புத்தமத வீழ்ச்சி - மேலும் சில குறிப்புகள்.

பௌத்தம் வீழ்ச்சியடைந்ததற்கு நண்பர் `பைத்தியக்காரன்' என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள இடுகையின் துணை இடுகையாக இங்கு தரப்படுகிறது.

இடுகைக்கான இணைப்பு: http://naayakan.blogspot.com/2007/09/blog-post_14.html#links


இக்குறிப்புகள் ஏலவே நூலாக வெளியிடப்பட்டுள்ள எனது மொழியும் நிலமும் என்கிற நூலில் உடல் அரசியல் என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் உள்ள குறிப்புகள் இம்மூன்றும். தொடர்புடையவை என்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. இதில் நண்பர் சுட்டியுள்ளது வரலாற்றுரீதியான காரணங்கள் என்றால் இவை தத்தவார்த்த தளத்திலான காரணங்கள் ஆகும்.

குறிப்பு-1

சமஸ்கிருத மதநினைவிற்கு எதிரான ஒரு வரலாற்று இயக்கமாக புத்தர் தனது போதணைகளை மக்களிடம் பேச்சு வழக்கில் இருந்த சாதரண மொழியான 'பாலி'-யில் செய்தார்। அன்றைக்கான 'உயரிய' தத்துவங்களை எல்லாம் சொல்ல சாத்தியமான உயர் வர்க்க மொழியாக இருந்த சமஸ்கிருதத்திற்கு எதிரான ஒரு நினைவை உருவாக்க முயன்ற புத்தர் அம்மொழியை முற்றாக நிராகரித்ததை மொழியின் அரசியலாக பார்க்கலாம்। பிற்கால புத்தமத தத்துவங்கள் பெரும் விவாதப்போராக மாறும்போது முழுக்க முழுக்க சமஸ்கிருத பண்டிதர்களால் சமஸ்கிருதத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இவ்விலக்கியங்கள் குறிப்பாக திக்நாகர், நாகார்ஜூனர் தர்மகீர்த்தி ஆகியோரால் ஒரு இணையான 'உபநிஷத்' போன்ற தத்துவங்களாக, சிக்கலான மொழியமைப்பைக் கொண்ட அரூபமாக்கலுக்குள் செல்வதாக சட்டோபாத்யாயா போன்ற அறிஞர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில்,முக்கியம் என்னவென்றால், 'பெரும்பாதை'-க்கான (மகாயானத்திற்கான) பிரமாணமாக காட்டிய ஆதாரநூல் நாக-லோகத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறியதுதான். இதன் மூலம் கடவுள் கொள்கையையும், உபநிஷத்துக்களின் கருத்தாக்கமும் புத்த அமைப்பிற்குள் நுழைந்தது (தேபி பிரசாத்- பக். 152,Indian Philosphy). புத்தர் 'கடவுளால் அருளப்பட்டது' என்கிற கருத்தாக்கத்தையே முற்றிலும் நிராகரித்தவர் (ராகுல்ஜி). இந்திய தத்துவ விசாரத்தில், பிரமாணம், பிரத்யட்சம் என்பது ஒரு முக்கியமான அளவுகோலாகும். இந்த அளவுகோலை அடிப்படையாகக் கொண்டே ஆதாரநூல்கள் கடவுளால் இயற்றப்பட்டதாக கூறி அதன் அடிப்படைகளில் அந்நூலிற்கு புணிதத்தை அளித்து சிக்கலான அர்த்தத்தை உருவாக்கி விடுவார்கள். அடிப்படையில் புத்தர், இந்த இந்திய தத்துவத்தின் தந்திர உபாயத்தில் (இது ஒரு 'பூர்வ-பட்ச-சித்தாந்த' மொழி விளையாட்டு என்பது வேறு) சிக்கிக் கொள்ளாமல். மிக எளிமையாக தனது இடை-வழியை (நான்கு உண்மைகள் மற்றும் எட்டு வழிகளை) போதித்தவர். (மேலதிக விளக்கத்திற்கு படிக்க தேபி பிரசாத் சட்டோபாத்யாயாவின் 'இந்திய தத்துவ ஞானத்தில் நிலைத்திருப்பனவும் மறைந்து போனவை-யும்;' (செண்ணை புக்ஸ்), Indian Philospy' மற்றும் ராகுல்ஜியின் 'புத்த தத்தவ இயல்'(NCBH).

குறிப்பு:2

மகாயான புத்தப்பிரிவின் தத்துவ முறையும், அதன் அடிப்படைகளும் பிறகு கௌடபாதர், சங்கரர் வழியாக 'அத்வைத வேதாந்தமாக' வளர்கிறது (பக்.96- India Philospy). வேதத்திற்கு எதிரான பௌத்தம், விவாதங்கள், உரைகள் மூலம் வேதாந்தங்;களின் அடிப்படையாக மாற்றப்படுகிறது. பௌத்த சங்க வடிவங்களே சங்கர மடத்திற்கான வடிவத்தை அளிப்பதாக இருந்தது. அதனால்தான், சங்கரர் மறைமுக பௌத்தர் என அழைக்கப்பட்டார்.

குறிப்பு:3

புத்த மதத்தை ஒழிக்க, அன்றைய வைதீக-மதம் துறவறத்தை போதித்து, முழுநேரமாக மதப்பணியாற்றும் துறவிக்குழு ஒன்றை 'மடம்' என்கிற பெயரில் உருவாக்கியது. சங்கரர் முன்வைக்கும் மாயா-வாதம், வாழ்வின் காரணத்தை முற்றிலும் ஒற்றை மையமான தோற்ற-மாயைக்குள் ஆழ்த்துவதன் மூலம், மனித உடல்களின் வேட்கையை துறவறம் நோக்கியதாக திசைவழிப் படுத்தியது. இது இன்னொருபுறம் மடம் என்கிற பெயரில் அரசு ஆதரவுடன் பெரும் மதம்-பரப்பும்-காக்கும் நிரந்தர வருமானம் உள்ள ஒரு நிறுவனமாக தனது வலைப்பின்னலை உருவாக்கியது என்பதுவேறு. இன்றுவரை 'இந்து'மதத்தின் அங்கீகரிக்கப்பட்ட முடிவெடுக்கும் நிறுவனமாக இருப்பது சங்கரரால் உருவாக்கப்பட்ட இம்மடங்களே.
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.