திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம்

உறவுமுறை திருமணங்கள் குறித்து கோவி.கண்ணன் அவர்களின் பதிவு ஏற்படுத்திய மேலதிக சிந்தனையின் விளைவாக இங்கு சில கரத்துக்கள் விரித்துரைக்கப்படுகிறது. கோவை கண்ணனின் கட்டுரை இணைப்பு உங்கள் பார்வைக்கு: http://govikannan.blogspot.com/2007/09/blog-post_06.html

1. திருமண முறைகளைப் பொறுத்தவரை இன்றைய மதங்களுக்கு முன்பே அல்லது மதங்கள் இயற்கை தெய்வ வழிபாடாக இருந்த காலங்களில் உருவானவை. இனக்குழுக்களுக்கிடையிலான இம்முறை மதங்களின் திருமறை(ரை)கள் (வேதம் மற்ற பிறமத திருமறைகள்) மூலம் ஒழுங்குப் படுத்திக் கொள்ளப்பட்டன பின்னால். திருமண சடங்குகளை ஒழுங்குப்படுத்துதல் என்பது சமூகத்தின் இயக்கம் கொள்ளும் ஆண் மற்றும் பெண் உடல்களை ஒழுங்குப்படுத்துவதாகும். வேறுவார்த்தைகளில் சொன்னால் இனக்குழு உடல்களை ஆண் மற்றம் பெண் என்கிற பாலின (gender) உடல்களாக கட்டமைத்தது மதங்களே. எனவே இவ்வுடல்கள் இயங்குவதற்கான வெளிகளையும் முறைமைகளையும் வகுத்து அளித்தன மதங்கள்.

2. முக்கியமான கேள்வி ஏன் திருமணமுறை உருவானது அது மனித குலத்திற்கு என்ன தேவையை நிறைவு செய்கிறது? அடிப்படையில் இரு இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று ஊடு கலக்க பரிமாறிக் கொள்ளுதலே திருமண முறையாக உருவெடுத்தது. இதனை மாணுடவியலில் "பரிசுப் பொருள் பரிமாற்றம்" என்பார்கள். இனக்குழுச் சமூகத்தில் உடல்களே அவர்களது உரிமைக்குரிய சொத்தாக பாவிக்கப்பட்டதால் உடல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இரண்டு குழுக்களும் நெருக்கமாக ஒன்று கலக்க முடியும். ஒரு இனக்குழுக்குள் உள்ள உடல்களை அக்குழுக்களே திருமணம் செய்துகொண்டால் பரிமாற்றுவதற்கான தனி உடல்கள் இல்லாத நிலை உருவாகிவிடும் என்பதால் குழுவுக்கள் திருமணம் என்பது தடை செய்யப்பட்டது. இதனையே taboo என மாணுடவியல் குறிக்கிறது.

3. குறிப்பான இந்தியச் சூழலுக்கு வருவோம். இந்தியாவில் புத்தமத எழுச்சிக்குப் பிறகு பிராமண வைதீக மதமானது தனது வர்ண தர்மத்தை சாதிய தர்மமாக மாற்றுகிறது. அதாவது தனது தலைமைக்கு கீழ் பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு பொது அமைப்பை (இன்று கூறப்படும் இந்து மதம்) உருவாக்குகிறது. ஜாதி என்கிற சொல் புத்தர் காலத்தில் இனக்குழுவைத்தான் குறித்தது. அதாவது புத்தரின் சாக்கிய குலம் என்பது சாக்கிய ஜாதி என்றே பண்டைய புத்த மற்றும் சமஸ்கிருத பிரதிகளில் குறிக்கப்படுகிறது. தனித்த குழுக்கள் ஒரு பொதுவான அமைப்பிற்குள் அதாவது வைதீக பிரமாண மத அமைப்பிற்குள் வந்தபோது அக்குழுக்களது தனித்த அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ளவும் தனது பிராமண வர்ணத்தை காக்கவும் அகமண முறையை பின்பற்றும்படி மணு தர்மம் விதிமுறைகளை வகுத்தது. அகமணமுறை என்பது ஒரு குழு அல்லது ஒரு சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் முறை. மேலே இனக்குழுக்கள் உருவான காலத்தில் நடந்த பிறமணமுறை மணுதர்மத்தால் தடை செய்யப்படுகிறது. இதுவே சாதிகளின் தோற்றமாக மாறுகிறது என்பதுடன் சாதிகளி்ன அழயாத் தன்மையும் காக்கப்படுகிறது இன்றுவரை. சாதிகளின் வாழ்வு என்பது இத்திருமணமுறைகளில்தான் செறிந்துள்ளது.

4. அடுத்து உறவுமுறை திருமணத்திற்கு வருவோம். உறவுமுறை திருமணம் என்பது அகமண முறைக்குள்ளேயே சொத்தையும் வர்க்க அந்தஸ்தையும் காப்பதற்கான ஏற்பாடாகும். அத்தை மகளை மணப்பதும் சித்தப்பா/பெரியப்பா மகளை மணப்பதும் இருவேறுபட்ட சொத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் உருவானவை.

5. இனக்கழு உருவாக்கத்தின் முதல் அமைப்பு தாய்வழிச் சமுகம் ஆகும். தாய்வழிச் சமூகத்தின் மையமாக ஒரு தாய் இருக்கிறாள். (இவ்வகை தாய்களாக உருவானவைதான் மாரியம்மா, காளியம்மா என்கிற கிராம தாய் தெய்வங்கள்.) தாய்தான் இந்த குழுவின் மையம் (அத்தகைய குழுக்கள்தான் இன்று சாதிகளாக உருவெடுத்துள்ளன.) அவளே அக்குழவை காக்கும் தெய்வம். தந்தை என்கிற உறவுமுறை இக்குழுவில் கிடையாது. தந்தையின் இடம் தாய்மாமனால் நிறைவு செய்யப்படுகிறது. எனவே தாய்மாமனை திருமணம் செய்துகொள்வது தாய்வழிச் சமூகத்தி்ல் தடை செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் தந்தையின் ஸ்தானத்தில் தாய்மாமன் சீர் என்பது சகோதரியின் பிள்ளகைளுக்கு வழுங்கும் சொத்தாகும். அது தாய்மாமனின் உரிமையாக இன்றுவரை தொடர்கிறது.

6. தாய்வழிச் சமுகத்திலிருந்து தந்தையை மையமாகக் கொண்ட சமூகங்கள் அதாவது தந்தைவழிச் சமூகங்கள் உருவானபோது தாயும் பெண்களும் உரிமையற்ற சொத்துகளாக மாற்றப்பட்டனர். பெண் உடல் ஆணிய துய்ப்புக்களமாகவும் வாரிசைப் பெற்றுத்தரும் தனிச்சொத்தை காக்கும் ஒரு எந்திரமாகவும் மாற்றப்பட்டது. எனவே தனது சொத்தைக் காக்க சகோதரன் சகோதரி பிள்ளைகளை மணக்கிற உறவுமுறை திருமணத்தை உருவாக்கினர். சொத்தை குடும்பத்தின் தந்தையாகிய மூத்தவன் கீழ் வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு இது. இம்முறையில் பெண் பரிமாற்றுப் பண்டமாக அதாவது சொத்தாக பாவிக்கப்படுகிறாள். அதற்கு பகரமாக பெண்ணிற்கு பரிசப்பணம் தரும் முறை உருவானது. இன்றுவரை எல்லாமத திருமண சடங்குகளிலும் பரிசப்பணம் என்பது அடிப்படையாக உள்ளது. இஸ்லாமில் இதனை மகர் என்பார்கள்.

7. தாய்வழிச் சமூகங்களின் எச்சங்களை கொண்ட குழுக்களில் அல்லது சாதிகளில் ஆணை பரிமாற்றுப் பொருளாக பாவிக்கின்றன. அதாவது தனிச்சொத்தாக. இங்கு குடும்பச் சொத்து தாயின் குழுவை விட்டு போகாமல் தடுக்கப்படுகிறது. இம்முறை தமிழகத்திலும் ஈழத்திலும் "மருமக்கள் வழி மான்மியம்" என்பதாகவும் கேரள நாயர்களில் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஆண்கள்தான் திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டோடு செல்லும் வழக்கம் உள்ளது. இம்முறையானது தந்தைவழிச் சமுகத்தில் ஆண் பெண் வீட்டிற்கு போவதற்க பதிலாக பெண் வீட்டாரிடம் வரதட்சிணையாக பணம் பெறும் முறையாக சுருங்கி ஆணாதிக்கமாக நடைமுறையில் உள்ளது.

ஆக, திருமணமுறைகள் என்பது உடலை ஒடக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ஆன மதங்களின் வழியாக ஆதிக்கம் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். குடும்பம் என்கிற கட்டமைப்புகள் இத்தொழில்நுட்பத்தின் வழியாக செயல்படும் எந்திரமாகும். இவ்வெந்திரத்தில் அரைபடும் மூலப்பொருளாக இருப்பது பெண் உடல்களே. அதனால்தான் பெரியார் திருமணங்களே பெண் அடிமைத்தனத்தின் மூலம் என்றார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அதன் உண்மையான காதல் அடிப்படையில் கட்டுப்பாடற்ற சமூகத்தில்தான் சாத்தியம். தற்பொழுது காதல் என்பது நிர்பந்தம் அடிப்படையிலானது. விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வதைவிட நிர்பந்தத்தின் அடிப்படையில் வாழ்தல் என்பதே பெரும்பாலான திருமணங்களின் விளைவாக இருக்கிறது. இதுவே திருமணம் ஏற்படுத்தும் மணோவியல் வன்முறையாக உள்ளது.

4 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை கண்ணன் அவர்களின் பதிவு ஏற்படுத்திய //

கோவை கண்ணன் இல்லை. கோவி.கண்ணன்.
:)

ஜமாலன் சொன்னது…

தவறுக்கு வருந்தகிறேன்.. திருத்தப்பட்டு விட்டது. நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

http://tamilbodypolitics.blogspot.com/2007/09/blog-post.html ன் முழுப்பதிவையும் இங்கேயும் இணையுங்கள். பதிவர்கள் பின்னூட்டம் இட்டால் அங்கு தான் செல்லும். இங்கு வராது.

ஜமாலன் சொன்னது…

ஆலோசனைக்கு நன்றி. எனது மற்றைய பதிவு தமிழ்மணத்திலோ அல்லது தேன்கூடு திரட்டியிலோ இணைக்கும்போது error message வருகிறது. அதனை சரிசெய்யும் வரை இப்பதிவு இங்கேயே தொடரட்டும்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.