இந்திய தத்துவ தரிசனங்கள் குறித்து புதுமைபித்தனின் ஆற்றங்கரைப் பிள்ளையார்

நான் மனச்சோர்வுறும்போதெல்லாம் எனக்கு உற்சாகத்தை தரக்கூடியது புதுமை பித்தன் கதைகள்தான். அக்கதைகள் எப்பொழுதும் என் கைவசம் இருக்கும் பழைய சிறு சிறு புத்தங்கள் துவங்கி.. சமீபத்திய ஆ.இரா. வெங்கடாசலபதியால் தொகுக்கப்பட்ட கதைத்தொகுதிவரை. எத்தனை முறைப்படித்தாலும் அத்தனை முறையும் புதிதாக எழுதப்பட்டதே போன்ற உணர்வை ஏற்படுத்த வல்லது அக்கதைகள். நான் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது non-deatil என்கிற மொழிப்பாடப் பிரிவின்கீழ் சிறுகதை தொகுதிகள் ஒன்று இருக்கும். அக்கதை தொகுதிகளில் கல்கியின் “காளையர் கோயில் ரதம்” பு.பி.-ன் “ஆற்றங்கரைப் பிள்ளையார்” என்கிற கதையும் இருந்தன. வழக்கம்போல் ஆசிரியர் கல்கியின் கதையை கூறிவிட்டு பு.பி.யை படித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். பு.பி. தமிழாசிரியர்களுக்கு ஒரு புரிபடாத உலகம்தான் போலும். அன்று முதல் பு.பி-யின் கதைகள்மீது ஒரு அலாதியான ஈடுபாடு வரத்துவங்கியது. அது தொடர்கிறது இன்றுவரை.

நேற்றும் பு।பி।-யின்கதைகளை புரட்டத்துவங்கினேன். பு.பி. கதைகளின் காலவரிசைப்படி ஆய்வாளர்களுக்காக தொகுக்கப்பட்ட மேற்படி தொகுதியில் முதல்கதையாக ஆத்தங்கரைப் பிள்ளையார் வைக்கப்பட்டிருந்தது. 29.4.1934-ல் மணிக்கொடியில் வெளிவந்த கதை. இதுதான் பு.பி.-யின் முதல்கதை என்பதை அதன் வரிசைமுறையில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது. இம் முதல்கதையிலேயே பு.பி.-யின் படைப்புத்திறன் மட்டுமின்றி அவரது கூர்மையான அறிவாற்றலும் விமர்சனதிறனும் முன்வைக்கப்படுகிறது. இக்கதை முழுக்க குறியீட்டுமுறையில் எழுதப்பட்டுள்ள கதை. தமிழின் முதல் சிறுகதையாக அறியப்படும் வ.வே.சு. அய்யரின் “குளத்தங்கரை அரசமரம்” போல தனது கதை “ஆற்றங்கரைப் பிள்ளையாரா”-க இருக்கட்டும் என்று எண்ணியிருக்கலாம்.

இக்கதையில் மனிதனை குறிக்க பிள்ளையார் என்கிற கடவுள் குறியீடாக்கப் பட்டுள்ளது। மனிதன் X தெய்வம் என்கிற முரண் கதையின் அடிப்படை சட்டகமாகிறது। இச்சட்டகத்தில் மனிதன் தெய்வமாகவும் தெய்வம் மனிதனகாவும் தலைகீழாக்கப்படுகிறது. கதையின் தளம் புண்ணிய பாரதம் என்று சொல்லப்படும் இந்தியாதான். அகன்ற இந்தியா ஒரு சிறு மேடையாக ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.

“நாகரீகம் என்கிற நதி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்ததது. கரையில் ஒரு பிள்ளையார். ஆற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கற்பாறைகளும் மனற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.”

அன்று ஆரம்பித்த துன்பம்… கதை நெடுகவும் விரிந்து செல்கிறது। இத்துன்பதை நீக்குவதற்கான முயற்சியனடிப்படையில் உருவான இந்திய சரித்திரம் எப்படியெல்லாம் இத்துன்பத்தை மாறாத்துன்பமாக வளர்த்து பெருக்கியது என்பதுவே கதையின் ஆழ்தளத்தில் அமைவுற்றிருக்கும் கருத்துநிலை எனலாம்.

இந்தியாவி்ல் உருவான மத தத்துவங்கள் முதல் வெளியிலிருந்து வந்த அரசுகள் வரை அனைத்தும் இத்துன்பத்தை எப்படி வளர்த்துப் பெருக்கின என்பது குறியீட்டு முறையில் கதையாடலாக நடத்திச் செல்லப்படுகிறது. பிள்ளையாரை சமூகம் என்கிற மேடையைக்கட்டி அதி்ல் அமரவைத்து அவரது நிழலுக்காக அரச தர்மம் என்கிற வேப்ப மரத்தையும் பேய்பிடியாதிருக்க (கடவுளுக்கே) சமயதர்மம் என்கிற ஆல மரத்தையும் நட்டு வைத்தார் ஒரு கிழவர். இன்பமான இச்செயல்களால் மகிழ்வுற்ற பிள்ளையார் அக்கிழவருக்கு மனிதன் என்று பெயர்வைத்தார். இந்திய சமூகத்தில் அரசதர்மமும் சமயதர்மமும் ஒன்று மற்றதை தழுவிக்கொண்டு ஆல்போல் வேரோடி அருகுபோல் தலைத்தது. ஆலமரத்தை சமயதர்மமாகவும் வேப்பமரத்தை அரச தர்மமாகவும் முன்வைக்கும் இக்குறியீடுகள் கதையின் இறுதிவரை இராச்சதமாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இவை வளரவளர பிள்ளையாரின் துன்பம் சொல்லாவொண்ணா நிலையில் அதிகரிக்கிறது.

இதன்பின் பிள்ளையாரின் துன்பத்தை நீக்க ஒவ்வொரு சரித்திர புருஷர்களாக அவதரித்து வருகிறார்கள். முதலில் வரும் இருக்கிழவர்கள் ஒருவன் புத்தன் மற்றவன் ஜைனன். பிள்ளையாரை பல ஆண்டுகளாய் நிழல் தர உருவான சமயதர்மமும் அரசதர்மமும் மூடி வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் வைத்து பெரும் துன்பத்தை தந்து கொண்டிருப்பதை கண்ட புத்தர் தனது சொந்த யோசனையின் விளைவாக மரத்தில் ஏறி கிளைகளை வெட்டி ஒரு வெளிச்ச உலகை பிள்ளையாருக்கு திறக்கிறார். இருட்டில் பழகி அதையே சுகமானதாகவும் அதற்கேற்ப உடலையும் பெற்றுக்கொண்டுவிட்ட பிள்ளையார் இவ்வெளிச்சத்தை காண முடியாமல் உடல் எல்லாம் சூட்டுக் கொப்பளங்கள்வர புத்தரை தனது துதிக்கையால் தூக்கி வீசிவிடுகிறார்.புத்தர் மேடைக்கு வடகிழக்கே போய்விழுகிறார். இந்த ஒருசில வரிகளிலேயே புத்தத்தின் தத்துவம் மற்றும் அதன் வரலாறு விளக்கப்பட்டுவிடுகிறது.

புத்ததரிசனம் அன்றைய வைதீகமதத்தை மிகக்கடுமையாக எதிர்த்து என்பதுடன் இந்தியத்தத்துவமாக சொல்லப்படும் வேதங்களிலிருந்து கட்டமைக்கப்ட்ட தத்துவ தரிசனங்களான நியாயம், வைசெடிகம், சாங்கியம், யோகம், மிமாம்சை என்கிற ஐவகை தரிசனங்கள் மற்றும் வேதாந்தம் முன்வைத்த அடிப்படைகளிலிருந்து அல்லாமல் புத்தர் தனது தனிவழியான மத்திய வழியை அறிவித்தார். (விரிவான விளக்கத்திற்கு இது இடமல்ல) அதைதான் கதையாடலானது கிளைகளை வெட்டி எறிந்ததாக குறிநிலைப் படுத்துகிறது. ஆணால் வைதீக இருட்டுக்குள் பழகிய மனிதமனம் இவ்வெளிச்சத்தினால் சூட்டுக் கொப்பளங்களைப்பெற்று.. புத்தரை தூக்கி இந்தியாவிற்கு வடகிழுக்கு நாடுகளுக்கு தூக்கி எறிந்தவிட்டது. இந்த சூட்டுக் கொப்பளம் என்பது புத்த தரிசனம் முன்வைத்த வாழ்க்கை முறையின் கடுமை குறித்த பு.பி-ன் பார்வையைச் சொல்வதாகிறது. பு.பி. எந்த ஒரு தத்துவத்திலும் உடன்படிக்கை செய்து கொண்டவரல்ல. எல்லாமே பு.பி.க்கு விமர்சனத்திற்கு உரியவைதான். விமர்சனம் மட்டுமே அவரால் விமர்சிக்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இக்கதையாடலில் உலகாயுதம் என்கிற வைதீக எதிர்ப்பு அல்லது அவைதீக மரபை பற்றிய குறிப்புகள் இல்லை। (பிற்காலங்களில்தான் உலகாயுதம் என்கிற தத்தவ மரபானது வைதீக மரபால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது என்று அதனை தத்துவ பேராசிரியரான தேபிபிரசாத் சட்டோபாத்யாயா இந்திய பழம்பெரும் தத்துவ பிரதிகளை வாசித்து எதிர்சொல்லாடல்களால் விவாதக்குறிப்புகளில் மறுறுக்கப்பட்டவை ஆகியவற்றைக் கொண்டு “லோகாயுதம்” என்கிற ஒரு நூலாக கட்டமைத்துள்ளார்.) ஆணால் கதையானது இந்திய தத்துவ வரலாறு பற்றியதல்ல. இந்திய தர்மசாஸ்திரம் அல்லது தத்துவ சாஸ்திரங்கள் மற்றும் அரசியல் சாஸ்திரங்கள் எப்படி மனிதனை தனது வேராலும் விழுதாலும் கட்டி மூச்சுத்திணற அடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கதை.

புத்தரை தூக்கி எறிந்த பிள்ளையாரை பிறகு ஜைனர் தனது தத்துவ விசாரத்தால் கட்டிய ஒரு புதிய மேடையில் அமர்த்திவைக்க முயல்கிறார். புத்தாராவது மரக்கிளைகளை வெட்டி அந்த பழைய மேடையை புத்தமைத்தார் என்றால் ஜைனர் முற்றிலும் புதிய மேடையை உருவாக்கினார்। கதையில் வித்தியாசப்படுத்தப்படும் இந்த துல்லியமான வேறுபாடு மிகப்பெரிய தத்துவ வேறுபாடு என்பதில்தான் பு.பி-யின் மேதமை அடங்கியிருக்கிறது. ஜைனரின் சமணம் முற்றிலும் புதிய அடிப்படைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அணுவாதம் அல்லது பரமாணுவாதம் எனப்படும் அணுக் கொள்கையை முதன்முதலில் சொல்லிய ஒரு தத்துவ தரிசனம் சமணம். இத்தத்தவம்தான் பன்மைவாதம் பற்றிய தத்துவ சிந்தனைகளை முன்வைத்தது. அழிவு என்பது ஒன்று அழிந்து பிறிதொன்றாக ஆக்கம் பெறுவதே சமணம். இதுமுற்றிலும் நவீன விஞ்ஞான கருதுகோள்களைக் கொண்ட ஒரு தரிசனம். அதனால்தான் சமூகம் என்கிற மேடையிலிருந்து பிள்ளையாரை தனது புதிய மேடையில் அமாத்தியதாக சொல்லிச் செல்கிறது கதையாடல்…

(அடுத்து முக்கியமான இந்திய தத்துவ பள்ளிகள் மற்றும் இஸ்லாமிய கிறித்துவம் பற்றியதாக தொடரும் கதையாடல் நாளைய தொடுப்பில் தொடரும்॥)

கதைக்கான இணைப்பு: http://www.chennailibrary.com/ppn/story/aatrankaraipillaiyar.html

3 comments:

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த புதுமைப்பித்தனின் சிறுகதை "ஒரு நாள் கழிந்தது". நான் படிக்கும் போது 10-ம் வகுப்பின் பாடத்திட்டத்திலேயே இந்தச் சிறுகதை என்னைக் கவர்ந்தது. கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாட சிக்கல்களை இத்தனை திறமையாக, யதார்த்தமாக விவரித்த சிறுகதையை இனிமேல்தான் படிக்கப் போகிறேன்.

Natrajan சொன்னது…

பு.பி. னுடைய 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" தமிழின் முதல் சயின்ஸ் Fபிக்ஷன்". மிக முக்கியமான ரசிக்கத்தக்க கதை.

ஜமாலன் சொன்னது…

நடராஜன்..

பின்னோட்டத்திற்கு நன்றி. உண்மைதான். அது சயின்ஸ் பிக்ஷ்ன் மட்டும் அல்ல டிதாண்மங்களை பகடி பன்னம் ஒரு கதையும்கூட. பு.பி. பல்முனைவாசிப்பிற்கான எழுத்தைக் கொண்டவர்.

நன்றி.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.