பின்நவீனத்துவம் எனும்... பகுதி-2

பின் நவீனத்துவம் குறித்தான எனது முந்தைய பதிவிற்கு மாயன் எழுப்பியுள்ள கீழ்கண்ட பின்னோட்டமும், அதற்கான விவாதக் குறிப்புகளும் ஒரு பதிவாக வெளியிடப்படுகிறது.. மேலதிக விவாதத்திற்காக...

மாயனின் பின்னோட்டம்.
"பின் அமைப்பியல் முறையியலை- அதாவது ஒரு அமைப்பு சார்ந்த கோட்ப்பாட்டின் மையமிழப்பை அல்லது மையமழிப்பை பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை அவலங்களை வெளிக்கொணருத்லை தான் பின் நவீனத்துவம் என்கிறீர்கள்...
இப்படி தெளிவா முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல?
அப்போ இது இந்துயிஸத்துக்கும்,பெரியாரியத்துக்கும், மார்க்ஸியத்துக்கும் எல்லாத்துக்குமே பொருந்தும் இல்லையா?ஏன்னா இவை எல்லாமே அமைப்பியியலால் அலசப்படக்கூடிய அமைப்பு ஒழுங்குகள்...
எப்போ நம்மால பின் நவீனத்துவத்துக்கும் ஒரு கோட்பாடு வகுத்து (சுற்றிக்கொண்டு) விளக்க முடிஞ்சுதோ அப்போ அதுவும் ஒரு அமைப்பு ஒழுங்கு ஆயிடுச்சு.(நீங்க தான் விளக்கியிருக்கீங்க..)
அப்போ அதுக்கும் ஒரு மையம் அமைஞ்சுடுச்சு, அமைப்பியலால் அலசப்பட கூடிய ஒரு அமைப்பு ஒழுங்காவும் மாறிடுச்சு. கட்டுடைத்தல், மையமிழப்பு எல்லாம் இதுக்கும் உண்டு... அதாவது இதுவே ஒரு பின் அமைப்பு முறையியலாயிடும்.. பின் நவீனத்துவதுக்கு இப்போ சொன்ன எந்த இயல்பும் இதுக்கு இல்லாம போயிடும்...(Cease To Exist) இது ஒரு Chain Reaction மாதிரின்னு நினைக்கிறேன்..
இதுக்கும் The Big Bang Theoryக்கும் தான் தொடர்பு இருக்கும்னு எனக்கு தோணுது.. எதுக்கும் விஜயக்காந்த் சாரை ஒரு வார்த்தை கேட்டுப்போம்..."

இனி எனது விவாதத்தை தொடர்கிறேன்.

புரட்(டு)சி கலைஞர் விசயகாந்தின் கொ.ப.செ. மதிப்பிற்குரிய மாயன் அவர்களுக்கு...

பின்நவீனத்துவம் குறித்து சுருக்கமாக விளக்க முனைவதால், பல வார்த்தைகளை புதிய அர்த்தங்களில் விளக்கவில்லை. அதற்காக அவற்றிற்கு பழகிய அர்தங்களை பயன்படுத்த முடியாது. உதாரணமாக கோட்பாடு என்பதை நீங்கள் ஒரு மையத்துவ சிந்தனை போன்று புரிந்து கொள்கிறீர்கள். கோட்பாடு என்பது இயல்பானதாக மக்கள் விளங்கிக் கொண்டிருக்கும் பொதுபுத்தியை கேள்விக்குட்படுத்தி, அது இயல்பற்றதுதான், வரலாற்றில் கட்டமைக்கப்பட்டதுதான் என்பதை அம்பலப்படுத்தி மற்றொரு புதிய ஒழுங்கை முன்வைப்பது. (இவ்வறையறையில் எல்லா சித்தாங்கள், தத்துவங்கள், இஸங்களையும் பொறுத்திக் கொள்ளலாம்.) அவ்வொழுங்குகள் மக்களிடம் புழக்கத்திற்கு வந்தபின் நாளடைவில் அதுவே இயல்பானதாக மாறி தனது கட்டமைவு வரலாற்றை மறைத்துவிடும். உண்மையில் இப்படி மறைவாக இயங்கும் கட்டமைப்புகளை உடைத்து வெளிப்படுததுவதுதான் தகர்ப்பமைப்பு ஆய்வுமுறை. அதற்கு மொழி என்பது ஒரு கட்டுமானம் என்கிற அடிப்படையிலிருந்து துவங்குகிறது. தெரிதா தகர்ப்பமைப்பு வாதமும் தகர்பபமைப்பிற்கு உட்பட்டதே என்பதை ஏற்றுக் கொண்டே உள்ளார். (மார்க்ஸ்கூட் மார்கஸியம் தேவையற்ற ஒர சமுகமே தேவை என்கிறார்.) இதன்பொருள் மதங்களின் புணித மறைகளும், சரொஜாதேவி (தெரியமா? மாயன்... பம்பரம்விட்ட தலைவரிடம் கேளுங்கள் தெரியும்) கதைகளும் மொழிக்கட்டுமானங்களே. அதனால் சரோஜதேவி தாழ்ந்தது, புணிதமறை உயர்ந்தது என்பது அதிகாரம். அதனை உடைத்தெறிவோம் என்கிற புரட்சிகர நிலைப்பாடே தகர்ப்பமைப்பு. நிறக.

இன்று நம் பழக்கத்தில் இயல்பானதாக உள்ள ஆண், பெண் பாலின வேறுபாடு தொடங்கி தேசியம், குடிமகன், வாழ்க்கை போன்ற பல விஷயங்கள் இப்படித்தான் ஒரு வரலாற்று கட்டமைவுகள் என்பதை பின்-அமைப்பியல் அம்பலப்படுத்துகிறது. (எனது மற்றொரு பதிவில் பாலினக் கட்டுமானம் (gendor construction) பற்றியும் பாலியல் கட்டுமானம் பற்றியும் விளக்கியுள்ளேன்.) இப்படி பழகிய வழக்கங்கள் நவீன தொண்மமாக கருதி அதனை எதிர்க்கும் அல்லது அவற்றில் இருந்து விலகும் நிலையை பின்நவீனத்துவம் எடுக்கிறது. இதன் எதிர்விளைவாக உருவாகும் அரசியல் நிலைபாடுகளே இந்து மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதங்கள். (மேலதிக விளக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து ஒரு விரிவான கட்டுரை எனது நூலில் உள்ளதால், அதனை விடுகிறேன் இங்கு.)

குறிப்பாக இதுவரையிலான சிந்தனைகள் மனிதனை மையமாக கொண்டு வந்தவை என்பதால் மனித மனத்தில் உட்செறிக்கப்பட்ட வன்முறை என்பது ஏதோ ஒரு வடிவில் சமூகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அதனால் மனிதமுதல்வாத அல்லது மனிதமையவாத சிந்தனைகளுக்கு பதிலாக அமைப்புகளை சிதைத்து மையமிழககச் செய்யும் ஒரு இயக்க நிலையிலான சிந்தனையே தேவை என்ற நிலையிலும், அதுவே ஒரு ஒழுங்குமுறையாக மாறிவிடாத இயக்கநிலையில் இருப்பதான சிந்தனையாகவுமே தகர்ப்பமைப்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அதாவது மனிதன் என்பதை ஒரு சொல்லாடலாகவும் வரலாற்று கட்டமைப்பாகவும் அல்லது ஒரு பிரதியாகவும் பார்க்கிறது. (இங்கு சொல்லாடல், வரலாற்று கட்டமைப்பு மற்றும் பிரதி ஆகிய சொற்கள் பின்அமைப்பியல்வாதிகளின் புதிய அர்ததங்களில் பிரயோகிக்கப்படுகிறது என்பதை நினைவில் வைக்கவும்.) இதனை பின்நவீனத்தவம் தனது ஆய்விற்கான முறையியலாக பயன்படுத்துகிறது. தெளிவாகச் சொன்னால், பின்நவீனத்தவம் என்பத ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். அதாவது 1. செவ்வில் காலம் - classical age (before 18-th centuary) 2. நவீனகாலம் - modern age (after french revelotion - birth fo renaisence) 3. பின்நவீன காலம்- postmodern age (current period - starts with failure of 1968 students revolution in France). இவையெல்லாம் ஐரோப்பிய சிந்தனை என்று நீங்கள் ஜல்லியடிக்க முடியாது. காரணம், வெள்ளையர் ஆதிக்கம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவானதற்கு பிறகு உலகம் என்பது ஒரு பொதுமைப்படத்தலுக்கு வந்துவிட்டது. அதனை உலகமயமாக்கல் என்பது தீவிரப்படுத்திவிட்டது. உலகச்சிந்தனைகளின் பாதிப்புகள் இல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் இல்லை. அதிலும் குறிப்பாக கணிப்பொறி யுகத்தில் அறிவு என்பது மிகச்சாதரணமாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு கடைவிரிப்பாக கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடையும் நிலையை அடைந்துள்ளது. அறிவின் தன்மை அதை அடையும் முறை ஆகியவை முற்றிலும் மாறியிருப்பதை நிங்கள் உணரலாம். பின்நவீனத்துவம் என்பது கனிப்பொறிக் காலக்கட்டத்தின் ஒரு கொட்பாட்டு வர்ணனை என்றுகூடக் கூறலாம்.

இன்றைய பின்காலணீயச் சூழலில் அமேரிக்க -ஐரோப்பிய மேலண்மை என்பது பண்பாட்டு ஏகாதிபத்தியமாகவும், மறைமுகமாக உலக நிதிமூலதன அமைப்புகள் (IMF, World Bank and WTO, டங்கல் மற்றும் காட் ஒப்பந்தங்கள்) மூலமும் உலகை ஆண்டு வருகிறது. உலகெங்கிலும் தேசிய இனப்போராட்டங்கள், மத அடிப்படைவாதங்கள், சூழலியல் போராட்டங்கள், உலக பயங்கரவாதம் (Global Terrarisam) போன்றவற்றை இவை வளர்த்து வருகின்றன. இந்த உலகச் சூழலை எதிர்கொள்வதற்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட பார்வையோ தத்துவமோ இல்லை என்பதுடன் அப்படி ஒன்று சாத்தியமே இல்லை என்கிறது. காரணம், நீட்ஷே கூறியதுபோல "நாம் கடவுளை கைவிட முடியும் என்று தோன்றவில்லை. காரணம் நாம் இன்னும் இலக்கணத்தை கைவிடவில்லை." கடவுள் இற்ந்துவிட்டார் என்று அறிவித்த நீட்ஷேதான் இதனையும் கூறினார். இலக்கணம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட மொழி. அதைதான் பெரியார் கறைபடிந்த மொழி என்றார்.

மனித குலத்தின் அதீத வளர்ச்சி மிருகங்களைவிட கேவலமான இரண்டு உலக யுத்தங்களை நடத்தி மனித குலத்தை அழித்து ஓய்ந்ததது ஆதிக்க வெறியால். இனி மனித குலம் தழைப்பதற்கான மகிழ்வுடன் வன்முறையற்று வாழ்வதற்கான எந்த ஒரு அடிப்படை தர்க்கமும் இல்லை என்கிற சூழல். மனித விடுதலை பேசிய அனைத்து தத்துவங்களாலும் இப்பேரழிவுகளை தடுக்க முடியவில்லை. மனிதன் நம்பிக்கை கொள்வதற்கான எந்த மையமும் இல்லை. இதையே பின் நவீனத்துவ சூழல் என்கிறோம்.இதன்பொருள் பின்நவீனத்துவாதி என்கிற நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியாது என்பதுதான். காரணம், பின்நவீனத்துவம் என்பது ஒரு சமூகவடிவம். இதில் தனது தன்னிலைய மையமற்றதாக வைத்துக் கோள்ளும் தந்திரங்களை கண்டடைந்தவர்களே பின்நவீனத்துவவாதிகள். இதில்தான் மனப்பிறழ்ச்சியாளர்கள் துவங்கி சித்தர்கள்வரை அடங்குகிறார்கள். அது கிடக்கட்டும்.

இந்த பின்நவீனத்துவ சூழலை மார்கிசிய விமர்சகர்கள் ஏகாதிபத்தியத்தின் உச்சகட்டவிளைவாக பார்க்கிறார்கள். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு போருடன், அதனை அழித்து ஒழிப்பதின் மூலமே சாத்தியம் என்கிறார்கள். ஆணால், பின்நவீனத்து ஆதரவாளர்கள் மார்கிசியமும் ஒரு பெருங்கதையாடல் என்று அதன் முறைமைகளையும் மறுக்கிறார்கள். பின்நவீனத்துவத்தை மார்கிசியத்திற்குள் வைத்து புரிந்து கொண்டு தங்களது உரையாடலை நடத்தும் மார்கசிய அறிஞர்களும் இருக்கிறார்கள்.

//அப்போ அதுக்கும் ஒரு மையம் அமைஞ்சுடுச்சு, அமைப்பியலால் அலசப்பட கூடிய ஒரு அமைப்பு ஒழுங்காவும் மாறிடுச்சு. கட்டுடைத்தல், மையமிழப்பு எல்லாம் இதுக்கும் உண்டு... அதாவது இதுவே ஒரு பின் அமைப்பு முறையியலாயிடும்.. பின் நவீனத்துவதுக்கு இப்போ சொன்ன எந்த இயல்பும் இதுக்கு இல்லாம போயிடும்...(Cease To Exist) இது ஒரு Chain Reaction மாதிரின்னு நினைக்கிறேன்..//

"புத்தர் ஆசையை ஒழி என்று ஆசைப்பட்டார்" என்கிற சின்னப்புள்ளத்தனமான வாதமால இருக்கு இது. புத்தர் கூறியது ஆசை அல்ல. அது வேட்கை அல்லது விழைவு (விழைச்சு) (desire). அதை நமது லெளகீக ஆசையுடன் இணைப்பது தவறு. வேட்கைகளின் அரசியலையும் பின்நவீனத்துவம் விரிவாக விளக்கி, அதன் அடிப்படகளை தகர்க்கிறது. அவை மட்டுமே தனியாக விளக்கப்பட வேண்டியவை.

அடுத்து மாயன், ஒன்றை விளக்கிவிட்டாலே அது மையம் உள்ள சிந்தனை என்பதாக புரிந்து கொள்கிறீர்கள். மையமற்ற சிந்தனை என்பதை மொழியால் விளக்க முடியாததாகத்தன் இருக்கும். அப்படி ஒன்று சாத்தியமே இல்லை. மொழி என்பது ஒரு மனித உறுப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நினைவிழி மனம் என்பது மொழியால் அல்லது மொழிபோல கட்டமைக்கப் பட்டுள்ளது. (இங்கு நினைவிலி மனம் என்றால் என்ன என்பது குறித்து விரிவான புரிதல் அவசியம்.) வேறுவிதமாக கூறினால், நினைவிலி என்பதே மொழிதான். அல்லது மொழி நினைவிலியாக உள்ளது. அதனால் பேசப்படும் மொழி பேசாத மொழியால்தான் கட்டமைக்கப்படுகிறது. அல்லது பேச்சு என்பது நமது தன்னிலையின் தெர்வுப்பரப்பின் அடிப்படையில் பலவற்றை தேர்விலிருந்து விலக்கியே உருவாகுகிறது. இதைதான் பேசாப்பொருளை பேசுதல் என்பார்கள். பெருங்கதையாடல்களுக்கான காலம் மறைந்து விட்டதை அறிவிப்பதே பின்நவீனத்துவ காலகட்டம் என்றால் மிகையாகாது.ஆணால் இக்கருத்தை மறுக்கிறார் பிரடரிக் ஜேம்சன் என்கிற மார்க்சியவாதி. பெருங்கதையாடல்கள் மறைவதில்லை, அவை மறைவாக இயக்கம் கொள்கின்றன என்றும் இம்மறைவியக்கத்தை அரசியல் நினைவிலி என்கிறார். இது வேறொரு விவாதம். பின்நவீனத்துவம் செத்துவிட்டது எனக்கூறும் பிணந்தூக்கும் பேராளர்களுக்கான ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்பேர்ட்டாக வோறரு பதிவு எழுதும் உத்தேசம் என்பதால் அதனை விடுகிறேன் இங்கு.

உங்கள் வாதத்தில் ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் உட்கரு சங்கிலித்தொடர் வினை (nuclear chain reaction) போன்றதுதான் பின்நவீனத்தவ ஆதரவாளர்கள் முன்வைக்கும் ஒரு இயக்க நிலை. குவண்டம் எந்திரவியல் இச்சிந்தனைமுறைக்கு நிறைய பங்களிப்பை செய்துள்ளது.

//இதுக்கும் The Big Bang Theoryக்கும் தான் தொடர்பு இருக்கும்னு எனக்கு தோணுது.. எதுக்கும் விஜயக்காந்த் சாரை ஒரு வார்த்தை கேட்டுப்போம்..."//

bigbang பற்றி உங்களுக்குத் தெரியும் என்பதால் அதை இங்கு quote பன்றீங்களா? அதற்கான ஆதரங்கள் இன்னும் விவாதத்தில்தான் இருக்கின்றன. பிக்பாஃங்கை ஆதரிக்கும் ஸ்டீபன் ஹாவ்கிங் இது குறித்து நிறைய விவாதிக்கிறார் . அவரிடம் முடிந்தால் கேளுங்கள். (விஜயகாந்திடம் கேட்டால் அதை வைத்து இந்திய பார்டரை தீவிரவாதியிடமிருந்து காப்பாத்த முடியுமா? அல்லது அடலீஸ்ட் ஒரு பம்பரமாவது கிடைக்குமா? என்று கேட்பார்.) இக்கோட்பாடு் எல்லா கடவுள் கொள்கைக்கும் ஆப்படிப்பதுடன், காலம் என்றால் என்ன என்பதையும், அதுவே ஒரு கட்டுமானம் என்பதையும் வெளிப்படுத்துகிறது. (பார்க்க A Breief History of Time - Stephan Hawking). காலத்தை physics அளவிட கற்னைக்காலம் என்கிற imaginary time என்கிற கருதுகோளை பயன்படுத்துகிறது. காலத்தின் கணக்கீட்டில் -t என்கிற ஒரு அளவீடு வருவத எதைக்குறிக்கிறது. காலம் பின்னோக்கி நகரும் என்பதையா? காலத்திற்கு அதன் திசை அவசியம். அதனை காலக்குறி (arrowaயய of time) எனலாம். aஇக்குறி முன்னோக்கிய திசையில் மட்டுமே குறியிடப்படக்கூடியது. இக்காலக்குறியை ஹாவ்கிங் 3-விதமாக பிரிக்கிறார். விரிவாக வேண்டாம். நமது காலக்கறி என்பது உளவியல் காலக்குறி (physicological arrow of time) என்கிறார். உளவியல்-நினைவிலி என இதை வளர்த்தெடுக்கலாம். காலம் என்பது சாஸ்வதமானதோ, நிலையானதோ அல்ல. அத விஞ்ஞானரீதியாக கட்டப்பட்டுள்ள ஒரு கருதுகோள்தான். யாரோ துவக்கிவைத்த காலத்தை விடாமல் காப்பாற்றியும் பின்பற்றியும் வருகிறோம். S.I.units ஐ காப்பாற்றிவரும் உலக அமைப்பானது ஒரு கடினாரத்தையும் காப்பாற்றிவிருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். நிறக.

எப்படி... மாயன்... பின்நவீனத்தும் இங்கெயும் தலை நீட்டுகிறது பாருங்கள் ஆமைமாதிரி.... இந்த ஆமை தொல்கதையில் வரும் அண்டத்தை முதுகில் தாங்கி பிடித்திருக்கும் பிரபஞ்ச ஆமை அல்ல என்பதை மட்டும் இங்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்படடிருக்கிறேன்... விடமாட்டான் இந்த விடாது கருப்பு என மக்கள் தொலக்காட்சி எட்டுக்கு எட்டுடன் முடித்துக் கொள்கிறேன்.

-ஜமாலன்
(15-10-2007 மாலை 06:05 சவுதி நேரம்.)

9 comments:

ஜமாலன் சொன்னது…

பின்நவீனத்துவம் குறித்து பயன்படுத்தப்படும் பல கலைச் சொற்களை விரிவாக விளக்கப்படாத சூழலில் இப்பகுதி பரியாத பல சொற்களை கொண்டள்ளது. மேலும் உரையாட இவை பகுதி பகுதியாக விளக்கப்படலாம்.

நன்றி..

மாயன் சொன்னது…

ஜமாலன்,

நன்றி.. பிக் பேங்க் தியரி, விஜயகாந்த் எல்லாம் சும்மா காமெடிக்காக சொன்னேன்...

உங்க பதிவை ஆழ்ந்து படிச்சுட்டு, நாளைக்கு சொல்றேன்..

அருமையா, பொறுமையா விளக்கறீங்க... நன்றி..

ஆனா இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்..

கொஞ்சம் அடிப்படைக்கு போவோமா?

அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம் இதையெல்லாம் எந்த Stream-ல சேர்க்கணும்? தத்துவவியலா? மொழியியலா? அறிவியலா?

எனக்கு தெரிஞ்சு எழுத்தாளர்கள் மட்டும் தான் ஓவரா பின் நவீனத்துவத்தை பிடிச்சுக்கிட்டு தொங்கறாங்க...
ஏன் நவீனம்ன் என்கிற வார்த்தைக்கு நாவல்னு ஒரு அர்த்தம் இருக்கிறதாலய?...

(விஜயகாந்த்-னு ஒரு வார்த்தை சொன்னதுக்காக.. என்னை கொ.ப.ச ஆக்கிட்டீங்களே?..ம்ம்ம் பேசப்படாதுங்கறீங்க... )

மாயன் சொன்னது…

இப்பொழுது, நான் புரிந்து கொண்ட வரை பின் நவீனத்துவத்தை காலத்தை குறிக்க பயன்படுத்த முடியாது என்று படுகிறது...

இது தான் நவீனம் என்று ஒரு காலக்கட்டத்தின் Relativity இல்லாமல் விளக்கமுடியாது.. ஆனால் காலம் செல்ல செல்ல இன்றைய பின் நவீனம் - கோட்பாடு(நீங்கள் சொல்லும் புரிதலில்) என்ற அளவில், மக்களின் இயல்பாக கொள்ளப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு தகர்ப்பமைப்பு ஆய்வுக்கு உட்ப்படுத்தப்படும்... Chain Reaction...

காலத்திற்குள் இது எப்படி அடங்குகிறது என்பதை விளக்குங்கள்.. ஏனெனில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்களின் ஒழுங்கு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு பின் நவீனத்துவம் நுழைந்திருக்கும்... இப்போதுள்ள உலகமயமாக்கலின் வீச்சு இல்லாவிட்டாலும் சிறு சிறு சமுதாயதுக்குள் சிறிய அளவில், கட்டுடைப்புகள், பின் அமைப்பியல் அலசல்கள் இருந்தே இருக்க வேண்டும்...
பின் நவீனத்துவம் எங்களுக்கு சொந்தமானது என்று 1968-க்கு பிறகு வந்த நாம் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?............

மேலும் கேள்விகளோடு வருவேன்...

ஜமாலன்,

உங்கள் நேரத்தை நான் வீணடிக்கவில்லையே?..

ஜமாலன் சொன்னது…

வாங்க மாயன்.

//(விஜயகாந்த்-னு ஒரு வார்த்தை சொன்னதுக்காக.. என்னை கொ.ப.ச ஆக்கிட்டீங்களே?..ம்ம்ம் பேசப்படாதுங்கறீங்க... )//

நானும் சும்மா காமெடிக்குதான் சொன்னேன். மற்றபடி ஒன்றுமில்லை. உங்கள் விவாதம் ஆரோக்கிமானது.. தொடருங்கள். நேரம் ஒன்றும் விணாகிவடாது.

மொத்தமாக பதில் தருகிறேன்..

ஜமாலன் சொன்னது…

//ஆனா இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்..

கொஞ்சம் அடிப்படைக்கு போவோமா?//

ஆஹோ!! வாரும் பிள்ளாய்.. பேயா பிசாசா?

நாங்களும் அப்படித்தாங்கறேன்.. பாம்போங்கிறேன்..

நன்றி விவாதத்திற்கு.. தொடர்வோம்

கே.என்.சிவராமன் சொன்னது…

நல்ல பதிவு ஜமாலன்.

மாயன் கேட்ட கேள்விகள் அனைத்துமே பின்நவீனத்துவம் தொடர்பாக காலம் காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகள். அனைத்து நாடுகளிலுமே மார்க்ஸீயர்கள் தயக்கத்துடன் பின்நவீனத்துவத்தை அணுகுவதையும், முதலாளித்துவ அறிஞர்கள் உற்சாகத்தோடு வரவேற்பதையும் சிதைக்க வேண்டியது அவசியம். இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி என பின்நவீனத்துவத்தை கொள்ளலாம். தங்கள் விளக்கம், அந்த கூர்மையை இனம் காட்டுவதுடன் அதை பயன்படுத்த வேண்டியதன் வழிமுறைகளையும் விளக்கி இருக்கிறது.

உரையாடிக் கொண்டிருக்கும் மாயனுக்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

பைத்தியக்காரனுக்கு..

நன்றி.

மாயன் சொன்னது…

இன்னும் என் அடிப்படை கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை ஜமாலன் சார்..

கோட்பாடுகள், கோட்பாடுகளை தகர்க்கும், கேள்விக்கு உட்படுத்தும், தகர்ப்பமைப்பு.. இவற்றை விளக்கி கொண்டிருக்கும் போதே, பாலின கட்டுமானம், பாலியல் கட்டுமானம், மனிதமுதல்வாதம், மொழி பற்றி விளக்க ஆரம்பித்து விட்டீர்கள்...எல்லாம் தனி தனியாக புரிகிறது... இவையெல்லாம் இணைந்து எப்படி ஒரு பின் நவீனத்துவ சூழலுக்கு நம்மை இட்டு செல்கினறன என்பதை தான் புரிந்து கொள்ள விழைகிறேன்.

---கட்டுடைத்தல் என்பது ஒரு தனி கூறு, பின்னவினத்துவம் என்பது தனிக்கூறு கட்டுடைப்பது தான் பின்னவினதுவம் என்று நம்பும் மக்கள் இருக்கும் இங்கே எப்படி உண்மையான பின் நவினத்துவம் வரும்?---

வவ்வாலார் ஜாலி ஜம்பரின் பதிவில் கூறிய அதே குழப்பம் தான் எனக்கும்...
தகர்ப்பமைப்பிற்கும், பின் நவீனத்துவத்திற்கும் உள்ள நேரடி தொடர்பு என்ன... அல்லது ஒன்றினால் ஒன்று ஆக்க படுகிறதா? ஆமாம் என்றால் எந்த ஒன்றினால் எந்த ஒன்று ஆக்க படுகிறது?...

---புத்தர் கூறியது ஆசை அல்ல. அது வேட்கை அல்லது விழைவு (விழைச்சு) (desire). அதை நமது லெளகீக ஆசையுடன் இணைப்பது தவறு. வேட்கைகளின் அரசியலையும் பின்நவீனத்துவம் விரிவாக விளக்கி, அதன் அடிப்படகளை தகர்க்கிறது.---

---இதில் தனது தன்னிலைய மையமற்றதாக வைத்துக் கோள்ளும் தந்திரங்களை கண்டடைந்தவர்களே பின்நவீனத்துவவாதிகள்.---

முற்றும் துறந்த யோகிகளா?

இந்த கவிதையை கேளுங்கள்..

முற்றும் துறந்தவன் என்று
யாருமே கிடையாது....

முற்றும் துறந்தவன் என்று
சொல்லி கொள்ளும்
முனிவன் கூட
முக்தி மேல் மோகம் கொண்டிருப்பான்...

Pseudo-Post Modernism பற்றி கூறிய வவ்வாலாரை சீரியசான ஆள் என்று சுகுணா திவாகர் கூறினாரே?

அது கூட ஒரு சமுதாய அமைப்பியல் உருவாக்கிய கூற்று..பிரதி.. அதையும் கட்டவிழ்க்கும் முறையில் மையமற்றதாக செய்து புதிய ஒழுங்கை முன் வைத்தால் நானும் பின் நவீனத்துவ சூழலுக்கு வந்து விட்டேன் என்று அர்த்தமா?

ஜமாலன் சொன்னது…

மாயனுக்க பகுதி-3 என்கிற தனிப்பதிவை பார்க்கவும்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.