டவுசர் கிழியும் டாலர் அரசியல் - 2

நண்பர்களுக்கு எனது முந்தைய பதிவான டவுசர் கிழியும் டாலர் அரசியலும் குப்பை கூட்டுபவர்களும் -அமேரிக்க பொருளாதார நெருக்கடி. யின் நோக்கம் பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு பயனுள்ள விவாதமாக தொடர வேண்டும் என்பதே.  ஆனால், வழக்கம்போல் பின்னொட்டங்கள் தனிமனிதப் பிரச்சனை மற்றும் மார்க்சிய. எதிர்-மார்க்சிய கருத்தாக்கங்கள் பற்றியதாக மாறிச் செல்கிறது. மார்க்சியம்-எதிர்மார்க்சிய உரையாடல் நடத்தப்பட வேண்டிய தளம் வேறு. தவிரவும் இத்தகைய உரையாடல்கள் உலக அளவில் நடந்துகொண்டிருப்பவை. அவற்றை நடத்த விரும்பும் நண்பர்கள் ஆதாரத்துடன் மூலக்கட்டுரைகளையும் அல்லது தங்களது சுயமான புரிதல்களையும், கருத்துக்களையும் முன்வைப்பதன் மூலமே பயனுள்ள வகையில் இதனை புரிந்து எடுத்துச் செல்லமுடியும். தனிமனித தாக்குதல் இல்லாமல் முன்-அனுமானங்கள், காழ்ப்புணர்சிகள் இல்லாமல் ஆரோக்கியமான உரையாடலாக அவை அமையவேண்டும். இந்த இதழ் உயிரோசையில் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இந்திராபார்த்த சாரதி  கார்ல்மார்க்ஸும் வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியும் என்று தனது பார்வையை முன்வைத்துள்ளார். அதில் முக்கியப்படுத்தும் மார்க்சிய நிலைப்பாடு என்பது முதலாளியம் தனது உள் நெருக்கடிகளால் சிதைவை சந்திக்கும் என்பதை இன்றைய பொருளாதார நெருக்கடி முன்கொண்டு வந்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். 

மார்க்சின் உபரிமதிப்பு பற்றியக் கொட்பாடு விஞ்ஞானபுர்வமற்றது என்று சொல்லும் நண்பர் அதியமான் அதற்கான ஆதாரங்களையும் தனது சிந்தனைகளையும் தமிழில் முன்வைத்தால் பரவலாகப் புரிந்துகொள்ள ஏதுவாகும். மார்க்சியத்தை சகலோரோக நிவாரணியாகக் கான்பதும், மார்க்சியம் காலாவதி அடைந்துவிட்டது என்பதும் அடிப்படையில் சாரம்சவாத தன்மைக்கொண்ட பார்வைகள்தான். இவை இரண்டுமே மார்க்சிய வார்த்தையில் கூறினால் இயங்கியலை மறுப்பவை. சமூக வளர்ச்சிக்கு கேடானவை. மார்க்சியம் என்பது சமூகவளர்ச்சிக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஒரு இயங்கியல் பார்வையைக் கொண்டது. அப்படி இது இயங்குவதால்தான் இன்றுவரை உயிர்ப்புள்ள ஒரு சிந்தனைமுறையாக உள்ளது. 

உரையாடலில் பங்குபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

ஜமாலன்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.