாலும், கருணநிதி போன்ற திராவிட பணமூட்டைகள் ஆசிபெற்றாலும் மறுக்கிறேன்.


நன்றி

ஜமாலன் சொன்னது…

நண்பர் விஜிஸ்..

நன்றி தொடர் உரையாடலுக்கும் தமழில் எழுதியமைக்கும். இதற்கான பதிலை புதிய பதிவாக இங்கு இட்டுள்ளென்.

பார்க்க.. http://jamalantamil.blogspot.com/2008/09/2.html

அன்புடன்
ஜமாலன்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.