பாலஸ்தீனமும் தமிழ் ஈழமும் தொடரும் சர்வ தேசிய அலட்சியம் - மாயா

தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீன் என்கிற இரண்டு   தேசங்களும் பெருந்தேசிய இனவாதத்தால் கடுமையான போரை சந்தித்துள்ளன. சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த அநீதி யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு அவலமான நிலைக்குத் தள்ளப்பட்ட இரண்டு இனமக்களும் இன்று கடுமையான அச்சுறுத்தலுக்கும் உயிரச்சத்திற்கும் ஆளாகி உள்ளனர். தினமும் இரண்டு தேசங்களிலும் நடைபெறும் போர் கொண்டுவந்து கொட்டும் செய்திகளும் அவை ஏற்படுத்தம் மனத்துயரும் நமது மனசாட்சியை உலுக்கக்கூடியதாக உள்ளது. இவ்விரு தேசங்களின் பிரச்சனைகளை ஒப்புநோக்கி பேசும் மாயா என்பவரின் உயிரோசைக் கட்டுரை இங்கு மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நடைபெறும் இந்த யுத்தம் பற்றிய ஒரு இஸ்ரேல் செய்திப் பத்திரிக்கையின் செய்தி இது.  இச்செய்தியாளர் முன்வைக்கும் செய்தி முக்கியமானது. ஹமாசின் ராக்கெட் தாக்கதலைக் காரணம் காட்டி இஸ்ரேல் படைகளின் அநீதியான தாக்குதலை நியயாப்படுத்திவிட முடியாது. அதேபோல், புலிகளின் செயல்களுக்காக சிங்கள இனவெறியர்களையும் இனவெறி அரசையும் நியாயப்படுத்திவிட முடியாது.  இந்திய தமிழக அரசியல் சூழலில் நிகழும் உள்ளநாட்டு அரசியல் குழப்பம் ஈழப்பிரச்சனையிலும் பிரதிபலிப்பதால் அழிக்கப்படுவது ஒரு இனம் என்பதை நாம் உணரவேண்டும். ஈழத்தில் மற்றும் பாலஸ்தீனத்தில் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்கிற சர்வேத நிர்பந்தத்தை ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் முன்வைப்பது “அரசியல் சரி“ என்கிற மொன்னை வாதத்தையும் தாண்டி மிகமுக்கியமானது. ஆண்டுத் துவக்க்தில் நாம் முகங்கொடுக்க வேண்டிய மிக முக்கியப்பிரச்சனைகள் இவை.

காஸாபகுதயிலிருந்து வந்த இரண்டு நேரடி குரல்களை நண்பர் நாகார்ஜீனன் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதன் சுட்டிகள்

1. காஸாவிலிருந்து ஒரு குரல் - ஸாமி அப்துல் ஷாஃபி

2. காஸாவிலிருந்து இன்னொரு குரல் - ஃப்ரீஸ் அக்ரம்

பாலஸ்தீனமும் தமிழ் ஈழமும் தொடரும் சர்வ தேசிய அலட்சியம் - மாயா

ரண்டு இனவாத அரசுகளின் ராணுவங்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இணை அரசுகளுக்கு நேர்ந்த பின்னடைவு கடந்த வாரம் உலகெங்கும் செய்தியாகின. ஒன்று இஸ்ரேல்-பாலஸ்தீனம், இன்னொன்று இலங்கை-தமிழ் ஈழம். பாலஸ்தீன காசா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை 400ஐத் தாண்டி வளர்ந்துகொண்டிருக்கிறது. வான் தாக்குதலை அடுத்து தரைவழி தாக்குதல் தொடுத்திருக்கிறது யூத இஸ்ரேல் அரசு.

பல மாதங்களின் முயற்சிக்குப் பிறகு விடுதலைப் புலிகள் காலி செய்துவிட்டுப் போன கிளிநொச்சியை சிங்கள இனவாத இலங்கை ராணுவம் கைப்பற்றியது. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் சிங்கள விமானங்களின் குண்டு மழையில் எத்தனை பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. "பயங்கரவாத" அமைப்பாக கருதப்படும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் செம்பிறை (செஞ்சிலுவையின் மற்றொரு பெயர்) போன்ற நிவாரண அமைப்புகள் இருப்பதால் பாதிப்பு பற்றிய நம்பத்தகுந்த கணிப்பு உண்டு. வடக்கு இலங்கையில் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து செஞ்சிலுவை போன்ற அமைப்புக்களை இலங்கையின் சிங்கள ராணுவம் புத்திசாலித்தனமாக வெளியேற்றிவிட்டதால் அப்பாவிகள் எத்தனை பேர் செத்தாலும் கணக்கில்லை. இலங்கை-ஈழம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் வரலாற்றில் பொதுவான அம்சங்களும் உண்டு வேறுபாடுகளும் உண்டு.

நாஜிக்களின் அழித்தொழிப்பை அடுத்து தங்களுக்கென சொந்தமாக ஒரு தேசம் என்ற கனவை நனவாக்குவதற்கான உடனடித் தேவையை யூதர்கள் உணர்ந்தார்கள். முன்னொரு காலத்தில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த ஜெருசலேமின் சுற்று வட்டாரப் பகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுத்தது உணர்வுப்பூர்வமான முடிவு. ஆனால் "ஆளற்ற ஒரு பிரதேசத்திற்கு, நிலமற்ற யூதர்கள்" என்று அப்போது வெளியிடப்பட்ட கவர்ச்சிகரமான கோஷம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஏமாற்று வாசகம் என்று வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது தெரிகிறது. 1948ல் ஐ.நா சபையின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநீதி விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு அந்தப் பகுதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. 1919ன் கணக்குப்படி அங்கு 7 லட்சம் அராபியர்கள் இருந்தார்கள். யூதர்களின் "ஊடுருவல்" 1948க்கு நெடுங்காலம் முன்பே தொடங்கியது. 1880களிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கிவிட்டார்கள். இன்று இஸ்ரேலின் உளவுப் படை மொஸாத் செய்வது போன்ற அத்தனை தந்திரங்களையும் பயன்படுத்தி இந்த ஊடுருவல் நடந்தது. பணமும் பலவந்தமும் கொண்டு மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரேயடியாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது அடால்ப் ஹிட்லரின் யூத அழித்தொழிப்பு வெறித்தனம்.

நாஜிக்களின் அழித்தொழிப்பால் உலகமே யூதர்களின் மீது பரிதாபம் கொண்டிருந்த சமயத்தில், பாலஸ்தீனத்தில் யூதர்கள் செய்த ஆரம்ப கால அநீதிகள் கண்டும் காணாமல் விடப்பட்டது. அராபியர்களிடமிருந்து நிலங்கள் காசு கொடுத்து வாங்க முயற்சி நடந்தது. அந்த நிலங்களை மீண்டும் ஒரு அராபியருக்கு விற்க முடியாது என்ற விதியின்கீழ் நில வர்த்தகங்கள் நடந்தன. அராபியர்களின் தேசத்தை கபளீகரம் செய்யும் முயற்சி இது என்று விரைவில் உணர்ந்துகொண்ட அராபியர்களை நேர் வழியில் விரட்ட முடியாமல் போனதால், பிரிட்டன் ராணுவத்தின் உதவியுடன் பலவந்தமாக அராபியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தார்கள். கடந்த நூற்றாண்டில் ஒரு இனக்குழுவுக்கு எதிராக நடந்த முதல் மாபெரும் அழித்தொழிப்பின் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த யூதர்கள், மறு நொடியில் அராபிய இனக்குழுக்களை ரகசியமான வழிகளில் அழித்தொழிக்கும், விரட்டியடிக்கும் புதிய நாஜிக்களாக மாறினார்கள். அகதிகளாக, நாடற்றவர்களாக விரட்டப்பட்ட அராபியர்கள் தங்களுக்கென ஒதுக்கிக்கொண்ட சிறிய பகுதியில்கூட முழு சுதந்திரத்துடன், தன்மானத்துடன் வாழ அனுமதிக்கக்கூடாது என்ற இஸ்ரேலின் வன்முறை மனோபாவம்தான் ஹமாஸ் போன்ற இயக்கங்களுக்கு ஆதரவைப் பெருக்குகிறது. இரண்டு சமூகங்களும் ஒரு தேசமாக இணைந்திருப்பதை எதிர்க்கும் இஸ்ரேல், தனது நாட்டில் சிறுபான்மையினராகக்கூட அராபியர்கள் இருப்பதை அனுமதிப்பதில்லை. "தென்னாப்ரிக்காவின் நிறவெறி (அபார்தீட்) கொள்கையைப் போன்றதுதான் இஸ்ரேலின் பாலஸ்தீனிய கொள்கை. அதனால் நிறவெறிக்கெதிராக உலக நாடுகள் எவ்வாறு கடுமையாக நடந்துகொண்டதோ அதே போல இஸ்ரேலிடமும் நடந்துகொள்ள வேண்டும்" என்கிறார் ஐ.நா பொது சபையின் தலைவர் மிகேல் டி-எஸ்காட்டோ புராக்மேன்.

புராக்மேன் இஸ்ரேலை வெறுப்பவர், அதனால்தான் இவ்வாறு சொல்கிறார் என்ற வாதத்தை முன்வைக்கிறது இஸ்ரேல். எனினும் ஜூவ்ஸ் பார் ஜஸ்டிஸ் இன் த மிடில் ஈஸ்ட் என்ற யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரால் நடத்தப்படும் இயக்கம் இஸ்ரேலின் பல பொய்களை அம்பலமாக்கி வருகிறது. மண்ணின் மைந்தர்களுக்கு தங்கள் வாழ்விடம் குறித்த எந்த உரிமையும் இல்லை என்ற காலனியாதிக்க மனோபாவத்துடன் அராபியர்களை விரட்டியடித்ததுதான் இத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்கிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை. எவ்வாறு யூதர்கள் மிகவும் திட்டமிட்டு அங்கிருந்து அராபியர்களை விரட்டிவிட்டு, அதை ஒரு யூத தேசமாக்கினார்கள் என்பதை அந்த அமைப்பு முழுமையான பதிவு செய்திருக்கிறது. இவ்வளவு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன அராபியர்கள் வாழ வழியே இல்லை என்பதால்தான் நோம் சோம்ஸ்கி போன்ற அறிஞர்கள்கூட யூதர்களுக்கும் பாலஸ்தீன அராபியர்களுக்கும் தனித் தனி தேசங்களை கொடுத்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். இந்த சமரசத் திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல், லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு நடுவில் ஒண்டிக்கொண்டு வாழும்படி உருவாக்கப்பட்ட தேசம் பாலஸ்தீனர்கள் உண்மையில் விரும்பிய தேசம்தானா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இவ்வளவு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகு யாசர் அராபத்தின் கட்சி சரிவைச் சந்தித்திருக்காது.

வரலாற்றுரீதியாக பாலஸ்தீனர்களுக்கு உள்ள வாழ்வுரிமையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளச் செய்ய யாசிர் அராபத் பெரும் பங்காற்றினார். தான் தலைவராக வேண்டும் என்பதற்காக யூதர்களுக்குத் தனி தேசம், அராபியர்களுக்குத் தனி தேசம் என்ற சமரசத்தையே முன்வைத்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்படுவது உண்டு. எனினும் யூத-அராபிய தரப்பில் நிலவிய மிகுந்த மனக் கசப்பால் அவர்கள் ஒரு தேசத்தின்கீழ் வாழ்வது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்பது ஏற்கக்கூடிய வாதம்தான். ஆனால் யாசர் அராபத்தின் சமாதான முயற்சிகளுக்கு நடுவே ஆயுதம் தாங்கிய ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு செல்வாக்கு அதிகரித்து வந்தது. யாசர் அராபத்தின் மரணத்திற்குப் பிறகு அவரது கட்சி இன்னும் பலவீனமானது. அவருடைய கட்சியுடனும் இஸ்ரேலும் அதன் காட் பாதரான அமெரிக்காவும் கைகுலுக்கத் தொடங்கியது பாலஸ்தீனியர்களிடையே எதிர்மறை எண்ணத்தை விதைத்திருக்க வேண்டும். அரபு நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை நிறுவும் அமெரிக்கக் கனவு மீண்டும் பலித்துவிட்டது போல் தெரிந்த சமயத்தில் பாலஸ்தீனத்தில் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. அரை நூற்றாண்டு காலமாக பாலஸ்தீனியர்கள் மனதில் விதைக்கப்பட்ட வெறுப்பு ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தின் வடிவில் வளர்ந்து நின்றது. 2006 நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் பெரு ஆதரவுடன் வெற்றி பெற்றது. இதுவரை தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்திய அமைப்பு சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றதை இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. புதிய பாலஸ்தீன அரசுக்கு கொடுத்து வந்த அத்தனை நிதியுதவியையும் நிறுத்தினார்கள். ஒரு தேசத்திற்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருந்த பாலஸ்தீனத்திற்கு அது பேரிடி. வெளிநாட்டு உதவி இல்லாவிட்டால் அரசு ஊழியர்கலின் சம்பளத்தைக்கூட போட முடியாத நிலை. ஹமாஸை பலவீனப்படுத்துவதற்கா தேர்தலில் தோற்ற பிரதமர் மஹ்மூத்தின் பதா கட்சியின் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அணிவகுத்தன. ஹமாஸ்-பதா இடையே குட்டி போர் வெடித்தது. அமெரிக்கா செய்த அரசியலால் இன்று பாலஸ்தீனம் ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காசா, பதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் கட்டுப்படுத்தும் வெஸ்ட் பேங்க் என தனித் தனி பிரதேசங்களாக பிளவுபட்டிருக்கிறது.

இடையிடையே பயங்கரவாதி என்று வர்ணித்த ஹமாஸுடன் தற்காலிக அமைதி ஒப்பந்தங்களை செய்துகொள்ளத் தயங்காத இஸ்ரேல், அந்த ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. கடைசியில் கையெழுத்தான ஒப்பந்தத்திபடி பாலஸ்தீனுக்குள் வரும் பொருட்களை அனுமதிக்க வேண்டும். ஆனால் இஸ்ரேல் ஒன்று பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதே இல்லை அல்லது மிகக் குறைவான அளவிலான பொருட்களையே அனுமதித்து வருகிறது. இதனால் மருந்து, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை பாலஸ்தீனத்தை ஒரு குட்டி சோமாலியா போல மாற்ற அச்சுறுத்துகிறது. இந்த நிலையில்தான் இந்த டிசம்பரில் முடிவுக்கு வரும் அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாததைக் கண்டித்து கடந்த நான்கு வாரங்களில் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை அதிகரித்தது ஹமாஸ். அதையே ஒரு காரணமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீனை மீண்டும் ஆக்கிரமித்திருக்கிறது இஸ்ரேல். அத்தியாவசியப் பொருட்கள் என்ற பெயரில் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வருகிறார்கள் என்று இஸ்ரேலும் பிரிட்டனும் அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன.
தேசங்களின் இறையாண்மையைவிட தங்களின் நோக்கங்களே பெரிது என்று கருதும் இஸ்ரேல் மற்ற பல நாடுகளின் எல்லையில் ரகசிய ஆபரேஷன்களை நடத்தியுள்ளது. இன்னும் முழுமையான தேசமாக உருவெடுக்காத பாலஸ்தீனத்தினத்திற்குள் அப்படி எக்கச்சக்கமான "ஆபரேஷன்கள்" நடத்தப்பட்டுள்ளன. தனக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதும் ஆட்கள் கடத்திச் செல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் நிரந்தரமாக காணாமல் போவார்கள். அப்படி சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதிகளை கடத்திச் சென்றதுதான் ஹமாஸ் இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களைக் கடத்தக் காரணம் என்கிறார் நோம் சாம்ஸ்கி. இஸ்ரேல் சிவிலியன்களை பிடித்துச் செல்வதை பிரச்சனையாக்காத உலக நாடுகள், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி மிகுந்த அக்கறை காட்டுவதில் உள்ள அரசியலை கண்டிக்கிறார் சாம்ஸ்கி.

பாலஸ்தீனுக்கு உதவ வேண்டிய சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் ஆளுக்கொரு அரசியல் காரணங்களால் ஒதுங்கி நிற்பது அதைவிட பெரிய வேடிக்கை. எகிப்தின் எல்லையில் உள்ள பாலஸ்தீன எல்லைகூட அத்தியாவசியப் பொருட்களுக்காக திறந்துவிடப்படவில்லை. எவ்வாறு இலங்கையில் புலிகள் நலனையும் தமிழர்கள் நலன்களையும் பிரித்துப் பார்க்க மறுக்கிறார்களோ அதே போல பாலஸ்தீனத்தில் ஹமாஸின் நலனையும் அராபியர்களின் நலனையும் பிரித்துப் பார்க்க அராபிய தேசங்கள் மறுக்கின்றன. தங்களின் ஜனநாயகமற்ற அரசுகளுக்கும் ஹமாஸின் எழுச்சி அச்சுறுத்தலாக மாறும் என்று அராபிய தேசங்கள் அஞ்சுகின்றன. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா இந்த விஷயத்தில் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருப்பது தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பயத்தால்தான்.

யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற பெயரில் ஒரு தேசமாக வாழும் உரிமையையே மறுக்கும் அளவுக்கு தீவிரமான கொள்கை கொண்ட ஹமாஸ் ஒரு சகிப்புத்தன்மைமிக்க சக்தி அல்ல என்பது உண்மைதான். ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தலைவர்கள்கூட ஜனநாயக சக்திகள் அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். பிப்ரவரியில் நடக்கவிருக்கும் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்காமலிருப்பதற்காகத்தான் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பராக் பாலஸ்தீனுக்குள் தனது படைகளை ஏவியுள்ளார். முன்னாள் பிரதமர் பின்யாமின் நெதன்யாகூதான் ஜெயிப்பார் என்ற கணிப்புகளை சிதறடிக்க அவருக்கு இந்த வாய்ப்பு உதவியிருக்கிறது என்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் முழு ஆதரவாளராக இருக்கும் அமெரிக்க அதிபர் புஷ் இந்த மாத இறுதியில் பதவியிறங்கும் முன்பு இந்தத் தாக்குதலை நடத்தியாக வேண்டும் என்று அவசர அவசரமாக இதைச் செய்துள்ளார்கள். ஹமாஸ் ஏவிய ராக்கெட்டுகள் அவர்களுக்கு ஜெயிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

சொந்தமாகத் தயாரித்த அரைகுறை ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவியது ஒரு வகை கவன ஈர்ப்புதான். தங்கள் மீது போடப்பட்டிருக்கும் பொருளாதார, வாழ்வாதார முற்றுகையை உடைக்க உலக நாடுகளின் கவனத்தை மத்திய கிழக்கை மூலம் திருப்ப வேண்டியிருந்தது. ஹமாஸ் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியிருந்தாலும் அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. ஆனால் இஸ்ரேலின் ஒரு வார வான் தாக்குதலில் 400க்கு மேற்பட்ட பாலஸ்தீன பெண்கள், குழந்தை, போலீஸ்காரர்கள் இறந்திருக்கிறார்கள்.

யூதாயிசம், இஸ்லாம், கிறிஸ்தவம் என உலகின் மூன்று பழம்பெரும் மதங்களின் பிறப்பிடம் ஜெருசலேம். மதங்களின் பிறப்பிடம் இன்று, மதங்களுக்கிடையிலான மோதலுக்கான ஊற்றுக்கண்களாக மாறியிருக்கிறது. தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து, தங்களையே அகதிகளாக விரட்டிய இஸ்ரேலுக்கும் அந்நாட்டுக்கு உதவும் அமெரிக்காவுக்கும் எதிரான உலக முஸ்லிம்களின் கோபத்தை கிறிஸ்தவ, யூத மதங்களின் மீதான கோபமாக அடிப்படைவாதிகள் திருப்புகிறார்கள். யூதர்களோடும் அமெரிக்காவோடும் தொடர்புடைய இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் அதன் பின்விளைவுகளை சந்திக்கின்றன. வெறுப்பு விதைக்கப்பட்ட இடங்கள் எல்லாம் அடிப்படைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் வேட்டைக் களமாக மாறுகின்றன. இதில் அடிப்படைவாதிகளையும் தீவிரவாதிகளையும் மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. இஸ்ரேலிய யூதர்களும் இலங்கையின் சிங்களர்களும் வெறுப்பை விதைக்காமலிருந்திருந்தால் ஒரு ஹமாஸ் உருவாகியிருந்திருக்காது ஒரு எல்.டி.டி.இ உருவாகியிருந்திருக்காது.

அரசின் அரியணையில் அமர்ந்திருக்கும் பெளத்த மதம். அனைத்திலும் பெரும்பான்மை இனத்திற்கே முன்னுரிமை தரும் சிங்கள தேசக் கனவு. அதே மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் உரிய இடத்தினை மறுப்பது. இஸ்ரேலும் இலங்கையும் ஒடுக்குமுறை வரலாற்றில் பெரும் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தில் வெறுப்பு விதைக்கப்பட்ட அதே 1948ல் இலங்கையில் வெறுப்புக்கு பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் கொடுத்தது. சிங்கள ஆட்சி மொழி, அரசு உயர் பதவிகளை சிங்களரே வகிக்க முடியும் என்பது போன்ற அம்சங்கள் இலங்கையின் சக மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு சவால் விட்டன. தமிழர்களின் கவலையால் எழுந்த குரல்களை சகித்துக்கொள்ளும் அளவுக்கு பரந்த உள்ளம் கொண்டதாக சிங்கள தேசியம் இருக்கவில்லை. தமிழகத்தின் பல்வேறு மன்னர்கள் இலங்கையின் மீது போர் தொடுத்து வென்ற பழங்கால வரலாற்றின் பயங்களை இன்றும் கொண்டிருக்கிறார்கள் சிங்கள பெரும்பான்மையினர். இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்கள் இந்தியாவின் தமிழர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சிங்கள தேசத்தைக் கைப்பற்றுவார்கள் என்று சிங்கள இனவாதக் கட்சிகள் சிங்களப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டார்கள். அந்த பயத்தால் உருவான ஆதரவைக் கொண்டு அன்று முதல் இன்று வரை இன அழித்தொழிப்பை சோர்ந்து போகாமல் நிறைவேற்றி வருகிறார்கள் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாபெரும் அழித்தொழிப்பை நிகழ்த்தி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுத பாணி இயக்கங்களுக்கு வித்திட்டது இலங்கை இனவாத தேசியம். காலப் போக்கில் ஆயுத வழிகளைக் கைவிட்ட அமைப்புகள் யாசர் அராபத்தின் கட்சியைப் போலவே மக்கள் ஆதரவை இழந்துவிட்டன. சிங்கள அரசுடன் சமரசம் செய்துகொண்டு தங்களுக்கு பதவிகள் பெற்றுக்கொள்ளும் பட்டியலில் முன்னாள் புலித் தலைவர் கருணா வரை நிறைய பேர் சேர்ந்துவிட்டார்கள். 21 ஆண்டுகளாக இருக்கும் ஹமாஸ் இப்போது தேர்தலில் பெரும்பான்மையுடன் வென்றுவிட்டது. 33 ஆண்டுகளாக இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு முழு மக்கள் ஆதரவு உள்ளதா என கண்டறிய முழு சுதந்திரத்துடன் நடத்தப்படும் தேர்தல்கள் ஏதும் வட இலங்கையில் இதுவரை இல்லை. ஆனால் வட இலங்கையின் தமிழர்கள் புலிகளைத்தான் தங்கள் காப்பாளர்களாகக் கருதுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சிங்கள ராணுவம் கைப்பற்றிய பிறகு தாங்கள் எவ்வாறு நடத்தப்படுவோம் என்ற தமிழர்களின் பயம் நியாயமானதே.
தனது கைப்பாவையாக மாறிவிட்ட கருணாவிடம் கிழக்குப் பகுதிகளில் குத்தகை விட்டிருக்கும் சிங்கள அரசு, வடக்கிலும் அதே போன்ற "ஜனநாயகத்தை" அமல்படுத்தப் போவதாகக் கூறுகிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டதால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவர்களை வைத்து ஒரு கோமாளி அரசை திணித்துவிட்டு ஜனநாயம் மலர்ந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவிக்கும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்வது போல மெல்ல மெல்ல தமிழ்ப் பகுதிகளில் சிங்களர்களை புகுத்துவது அவர்களின் அரசியல் திட்டங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் யூதப் படைகள் நீண்டகாலம் அங்கிருக்க முடிவதில்லை. அதேபோல கிளிநொச்சி போன்ற பகுதிகளில் சிங்கள ராணுவம் எவ்வளவு காலம் இருக்க முடியும் என தெரியவில்லை. 1996ல் இதே போல கைப்பற்றிய கிளிநொச்சியிலிருந்து சிங்கள ராணுவம் 1998ல் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்ததை மறக்க முடியாது. கெரில்லா போர் முறையில் பின்வாங்குவதும் அடர்ந்த வனங்களுக்கு தப்பியோடுவதும் எதிரி பலமாகும் போது மேற்கொள்ளப்படும் அடிப்படை வியூகம்.  அதை வைத்து கெரில்லா இயக்கம் தோற்றுவிட்டதாகக் கூற முடியாது. மாறாக இனவாத பெரும்பான்மையினர் எந்த அளவிற்கு சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்கள், எந்த அளவுக்கு சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினரின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை பிறக்கிறது என்பதே மாற்றத்தைக் கொண்டு வரும். சிங்கள ராணுவத் தளபதி பொன்சேகா, அதிபர் ராஜபக்ஷே போன்றவர்களின் இன துவேஷக் கருத்துக்களைப் பார்க்கும் போது மாற்றம் கண்ணில் படவில்லை.

இஸ்ரேலைப் போலவே இலங்கையிலும் அரசியல் கணக்குகள்தான் தமிழர்களுக்கெதிராக கடுமையாக நிலையெடுக்கக் காரணம். தீவிர தேசியவாதத்தைத் தூண்டிவிடுவது மூலம் தனக்கான ஆதரவை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் ராஜபக்ஷே. ஜனநாயக அரசுகள் எல்லாம் நல்லவை, ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் எல்லாம் கெட்டவை என்ற பார்வை எவ்வளவு முட்டாள்தனமானது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன சிங்கள அரசும் இலங்கை அரசும். இன்று அமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை போன்றவை ஜனநாயக அரசுகள் ஆளும் நாடுகள். ஆனால் சிறுபான்மையினர் மீது சகிப்புத்தன்மையற்ற அரசுகளான இவை ஜனநாயகம் என்ற பெயரில் தங்களது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றன. ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் இந்த பயங்கரவாத அரசுகளைவிட, பயங்கரவாதத்தை வெளிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள் எவ்வளவோ மேல். ஹமாஸ் மீதும் புலிகள் மீதும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தடை விதிக்க முடியும். அமெரிக்க, இஸ்ரேல், இலங்கை மீது தடை விதிக்க முடியாது. உலகின் மிகவும் அஞ்சப்படும் ராணுவத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்காவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சனை வருவதை அமெரிக்கா அனுமதித்ததே இல்லை. இலங்கைக்கு பிரச்சனைகள் வருவதை இந்திய அரசும் சமீப காலமாக அனுமதிப்பதில்லை.

பாலஸ்தீனத்திற்கு அதனைச் சுற்றியிருக்கும் அரபு நாடுகள் சமீப காலங்களாக  செய்து வரும் துரோகத்தையே இந்திய அரசும் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்கிறது. ஹமாஸின் எழுச்சியை தங்களுக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கும் அரபு நாடுகள் போல, புலிகளின் எழுச்சியை தனக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. ஆனால் பாலஸ்தீனத்தைவிட தமிழ் ஈழத்தின் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியிருக்கிறது. இலங்கையும் ஈழமும் தனித் தனி தேசமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போல இன்னமும் தெளிவாகவில்லை என்றாலும் மனம் திருந்தாத சிங்கள இனவாத அரசின்கீழ் தமிழர்கள் முழு சுதந்திரத்துடன் வாழ முடியுமா எனத் தெரியவில்லை. பாலஸ்தீன விவகாரங்களில் உலகின் கவனத்தை ஈர்க்க முடிகிறது. ஆனால் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு சிங்கள விமானப் படை நடத்தும் குண்டு வீச்சில் அப்பாவிகள் இறக்கிறார்களா என்று பார்ப்பதில்கூட உலக நாடுகளின் கவனம் திரும்பவில்லை. இந்தியாவே அதைக் கண்டுகொள்ளாத போது உலக நாடுகளைக் குறை சொல்லி பிரயோஜனமில்லை. இஸ்ரேலின் காட் பாதராக தன்னை பாவித்துக்கொள்ளும் அமெரிக்காவும் "பயங்கரவாத ஹமாஸ் இயக்கமே சமீபத்திய மோதல்களை ஆரம்பித்து வைத்தது" என்று தீர்ப்பு கூறிவிட்டது. உலக ஊடகங்கள் இந்த வாதங்களையே பிரதியெடுக்கின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் சிங்கள அரசுக்குச் சாதகமான பார்வையே பெருவாரியான ஊடகங்கள் முன்வைக்கின்றன. கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றியதை வட இந்திய ஊடகங்கள் கொண்டாட்டமாக அறிவிக்கின்றன. வட இந்தியர்களுக்கு இந்தியாவின் தமிழர்கள் மீதே பெரிய மரியாதை இல்லாத போது இலங்கைத் தமிழர்கள் மீது அவர்களுக்கு கரிசனம் இருக்குமா? இன்று, இஸ்ரேலுக்கு அமெரிக்கா போல இலங்கையின் சிங்கள அரசிற்கு வட இந்திய அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரசு காட் பாதராக மாறிவிட்டது. தமிழக கூட்டணி அரசை நம்பியிருப்பதால்தான் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஒளிந்து மறைந்து உதவிகள் செய்கிறது, இலங்கையை கண்டிப்பது போல நடிக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் செல்வாக்கு இல்லாமல் போயிருந்தால் சிங்கள ஆதரவு, இலங்கைத் தமிழர் எதிர்ப்பு இந்திய அரசியல் சாஸனத்திலேயே புகுத்தப்பட்டிருக்கும். 

துன்புறுத்தும் இஸ்ரேலுக்கு பதில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீன் ஒதுக்குதலுக்கு ஆளாகிறது. தமிழ் ஈழத்தின் நிலையும் மாறுபட்டதல்ல. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே காரணத்திற்காக அப்பாவிப் பொது மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை முடக்கி வருகிறது சிங்கள அரசு. அத்தியாவசியப் பொருட்கள் செல்வதை நிறுத்தி அல்லது தேவையைவிட குறைவான வினியோகத்தையே அனுமதிக்கும் இஸ்ரேலின் கொள்கை உலக நாடுகளுக்கு ஒரு பொருட்டல்ல. தனி தேசமாகி வரும் பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் ரகசியமாக புகுந்து அந்த நாட்டு குடிமக்களை கடத்துவது உலக நாடுகளுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. ஹமாஸ் ராக்கெட் ஏவுவது மட்டும்தான் பிரச்சனை. அதே போல இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது இடம் பொருள் பாராமல் விமானத் தாக்குதல் நடத்துவதோ, அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தைத் தடுப்பதோ, செஞ்சிலுவை போன்ற நிவாரண அமைப்புக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விரட்டுவதோ இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் ஹமாஸ் மற்றும் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதங்கள் மட்டும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய பிரச்சனைகள். அத்தியாவசிய பொருட்கள் என்ற பெயரில் ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் சொல்கிறது, நிவாரணப் பணிகள் என்ற பெயரில் சர்வதேச மரியாதையைப் பெற்ற செஞ்சிலுவை போன்ற அமைப்புக்கள் புலிகளுக்கு உதவுவதாக இலங்கை சொல்கிறது. அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு கொல்கிறது. புலிகளோ ராணுவ இலக்குகள், ராணுவ-அரசியல் தலைவர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் யார் பயங்கரவாதிகள்?

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்கள் தீவிரம் அடைவதாகக் கூறப்படும் இன்றைய அரசியல் சூழலில் ஐ.நாவும் உலக நாடுகளும் சிறுபான்மை நலன்களைப் பாதுகாப்பதில் புதிய நிலைபாடு எடுத்திருக்கின்றன. பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் சிறுபான்மையினர் அத்தனை பேரும் இல்லாமலாக்கப்பட்ட பிறகு, பயங்கரவாதம் ஒழிந்தது ஜனநாயகம் வென்றது என்று உலகமே கூத்தாட வேண்டும். அந்த பொன்னாள் மலர்வதைத் தடுக்கும் பாலஸ்தீன ராக்கெட் ஏவுதல்களும் புலிகளின் ராணுவ-அரசியல் நிலைகள் மீதான தாக்குதல்களும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும். சிறுபான்மையினரின் கழுத்தை நெரிக்கும் விஷயத்தில் ராக்கெட்டுகளும் செஞ்சிலுவைகளும் தடையாக இருப்பதை அரச பயங்கரவாதத்தால் ஜீரணித்துக்கொள்ள முடியாததை புரிந்துகொள்ள முடிகிறது.

- நன்றி உயிரோசை - 05-01-2009

4 comments:

ஓர்மைகள் சொன்னது…

மிக நல்ல கட்டுரை

றஞ்சினி சொன்னது…

//தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீன் என்கிற இரண்டு தேசங்களும் பெருந்தேசிய இனவாதத்தால் கடுமையான போரை சந்தித்துள்ளன. சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த அநீதி யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு அவலமான நிலைக்குத் தள்ளப்பட்ட இரண்டு இனமக்களும் இன்று கடுமையான அச்சுறுத்தலுக்கும் உயிரச்சத்திற்கும் ஆளாகி உள்ளனர். தினமும் இரண்டு தேசங்களிலும் நடைபெறும் போர் கொண்டுவந்து கொட்டும் செய்திகளும் அவை ஏற்படுத்தம் மனத்துயரும் நமது மனசாட்சியை உலுக்கக்கூடியதாக உள்ளதது//

ஆம் காலை எழுந்து செய்திகலைப்படிப்பதற்க்கே மனம் தயங்குகிறது அழிவைத்தவிர என்ன புதிய செய்தி இருக்கப்போகிரது என்ற விரக்தி ..( செய்திகலைப்பர்க்கவும் முடியவில்லை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை..)

சர்வதேசத்தின் அலட்சியப்போக்கு ஸ்ரேலுக்கும் இலங்கை அரசுக்கும் மிகச்சாதகமானதாக அமைந்திருக்கிரது எது செய்தாலும் கேட்க்க எவரும் இல்லை என்ற வெறியுடன் இரு அரசுகளும் செயல்ப்படுகிறது..

பயங்கர ஆயுதங்கலால் பாலஸ்தீன மக்களை அழிக்கும் ஸ்ரேலிய ஆயுதங்களைத்தவிர்த்து தம் உயிர் உரிமைக்காக வெறும் கற்கலைவீசும் சிறார்களையும் பெண்களின் படங்களையும் பெரிதுபடுத்திக்காட்டும் ஊடகங்களையும் , புலிகள் செய்த தவறுகளை இன்னேரத்திலும் பெரிதுபடுத்தி தாம் அவர்களைவிட நல்லவர்கள் (?) என்று சொல்லிக்கொண்டு இலங்கை அரசுடன் சேர்ந்து அப்பவி மக்களை அழிக்கத்துணைபோகும் தமிழ் துணைராணுவக் குழுக்களையும் என்ன சொல்வது ....

இன்னொரு வேதனையான நிகழ்வு..
இந்திய அரசு இலங்கை அரசுக்கு பலவழிகளில் துணை நின்று மேலும் உதவிக்கொண்டிருப்பதாக அறியும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது .

பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் ..இவ் நாடுகளுக்கெதிராக எல்லா மனிதநேயமுள்ளவர்களும் ஒன்றுசேர்ந்து செயல்படவேண்டும்

மாயாவின் கட்டுரை தேவையான நல்ல கட்டுரை..

தமிழன்-கறுப்பி... சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சார்...

ஜமாலன் சொன்னது…

ஓர்மைகள், றஞ்சனி மற்றும் தமிழன்-கருப்பி...

கருத்துக்களுக்கு நன்றி

அன்புடன்
ஜமாலன்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.