ஜெயமோகனின் “எனது இந்தியா” பற்றி அ. மார்க்ஸ்

image

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழ்ச் செல்வன் தொடங்கி விக்ரமாதித்தன் வரை சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் கேலி செய்து எழுதியுள்ள ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை  அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

ஏதோ பாகிஸ்தானில் பாலும் தேனும் ஓடுவதாகவும், ஜனநாயகம் செழித்திருப்பதாகவும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். அமெரிக்க விசுவாசத்திலாகட்டும், சொந்த மக்களை ஒடுக்குவதிலாகட்டும் இந்திய அரசுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பாகிஸ்தான்.

காஷ்மீர் பிரச்சினையை, 1. பாகிஸ்தானின் தூண்டுதல், 2. `ஜிஹாதி' பயங்கரவாதம், 3. தேசப் பிரிவினையின் எச்ச சொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷ்மீர மக்களின் சுய நிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய ராஜ தந்திரத்தின் சதித் திட்டங்களில் ஒன்று. இந்தச் சதியைத் தோலுரித்து அவர்களின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திக் காட்டுவதே அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களின் கடமையாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமை அதுதானே. வாழுங் காலத்தின் சமூக அநீதிகைளக் கண்டு கொதித்து சம காலத்தையே நிராகரிப்பவன்தானே எழுத்தாளன். டால்ஸ்டாய் முதல் ஆஸ்கார் வைல்ட் வரை அப்படித்தானே வாழ்ந்துள்ளனர். எழுத்துக்கள் காலத்தைக் கடந்து நிற்கவில்லை என்பதன் பொருளும் இதுதானே.

பாகிஸ்தான் தூண்டுதல், பயங்கரவாதப் பிரச்சினை எல்லாவற்றையும் மறைத்து அதை ஒரு சுதந்திர வேட்கையாகச் சொன்னதைச் சுட்டிக் காட்டி அதற்காகவே அருந்ததியை `குருவி மண்டை' எனவும், கூலிக்கு  எழுதுபவர் எனவும் இழிவு செய்கிறார் ஜெ.மோ. ஒரு எழுத்தாளனின் மண்டைக்குள் சம கால ராஜதந்திரியின் மூளை அமைந்துள்ளதெப்படி? ஜெ.மோ. ஒரு வினோதப் பிராணிதான்.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காஷ்மீரி மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர். காஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐ.நா. அவையின் முன் அளித்தது. இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரிகள் இன்று போராடிக் கொண்டுள்ளனர்.

இன்று காஷ்மீர மக்கள் அமைதி வழியை நோக்கித் திரும்பியுள்ளனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து காஷ்மீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் போதே இந்திய மண்ணில் பயங்கரவாதம் முடிவுக்கு வரத் தொடங்கும். தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குச் செலவிட இயலும்.

ஜெயமோகன் கக்கியுள்ள இதர விஷக் கருத்துக்களைச் சுருக்கம் கருதி விட்டு விடுகிறேன். இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அஃப்சல் குருவின் மனைவி குடியரசுத் தலைவரைச் சென்று மிரட்டினாராம்.  ``இந்தியச் சமூகம் அளிக்கும் வாய்ப்புக்கள்'' மூலம் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் முன்னேறி வருகிறார்களாம் (பார்க்க : சச்சர் அறிக்கை); உலகப் பரப்பில் வாழும் முஸ்லிம் சமூகங்களை ஆங்காங்கு புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளாக மாற்றுகின்றனவாம் முஸ்லிம் அமைப்புகள் (எத்தனை கொடூரச் சித்திரிப்பு பாருங்கள்); மாற்று தேசியங்களை மத நோக்கில் அழிக்க முஸ்லிம்களுக்குத் தயக்கம் இருக்காதாம்.

``காரணம், இஸ்லாம் என்பது ஒரு தேசிய கற்பிதம் - ஒரு தேசிய கற்பிதம் - ஒரு மதமோ வாழ்க்கை முறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய அற்புதங்களை ஏற்காது'' - ஜெ.மோ.

ஜெயமோகனுக்கு இஸ்லாம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்று மட்டுமே மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாமின் `தேசியம்' என்கிற கருத்தாக்கமே கிடையாது. `உம்மா' - சமூகம், நம்பிக்கையாளர்களின் கூட்டமைப்பு என்பதற்கே அங்கு முக்கியத்துவம். பிற நம்பிக்கையாளர்களுடன் சமூக இணக்கத்தை அது மறுத்ததில்லை. காஷ்மீர மக்கள் அதற்கொரு நடைமுறை எடுத்துக்காட்டு.

சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்கும் தமிழ் எழுத்தாளர்களைப் பெயர் குறித்து ஏசுகிறார் ஜெ.மோ. மாவோயிஸ்டுகளுக்கு சீனாவிலிருந்து நிதி வருகிறதாம். ``ஆங்கில இதழ்களின் ஞாயிறு இணைப்பில்'' வரும் கட்டுரைகளைப் பார்த்து தமிழில் எழுதுகிறவர்களாம் இத்தகைய அறிவுஜீவிகள். இப்படிச் சொல்வதற்கு ஜெயமோகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதை, ``மனச்சாட்சியுள்ள வாசகர்கள்'' யோசிக்க வேண்டும். தமிழில் வெளிவந்த நூற்களையே ஈயடிச்சான் காப்பி அடித்து பொ. வேல்சாமி போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டு குடும்ப சகிதமாக அவமானப்பட்டவர் ஜெ.மோ. இவர் ஆங்கில இதழ்களைப் பார்த்து கட்டுரை எழுதுவதில்லை என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் எதையும் படிப்பதில்லை. மலையாளத்தில் வரும்வரை அவர் காத்திருப்பார்.

``தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச் சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்ற போதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே `வெல்க பாரதம்' '' எனக் கட்டுரையை முடிக்கிறார் ஜெ.மோ. அவரது கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள் - முத்திரையை வேறு யாரும் அவர் மீது குத்த வேண்டுமா என்பது விளங்கும். முத்திரை குத்துவதற்கு அவர் முதுகில் இடமில்லை. அவரது உடல் முழுவதும் காவி முத்திரை படிந்துள்ளதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி.

`தேசபக்தி பாவமென்றாகி விட்ட சூழல்' என அவர் சமூகச் சுரணையுள்ள எழுத்துக்களைக் குறிப்பிடுகிறார். உண்மைதான். தேசபக்தியைப் பாவமென்று மட்டுமல்ல, கொடூரம், அயோக்கியத்தனம், vicious என்றெல்லாம் பெரியார் ஈ.வெரா மட்டுமல்ல, டால்ஸ்டாய் உள்ளிட்ட மனிதரை நேசித்த, சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் அவ்வளவுபேரும், ஆம் அவ்வளவு பேரும் சொல்லித்தான் உள்ளனர்.

ஜெயமோகனைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு `தேசபக்தி', `தேசியம்' ஆகியன குறித்தும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்போம்.

குறிப்பு : ஜெ.மோ போன்றவர்களுக்காக ஒரு தகவல்: காஷ்மீர் பயணம் முழுக்க முழுக்கச் சொந்தச் செலவில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவர் செலவு ரூ.19,200/-. (அடுத்த இதழில் முடியும்..)

- அ.மார்க்ஸ்                                                  நன்றி- தீராநதி-01-11-2008

குறிப்பு- தீராநதியில் அ. மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இக்கட்டுரை இங்க பதிவ வாசகர்கள் பரவலாக அறியும் பொருட்டு மறபதிவு செய்யப்படுகிறது.

23 comments:

வளர்மதி சொன்னது…

ஜமாலன்,

ஜெயமோகனின் இந்த வன்முறை இன்று நேற்று தொடங்கியதா என்ன?

எத்தனைமுறைதான் எத்தனைபேர்தான் சுட்டிக்காட்டுவது?

எவர் சுட்டிக்காட்டினாலும் உடனே “என்னை அவதூறு செய்கிறார்கள்” என்பதைத் தவிர வேறு என்ன பதில் கிடைத்திருக்கிறது அவரிடமிருந்து?

ஆனால், இதில் ஒரு முக்கிய புள்ளியை அனைவரும் தவற விட்டுவிட்டார்களோ என்று எனக்கொரு ஐயம்.

அவர் இத்தகைய வன்முறைகளைத் தன் சகஎழுத்தாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடும் ஒவ்வொரு தருணமும் அவரது நாவல் ஒன்று வருவதற்கு முன்பான தருணமாக இருப்பதைச் சொல்கிறேன்.

Shrewd sense of timing !!!

அதுக்கப்புறம் நாவல் வந்தபிறகு விமர்சிக்க எவருக்குத் தைரியம் வரும்!?

அன்புடன்

வளர் ...

ஜமாலன் சொன்னது…

வளர் உங்கள் கருத்து ஆய்விற்குரியதுதான். இதுல இப்படி ஒரு அரசியல் இருக்கா?

நன்றி.

பெயரில்லா சொன்னது…

அ.மார்க்ஸ் எழுதியுள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?.அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து ஏதும்
இல்லையா?காஷ்மீர்,பாகிஸ்தான்
குறித்து அவர் எழுதியுள்ளது அத்தனையும் உண்மைதானா?

சந்திப்பு சொன்னது…

ஜெயமோகனின் சாயம் வெளுத்துப் போச்சு!

http://santhipu.blogspot.com/2008/10/blog-post_17.html

சந்திப்பு சொன்னது…

தீராநதியில் இந்த மாதம் வெளிவந்த மேற்கண்ட கட்டுரையை வாங்கியவுடன் சுடச் சுட படித்து முடித்தேன். தோழர். அ. மார்க்ஸ் ஜெயமோகனை நன்றாக தோலூரித்துள்ளார். மொத்தத்தில் ஜெயமோகனின் அறிவுத் திமீர் மக்களுக்கு பயன்படாத ஒன்று! அவருக்கும்தான்.

ஜெயமோகனின் எனது இந்தியா கட்டுரைக் குறித்து எனது வலைப்பதிவில் செய்த விரிவான விமர்சனம் வாசகர்களால் நன்றாக வாசிக்கப்பட்ட ஒன்று. விவாதங்களும் - எதிர் விவாதங்களும் தான் ஆரோக்கியமான உலகை கட்டமைக்கும் அப்போதுதான் உண்மையை உலகம் உணர்ந்து கொள்ளும். நெருக்கடி காலங்களில்தான் யார் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்ற உண்மை வெளிவரும். அமைதிக்காலங்களில் அல்ல. எனவே, ஜெயமோகன் தனது அடையாளத்தை எவ்வளவுத்தான் மறைக்க முயன்றாலும் அவரது எழுத்தில் தெரிவது இந்துத்துவாதான்.

ஜெயமோகனின் சாயம் வெளுத்துப் போச்சு!

http://santhipu.blogspot.com/2008/10/blog-post_17.html

saki சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜமாலன் சொன்னது…

பெயரில்லா கூறியது...

//அ.மார்க்ஸ் எழுதியுள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?.அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து ஏதும்
இல்லையா?காஷ்மீர்,பாகிஸ்தான்
குறித்து அவர் எழுதியுள்ளது அத்தனையும் உண்மைதானா?//

இதெற்கெல்லாம் அ. மார்க்ஸ் ஆதாரம் தனது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நூலில் தருவதாக இந்த கட்டுரையிலேயேக் கூறியுள்ளார். மார்கஸ் என்ற பெயரைப் பார்த்தவுடன் அலறி அடித்துக்கொண்டு அனானி பின்னோட்டம் போட்டதில் கட்டுரையை படிக்க மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். எதற்கும் கட்டுரையை ஒருதடவை வாசித்து விடுங்கள்.

அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன் சொன்னது…

சந்திப்பு கூறியது...

//ஜெயமோகனின் சாயம் வெளுத்துப் போச்சு!

http://santhipu.blogspot.com/2008/10/blog-post_17.html//

உங்கள் கட்டுரை முன்பே படித்துவிட்டேன்.

ஜமாலன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
saki சொன்னது…

ஜெயமோகன் மற்றவர்கள் பற்றி திமிர்பிடித்து விமர்சனங்கள் வைப்பது எல்லோருக்கும்தெரிந்ததுதானே..... வளர்மதி சொல்வதுபோல் எதாவது புது நாவல் வரப்போகிரதா .... .)



அ.மார்க்சின் இந்தக்கட்டுரை நன்றாக உள்ளது குமுதத்திலும் பார்த்தேன்..தொடர்ச்சி என்பதால் முழுதாக சொல்லமுடியாவிட்டாலும் அவர் முஸ்லீம் மக்கள் பற்றியும் கஸ்மீர் பற்றியும் எழுதியிருப்பது ஜெயமோகனுக்கான பதில் மட்டுமல்ல அநேகமானவர்களுக்கு உதவியாக இருக்கும் முஸ்லீம்மக்களைப் புரிந்துகொள்ள அல்லது அவர்களின் போராட்டத்தைப் புரிந்துகொள்வதற்க்கு ..இன்றைய நிலையில் உலகம் முழுக்க முஸ்லீம் மக்கள் தீவிரவாதிகளாகக்ப் பார்க்கப்பட்டு அடிபடுகிறார்கல் .. எங்கு குண்டுவெடித்தாலும் அது முஸ்லீம்தீவிர வதிகள் என்றாகிவிடுகிரது அப்படியான மன நிலை எமது நாட்டிலும் இருப்பதால் இது ஒரு நல்ல ஜெயமோகனுக்கு மட்டுமல்ல பலரது விமர்சனத்திற்க்கும் , கேள்விகலுக்கும் அறியாமைக்கும் பதிலாக இருக்குமென்ரு நம்புகிரேன் .

றஞ்சினி

மிதக்கும்வெளி சொன்னது…

நன்றி. விக்கிரமாதித்யனும் லஷ்மி மணிவண்ணனும் வழிப்பறி செய்து குடிப்பவர்கள், லஷ்மி மணிவண்ணனுக்கு பள்ளித் துணைப்பாடத்தைத் தாண்டி இலக்கியம் தெரியாது என்கிற ரீதியில் எல்லாம் எழுதும் ஜெயமோகனை எதால் அடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஜெ.மோ சகட்டு மேனிக்குக் கருத்து உதிர்க்கிறேன் பேர்வழி என்று கூத்தடிப்பதற்கு அவருக்கு தமிழ் வாசகச் சூழலில் கிடைத்த அளவுக்கு மீறிய அங்கீகாரமும் ஒரு காரணம்.

Me சொன்னது…

ஜமாலன்,

ஓநாய்கள் இரத்தம் குடிக்காமல் இருந்தால்தான் அதிசயம்.
ஜெயமோகன், மலர்மன்னன் வகையறாக்கள் இந்த மாதிரி எழுதாவிட்டால்தான் அதிசயம்.

பேராசியர் அ.மார்க்ஸின் கட்டுரை காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. கூட்டுக் குடும்பத்தில் வாழப் பிடிக்கவில்லையென்றால் தனிக் குடித்தனம் செல்லும் உரிமையை தனிமனிதனுக்கு தரும் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அந்த உரிமையை ஒரு மக்கள் கூட்டத்திற்கு கொடுப்பதில்லை.

பெயரில்லா சொன்னது…

ஜமாலன். ஜெயமோகனின் தன்மை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், அ. மார்க்ஸ் எவ்விதத்திலே ஜெயமோகனிலிருந்து வேறுபடுகிறார்? காஷ்மீரிகளுக்காகப் பேசும் இவருக்கு ஈழத்தமிழர்களின் முக்கியமான பிரச்சனை சாதிப்பிரச்சனையாகச் சுருங்கிப்போகிறதே? இவருடைய நவபார்ப்பனியக்குடுமி பாரிஸிலே சதிராடவில்லையா? பார்ப்பனியம், சதிர் இரண்டினையும் இங்கே கொண்டுவந்துவிட்டோம். கட்டுடைக்கலாம்.
இதைப் யாழ்ப்பாணியமேலாதிக்கப்புலி ஆதரவாளர்கள் சொல்வதிலும்விட, யோகன் கண்ணமுத்து என்ற கிழக்குப்புலியெதிர்ப்புப்பழையபுளொட் செல்விதோழரே சொல்லக்கேட்பதே தமிழகத்தின் கட்டுடைப்புப்பிச்சுப்பிடுங்களுக்குச் சிறப்பானது என்பதாலே,

அ.மார்க்ஸிக்குத் திறந்த கடிதம் : அசோக்

இவருக்கும் இந்து ராமுக்கும் -சொல்லப்போனால், அய்யா சந்திப்புக்குமேதான்- எவ்வகையிலே வித்தியாசமிருக்கின்றது, இவ்விரு பிரச்சனைகளையும் பார்க்கும்போது. இரண்டுபேரும் காஷ்மீர் பிரச்சனைக்காக(வும் பாலஸ்தீனப்பிரசச்னைக்காவும்) கண்ணீர் வடித்துச் சுயநிர்ணயம் பேசுவார்கள்; ஆனால், ஈழத்தமிழர் என்று வந்துவிட்டால், மூத்திரம் முட்டிக்கொள்ளுமளவுக்கு outfits உம் dalits உம் மட்டும் tag words ஆகத் தெரியும்.

ஜெயமோகன் ஒரு சவடால் வழகொழா சாம்பார் என்றால், அ. மார்க்ஸ் இன்னொரு முந்தநாள் வைத்து மணத்துப்போன மாட்டுக்கறி. அவ்வளவே.

இலக்கியமும் புத்தகப்புரட்சியும் பண்ணுவது அவ்வளவு கஷ்டமான காரியமில்லை. அருண்மொழி மங்கை மாதிரி ஆமாம்சாமியும் பாரிஸ் டூருக்கு நீ பாரிஸ் கார்னர் சூருக்கு நான் என்பதுபோல உடன்படிக்கைகளும் புக் எக்ஸிபிஸனுக்கு உடனெடுக்க போட்டோவும் சே குவேரா பனியனுமே போதுமானது. அதுக்கு மேலே ஏதாச்சும் பீ துடைத்து அனுப்புவதுக்கும் அப்பால் too பண்ணறவுங்க உங்களிலே யாருமிருந்தால் கையை உயர்த்துங்களேன் பார்ப்போம்.

பெயரில்லா சொன்னது…

ஷோபா சக்தி அ. முத்துலிங்கத்தைக் கிண்டல் செய்து கதை போடுகீறார். முத்துலிங்கம் என்ற இந்திய அடிமுடிவருடு எழுத்தாளருக்கு அது தேவைதான் என்பதிலேதும் எனக்கு மாற்றுக்கருத்தேதுமில்லை. ஆனால், அதுவும் கிண்டலே. பப்ளிக்டைரி சாருநிவேதிதா எந்த எழுத்தாளன் எந்த நடிகன் என்று சமன்பாடு சமனிலி கொடுத்தாரே. அதுவும் கிண்டல்தான்.ஜெயமோகன் அடித்தால் மட்டும் உதைக்கிறது.

புதுமைப்பித்தனைச் சாதிவெறியன் என்பது ஒரு தடவை.பிறகு காலச்சுவடு கண்ணன் - இளையபாரதி டலாயிலே புதுமைப்பித்தனுக்குக் கங்கணம் கட்டுவது.

தமிழகத்தின் புத்தகப்புரட்சிச்செம்மல்களே, பேரிச்சிற்றியலக்கியவிளிம்புநிலைக்கட்டுடைப்புடைப்பு எலக்கியவாடிவீடுகளே என்றைக்கு அப்பனே முன்வைத்து பின்குறித்து, பெண்ணிறுத்தி என்றெல்லாம் பேசாமல், நடைமுறைச்சிக்கல்களிலே காலை நனைக்கப்போகிறீர்கள்?

பின்னால் ஒளியும் தம்பிக்கும் தங்கைக்கும் பாதுக்காப்புக்கென்று தீப்பெட்டி அடைப்பவனும் துப்பாக்கி தூக்குகிவனும் உங்கள் உதிரும் உப்பற்ற சொற்களுள்ளே தூங்காமலிருப்பதை எண்ணிப் பெருமிதமடைகிறேன்.

பெயரில்லா சொன்னது…

தயவு செய்து ஜெயமோகன் இது போன்று பொது கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி கொண்டால் அவருக்கும்,அவரை விட இந்த சமூகத்திற்கும் நல்லது.அண்ணன் ஜெ.மோ வின் காவி ட்ரவுசரை வுருவியதர்க்கு, அய்யா அ.மார்க்ஸ் அவர்களுக்கு என் நன்றிகள்.

ஜமாலன் சொன்னது…

நண்பர்களே என்னால் நீக்கப்பட்ட கீழிரண்டு பின்னொட்டங்களைத் பொதுப் பார்வைக்கு தருகிறேன். கருத்துக்களை எதிர்கொள்வதில் உள்ள பாசிசத் தன்மையை வெளிப்படுத்தும் இவ்விரண்டு கருத்துக்களை வெளியிடாமல் நீக்கிவிட்டேன் முதலில். பிறகு எனது கருத்துடன் இதனை வெளியிடுகிறேன்.

Vanangamudyy (http://www.blogger.com/profile/16537707909997373933)

இந்த எ.மார்க்ஸ் போன்ற தேச துரோகிகளை நாடு கடத்த வேண்டும். இந்தியாவில் இருந்து கொண்டு இங்கேயே பிழைத்த கொண்டு இந்திய விரோத செயல்களில் ஈடுபடும் இந்த இழிபிறவிகளை நமது காவல்படையினர் என்கொவ்ண்டரில் போட்டுத்தள்ள கூட செய்யலாம், தப்பில்லை.

பெயரில்லா

இனிய தோழர் ஜமாலன் அவர்களுக்கு...
ஜெயமோகனை தவிர தமிழில் புரட்சிகரமாக சிந்திக்க எவரும் இல்லை;
சிந்தித்தவர் எவரும் இல்லை என்பதை ஒப்பு கொள்ளுங்கள் அய்யா.
கலைஞர் இலக்கியவாதியே அல்ல?
பெரியார் என்னத்த கிழித்தார்?
செத்துப்போன சு.ரா. தான் ஒரே இலக்கியவாதி..என்று அவர் தொடர்ந்து தனது ஆய்வுகளின் மூலம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றி வரும் பணிகள் - உங்களுக்கு பொறுக்கவில்லையா?
அண்ணே "நாய் சாமிக்கி பீ கொலக்கட்டத்தான்"..ஜெ.மோ.க்கு எழுத்தில் பதில் சொல்லக்கூடாது; வேறு மொழியைத்தான் கையாளனும்.
- மயில்வண்ணன்..

வணங்காமுடி மற்றும் மயில்வண்ணன் என்கிற பெயரில் எழுதப்பட்டுள்ள இக்கருத்துக்கள் சாதரணமான ஒரு எதிர்கருத்தைக்கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடே. ஒன்று மார்க்சிற்கும் மற்றது ஜெயமோகனுக்கும் எதிராக எழுதப்பட்டுள்ளது. கருத்துக்களை கருத்துக்களாக எதிர்கொள்ளாமல் இப்படி அடுத்த நிலைக்குச் செல்வதும் வணங்காமுடியின் கொல்வதற்கான மனநிலையும் பாசிசத்தின் பட்டவர்த்தனமான வெளிப்பாடு என்பதை காட்டவே இக்கருத்துக்களை இங்கு வெளியிட்டுள்ளேன். “சிறுபான்மை மத அடிப்படைவாதம் என்பது பயங்கரவாதமாகவும், பெரும்பான்மை மத அடிப்படைவாதம் என்பது தேசியவாதமாகவும் வெளிப்பாடு கொள்ளும்” என்கிற நேருவின் தொலைநோக்கிலான கருத்தாக்கமே நினைவிற்கு வருகிறது. எதிர்கால இந்தியாவின் பிரச்சனைக்குரிய தீமையாக வகுப்புவாதமே அமையும் என்று அன்றே கணித்தவர் நேரு. இன்று இந்தியா அந்த நிலையில்தான் உள்ளது என்பதை சாதரண உரையாடல்கள்கூட சாத்தியமற்ற இந்த நிலையே நமக்கு சொல்வதாகிறது. தேசபக்தி, தேசியம் போன்ற கருத்தாக்கங்கள் பற்றி தோழர் அ. மார்க்ஸ் அடுத்த தீராநதி தொடரில் எழுதவதாகச் சொல்லி உள்ளார். அதில் வணங்காமுடிக்கு பதில் கிடைக்கலாம். இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்களே குண்டுவெடிப்புகளில் பங்குபெறும் ஒரு அவலமான வகுப்பாவாத விஷம் பரவிய சூழலில்தான் நாம் இப்படி பாடவேண்டி உள்ளது. “ஜாரே ஜகான்ஷே அச்சா ஹிந்து ஷித்தான் ஹமாரா” என்று.


அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன் சொன்னது…

சகி, மிதக்கும்வெளி சுகுணா மற்றும் உறையுர்காரன் கருத்துக்களுக்கு நன்றி.

கோமளவிலாஸ் மற்றும் சுகுணவிலாஸ.. இதென்ன காபிகிளப்பா... )))

போகட்டும். நீங்கள் பதிவை ஒட்டி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். அதைவிட்டு பதிவிற்கு தொடர்பற்ற எதையாவது பேசுவது சரியல்ல. இது உரையாடுவதற்கான தளம் அல்ல. இனி இப்படியான சம்பந்தமற்ற பின்னோட்டங்கள் நீக்கப்படும். ஏற்கனவே இது குறித்து நண்பர் அசோக்கின் கடிதம் ஒட்டி விவாதம் நடந்துள்ளது நிங்கள் சுட்டி தந்த தளத்தில். மீண்டும் இங்கு வநது ஒரு கடமையாக பின்னோட்டம் போடகிறீர்களோ? இதுவும் தேசசேவையின் ஒரு பகுதியா?

பெயரில்லா சொன்னது…

சாதரணமான ஒரு எதிர்கருத்தைக்கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடே

தோழர் ஜமாலன்..

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். தொடர்ந்து ஜெ.மோ. இது போல சீப் பப்ளிசிட்டி தேடி கொள்வதால், நடந்த விளைவு.
ஆயினும் தவறை உணர்ந்து-
அதற்காக வருந்துகிறேன். தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி..
-மயில்வண்ணன்.

பெயரில்லா சொன்னது…

மதிப்புற்குரிய ஜமாலன்,

இந்த பதிவோடு/பதிவுக்குள்ளேயே உங்கள் நடுநிலையான‌ கருத்துக்களையும் முன் வைத்திருப்பீர்கள் என்று எண்ணி வந்தேன்:-(

திரு. அ. மார்க்ஸ் அவர்களின் கட்டுரை"யும்" ஒரு சார்புற்றது என்பது கண்கூடு.
1. //மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே. // என்று திரு. ஜெயமோகனின் சொற்களை விரித்துப் பிழை காணும் அவர் //முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது// என்னும் போது காஷ்மீரிகளில் முஸ்லீமற்றவர்கள் உண்டா, இல்லையா? விருந்தோம்பல் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அவர் சொல்லியிருக்க மாட்டார் அல்லவா!

2அ. //இதெற்கெல்லாம் அ. மார்க்ஸ் ஆதாரம் தனது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நூலில் தருவதாக இந்த கட்டுரையிலேயேக் கூறியுள்ளார்// திரு. அ. மார்க்ஸ் அவர்களின் நூல், சர்வ வியாபியான, இந்த கட்டுரை வெளி வந்துள்ள, இந்த கட்டுரை மறுபதிக்கப்பட்டுள்ள, இணையத்தில் இலவசமாய்க் கிட்டும் என்று நம்புகிறேன். //இதுல இப்படி ஒரு அரசியல் இருக்கா?// என்ற அதே நூல்விற்கும் அரசியல் இதில் இருக்காது என்றே நம்புகிறேன்.

2ஆ. //ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில்// //இதுதான் இன்றைய காஷ்மீர். // என்று விரிக்கும் திரு அ. மார்க்ஸின் "அனாதைகள் விடுதி" புள்ளிவிவரக் கணக்கில் "முஸ்லிம் அல்லாதவர்"கள் உண்டா? //பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின்// மதம் சாரா அமைப்புக்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமே என்றே உறுதியாக நான் நம்புகிறேன், எந்த அமைப்புகள் அவை?

2இ. (...ஏனென்றால்...) காஷ்மீரி பண்டிட்டுகள் ஒரு //ஆளுநர் ஜெக்மோகனின் ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்// என்றால், அந்த மாதிரி ஆளுநர் பலே ஆளாய் இருப்பார். எனவே, திரு. அ. மார்க்ஸ் அவர்களின் புள்ளிவிவரத்தின் படி, ஓர் ஆளுநரால் ஊக்கு விக்கப்பட்ட பண்டிட்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று பார்க்க விரும்புகிறேன்.

3. திரு. அ. மார்க்ஸ் சொல்வதிலிருந்து: //இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்// //பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம்// திரு. ஜமாலன், எனக்கு எல்லா எழுத்தாளர்களையும் பிடிக்கும். ஒருவர் தவறு செய்கிறார் என்று நீங்கள் உயர்த்திக் காட்டும் கொடி, இன்னொருவரின் அரைத்துணியாக இருக்குமோ?

//அ.மார்க்ஸ் எழுதியுள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?.அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து ஏதும்
இல்லையா?//

உங்கள் பல பதிவுகளில் ஒரு சம நோக்கு கண்டிருக்கிறேன். அது மதம் தாண்டியது என்றே நம்பி இருந்தேன். என் மேற்படி கருத்துக்களை மேற்கோள் காட்ட / மறுமொழி கொடுக்க‌ விழையும் யாரும் வரிசைக்கிரமம் மாற்றாமல் கொடுத்தால், நான் புதிதாய்க் கற்க ஏதுவாயிருக்கும்.

ஜமாலன் சொன்னது…

சுமைதாங்கி,

//இந்த பதிவோடு/பதிவுக்குள்ளேயே உங்கள் நடுநிலையான‌ கருத்துக்களையும் முன் வைத்திருப்பீர்கள் என்று எண்ணி வந்தேன்:-(//

இதனை எனது சுயவிமர்சனமாக முன்வைக்கிறேன். அ.மார்க்சின் இக்கட்டுரையை முன்வைக்கும்போது எனது நிலைபாடு அல்லது கருத்துடன்தான் இதனை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி வெளியிடாதது விமர்சனத்திற்குரியதுதான்.

தோழர் மார்க்ஸ் என்னை உருவாக்கிய மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு என்றும் உண்டு. தமிழில் தொடர்ந்து அரசியல் சார்ந்த எழுத்துக்கள், மனித உரிமைப் பிரசச்னைகள், ஜனநாயகப் போராட்டங்கள் என இயங்கும் தோழர் அ. மார்கஸ் காலக்குறி பத்திரிக்கை நடத்திய எங்களை 'சேகுவேரா பணியன் அணிந்த' போராட்டங்களில் 'கள்ளமெளனம்' சாதிக்கும் பேஷன் புரட்சியாளர்கள் என ஷோபா சக்தியின் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்தார். அதற்கு 'ee;jpfSk; ee;jd;fSk; - jkpopd; mwpT{tpjk;" என்கிற தலைப்பில் நான் உயிர்நிழலில் ஒரு மறுப்புக்கூட எழுதி உள்ளேன். இருப்பினும் தோழர்அ. மார்க்ஸ் அவர்கள்தான் என்னை சமூக உணர்வுள்ள ஒருவனாக உருவாக்கியவர். எனக்கு மார்கிசிய சிந்தனைமுறையை அறிமுகப்படுத்தியவர். குடந்தையில் சைக்கிளில் ஒன்றாக சென்று ஏணியை அவர் பிடித்துக் கொள்ள ஆந்திர நக்சல்பாரி புரட்சிக்கலைஞர் கத்தரின் நிகழ்ச்சிக்கு சுவரொட்டிகள் ஒட்டியது உட்பட பல சமூகப்பணிகளில் 83-86 காலக்கட்டங்களில் இயங்கி உள்ளோம். அந்தவகையில் தோழர் அ.மார்கஸ் மீது எனக்கு எப்பொழுதும் மரியாதையும், மதிப்பும் உண்டு.

தோழர். அ. மார்க்ஸின்மீது எனக்கு ஒரு சில விமர்சனக் கருத்துக்களும் உண்டு. அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் இஸ்லாமிய மதவாத அமைப்புகளுடன் அவர் கொண்டிருக்கும் உறவு விமர்சனத்திற்குரியது என்றாலும், அது நட்பரீதியான விமர்சனமே ஒழிய அவரது நிலைபாடுகளை முற்றிலுமாக மறுத்து ஒதுக்கும் ஒன்றல்ல என்பதை மட்டும் இங்கு முன்வைக்கிறேன். நீங்கள் முன்வைத்துள்ள பிரச்சனைகளுக்கு வருவோம்.

//திரு. அ. மார்க்ஸ் அவர்களின் கட்டுரை"யும்" ஒரு சார்புற்றது என்பது கண்கூடு.//

இந்த 'யும்' என்பது எனது நிலைபாடும் ஒரு சார்பானது என்பதையேக் குறிக்கிறது. இங்கு ஒரு முக்கியமான அவதானத்தை முன்வைக்க விரும்புகிறேன். அரசியல் என்பதன் அடிப்படையே சார்புதான். எதற்காக? எதற்கு சார்பாக? என்பதே நமது அரசியல் நிலைப்பாடை தீர்மாணிக்கிறது. அவ்வகையில் இன்று ஒடுக்கப்பட்ட நிலையில் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ள தலித் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசியலில் சார்புநிலை எடுப்பது என்பது ஒரு வழுவல்ல. ஒரு ஜனநாயக அமைப்பின் அடிப்படையே சிறுபாண்மை மக்களினை எப்படி பாதுகாக்கிறது என்பதைக்கொண்டே தீர்மாணமாகிறது. இன்னும் குறிப்பாகச் செர்னனால் ஜனநாயகம் என்பதே சிறுபான்மையினருக்கான கோரிக்கைதான். தோழர் அ.மார்க்ஸ் போலவே எனது அரசியலும் ஒரு சார்பு அதாவது ஜனநாயக சார்பு கொண்டதே.

தோழர். அ.மார்க்ஸ் என்ன புரிதலில் இதை எழுதினார் என்பதைவிட எனது புரிதல் என்ன என்பதை மட்டும் இங்கு முன்வைக்கிறேன்.

//1. //மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே. // என்று திரு. ஜெயமோகனின் சொற்களை விரித்துப் பிழை காணும் அவர் //முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது// என்னும் போது காஷ்மீரிகளில் முஸ்லீமற்றவர்கள் உண்டா, இல்லையா? விருந்தோம்பல் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அவர் சொல்லியிருக்க மாட்டார் அல்லவா!//

முதல் வாககியம் முஸ்லிம்கள் விருந்தோம்பல் என்பதிலிருந்து இரண்டாவது வாக்கியம் காஷ்மீரிகள் என்று குறிப்பது முஸ்லிம்களையே என்பது தெளிவு. திரு. ஜெயமோகன் (ஒரு படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர் என்பதில் அவர் மீது எனக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு. விஷ்னுபுரத்தை ஒரு காவியமாக வாசித்து அதிர்ந்தம் அதிசயித்தும் போனவன் நான். அதன் மீது எனக்கு அரசியல்ரீதியான இன்னும் குறிப்பாக இந்திய தத்துவப் பள்ளிகளில் ஜெமோவின் சார்புநிலை போன்றவற்றின மீது விமர்சனம் உண்டு. அது வேண்டாம் இங்கு) தனது 'எனது இந்தியா' கட்டுரையில் அவர் முன்வைப்பது தெளிவான 'இந்துத்துவா' நிலைபாடு. அதனை அவர் சார்ந்து கருத்து சொல்ல முழு உரிமையும் அவருக்கு உண்டு. பிரச்சனை அதற்காக அவர் முன்வைக்கும் எதிரிகள் பற்றிய சித்திரமும் கருத்துக்களும் மிகவும் ஆபத்தானவை என்பதுடன் ஆதாரமற்றவை என்பதும் முக்கியம். அ. மார்கஸ் அந்த ஆதாரமின்மையை சுட்டி இங்கு பேசுகிறார்.

சரி இங்கு அ. மார்கஸ் முன்வைப்பது விருந்தோம்பல் என்கிற பண்பு பற்றிதான். காஷ்மீரிகளில் முஸ்லீம் அற்றவர்கள் உண்டு என்பதை மார்க்ஸ் எங்கு மறுக்கிறார்? பண்டிட்டுகள் அந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை தெளிவாகவே மார்கஸ் சொல்கிறார். காஷ்மீர் போராட்டம் என்பது அடிப்படையில் ஒரு இனப் போராட்டம். அவர்களது சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்கப்படாதிலிருந்து அப்போராட்டம் பல முகங்களை கொள்கிறது. சீக்கியர்களின் இனப்போராட்டம் எப்படி மதப்போராட்டமாகச் சித்தரிக்கப்பட்டதோ அதைப்போலத்தான் இதுவும். ஏன் இன்று உக்கிரமடைந்திருக்கும் தமிழீழப் போராட்டம்கூட பால்தாக்கரேவால் இந்து பெளத்த போராட்டமாக சித்தரிக்க முயலப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. ஜெமோவின் இந்த இனப்போராட்டத்தை மறுக்கம் வாதத்தைதான் அ. மார்க்ஸ் மறுத்து தனது கருத்தை முன்வைக்கிறார்.

"பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே." என்கிற மார்க்சின் கூற்றை சரியாக வாசியுங்கள்.

//2அ. //இதெற்கெல்லாம் அ. மார்க்ஸ் ஆதாரம் தனது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நூலில் தருவதாக இந்த கட்டுரையிலேயேக் கூறியுள்ளார்// திரு. அ. மார்க்ஸ் அவர்களின் நூல், சர்வ வியாபியான, இந்த கட்டுரை வெளி வந்துள்ள, இந்த கட்டுரை மறுபதிக்கப்பட்டுள்ள, இணையத்தில் இலவசமாய்க் கிட்டும் என்று நம்புகிறேன். //இதுல இப்படி ஒரு அரசியல் இருக்கா?// என்ற அதே நூல்விற்கும் அரசியல் இதில் இருக்காது என்றே நம்புகிறேன்.//

அதனால் தப்பில்லை. இலவசமாகத் தரவாய்ப்பில்லை. அந்த நூலை விற்பதற்கான விளம்பரமாக எனது பதிவை பயன்படுத்திக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தோழர் அ. மார்க்ஸின் மற்றும் தோழர். ரவிக்குமாரின் நூல்களை முதலில் அச்சடித்து எங்கள் தலையில் சுமந்து சென்ற அனுபவம் இளமையிலேயே எங்களுக்கு உண்டு. தஞ்சை மாவட்ட பேருந்து நிலையங்களில் நாங்கள் ஒவ்வொரு பேருந்திலும் ஏறி புத்தகங்கள் விற்றவர்கள்தான். அதனால் இதுக்கூட ஒரு புத்தகம் விற்கும் அரசியல் உத்திதான் நண்பரே. :)

//2ஆ. //ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில்// //இதுதான் இன்றைய காஷ்மீர். // என்று விரிக்கும் திரு அ. மார்க்ஸின் "அனாதைகள் விடுதி" புள்ளிவிவரக் கணக்கில் "முஸ்லிம் அல்லாதவர்"கள் உண்டா? //பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின்// மதம் சாரா அமைப்புக்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமே என்றே உறுதியாக நான் நம்புகிறேன், எந்த அமைப்புகள் அவை?//

இந்த விபரங்கள்தான் அந்த நூலில் வெளிவரும் என நினைக்கிறேன். பொறுத்திருங்கள். இங்கு ஒரு உண்மையை நீ்ங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். காஷ்மீரில் கொல்லப்பட்ட மனிதர்கள் உண்மை என்று. இறந்தவன் மனிதன் என்பதைவிட அவனது மதத்தை பார்த்து எண்ணுவது என்பதுதான் வகுப்பபுவாதத்தின் ஆரம்பம். காஷ்மீரில் நடக்கும் வன்முறைகள் ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் பிரச்சனைதான். அதைவிட்டு அங்கு மதம்தான் பிரச்சனை என்று பேசத்துவங்கியதால்தான் மதம்சார்ந்த விபரங்களை அளிக்கவேண்டி உள்ளது. மார்க்ஸ்தெளிவாக சொல்கிறார் முஸ்லிமகள் என்று. நீங்கள்தான் முஸ்லிம் அல்லாதவர்களின் பாதிப்புகள் பற்றிய விபரஙகளைத் தரவேண்டும். தனது கட்டுரையில் பண்டிட்டுகள் பற்றியும் அவர்களுக்குத் தரப்பட்டுள்ள அகதி அந்தஸது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். வாக்கியங்களையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி பேசினால் எப்படி?

//2இ. (...ஏனென்றால்...) காஷ்மீரி பண்டிட்டுகள் ஒரு //ஆளுநர் ஜெக்மோகனின் ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்// என்றால், அந்த மாதிரி ஆளுநர் பலே ஆளாய் இருப்பார். எனவே, திரு. அ. மார்க்ஸ் அவர்களின் புள்ளிவிவரத்தின் படி, ஓர் ஆளுநரால் ஊக்கு விக்கப்பட்ட பண்டிட்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று பார்க்க விரும்புகிறேன்.//

ஒரு ஆளுநரால் ஊக்குவிக்ப்பட்ட பண்டிட்டுகள் என்றால் ஒவ்வொரு பண்டிட்டாக சந்தித்து ஆளுநர் என்ன ஊக்கு விப்பாரா? எனன சொல்ல வருகிறீர்கள்? ஆளநர் ஆதரவு என்பது அரசு ஆதரவு. அதன்படி பண்டிட்டுகள் வெளியேறுகிறார்கள் என்பதே பொருள். பண்டிட்டுகள் எத்தனை பேர் என்று நீங்கள் பாக்க விரும்பினால் மார்கஸ் குறிப்பிட்ட இடத்திற்க சென்றுதான் சந்திக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சனையின் அடிப்படைகள் பற்றிய கேள்விகளை எழுப்பாமல் இப்படி கேட்டுக்கொண்டிருப்பதன் பின்னணி என்ன?

//3. திரு. அ. மார்க்ஸ் சொல்வதிலிருந்து: //இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்// //பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம்// திரு. ஜமாலன், எனக்கு எல்லா எழுத்தாளர்களையும் பிடிக்கும். ஒருவர் தவறு செய்கிறார் என்று நீங்கள் உயர்த்திக் காட்டும் கொடி, இன்னொருவரின் அரைத்துணியாக இருக்குமோ?//

நண்பரே எனக்கும் எல்லா எழுத்தாளர்களையும் பிடிக்கும். அவர் பெஞ்சு கிளர்க்காக இருந்தாலும்கூட :) பிரச்சனை அதுவல்ல. ஏற்கனவே ஒருவரது அரைத்துணியை (கோவணம்தானே) உருவி உயர்த்தி தங்களது கொடியாக ஆட்டியதால்தான் பிரச்சனையே.

நண்பரே காஷ்மீர் பிரச்சனை பற்றிய முழுமையான உங்கள் நிலைப்பாட்டை உரையாடலுக்காக முன்வைத்து பேசினால் அது சம்பந்நதப்பட்டவர்கள் அதனுடன் பரிச்சயம் உள்ளவர்கள் பேசுவார்கள். எனது பதிவு ஜெயமோகனின் வெறுப்ப அரசியலை வெளிப்படுத்தும் "எனது இந்தியா" விற்கான மறுப்பாக வந்துள்ள கட்டுரை என்கிற அடிப்படையில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் காஷ்மீர் குறித்த விஷயங்கள அ. மார்க்ஸ் மறுத்து தனது ஆய்வில் கண்டறிந்தவற்றை முன்வைக்கிறார். அதை நீங்கள் உங்கள் ஆய்வின் அடிப்படையில் மறுப்பதே சரி. இப்படி முடிச்சுப்போட்ட வாக்கியங்களுடன் கருத்தை முன்வைப்பது உரையாடலுக்கான முறை அல்ல.

//உங்கள் பல பதிவுகளில் ஒரு சம நோக்கு கண்டிருக்கிறேன். அது மதம் தாண்டியது என்றே நம்பி இருந்தேன்.//

நண்பரே நான் மதச்சார்பற்ற அல்லது நீ்ங்கள் கூறுவதுபோல மதம் தாண்டிய நிலையில்தான் எனது கருத்தாடலை அரசியலை முன்வைக்கிறேன். இங்கு எந்த குறிப்பான பிரச்சனையும் மதச்சாயத்துடன் அனுகப்படும் ஒரு மதப்பித்து இன்றைய இந்திய ஏன் உலக அரசியலையே ஆட்டிக் கொண்டுள்ளது. இநத மீள்பதிவும்கூட உரையாடலக்கான அடிப்படையிலேயே முன்வைக்கப் பட்டுள்ளது. பதிவலகில் ஜெயமோகனின் கருத்துடன் சேர்ந்து இக்கருத்தும் படிக்கப்படுவதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது. இன்றைக்கு விருப்பிற்கான அரசியலை புறம் ஒதுக்கி வெருப்பிற்கான அரசியல் மெலோங்கி உள்ளது.

மீண்டும் கூறுகிறேன்.. பிரிந்துபோவதற்கான சயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் ஒரு அடிப்படையான உயிராதாரமான உரிமை. அநத உரிமை மறுக்கப்பட்ட எந்த தேசிய இனத்தின் போராட்டமும் ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு பகுதியே. அந்த வகையில் தமிழீழம் துவங்கி காஸ்மீர்வரை நடைபெறும் தேசிய இனப்போராட்டத்தை ஆதரிக்கும் நிலையிலேயே இக்கட்டுரையை மீள்பதிவு செய்துள்ளேன். ஆனால் எனது சமநோக்கை புரிந்துள்ள நீங்கள் இங்கு சமநிலைத் தவறி காஷ்மீர் போரை மதப்போர் அல்லது மத - தேசியப்போர் என்கிற பார்வை அடிப்படையில் என்னையும் ஒரு மத அடையாளத்திற்குள் திணிக்க முயலுகிறீர்கள் என்பது வருந்ததக்க செயலே.

//என் மேற்படி கருத்துக்களை மேற்கோள் காட்ட / மறுமொழி கொடுக்க‌ விழையும் யாரும் வரிசைக்கிரமம் மாற்றாமல் கொடுத்தால், நான் புதிதாய்க் கற்க ஏதுவாயிருக்கும். //

உங்கள் விருப்பப்படி வரிசைகிரமமாகத் தந்துள்ளேன்.

நன்றி

அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன் சொன்னது…

//தோழர் ஜமாலன்..

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். தொடர்ந்து ஜெ.மோ. இது போல சீப் பப்ளிசிட்டி தேடி கொள்வதால், நடந்த விளைவு.
ஆயினும் தவறை உணர்ந்து-
அதற்காக வருந்துகிறேன். தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி..
-மயில்வண்ணன்.//

தோழர் நீங்கள் யார் என்று தெரியவில்லை. அது முக்கியமும் அல்ல. புரிந்துகொண்டமைக்கு நன்றிகள். உங்கள் மனதை புண்படுத்தியருந்தால் வருந்துகிறேன்.

கருத்துக்களம் தனிமனித தாக்குதலாக மாறும்போது கருத்து பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

saki சொன்னது…

இந்தியத்தேசிய வாதம் எவ்வளவுதூரம் மடமையான தாக்கத்தை உண்டுபண்ணி பாசிசத்தை வழக்கிறது என்பதை வணங்கா முடி போன்றோரின் கருத்து உதாரணமாக இருக்கிறது..

இங்கு அ .மார்க்ஸை விட அவர் எடுத்துக்கூறிய பல உண்மை விடயங்கள் பலரை மிகவும் பாதித்திருக்கிறது போல் உள்ளது..
இந்துதுவத்தை வெளிப்படையாகவே காப்பாற்றி எழுதுபவர்களுக்கு எதிராக இவ்வளவு தூரம் கொலை வெறி ,விமர்சனங்கள் இருக்குமா தெரியவில்லை
?

எழுத்தாளர்கள் பலர் ஒருவரைப்பற்றி மற்றவர் விமர்சிப்பதும் திமிராக எழுதுவதும் புதிதில்லை ஆனாலும் என்ன விதமான விமர்சனம் அல்லது என்ன விதமான எழுத்தாளர்களை சமுக அக்கறையுடையவர்களை இவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று பார்ப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன் ..

யாருமே விமர்சனத்துக்கு அப்பால் பட்டவர்கள் இல்லை....நான் உட்பட
ஆனாலும் எழுதும் பலர் தம்மைத் தவிர்த்து அ.மார்க்ஸ்ஸை மட்டும் தாக்குவது ,விமர்சிப்பது அல்லது ஜமாலனையும் ( இந்தக்கட்டுரையை அவர் மறுபிரசுரம் செய்ததாலா அல்லது... .? ) கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது..

-/பெயரிலி. சொன்னது…

இஃது உங்கள் பதிவு என்பதாலும், இப்பின்னூட்டம் தலைப்புக்கு ஓரளவு விலகிய பின்னூட்டமென்பதாலும், நீங்கள் விரும்பாவிட்டால், அனுமதிக்கத்தேவையில்லை. அதை நான் முழுக்க முழுக்கப் புரிந்து கொள்வேன். நன்றி.

/மீண்டும் கூறுகிறேன்.. பிரிந்துபோவதற்கான சயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் ஒரு அடிப்படையான உயிராதாரமான உரிமை. அநத உரிமை மறுக்கப்பட்ட எந்த தேசிய இனத்தின் போராட்டமும் ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு பகுதியே. அந்த வகையில் தமிழீழம் துவங்கி காஸ்மீர்வரை நடைபெறும் தேசிய இனப்போராட்டத்தை ஆதரிக்கும் நிலையிலேயே இக்கட்டுரையை மீள்பதிவு செய்துள்ளேன். ஆனால் எனது சமநோக்கை புரிந்துள்ள நீங்கள் இங்கு சமநிலைத் தவறி காஷ்மீர் போரை மதப்போர் அல்லது மத - தேசியப்போர் என்கிற பார்வை அடிப்படையில் என்னையும் ஒரு மத அடையாளத்திற்குள் திணிக்க முயலுகிறீர்கள் என்பது வருந்ததக்க செயலே./

இதைப் பெரும்பான்மையானோர் புரிந்துகொள்வதில்லை. எத்துணை நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள், கடைசியிலே உங்களுக்கென்று அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் சட்டகத்துள்ளே வைத்துப்பூட்டி, சுவரிலே ஆணியடித்துக் கொழுவி (சிலருக்கு மாலையும் பொட்டும் வைத்து) ஊதுபத்தி கொளுத்தினபின்னாலேதான், அவர்களுக்குத் தூக்கம் வரும்.

/தோழர். அ. மார்க்ஸின்மீது எனக்கு ஒரு சில விமர்சனக் கருத்துக்களும் உண்டு. அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் இஸ்லாமிய மதவாத அமைப்புகளுடன் அவர் கொண்டிருக்கும் உறவு விமர்சனத்திற்குரியது என்றாலும், அது நட்பரீதியான விமர்சனமே ஒழிய அவரது நிலைபாடுகளை முற்றிலுமாக மறுத்து ஒதுக்கும் ஒன்றல்ல என்பதை மட்டும் இங்கு முன்வைக்கிறேன். நீங்கள் முன்வைத்துள்ள பிரச்சனைகளுக்கு வருவோம்./

வெறுமனே நட்புரீதியான விமர்சனமென்று நீங்கள் அவருடைய நண்பர் இந்தியாவுள்ளான பிரச்சனைக்காக ஒதுக்கிவிட்டுப்போகலாம். ஆனால், ஈழம் தொடர்பான அவரது வலையிலே அவரது கள, புல, பெயர்தொண்டர்களினதும் (தோழர்கள் என்று அன்புடன் வாசிக்கவும்) அசாத்தியக்கடதாசிகளைக் கிழித்து மலம் துடைத்தாலும் மாளாது. அவருடைய புரிதல்கள் உங்களுக்குப் புரியவில்லை என்று கூறுவதைப் புரிந்துக்கொள்ளமுடிகின்றது. ஆனால், அவருடைய ஈழம் தொடர்பான சமனிலதர்மபோதனைப்புரிதல்கள் இங்கே சம்பந்தப்படாதபோதிலுங்கூட, எங்கேனும் இருள்வெளியிலே நெருப்புக் கிழித்து எரிக்கப்பட்டாலும் அவருக்குப் போதைஞானம் கிட்டாது. கடுமையாக எழுதுவதற்கு மன்னிக்கவேண்டும். ஆனால், இவர் பரிஸிலிருந்து (அவர் சொந்தக்காசிலே போனாரா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை) காவி வந்து தமிழகத்திலே ஈழத்திலே சாதி பற்றிய போராட்டங்களைச் சொல்லும் புனைகதைகளுக்கும் திரித்த கெரில்லாக்கதைகளுக்கும் ம் கொட்டிவிட்டுப்போகமுடியவில்லை. இவருக்கும் ஜெயமோகனுக்கும் பெரிய வித்தியாசமில்லை - பேசுபுள்ளிவித்தியாசமென்பதைத் தவிர. தலித்துகளின் போராட்டத்தைத் தலித்தல்லார் எடுத்துத் தலித்துக்காகப் போராடுவதுபோல பிழைப்பு நடத்துவதுதான் சிறப்பென்றால், வாழ்க.
சேகுவரா பனியன்களைப் பற்றி அடையாளமாகப் பேசும் அ. மார்க்ஸ், கிழித்துவிடப்பட்ட டெனிம்களுடன் வீதிகளிலே கிடந்து பின்னவீனத்துவ_போஸ் கொடுப்பதன் அடையாளமறுப்பு+அழிப்பு+அறுப்பு பற்றி ஏதும் பேசுவதில்லையே, ஏன்?

என்றாவது ஒரு நாள் இவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பின், இவருக்கு இலங்கையிலே சாதி பற்றி என்ன இழவு தெரிந்திருக்கின்றது என்பதையாவது "தொலைபேசாமலே" தெரிந்து கொள்ள ஆவல். முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணிக்கதைகளுக்கு சிறிரங்கம் ரங்கராஜ ஐயங்கார் முன்னுரை எழுதுவதுக்கும் ஈழத்தின் "தலித்துகள்" தொகுத்த சாதிக்கதைகளுக்கு தமிழகத்தின் "தலித்" அ. மார்க்ஸ் முன்னுரைப்பதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. அவர்களுக்கு எங்கு நடப்பதெல்லாம் - புலம், களம், பூனை, புங்குடுதீவு, மண்டைதீவு ரேடியோ டவர், வவுனியா வெள்ளாளர், போரதீவு ஆமி காம்ப் - எல்லாம் தெரியும்; நம்புங்கள். அப்படியிருக்க ஜெயமோகன் நாயர் காஷ்மீரியைப் பற்றி எழுதினால் என்ன சொல்லவது?

In my own opinion, A. Marx at this point of time nothing but the Sreedharan character in the Mukhamukahm. (Of course, I and only myself appreciate my opinion ;-))

White Chardonnay and Pinot Noir .... doesn't matter. Let's partying with champagne - you with your grapes & I with mine .

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.