ஆபிதினும் பின்நவினத்துவ நையாண்டியும்

நேற்றிரவு தமிழ்மணம் திரட்டியில் உலாவிக்கொண்டிருந்தபோது.. நாகூர் ரூமியின் இணையத்தளத்திற்குள் நுழைந்தேன். நாகூர் ரூமி-எண்பதுகளில் மீட்சியில் அரூபமான படிமங்களைக் கொண்டு தமிழில் அபி அவர்களுக்கு பிறகு கவிதை எழுதிக் கொண்டிருந்தவர் என்பதால் அவரது இணைய பக்கத்தை பார்க்கும் ஆர்வத் தூண்டதலே காரணம். அங்கிருந்து சாருவின் வலைத் தளததிற்கும் அங்கிருந்து ஆபிதீனின் வலைப் பக்கத்திற்கும் நகர்ந்தேன். நான் சமீபத்தில் (3- மாதங்களுக்கு முன்புதான்) வலைப்பதிவர் உலகத்திற்கு வந்தவன் என்பதால் சாரு குறித்தும் ஆபிதின் குறித்தும் நடந்து முடிந்துபோன விவாதங்களைப் படித்துக் கொண்டு இருக்கிறேன். அது ஒரு புறமிருக்கட்டும்.

1990-ல் சாருவின் முதல் நாவலான "எக்ஸிஷ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்" என்கிற நாவலுக்கு பறை என்கிற பொதியின் இதழில் விமர்சனம் ஒன்று எழுதியிருந்தேன். அதன்பின் நாகார்ஜுனன் வழியாக சாரு எனக்கு அறிமுகமானார். அதிலிருந்து சாருவை சென்னை செல்லும்போதெல்லாம் சந்திக்கும் வழக்கம் இருந்தது. (3அல்லது 4 ஆண்டுகளுக்கப்பிறகு சாருவை நான் சந்திக்கும் வாய்ப்பேயில்லை. அவரது எழுத்துக்களையும் படிக்கும் வாய்ப்பும் அருகிவிட்டது. தவிரவும் தினமலருடன் ஆன சாரு முற்றிலும் விலகிப்போன ஒரு பரப்பில் இயங்குகிறார். அதனை இங்கு விட்டுவிடுவோம்.)

ஒருநாள் சாரு ஆபிதின் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு ஓவியர், சிறுகதை நாவல் எழுதக் கூடியவர் என்பதாக கூறுவார். ஒருமுறை ஆபிதினை சாரு வீடடில் சந்தித்தேன். அதில் பழக்கம் கொள்ளும் அளவிற்கு நானோ ஆபிதீனோ பேசிக்கொண்டதுகூட இல்லை. உண்மையில் ஆபிதீனிற்கு என்னை நினைவில் வைத்துக் கொள்வதும்கூட சாத்தியமற்ற ஒரு சந்திப்பு நிற்க...

நீண்ட நாட்களாக ஆபிதின் கதைகளை படிக்கும் எண்ணம் இருந்து வந்தது. அவரது கதைகள் படிக்க எனது சூழலில் கிடைக்கவில்லை. அல்லது தீவிரமாக அதனை தேடும் நிலையும் வாய்க்கவில்லை. அவரது எழுத்துக்களை படிக்கும் நீண்டநாள் எண்ணம் நிறைவேறியதைப்போல பதிவில் அதனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது கதைகள் இரண்டினை சுவராஸ்யமான தலைப்புகளை கொண்டிருந்ததால் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து படித்தேன்.

1 பதிவு இணைய இதழில் ஜனவரி 2004-ல் வெளிவந்த கதை "இஸ்லாமிய கதை எழுத இனிய குறிப்புகள்".
2. திண்ணை.காம் செப்டம்பர் 2003-ல் வெளிவந்த "ஹே! ஸைத்தான்" கதை.

நீண்ட நாட்களாக தமிழ் சிற்றிதழ்கள் இணையம் போன்றவற்றடன் தொடர்பில்லாததால்.. இவற்றை உரிய காலங்களில் படிக்க இயலவில்லை. அது வருந்தக்கூடிய செய்திதான்। பின்நவினத்தவ கதையாடலில் ஒரு உத்தி நையாண்டி என்பது. நையாண்டியின் மூலம் உன்னதம் புணிதம் என்கிற விஷயங்களை கவிழ்த்து தலைகீழாக்கிவிடுவது. நையாண்டி என்பது ஒரு கதையாடல் உத்திதான் என்றாலும் கதையின் நையாண்டி ஒரு நகைச்சுவை உணர்வுடன் முடியாமல் வாசகனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வண்ணம் ஒரு ஆழ்ந்த அமைப்பை உள்ளார்ந்து கொண்டிருக்கும். கதை வாசித்தபின் ஒரு செயலூக்கமிக்க மெளனத்தை ஏற்படுத்தும். எடுத்துரைக்கப்படும் கதையாடலில் மேலமைப்பிற்குள் உள்ளார்ந்து ஓடும் கூர்மையான விமர்சனம் கதை ஏற்ற முனைந்த உணர்வு தளத்திற்கு வாசகனை இட்டுச் சென்றுவிடும். அத்தகைய உணர்வை புதுமைபித்தனின் கதைத்தொகுதிகளில் கீழ்கண்ட கதைகள் ஏற்படுத்தக்கூடியவை. "திருக்குறள் செய்த திருக்கூத்து" "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்""புதிய கந்தபுராணம்" "இலக்கிய மம்மநாயனார் புராணம்""கட்டில் பேசுகிறது""வேதாளம் சொன்னகதை""கட்டிலை விட்டிறங்கா கதை" போன்ற கதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் நகைச்சுவையை உருவாக்குவதுடன் சமூகம் சடங்குகள் ஆச்சாரங்கள் அல்லது பழகிய மணோபாவங்கள் என கெட்டித்தட்டிப்போயுள்ள புணிதங்களை கவிழ்த்துப் போட்டுவிடும்.

அப்படியொரு உணர்வை இவ்விருக்கதைகளும் உருவாக்கின. சிரிக்காமல் ஒரு வரிக்கூட படிக்க முடியவில்லை. முதல்கதை தமிழ் இஸ்லாமியர் நிலையை அப்படியே படம் பிடிக்கிறது. 3-வருடம் கழித்தும் அதன் இன்றையத் தன்மை மாறவேயில்லை. அதுதான் அக்கதையின் வெற்றி. இக்கதை இஸலாமிய எழுத்தாளன் கதை எழுதுவதற்கான 16-குறிப்புகளைத் தருகிறது. அக்குறிப்புகளினூடாக இஸ்லாம் குறித்த அறிவார்ந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இஸ்லாம் எப்படி பூசாரிகள் அதாவது உலாமாக்கள் அதாவது மத போதகர்கள் கையில் சிக்கிக் கொண்டு கெட்டிதட்டிப் போய்விட்டது என்பதை நுட்பமாக வஞ்சப் புகழ்ச்சியைப்போல பேசுகிறது. இக்கதையின் உள்ளமைப்பில் விமர்சிக்கப்படும் விஷயங்கள் ஏராளம். அவை ஒவ்வொன்றும் விரிவாக எழுதப்பட வேண்டியவை. மிகப்பெரிய விஷயங்களை அனாவசிமாக தனது நகைச்சவை எழுத்தின் மூலம் தூக்கிப்போடுகிறார் ஆபிதின். அந்த ஒரு வரி உருவாக அவர் திரட்டியிருக்கும் உள்ளார்ந்த விஷயங்கள் தரவுகள் தகவல்கள் ஆச்சர்யமூட்டுபவை.

மற்றோருகதை சன்-டீவி துவங்கி சேனல் டீவிகளையும் தமிழகத்தின் சேனல் அடிமை மனநிலையையும் நகைச்சவையாக முன்வைக்கிறது. இக்கதையும் தனது உடனடித்தன்மையை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இக்கதைகள் பற்றி எழுதுவதைவிட அதனை வாசிப்பதிலேயே பல அர்த்த சாத்தியங்களை வாசகன் உருவாக்கிக் கொள்ளமுடியும். வாசிப்புதான் எழுத்தை உருவாக்குகிறது என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவன் என்பதால் எனது கருத்தை இங்கு நிறுத்திவிட்டு கதையை நீங்கள் http://abedheen.googlepages.com/main.html இவ்விணைப்பைச் சொடுக்கி வாசிக்கத் துவங்கலாம்.

குறிப்பு: ஆபிதின் கதைகளை முழுமையாக வாசித்தபிறகு இதனை தொடரலாம்.

8 comments:

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

Nice post.

- Suresh Kannan

ஜமாலன் சொன்னது…

நன்றி

nagoreismail சொன்னது…

ஆபிதீன் நானா (அண்ணன்) அவர்களின் 'குழந்தை' படித்திருக்கிறீர்களா?, சிரித்து கொண்டே அழுவீர்கள். அன்னாரின் லேட்டஸ்ட் கதை 'நாங்கோரி என்ற உறுப்பினர்' - படித்து பாருங்கள், சிரித்து மகிழுங்கள் - நாகூர் இஸ்மாயில்

ஜமாலன் சொன்னது…

குறிப்புகளுக்கு நன்றி..

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஆபுதினின் ஒரு தொகுதி வந்திருக்கிறது (சட்டென்று பெயர் ஞாபகம் வரவில்லை). மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும் தமிழின் முக்கியமான எழுத்தாளர் ஆபிதீன்.

சாரு மிகப் பெரிய கதை சொல்லி தான். ஆனால் அவர் ஆபிதினுக்குச் செய்தது பெரிய துரோகம் (பொது வெளியில் அந்தப் பிரச்சனை வைக்கப் பட்டுள்ளதால் இந்தக் கருத்தைச் சொல்கிறேன்).

ஜமாலன் சொன்னது…

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கருத்துகளுக்கு நன்றி சுந்தர்.

Nagore Rumi சொன்னது…

ஆபிதீன் என் நண்பர். பல்வேறு திறமைகள் கொண்டவர். ஒரு எழுத்தாளராக இன்னும் பரவலாக அறியப்பட வேண்டியவர். மொழியின் சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவர். அவர் பற்றி எழுதியதற்கு நன்றி.

அன்புடன்
நாகூர் ரூமி

ஜமாலன் சொன்னது…

Nagore Rumi said...

நன்றி நாகூர் ரூமி.

உங்கள் கவிகைள் மீட்சியில் படித்தது. உங்கள் வலைப்பக்த்தை பார்ப்பேன்.

அன்புடன்
ஜமாலன்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.