எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது

கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும்

-ராஜன் குறை

றிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய கோட்பாடுகள் உருவாயின. இதை முழுதும் புரிந்துகொள்ள அணு ஆற்றல் பருப்பொருளாக மாறுவதன் மர்மத்தை அறிய வேண்டும். அப்போதுதான் அனைத்தையும் பற்றிய கோட்பாட்டை (Theory of Everything) உருவாக்கமுடியும்.

ஜெனிவாவிற்கு அருகே, பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு 300 அடி ஆழத்தில் 27 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் LHC (Large Hydron Collider) என்ற பிரம்மாண்டமான ஆய்வுக்கூடத்தில் அறிவியலின் அறியப்பட்ட எல்லைகளைக் கடக்கும் பரிசோதனை ஒன்று இன்னும் சில நாட்களில் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கவிருக்கிறது. இரு திசைகளிலிருந்து அணுக்கதிர்கள் அச்சுரங்கத்தினுள்ளே செலுத்தப்படப்போகின்றன. அவை சந்திக்கும்போது…?

(ரோபோ படத்திற்கான செட் இல்லை: இதுதான் LHC)

1290 டன் எடையுள்ள ‘அணுத்துகள்மானி’-சும்மா நான் வைக்கும் பெயர்- இத்துளையின் வழியாக 100 மீட்டர் இறக்கப்பட்டது. (இதுபோன்ற பிரம்மாண்ட தகவல்களை வலைத்தளங்களில் தவறாமல் படித்து மகிழுங்கள். Google இல் போய் Large Hydron Collider என்று போட்டால் போதும். CERN என்று போட்டால் இந்த அமைப்பு பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கும்) ஒருமுறை அல்ல, ஆயிரக்கணக்கான முறை அணுத்துகள்களை (particles) பல விதமான வேகங்களில், சூழல்களில் மோதவிடுவதுதான் இந்த ஆராய்ச்சி என புரிந்து கொள்கிறேன்.

ஒரு ஆராய்ச்சி அல்ல; ஆறு பெயர்களில் பல ஆய்வுகள் அணுத்துகள் மோதல்களின் மூலம் நடத்தப்படப் போகின்றன. இதன் பலன்களுள் ஒன்று என்னவென்றால் ஆற்றலிலிருந்து பருப்பொருள் உருவாகக் காரணமாக இருக்கலாம் என கருத்தளவில் ஊகிக்கப்பட்டுள்ள ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்ற சமாச்சாரத்தைக் காட்டித்தரலாம் எனக் கூறப்படுகிறது. இதை கடவுள் துகள் (God Particle) எனக் குறிப்பிடுகின்றனர். ஹிக்ஸ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அறிவியலாளர்களில் பலர் இறைவனை அணுக விழைபவர்கள். இத்திட்டத்தின் அறிவியலாளர் ஒருவர், Jos Engelen, “கடவுளுக்கு மிக அருகே மனிதன் செல்லப்போகும் தருணமிது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதை அணுகிச்சென்று புரிந்துகொள்வதே இப்பரிசோதனையின் நோக்கம். எதிலிருந்து என்றோ, எதனால் என்றோ அறிவியலால் கேட்க முடியுமா? எனவே கடவுளை நெருங்குவதாக நினைக்கிறார்கள் அறிவியலாளர்கள். (கடவுள் துகள் உருவாகும் சாத்தியத்தை குறிக்கும் போலி நிகழ்வு “simulated event”)அணுத்துகள் மோதும் பரிசோதனை புதியது அல்ல. அதன் பரிமாணங்கள் இம்முறை பிரம்மாண்டமாயிருக்கின்றன. Anti-matter எனப்படும் எதிர்பொருள் எப்படி இயங்குகிறது என்ற முக்கிய கேள்விக்கு பதில் தேடுகிறார்கள்.இந்த பரிசோதனைகள் எதைக்குறித்து என்று விளக்கும் விதமாக LHC அறிவியலாளர் ஒருவர் ஒரு ராப் பாடல் படம் எடுத்திருக்கிறார். விஞ்ஞானிகள் ஆடிப்பாடி விளக்கும் இந்த அற்புதமான பாடலை அவசியம் கேளுங்கள். நாளும் கோடிக்கணக்கானவர்கள் youtube இல் கேட்டு மகிழும் இதை நாமனைவரும் உடனே கேட்க வேண்டிய தேவையும் உரிமையும் கடமையும் இருக்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டு மேலே படியுங்கள். http://link.brightcove.com/services/link/bcpid1488655367/bclid1453516501/bctid1753815421ஆனால்

இந்த அறிவியலாளர்கள்களும் மற்ற துறையினர் போலத்தான். ஒருவர் செய்வதை மற்றவர் எதிர்ப்பது. LHC-ஐ எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? LHC அணுத்துகள் மோதல்களில் கருந்துளைகள் உருவாகும் என்கிறார்கள். இந்த கருந்துளைகளுக்கு ஒரு கெட்ட பழக்கம். அது சில சமயம் உலகத்தையே அல்லது உலகங்கள் அடங்கிய பிரபஞ்சத்தையே விழுங்கிவிடும். (அதாவது பூமியின் சுற்று வட்டாரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.) இப்பரிசோதனையை நிறுத்தக்கோரி வழக்கு தொடர்ந்த ஒட்டோ ரோஸ்லர் என்ற ஜெர்மானிய பேராசிரியர் “ஒரு ஓடுகாலி கருந்துளை நான்கு ஆண்டுகளில் வளர்ந்து உலகை விழுங்கிவிடும்” என்கிறார்.

இதற்கு LHC நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிறிய கருந்துளைகள் நிறைய உருவாகும்; ஆனால் அவை உடனே அழிந்துவிடும் என்கிறார்கள். இயற்கையில் நடக்காதது எதையும் நாங்கள் செய்யவில்லை. ஆகவே உலகத்திற்கும் அதன் “உடனடி பிரபஞ்சத்திற்கும்” எதுவும் ஆபத்தில்லை என்கிறார்கள். (உடனடி பிரபஞ்சம் - இச்சொற்றொடர் என்னுடையது; கருந்துளை எவ்வளவு பெரிதாகும் எனத்தெளிவாகத் தெரியாததால்) வழக்குகளினடிப்படையில் தடையுத்திரவு எதுவும் பிறப்பிக்கிப்படவில்லை என்றாலும் மனிதயுரிமை அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு எழுப்பும் பிரச்சினை சுவாரசியமானது.

இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட அரசாங்கங்கள் CERN அமைப்பில் பார்வையாளர் தகுதி வகிக்கின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் இதன் உறுப்பினராக உள்ளன. இப்பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் உலக விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்ள பிரம்மாண்டமான தகவல் பகிரும் ஆற்றல் கொண்ட GRID என்ற கணனி மற்றும் optical fibre தொடர்பமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பரிசோதனை அறிவியலின் விளிம்பில் நிகழ்வதால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை முற்றிலும் கணிக்க முடியாது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஏதுமறியா மக்களின் உயிரை பணயம் வைத்து இப்பரிசோதனையை செய்ய இந்த அரசாங்கங்களுக்கும், அறிவியல் நிறுவனத்திற்கும் உரிமை இருக்கிறதா என இந்த வழக்கு கேட்கிறது.

உலகில் வெகுஜன இயக்கங்கள் எதுவும் இந்த பரிசோதனைக்கு இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை (குறைந்த பட்சம் வலைத்தளங்களில் இன்னும் நான் பார்க்கவில்லை) பெரும்பான்மையோருக்கு இன்னும் தகவலே தெரிந்திருக்காது. இந்நிலையில் மக்களின் ஒப்புதலை பெறாமல் இத்தகையை பரிசோதனைகளில் ஈடுபடுவது மனிதர்களின் அடிப்படை உயிர்வாழும் உரிமை மீறல் என்கிறது ஹவாயில் போடப்பட்டுள்ள வழக்கு.

மக்களின் ஒப்புதலை பெறலாம் என்று வைத்துக்கொண்டால்கூட, கூடவே அழியக்கூடிய விலங்கினங்கள், தாவரங்கள் இவற்றின் ஒப்புதலை எப்படிப் பெறுவது என்று ஒருவர் கேட்கலாம். எந்த அறத்தின் அடிப்படையில் இதுபோன்ற துணிகர செயல்களில் அனைத்துயிர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன? இதை ஹவாய் நீதிமன்றம் தீர்மானிக்க முடியுமா? இதுபோன்ற வழக்குகள் முடிவுக்கு வர பல்லாண்டுகள் ஆகும். இன்னும் சில நாட்களில் தொடங்கும் இப்பரிசோதனையும் பல்லாண்டுகள் நடக்கலாம். திடீரென்று ஒருநாள் பிரபஞ்சத்தைக் காணவில்லையென்றால் தேடாதீர்கள் என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது. “இந்த எரியும் பிரபஞ்சம் என் தலையில் சுழல்கிறது; அதை எங்கே வைப்பது எனக்குப் புரியவில்லை” என்ற பிரக்ஞை பத்திரிகையில் படித்த சதிகுமார் என்ற பஞ்சாபிக் கவிஞரின் வரி நினைவுக்கு வருகிறது.

நன்றி சத்தியக்கடுதாசி.

 

14 comments:

Jayakumar சொன்னது…

LHC சோதனையில் விளையும் கருந்துளைகள் மீச்சிறியவை. இவை தானாகவே அழிந்துவிடும். அப்படியே அழியாமல் இருக்கும் பட்சத்தில், அவை சுற்றுப்புறங்களில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு வளர்வதற்கு, இந்த பிரபஞ்சத்தின் மீதமிருக்கும் வயதைவிட அதிக காலம் எடுக்கும்.

LHC கருந்துளைகளால் உலகம் அழிந்துவிடும் என்பது பரபரப்பு/ அறிவியல் புதினத்தனமான கதையாகும். தீவிர ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பலமுறை பதில் அளித்துள்ளார்கள்.

உதாரணத்திற்கு இந்த கட்டுரை LHC கருந்துளைகளின் பண்புகளை விளக்குகிறது.

ஜமாலன் சொன்னது…

ஜேகே - JK said...

//இதற்கு LHC நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிறிய கருந்துளைகள் நிறைய உருவாகும்; ஆனால் அவை உடனே அழிந்துவிடும் என்கிறார்கள். இயற்கையில் நடக்காதது எதையும் நாங்கள் செய்யவில்லை. ஆகவே உலகத்திற்கும் அதன் “உடனடி பிரபஞ்சத்திற்கும்” எதுவும் ஆபத்தில்லை என்கிறார்கள். (உடனடி பிரபஞ்சம் - இச்சொற்றொடர் என்னுடையது; கருந்துளை எவ்வளவு பெரிதாகும் எனத்தெளிவாகத் தெரியாததால்) வழக்குகளினடிப்படையில் தடையுத்திரவு எதுவும் பிறப்பிக்கிப்படவில்லை என்றாலும் மனிதயுரிமை அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு எழுப்பும் பிரச்சினை சுவாரசியமானது.//

நீங்கள் கூறிய கருத்தை கட்டுரையாளர் தனது விவாதத்தில் முன்வைத்துள்ளார். இப் பிரச்சனையில் என்ன நடக்கும் என்பது பற்றிய யுகங்கள்தான் இவைகள் என்றாலும்.. உரையாடல் தொடரத்தான் செய்கிறது. அறிவியல் மதங்களைப்போல மக்களை பலியிடாமல் கடவுளை நெருங்கிளால் மகிழ்ச்சிதான்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

anujanya சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு ஜமாலன். CERN மற்றும் Antimatter பற்றி Dan Brown எழுதிய Angel and Demons புத்தகத்திலேயே ஓரளவு அறிமுகம் கிடைத்தது. சதிகுமாருக்குப் பதிலாக 'கருந்துளையில்' என்று சொல்லலாம். ஆனால் சொல்ல நாமிருக்க மாட்டோம். கேட்க அவரும் இருக்கமாட்டார். எல்லா பெரிய அறிவியல் சோதனைகளுக்கும் இந்த தார்மிக கேள்வி பொருந்தும்.

அனுஜன்யா

லிங்க் வேலை செய்யவில்லை. ஆதலால் பாட்டு கேட்கவில்லை. பிறகு கேட்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

அனுஜன்யா said...

//எல்லா பெரிய அறிவியல் சோதனைகளுக்கும் இந்த தார்மிக கேள்வி பொருந்தும். //

இதுதான் முக்கியம். தார்மீக அறமும், அறிவியலின் அறமும் ஒன்றுக்கொன்று பொருந்திப்போக வேண்டியதாக உள்ளது. அனுத்துகளை பிளக்கலாம் என ஆல்பா கதிர் சிதைவு ஆய்வில் ரூதர்போர்டிடம் நீல்ஸ் போர் சொன்னபோது, தெரியும் அது தேவையற்ற பணி என்று அதனை ஊக்கப்படுத்தாமல் விட்டார் என்று எங்கோ படித்த நினைவு. ரூதர்போர்டின் அந்த அறம் அறிவியலாளருக்கு முக்கியம். அதே நேரத்தில் அனுப்பிளவின் ஆய்வுகள் பல பிரபஞ்ச உண்மைகளை நமக்கு சொல்லின என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

நன்றி அனுஜன்யா

கையேடு சொன்னது…

திரு. ஜமாலன் அவர்களுக்கு, அறிவியல்/விஞ்ஞானம் எனும் நிறுவனம் குறித்து விரிவாகவே உரையாட வேண்டிய அவசியம் இருக்கிறது. வழக்கம் போல், கால அவகாசம் பற்றிய அங்கலாய்ப்புடன் எனது சோம்பலை மற்றுமொரு முறை பறைசாற்றிவிட்டுச் செல்கிறேன்.

இந்தச் சுட்டியில் உரையாடல் துவங்கியது, ஆனால், தலைப்பு உரையாடலைத் திசைதிருப்பிவிட்டது என்பது பின்னூட்டங்களில் கண்கூடு.

http://xavi.wordpress.com/2008/08/18/godsparticle/

நாகார்ஜுனன் சொன்னது…

அழிவின் அறத்தில் உயிரும் பொருளும்

http://nagarjunan.blogspot.com/2008/09/blog-post_10.html

ஜமாலன் சொன்னது…

கையேடு said...

நீண்ட நாட்காளகிவிட்டது. வருகைக்கும் கருத்தக்கம் நன்றி. சேவியரின் அந்த உரையாடலைப்படித்தேன். உண்மைதான். விவிதாப்புள்ளிகள் பின்னொட்டங்களால் சிதறிப்போய் உள்ளது.

ஜமாலன் சொன்னது…

நாகார்ஜுனன் said...

//அழிவின் அறத்தில் உயிரும் பொருளும்
http://nagarjunan.blogspot.com/2008/09/blog-post_10.html//

உங்கள் பதிவு ஆழமான அறம் பற்றிய கேள்வியை முன்வைப்பதாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

RATHNESH சொன்னது…

சிரமமான ஒரு விஷயத்தை எளிதாக விளக்கிய அருமையான பதிவு. மிக்க நன்றி. நுனிப்புல்லாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில் சிக்கி இருந்த எனக்கு விஷயத்தை நன்றாக விளக்கியது இந்தக் கட்டுரை. பொருத்தமான தலைப்பு.

அறம் சம்பந்தமான உங்கள் கேள்விக்கும் அந்தக் கவிதையிலேயே பதில் இருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் கேள்வி சரியே; ஆனால் பதில் அளிக்கத் தக்கவன் எங்கே இருக்கிறான்?

பி.கு.: இடையில் ஒருமுறை ஆனந்த விகடனில் உங்கள் பதிவைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். (தாமதமான)வாழ்த்துக்கள்.

ஜமாலன் சொன்னது…

RATHNESH said...

வாங்க ரத்ணேஷ். நலமா?

//சிரமமான ஒரு விஷயத்தை எளிதாக விளக்கிய அருமையான பதிவு. மிக்க நன்றி. நுனிப்புல்லாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில் சிக்கி இருந்த எனக்கு விஷயத்தை நன்றாக விளக்கியது இந்தக் கட்டுரை. பொருத்தமான தலைப்பு.//

இக்கட்டுரை குறித்து விரிவான விவாதங்கள் நண்பர் நாகார்ஸீனன் பதிவில் நிழ்ந்து வருகிறது. சுட்டி
http://nagarjunan.blogspot.com/2008/09/blog-post_10.html


//பி.கு.: இடையில் ஒருமுறை ஆனந்த விகடனில் உங்கள் பதிவைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். (தாமதமான)வாழ்த்துக்கள்.//

வாழ்த்திற்கும்... பணிகள் எல்லாம் சரியாகி மீண்டும் புத்துணர்ச்சியுடன் பதிவிற்கு வந்தமைக்கு நன்றிகள்.

Rajan Kurai Krishnan சொன்னது…

கட்டுரையை மறு பிரசுரம் செய்ததற்கு நன்றி ஜமாலன். உங்கள் கவிதை வரி குறித்த பாராட்டு தந்த உந்துதலில் சதிகுமார் குறித்து தேடிப்பார்த்ததில் அவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறந்து விட்டார் எனத் தெரிந்தது. விவரங்கள் http://www.apnaorg.com/articles/sati/ வலைத்தளத்தில் காணலாம். கவிதையை பிரக்ஞைக்கு மொழிபெயர்த்தது ஐராவதம் என்று இருக்கிறது.நல்ல மொழிபெயர்ப்பு. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளுள் ஒன்று.

ராஜன் குறை

ஜமாலன் சொன்னது…

நன்றி ராஜன்குறை...

Unknown சொன்னது…

கட்டுரையை மறு பிரசுரம் செய்ததற்கு நன்றி, தங்கள் பகிர்வுக்கு நன்றி

latha

Joshva சொன்னது…

பொருத்தமான தலைப்பு, எளிமையான விளக்கம் .....பகிர்வுக்கு நன்றி திரு.ஜமாலன்.
Joshva

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.