நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள்– ஜமாலன்

இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக் கவிதைகளிலும், அவர்களது ஈழ நிலத்தை சொற்களால் தங்க்ள கவிதைகளில் பதியமிட்டார்கள். நிஜமான தனது மூதாதைக் குடிகள் வாழ்ந்த அதில் விளைந்த குருத்துக்களான நமது கண்முன், அந்நிலம் பறிக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்படும்போது, அந்நிலத்தை தனது படைப்புகள் வழியாக பிராதியாக்குதல் என்பது நிலத்தோடு பிணந்த ஒரு உடலின் கலகச் செயல்பாடு. அச்செயல்பாட்டை பாலஸ்தீனியக் கவிதைகளுக்குப்பின் தந்தவை ஈழக்கவிதைகள். தமிழில் அந்த தளத்தை, தனது நிலம் களவாடப்படுவதை, தான் துரத்தப்படுவதை, ஒரு அகதியாதல் மனநிலையில் பாடும் கவிதைகள் இல்லை என்றே சொல்லலாம்.
ஆய்வாளரும், ஆசிரியரும், கவிஞருமான நண்பர் ஏர். மகாராசன் அவர்களதுRelated image ”சொல் நிலம்” கவிதை நூலை அனுப்பியிருந்தார். அந்த தலைப்பு எனக்கு ஏற்படுத்திய பிம்பம், மேற்கண்ட, பாலஸ்தீன, ஈழக்கவிதைகளின் நினைவைக் கொண்டுவந்தன. தார்வீஸ் பற்றிய எனது கட்டுரை ஒன்றில் இதை விரிவாக விவரித்துள்ளேன். மகாராசனின் இக்கவிதைகள், நிலம் குறித்த ஏக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றாலும், அகதியாதல் என்ற விரட்டப்பட்ட மனநிலையில் தனது நிலத்தின் கனவுகளை, ஏக்கங்களை பதியவைக்கவில்லை. ஆனாலும், அதற்கான முதன் முயற்சியாக தன் நிலம், வயல், உழவு, மக்கள்நிலை, திணை என கவிதையாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சிறிய நூல் என்றாலும் எளிமையான மொழியில் இயற்கையைப் பாடும், நேசிக்கும், மனித நேயத்தையும், அதற்கான ஒடுக்கப்பட்ட அரசியல் குரலையும் முன்வைக்கும் கவிதைகள். கூடுதலான அரசியல் உணர்வால் எழுதப்பட்ட உணர்ச்சி சார்ந்த கவிதைகள் என்பதால் அழகியல் வாசிப்பில் ஏற்படும் உணர்ச்சியாக மாறி வெளிப்படுவதாக உள்ளது.
”எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.”
”நிழல் வனம்” என்ற தலைப்பில் இயற்கை, காடுகள் பற்றி எழுதப்பட்ட கவிதையில்..
“மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.
எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.”
தற்போதைய குரங்கணி நிகழ்வோடு இதனை ஒப்பிட்டு பார்க்கிறது வாசிப்பு. காடு நம்மை பார்த்து சிரிக்கிறது போலிருக்கிறது ”மரங்களோடு எரிந்தார்கள் மனிதர்களும்” என்று.
இவரது கவிதைகளில் சிலவரிகள் இயற்கை என்ற புலத்தை, தமிழ் என்ற திணைக்குடி நிலத்தோடு இணைத்து ஏங்கும் ஒரு தவிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இயற்கை அழிவால் கூடுகள் சிதைந்த பறவைகளின் ஒப்பாரிக் குரல் கேட்பாரற்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒப்பாரி ஒலி காட்சியாக மனதில் பதிகிறது இவரது கவிதை வரிகளில். ”ஒப்பாரி மகரந்தம்” என்ற ஒரு சொல்லாட்சி சுணாமி எனப்படும் ஆழிப்பேரலை பற்றிய கவிதை ஒன்றில். சூழ்கொண்டு துக்கத்தை பிரசவிக்கும் ஒரு மகரந்தப்பொடியாக மாறிய துயரத்தின் ஓலக்குரலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
”உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.”
என்று ஆழிப்பேரலை என்ற இயற்கை பேரிடருடன், சமூகப் பேரிடராக உள்ள சாதியத்தை இணைப்படுத்தி வாசிக்கிறார். இயற்கையும், சமூகமும் இல்லாதவனுக்கு பெருந்துயராக மாற்றப்பட்டுவிட்ட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது இவரது கவிதைகள்.
”வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்”
உடல் நிலமாகவும், நிலம் உடலாகவும் மாறுவதிலும், மாற்றுவதிலும் அதிகாரத்தின் ஆதிக்க வெறி எப்படி செயல்படுகிறது என்பதை இவரது பெரும்பாலான கவிதைகள் உணர்த்துவதாக உள்ளது. ”கூதிர் காலம்” என்ற கவிதை ஒரு சங்ககப்பாடல் காட்சியின் அக ஏக்கத்தை சொல்கிறது. ஒருவித பழமை ஏக்கம் என்பதுடன் இணைந்து இயற்கை நோக்கி திரும்புதலும், இழந்த நிலத்தை மீட்கும் திணைக்குடி மனமும் கவிதைகள் நெடுகிலும் ஒழுகியோடுகின்றன.
”செல்லாக்காசுகளின் ஒப்பாரி” என்ற கவிதை. பணமதிப்பிழப்பு என்ற மோடியின் செல்லாக்காசுத்திட்டத்தின் விளைவை சொல்லும் கவிதை.
”செல்லாமல் போனது
இழந்துபோன வாழ்வைப்
போர்த்திக் கிடக்கும்
சீவன்களும்தான்.”
என்று மனிதனே செல்லாக்காசாக மாற்றப்பட்டுவிட்ட அரசியல் அவலம் பற்றிய பதிவாக உள்ளது.
ராம்குமார் படுகொலையை சாதிய ஆணவப் படுகொலையாகவும், அதில் பார்ப்பனர், காவிகள், காவல்துறை உள்ளிட்டவற்றின் கூட்டதிகாரம் சாதிய முகத்தில் எப்படி ஒரு சாமாநியனைக் கொன்றது என்ற கருத்தை கவிதையாக முயன்றிருக்கிறார். கவிதையைவிட கருத்து ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல; ”அறத்தீ மனிதர்கள்” என்ற கவிதையும் முல்லிவாய்க்கால் படுகொலையினால் சிதறுண்ட மனதின் வெளிப்பாடாக அரசியல் மீது காறி உமிழும் சொற்கோவையாக வெளிப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நீர்-அரசியல் குறித்து பேசும் ”நீரின்றி அமையாது தமிழகம்” என்ற கவிதையின் இறுதிவரிகள் இன்றைய தமிழின அரசியலின் புள்ளியை சுட்டிச் சொல்கிறது இப்படி,
பூநூலால் கோா்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.”
புரட்சிகரக் கவிமரபான இன்குலாப் கவிதைகளின உணர்ச்சிமிக்க சில வரிகளைப்போன்ற வரிகள், சொல்முறை சில கவிதைகளில் வெளிப்பாடு கொண்டுள்ளது. பழந்தமிழ் அறிவுடன், தமிழ் மரபிலும், தமிழின் அணியிலக்கன மறைபொருள் விளக்க உத்திமுறைகளான உள்ளுரை, உவமம், உருவகம், இறைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி, கவிதை மொழியை ஒரு இணைமொழியாக்க உத்தியாக வெளிப்படுத்துவதற்கான மொழிப்புலம் கொண்ட மகராசன், மென்மேலம் சிறந்த கவிதைகளை எழுதமுடியும் என்பதை, கவிதை குறித்த அவரது அறிதலாக வெளிப்படும் கீழ்கண்ட வரிகள் சொல்லிச் செல்கின்றன.
”கவிதைகளில் இளைப்பாறுகின்றன
சுமைத்தாங்கிச் சொற்கள்”
”கவித்தனம் காட்டவே
எழுதி எழுதித் தீர்கின்றன
சொற்கள்.”
”ஈரம் கோதிய சொற்கள் தான்
வாழ்வின் தாகத்தை
இப்போது தணிக்கின்றன”
உணர்வுகள் கவிதைகளில் சொற்களாக மட்டுமே மிஞ்சாமல், அழகியல் சார்ந்த காட்சிகளாக எடுத்துரைக்கப்படும்போது வாசிப்பில் நினைவற்ற நிலையில் மொழித்துகளாக சேர்ந்துவிடும். கவிதையில் சொற்கள் இசைத்தன்மையுடன் இருக்க எதகைமோனை போன்ற உத்திகளை உருவாக்கியதன் பின்னணி என்பது இத்தகைய அழகுணர்ச்சியை இசைத்தலாக கவிதை வெளிப்படுத்தவும், வாசப்பில் அது இசைாயக மனதில் படியவுமே. மகராசனின் இகக்விதைகளில் அழகியல் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், செய்நேர்த்திமிக்க கவிதைகளாக அவை வெளிப்படும் என்ற நம்பிக்கையை தரும் கவிதை தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
- ஜமாலன் 15-03-2018
நூல் குறிப்பு: ”சொல் நிலம்” – ஆசிரியர்: கவிஞர். மகாராசன் – டிச. 2017- பக். 88- ஆதி பதிப்பகம் – திருவண்ணாமலை - விலை: ரூ 100
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.