திரையில் விளையாடும் மனப்பிறழ்ச்சி கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் – பகுதி : 3

பகுதி  -1

பகுதி -2

clip_image002ரியல் பிக்ஷன் (Real Fiction (2000)) சினிமாவிற்குள் எடுக்கப்பட்ட சினிமா இது. எது புனைவு என்பதை மறைத்து விளையாடும் ஒரு படம். உண்மை X புனைவு என்கிற எதிர்மைகளை தகர்த்துவிட்டு உண்மையின் புனைவை காட்டும் படம். ஒரு சாமானியனுக்கு வாய்த்திருப்பது இத்தகைய கனவுகளும், பகற்கனவுகளும் நிறைந்த ஒரு புனைவு உலகம்தான். ஒரு பார்க்கில் அமேச்சுர் ஓவியனாக, படம் வரைந்து தந்து காசு சம்பாரிக்கும் ஒருவன் தனது சூழலுக்கு காரணமானவர்களை, தன்னை சின்ன சின்ன அவமானங்களுக்கு ஆளாக்கியவர்களை தனது புனைவில் பழிவாங்கி தனது ஆழ்மனதின் வேட்கைகளை நிறைவு செய்துகொள்வதே இப்படம். இந்த ஓவியனின் வாழ்வில் நடந்த பல அவமானங்கள், நிராகரிப்புகள், பலமற்றவன் இந்த சமூகத்தில் வாழ்வதில் உள்ள அவலம் ஆகியவற்றை வரிசையாக அடுக்கிச் செல்லும் இக்கதையாடலில், உண்மைபோன்று காட்டப்படும் புனைவுதான் வாழ்க்கை என்பதை சொல்கிறது. ஒரு உடலுக்குள் கட்டமைக்கப்பட்ட மனசாட்சி என்பது எப்படி சுயதணிக்கை மற்றும் கண்காணிப்பினை கொண்ட கார்ட்டீசியன் தியேட்டராக செயல்படுகிறது என்பதையும் பிராய்டிய வேட்கை-நிறைவு பிம்பங்களின் பாதுகாப்பு செயலியக்கமாக மனப்புனைவுகள் எப்படி செயல்படுகிறது என்பதையும் சொல்லும் படம். இப்படத்தில் இந்த மனசாட்சியும், மனமும் உரையாடும் காட்சியின் நாடகீயத்தன்மை ஒரு துப்பாக்கி முனையில் கதையை சொல்லி, இறுதியில் மனசாட்சியை கொன்றுவிட்டு வெளியேறும் மனம், தொடர்ந்து தன்னை அவமதித்தவர்களை வரிசையாக கொன்றுவிட்டு பிறகு யதார்த்தநிலைக்கு திரும்பிவிடும்.

படத்தின் நிகழ்தளம் என்பது யதார்த்தம் அல்ல. அது புனைவான மனோவியல் யதார்த்தம். ஒரு ஆழ்மனப்பரப்பிற்குள் ஓடும் பிம்பங்களின் நாடகீய இயக்கமே இப்படம். இதில் ஆழ்மன இயக்கத்தில் நகரும் பிம்பங்களின் தொடர்ச்சியை ஒரு பெண்ணால் கேமிரா கொண்டு தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது. பொதுவாக நாயக பிம்பம் என்பது நாயகிகளின் விழித்திரை என்கிற இயக்க பரப்பிற்குள் செயல்படுவதை தமிழின் பல நாயகபிம்ப படங்களைக்கொண்டு உணரலாம். குறிப்பாக எம்ஜியார், பாக்யராஜ், சத்யராஜ் படங்களில் ஒரு பெண் விழிக்குள்தான் இந்நாயகர்களின் இயக்கம் நிகழ்வதாக ஒரு உள்ளார்ந்த பிம்ப இயக்கம் இருப்பதை உணரலாம். நாயகனின் எல்லா செயல்களையும் ஒரு பெண் விழித்திரைக்குள் அங்கீகரித்து நிகழும் புனைவியக்கமாக இருக்கும். இந்த பெண்விழி என்பதின் மீ-காணுதலை ஒரு கேமராவாக மாற்றி படம் முழுவதும் அக்கேமரா நாயகனை சுற்றி சுற்றி ஒரு பெண்ணால் இயக்கப்படுவதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண்விழி இப்படத்தில் ஒரு கட்டத்தில் கொல்லப்பட்டுவிடுவதன்மூலம், அந்த மீ-காணுதலின் அரசியல் விமர்சிக்கப்படுகிறது.

clip_image002[8]2001-ல் எடுக்கப்பட்ட அட்ரஸ் அந்நௌன் (Address Unknown (2001)) அமெரிக்க இராணுவத்தால் கலப்பினமாக உருவான ஒருவனிலிருந்து துவங்கும் கதை. அமெரிக்க ராணுவ முகாம் ஏற்படுத்தும் பண்பாட்டு தாக்கம் என்கிற பின்புலத்தில் விரிந்து செல்கிறது. இப்படத்தில் கண் என்பது ஒரு பாலியலுக்கான காம-பிம்பமாக காட்டப்படுகிறது. முதல்காட்சியில் ஒரு விளையாட்டு துப்பாக்கி தயாரிக்கப்படுவது குளோஸப்பில் துவங்கி, அதை தனது தங்கையின் தலையில் வைத்து பழத்தை சுடுவதாக அவளது கண்ணை சுட்டு அவளது ஒருவிழி தெறிப்பதில் துவங்குகிறது. இக்காட்சியின் பிம்ப செயல்பாடு என்பது, அமெரிக்க ராணுவத்தின் ஊடுறுவல் ஏற்படுத்தும் கலாச்சார தாக்கத்தில், துப்பாக்கி என்பது விழிப்பாவையை போக்கும் ஒரு காம சொல்லாடலாக உணர்த்தப்படுகிறது. விளையாட்டு துப்பாக்கியின் இவ்விபரீதம், நிஜ ராணுவம் ஏற்படுத்தும் விபரீதத்தை சொல்லிச்செல்கிறது. விழியிழந்த பெண் தனது காம இச்சையை தீர்க்க நாயை தனது பாவாடைக்குள் விட்டுக்கொள்வதும், சுயமைதுனம் செய்துகொள்வதும், இரண்டு ரவுடிகளால் பாலியல் பலவந்தத்திற்கு ஆளாகுவதும், இறுதியில் அமெரிக்க இராணுவத்தானால் போதை உண்டு அவனோடும் இணைகிறாள். அமெரிக்க ராணுவத்தான் அவளது விழிப்பாவையை சரி செய்து தரவிரும்பவும் கண்பெறுகிறாள் அவள்.

clip_image002[10]முற்றிலும் நமது இயல்பான புலன் உணர்வால் உள்வாங்கமுடியாத பிம்பங்களின் கொடூரம் அந்நாட்டின் காலனியம் உருவாக்கி உள்ள மனச்சிதைவை விவரிப்பதாக உள்ளது. இயைபு திரிந்த போர் உருவாக்கிய மனங்களின் கொடூரம். நமக்கு போரின் வலியை உணர்த்திச் செல்கிறது. மகன் தாயின் முலையை அறுத்தல், அவளது கள்ளக்காதலனை, நாயைப்போல நாய்களின் பார்வையில் வைத்து கொல்லுதல், தற்கொலை செய்த மகனை தனது வாழிடத்தில் வைத்து உண்ணுதல்.. இப்படி பழகிய புலனுணர்விற்கு அப்பால் வரும் இப்பிம்பங்கள் தூய்மையான போரில் உறைந்த நமது காலத்தின் பிம்பங்களாக நம் கண்முன் விரிகிறது. போர்க்காலத்தின் கொடூரங்கள் பிம்பமாக்கப்பட்ட இப்படத்தில், போதைதாண்டிய காதலை வலியுறுத்தி, தனக்கு கிடைத்த கண்ணை, காதலனுக்காக தானே குத்திக்கொண்டு விடும் பெண்ணுடன் முடிகிறது. படத்தில் ஏற்கனவே அமெரிக்க இராணுவத்தான் ஒருவனால் பிள்ளையை பெற்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு ஒரு பழைய பேருந்தில் வாழும் தாய் மகன் கதையில் துவங்கும் படம், மற்றொரு அமெரிக்கனால் கையகப்படுத்தப்படும் பெண் அவனிடமிருந்து விலகி காதலனை சந்திப்பதாக அந்த வட்டம் முடிகிறது. முகவரி அற்றவர்களாக மாற்றப்படும் இராணுவ தாக்குதல்களினால் உருவாகும் வன்முறையைவிட, பண்பாட்டு தாக்குதல் உருவாக்கும் சிதைந்த மனிதர்களின் மனநிலையை காட்சிப்படுத்தும் இப்படத்தில், கண் என்பதன் பிம்பம் முற்றிலும் நமது கண் என்கிற புலனை தாண்டிய ஒரு சினிமாட்டிக் புலனாக கட்டமைக்கப்பட்டுள்ளது. காலனிய எஜமானர்கள் பரப்பும் கலாச்சார ஏகாதிபத்தியத்தை நுட்பமாக சித்தரிக்கும் இப்படம், எப்படி உடல்-பாலியல் தளத்தில் தனது காலனிய அரசியலை கட்டமைக்கிறது என்பதை வெளிப்படுத்திக்காட்டுகிறது. நமது புலனிற்கு ஒரு சவாலாக அமைந்த பிம்பங்களின் தொடர் இயக்கமாக உள்ள இப்படம் உண்மையில் காலனிய கலப்பினமாதலில் முகவரி தெரியாதவர்களைப் பற்றியது.

கோஸ்ட் கார்ட் (The Coast Guard (2002)) - பூமியில் பிரிக்கப்பட்டுள்ள ஒரே பகுதி கொரியப்பகுதி எனத்துவங்கும் இப்படம், போருக்கு பிறகு தென்கொரியாவின் கடற்பகுதியை உளவாளிகளின் ஊடுறுவலில் இருந்து பாதுகாக்கும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ஒருவன், எல்லை தாண்டி புணர்ச்சியில் ஈடுபடும் இரு காதலர்களில், அந்த காதலனை உளவாளி என தூரத்திலிருந்து பார்த்து சுட்டுக் கொன்றுவிடுவான். அக்காட்சியில், அப்பெண் கீழே இருக்க அவள் மேல் படர்ந்து புணரும் அக்காதலன், ஒவ்வொரு முறையும் மேலே எழும்பி தனது உடலை அசைத்து இயக்குவது, ஒரு உளவாளி பதுங்கி பாறைக்கு மேல் உளவு பார்ப்பதைப்போல காட்சிப்படுத்தப்பட்டு, அதனால் அவர்களை சுட்டுவிடுவான், ஒரு தேசப்பற்றாள இராணுவ வீரன். இறந்த காதலன் அவளோடு புணர்ந்தநிலையில் அவள்மீது ரத்தவெள்ளத்தில் சரிய, உச்சப்புணர்ச்சியில் நிகழ்ந்த மரணத்தால் மிரண்ட அந்த பெண், அவ்வுடலை தள்ளி விட்டு அவனது கைகளை பிடித்திழுக்க, அக்கை அவளோடு வந்துவிட, காதலனை துண்டான ஒற்றைக்கையுடன் எழும் அப்பெண்ணிற்குள் புணர்ச்சியும், காதலனின் பெயரும் உறைந்துவிட, அவளது காலம் அத்துடன் நின்றுவிடும். சினிமாவில் அதன்பின் வளரும் காலம், அவளது அந்த ஒற்றை வினாடியை தாண்டாத காலத்துடன் நகர்ந்து செல்ல, அந்த நிகழ்வை நடத்தியவன், இராணுவத்தால் பாராட்டப்பெற்றாலும், அவனது குற்ற உணர்ச்சியும், ஊரின் பேச்சும் அவளை மனச்சிதைவிற்கு ஆளாக்கிவிட, இராணுவத்தை விட்டு வெளியேறினாலும், தொடர்ந்து இராணுவத்தான் என்கிற நிலையை தாண்டமுடியாத காலம் அவனுக்குள் உறைந்துவிடும். இப்படி உறைந்த இரண்டு காலங்களுக்கு வெளியே உலகத்தின் காலம் இயங்க, இம்மூன்று காலங்களும் சினிமாவின் அறிதலுக்குள் சிக்கித்தவிப்பதே இப்படம்.

clip_image002[12]அந்த மனச்சிதைவான பெண், தனது சிதைவை தனது அண்ணனிடம் வெளிப்படுத்தும் இடத்தில் உடல்குறித்து வைக்கப்படும் பிம்பம் முக்கியமானது. அவளது அண்ணன் முன்பு அவள் தனது குட்டைப்பாவாடையை தூக்கிக்கொண்டு மூத்திரம் கழிப்பாள். மூத்திரம் பெய்தல் என்பதன்மூலம் பெண்ணுடல் ஒரு வெற்று பிம்பமாக ஆகிவிடுகிறது. வெறுமனே ஆன ஒரு உடல்.. எல்லா உணர்வுகளையும் விட்டொழித்த உடலாக.. தன்னிலையற்ற உடலாக மாறி, நாம் விரும்பி வைத்துள்ள உடலையும் மாற்றியமைக்கிறது. அதன் ஒலி, அதன் இயக்கம் அதன் எல்லா வகையான விருப்பு, வெறுப்புகள் என்ற வகைமைகளும் இனிமேல் நாம் உருவாக்கி வைத்துள்ள சிறையிலிருந்து நீக்கப்பட்டு அது சினிமாவால் படைத்தளிக்கப்பட்ட ஒரு உடலாக மாறிவிடுகிறது. அப்பெண்ணுடல் காமத்தால் ஒரு உடலாக மாறிவிட்ட நிலையில், அந்த ஆணுடல் கொலையால் ஒரு உடலாக மாறிவிடுகிறது. ஆண், பெண் உள்ளிட்ட எந்த ஒரு தன்னிலையுமற்ற இரு உடல்கள், தன்னிலை உள்ள உடல்களாக சினிமாவிற்குள் உள்ள உடல்கள், பார்க்கும் நம் உடல்கள் இவற்றை கேள்விக்கு உட்படுத்துவதாக மாறிவிடுகிறது. உடலும் அதன் சதையும் சினிமாட்டிக் உடலாக சதையாக மாறிவிட நமது சதை மற்றும் உடலுடன் அந்த உடலை இணைத்து, அதன் சதையையும், உடலையும் பெற்றுவிடும் ஒரு “பாதிப்பை“ அது நிகழ்த்திவிடுகிறது.

clip_image002[14]இப்படத்தின் மற்றொரு பிம்பம், பலராலும் பாலியல் புணர்ச்சி செய்யப்பட்ட அம்மனநிலை சிதைந்த பெண் வயிற்றில் வளரும் சிசுவை, பலவந்தமாக அவளது வயிற்றிற்குள் கைவிட்டு வெளியேற்றியதால், குருதி சொட்ட நடந்து வந்து வீட்டில் உள்ள மீன்தொட்டியில் உள்ளே இறங்கி, அத்தொட்டி முழுவதும் உள்ள நீர் செந்நிறமாக அதில் உள்ள கருப்பாக ஆண்குறிபோன்ற வடிவம் கொண்ட ஒரு மீனை எடுத்து பச்சையாக கடித்து தின்பாள். இயல்வாழ்வில் நம்மால் பார்க்கவோ அல்லது சிந்திக்கவோ முடியாத இந்த பிம்பம், இவ்வுலகின் ஒட்டுமொத்த உறவும், லிங்கமையவாதத்தால் ஆண்குறி வேட்கைக்கானதாக கட்டமைக்கப்பட்டதற்கு எதிரான ஒரு உடலின் வன்முறையாக இங்கு வெளிப்படுகிறது. இது நமது உடல்நிலையில், காமம் என்பதன் குரோதம் எப்படி ஆண்மையமாக செயல்படுகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது. அந்த பிம்பம் நமக்கு ஏற்படுத்தும் அசூசைதான், ஒரு உடல் மீதான மலர்ச்சியான உறவின் சாத்தியப்பாட்டை உணர்த்துவதாக உள்ளது. நுட்பமாக இராணுவம் என்பதை இந்த ஆண்குறியாக பிம்பப்படுத்துவதே இப்படத்தின் கதையாடல் எனலாம்.

Bad Guy (2002) – வணிகரீதியாக வெற்றியைத்தந்த இப்படம், கிம் கி-டுக்கை ஹாலிவுட் படஉலகம் பேசும்படி செய்தது. இப்படத்தின் நாயகனாக வருபவரின் நடிப்பும், அவரது உடல்மொழியும், மனதில் அப்படியே உறைந்துபோகும் ஒன்று. அவ்வளவு நுட்பமாக செதுக்கப்பட்ட ஒரு பாத்திரம் அது. முகத்தில் சமூக புறக்கணிப்பால் உருவான ஒரு ஆழ்ந்த அழுத்தமான சோகம், வெறுப்பு, குரோதம், அதே நேரத்தில் அன்பிற்காக ஏங்கும் ஏக்கம், என ஒட்டுமொத்த உணர்வை முகத்தில் தேக்கி நிற்கும் இப்பாத்திரம், ஒரு பாலியல் தரகன். கிம் கி-டுக்கின் பாத்திரங்கள் எதுவும் மனம் மாறி சமூவயமாகி திருந்துவதோ, clip_image002[16]உபதேசிப்பதோ இல்லை. இறுதிவரை தனது காதலியைகூட காமத்தரகனாக இருந்து விற்பவனாக வரும் இப்பாத்திரம் சமூகப்புறக்கணிப்பின் நுட்பமான வார்ப்பு. ஒரு பார்க்கில் தனது காதலனுக்காக காத்திருக்கும் அழகிய இளம்பெண் ஒருத்தியால் வசீகரிக்கப்பட்ட இவன், அவள் இவனைக்கண்டு அஞ்சுவதால் ஒருவித உணர்விற்கு ஆட்பட்டு, அவளை பொது இடத்தில் முத்தமிட்டுவிடுவான். பொது இடத்தில் நடந்த இச்சயெலால் அங்கு வந்த இராணுவத்தினர் அவனை அடித்து அவளிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லும்போது, இறுதிவரை தனது செயலுக்காக வருந்தாதவனாக இருக்கும், அவனை அப்பெண் காறி உமிழந்து அவமானப்படுத்திவிடுவால், அப்பெண்ணை தனது சதிவலைக்குள் கொண்டுவந்து ஒரு விபச்சாரியாக மாற்றி, அவளது செயல்களை வெளிப்புறம் வழியாக பார்க்க முடிந்த கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டு இருப்பான். ஒருவகை கண்காணிப்பு என்பதன் வாயரிஸ்டிக் பாலின்பமாக அதுவே ஒரு மீ-காணுதலாக மாறிவிட்டிருப்பதை நுட்பமாகச் சொல்லிச்செல்லும் கதையாடல். இங்கே போர்ண் படங்கள் உருவாக்கும் மீ-காணுதல் நுட்பம் எப்படி ஒரு உடலை பாலியல் விழைச்சு எந்திரமாக கட்டமைக்கிறது என்பதை உருவகித்துக் காட்டுகிறது இப்படம். போர்ண் படங்கள் பார்ப்பதன் வழியாக உருவாகும் வாயரிஸ்டிக்-இன்பம் பார்வையாளர்கள் அனைவரையும் பாலியல் தரகர்களாக விமர்சிப்பதாக இதனைக் கொள்ளலாம். அவனால் பாலியல்-தொழிலாளியாக மாற்றப்பட்ட அப்பெண் அவன்மீது வெறுப்புக் கொள்வதும், அந்த வெறுப்பு அவன் மீதான் காதலாக மாறுவதும்தான் இப்படத்தின் முக்கியமான சரடு எனலாம். காதலியின் உடல் புனிதம், பரத்தையின் உடல் அசுத்தம் போன்ற சமூக அறமதிப்பீட்டு நிறுவனங்கள் உடலின் அங்கங்களில் உருவாக்கி உள்ள மேல்-கீழ் படிவரிசையை கவிழ்த்துவிடுகிறது இப்படம்.

”இயற்கை எழில் சூழ்ந்த ஜீஸான் நீர்நிலையில் (Jusan Pond) அமைந்துள்ள ஆலயத்தில் வாழும் பௌத்த துறவி வழியாக நம் வாழ்வின் மகிழ்வு, கோபம், துயரம் மற்றும் இன்பம் ஆகியவற்றை விவரிப்பதே என் நோக்கம்” என்று கிம் கி-டுக்கால் எடுக்கப்பட்ட படம் Spring, Summer, Fall, Winter... and Spring (2003). clip_image002[18]இயற்கை எழிலின் ஒரு ஓவியமாக கேமராவால் வரையப்பட்ட படம் இது. ஒரு மனித வாழ்வில் நிகழும் நான்கு முக்கியகாலங்கள் பருவகாலங்களுடன் ஒப்புமை செய்து எடுக்கப்பட்டுள்ளது. பௌத்தம் சொல்லும் பிறவிச்சுழற்சி என்பதை தனது வழக்கமான காமம், குரோதம் இரண்டைக்கொண்டு விவரிக்கிறது இப்படம். பௌத்தம் தனக்குள் ஒடுக்கிய இவ்விரண்டு இயல்பூக்கங்கள் எப்படி வெளிப்பாடு கொள்கிறது என்பதை நுட்பமாக விளக்கிச் செல்கிறது. பருவகாலங்களும் உடலின் உண்ர்வுகளும் கொள்ளும் கால-பிம்பங்களைக் கொண்டு பெளத்தத்தை விளக்க முனைகிறது. இங்கும் பௌத்தம் என்பது ஒரு கருவியாக எடுத்துரைப்பிற்கான புறவடிவமாக எடுத்தாளப்பட்டாலும், உள்ளார்ந்து பேசப்படுவது, உடலின் உட்செறிந்துள்ள இந்த இயல்பூக்கங்கள் எப்படி மனிதஉடலை வழி நடத்துகின்றன என்பதைதான். ஒரு உடல் தான் ஏற்றுகொண்டுவிட்ட பிம்பத்தை எப்படி காலத்தில் வைத்து நகர்த்த முனைகிறது என்பதையும், அதற்காக அது கொள்ளும் துயரமும்தான் வாழ்தல் என்பதை சொல்வதாகிறது. உலகம் விருப்பையும், அதை அடைவதற்கான வேட்கையையும் கொண்டது என்கிற நிறுவனமயத்தின் அடிப்படையை விவரித்த பௌத்தம் எப்படி சமூகத்தின் மற்றொரு நிறுவன அங்கமாகி உள்ளது என்பதை விமர்சிப்பதாக உள்ளது. இப்படத்தின் குறியீடுகள், பிம்பங்கள் விரிவாக சிதைச்சங்கேதப்படத்தப்பட வேண்டியவை. பருவகாலங்கள் என்பது எப்படி ஒரு காஸ்மிக் விசையின் உள்ளார்ந்த ஆற்றலாக சமூகத்தின் மனப்போக்குகளை உருவாக்கி பெருக்குகிறது என்பதே இப்படத்தின் மையமான பிம்பமாக்கலின் உந்துவிசை. பருவகாலங்களை உடலின் உணர்வுகளுடன் ஒப்புமைப் படுத்துகிறது இப்படம்.

2004-ல் எடுக்கப்பட்ட சமாரிட்டன் கேர்ள் (Samaritan Girl (2004)) – இரண்டு மாணவிகளின் பாரிஸ் போகும் கனவில் துவங்குகிறது. கிம் கி-டுக்கிற்கு ஐரோப்பா குறிப்பாக பாரிஸ் என்பது ஒரு முக்கியமான புலனறிச் செயல்பாடாக இருந்து, அதன் மீதான பல சரடுகளை அடுக்கும் கதையாடல்களை உருவாக்கிச் செல்வதாக உள்ளது. ஐரோப்பா மீதான ஒருவித காதல்-வெறுப்பு உறவைக் கொண்டவராக உள்ளார். இம்மாணவிகளில் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாரிப்பார். மற்றொருவர் ஒரு காவல் அதிகாரியின் மகள். இclip_image002[20]ருவரில், பாலியல் தொழில்புரியும் பெண் தனது கனவு பிம்பமாக கொள்வது இந்திய தாசியாக இருந்த பண்டைய வசுமித்ரா என்கிற பாத்திரத்தை. வசுமித்ரா எப்படி பாலியலை ஒரு தொழிலாக அன்றி கலையாக கையாண்டார் என்பதை விளக்கும் அப்பெண், தானும் அதனை ஒரு கலையாக கையாள்வாள். பரத்தமை என்பது விக்டோரியன் அறத்திற்குள், கிறித்தவ அறத்திற்குள் பாவமாக குறியிடப்பட்ட நிலையில், கீழைத்தேய அறத்தில் அது ஒரு கலையாக பரிணமித்திருப்பதை சொல்வதாக உள்ளது. இந்த தோழி காவல்துறையின் கெடுபிடியில், தனது உயிரை ஒரு விளையாட்டுப்பொருளாக மாற்றி மாடியிலிருந்து கீழே குதித்துவிடுவாள். தோழி இறந்த பின்னும் அந்த தோழியாக உருவாகுதல் என்பதாக தொடரும் இப்படம், பேர்ட் கேஜ் படத்தின் நகர்புறக் கதையாடல் எனலாம். இதிலும் உடல் என்பதில் உள்ள காமம் எப்படி நுகர்வாக மாறுவதும், அது மற்றொருவரின் குரோத உணர்வை அதிகரிப்பதாகவும் நகர்வது. பெண்ணுடல் காமமாகவும், ஆணுடல் அதனை காப்பதற்கான குரோதம் கொண்டதாகவும் உடல் பற்றிய பிம்பங்களை திரையில் உருவாக்கிகாட்டுவதே கிம் கி-டுக்கின் கதையாடல் உத்தி எனலாம். நிறுவனம், அதற்கு வெளியில் உள்ள உடல்கள், நிறுவனமற்ற உடல் பிம்பத்திற்குள் நிறுவன உடல் பிம்பங்கள் இடம் மாறிப்போவதும், தடம் பற்றி தன்னை உருவாக்கிக் கொள்வதுமான கதையாடல்கள் இவை. ஆண் பெண் என்கிற உடல்கள் காமம் குரோதம் கொண்டும் காதல் போர் கொண்டும் பிம்பமாக்கப்படுவதே இவரது படங்களின் மையமான உத்தி எனலாம்.

3-Iron (2004) –காலியான வீடு (empty house) என்ற பொருள்கொண்ட இப்படம் சினிமாட்டிக் அறிதலில் ஒரு முக்கியமான படம். இரவு என்பதே இப்படத்தின் clip_image002[22]பிம்பச் செயல்பாடு எனலாம். இரவை பிம்பமாக்கியதன்மூலம், முற்றிலும் புதியதான ஒரு புலனறிச் செயல்பாட்டை செய்கிறது இப்படம். வழக்கமாக காமம், குரோதம் என்பதை இரவின் அகவெளியிலிருந்து வெளியேற்றி பகலின் புறவெளியில் வைத்து பேசுகிறது. இரவுடன் தொடர்புடைய கள்ளமாக அறியப்படும் காம உணர்வை, கொலை, திருட்டு ஆகியவற்றை இரவின் உள்-இருளின் ஒரு அழகியல் செயல்பாடாக மாற்றிவிடுகிறது. யாருமற்ற வீட்டில் இரவில் தங்கிச்செல்லும் ஊமை நாயகன், அவனோடு இருளில் உள்கட்டில் ஒடுக்கப்பட்ட பெண், இவள் வெளிச்சத்தில் தன்னை விளம்பரப்பொருளாக பரவச்செய்யும் விளம்பரநாயகி, ஆனால், கணவனால் வீட்டிற்குள் பூட்டப்பட்டவள். இவ்விருவருக்கும் இடையில் உருவாகும் உறவே இரவுதான். இரவு என்கிற காலத்தை அதன் உள்அழகை பிம்பமாக்கியதன்மூலம், நாம் காணாத ஒரு இருள் உலகை வெளிச்சமாக்கிவிடுகிறது இப்படம். கால-பிம்பம் என்பதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டு. காலம் என்பது இதில் உடனடித்தன்மையாக வரலாறு அற்று கணங்களாக வந்து போகிறது. இரவு என்கிற காலத்தின் பாதியாய் உள்ள இருள் பகுதி காதலின் பிம்பமாக ஆக்கப்பட்டு கண்முன் இயங்கிச் செல்கிறது. கணவன் இருப்பை மறுதலித்து கள்ளமாக உள்ள காதல் நிழலிருப்பாக அதுவே நிஜ இருப்பாக ஒரு மாயத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது இறுதியில். “it’s hard to tell that the world we live in is either a reality or a dream” என்ற வாசகத்துடன் முடியும் இப்படத்தில், இறுதிக்காட்சியில் காதலனுடன் இணையும் இருவரும் எடை எந்திரத்தின் மீது நிற்க, அது சுழிநிலையில் இருக்கும். எடையற்றதான ஒரு நிலையை அடைந்துவிட்டதான காட்சியை காட்டும் இப்படம், வாழும் உலகு புனைவா? கனவா? நிஜமா? நிழலா? என்பதை விளக்குவது கடினமானது என்கிற கேள்வியுடன் முடிகிறது.

The Bow (2005) மிகவும் கலைத்தரத்துடன் நிலப்பரப்பே இல்லாமல் நீர்ப்பரப்பில், ஒரு பெயரற்ற கடலில் உள்ள ஒரு பழைய கப்பலில் எடுக்கப்பட்ட படம். ஐசல் படத்தின் சாயலில் எடுக்கப்பட்ட படம் என்றாலும், இதில் காதல் என்பதன் இளமை முதுமை பின்னணிக்கொண்டு அலசப்படுகிறது. சிறுமியாக உள்ளபோது தனது கப்பலுக்கு எடுத்துவந்து வளர்க்கும் ஒரு முதியவர், அவளை திருமணம் செய்ய 17வயதிற்காக காத்திருப்பார். அக்கப்பலில் மீன்பிடிப்பதற்காக வரும் இளைஞன் ஒருவனுடன் அப்பெண்ணிற்கு காதல் உருவாகிவிடும். உண்மையில் அப்பெண் அந்த இளைஞனை பார்த்தபின்தான் தனது “தானை“ வயதை, தனது பாலினத்தை உணர்வாள். அதன்பின் அந்த முதியவரின் தொடுகை என்பது முந்தைய தந்தமையிலிருந்து அவளது உணர்வில் விலகிவிடும். இது ஒருவகை இடிபலுக்கு எதிராக தந்தை மகள் மேல் கொள்ளும் காதலாக, தந்தமை என்பதை கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளது. தானே வளர்த்து தானே மணக்க விரும்பும் நிலை. அப்பெண் அந்த இளைஞனுடன் கொள்ளும் உறவும், அந்த முதியவன் கொள்ளும் உறவும் ஒரு முக்கோணக்காதலாக வடிவம் கொண்டாலும், மனித மனத்தின் எதிர்மையாக உள்ள பண்புகளை விளக்குவதாக வில் என்கிற கருவி ஒரு முக்கிய குறியீட்டு பிம்பமாக வருகிறது. அக்கருவி, அப்பெண்ணை பாதுகாப்பதற்கான கொலைக்கருவியாகவும், அப்பெண் மீதான காதலை சொல்லும் இசைக்கருவியாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒருவித வன்முறை-காதல் என்கிற இருமையின் வேறுபட்ட பரிமாணங்களை விளக்குவதாக உள்ளது. பாலியல் உந்தத்தின் குறியாடாகி நிற்கும் அந்த வில்லும், அம்பும், காதலின் குறியீடாகி மாறி நிற்கும் இசைக்கருவியாகவும் இருமை தன்மைக் கொண்டிருப்பதால், மனித மனதின் உள்ளார்ந்துள்ள இந்த இரு உணர்வுகளின் இருமையாக வெளிப்படுகிறது. வில் என்பது குறி சொல்வதற்கான ஆயுதமாகவும் இதில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் அழகியலுடன் படமாக்கப்பட்டுள்ள இதன் காட்சிகள், முற்றிலும் புதியதொரு உணர்வெல்லைக்கு நம்மை இட்டுச் செல்பவையாக உள்ளது,

clip_image002[24]ஒலி-ஒளி பிம்பம் என்பதுதான் இப்படத்தில் செய்யப்பட்டுள்ள புதிய முயற்சி. வில்லின் ஒலியில் எழும் நாதம், வில்லின் நாணை மீட்டி அம்பை எய்துவதில் உள்ள ஒலி இவைதான் இந்த படத்தின் பிம்பமாக நம் மனதில் அலையை எழுப்பிச்செல்கிறது. இறுதிக்காட்சியில் அந்த முதியவரின் மரணத்தை குறிநிலைப்படுத்திய இசைமீட்டிய அம்பு, அப்பெண்ணொடு கொள்ளும் விர்ட்சுவலான புணர்ச்சி ஏற்படுத்தும் பிம்பம் காதலின் ஒருவகை தொன்மமாக்கலின் உணர்வை உருவாக்குவதாக உள்ளது. குறிப்பாக ஒரு ஆன்மீக-யதார்த்தமாக இக்காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியில் இவ் வாக்கியங்களுடன் படம் முடிவடைகிறது – Strength and a beautiful sound like in the tautness of a bow. I want to live like this until the day of I die. இசையும், உடலும், காமமும், காதலும் நீர்பரப்பின் பிரத்யேக விதிகளுக்குள் இயங்குகிறது. படத்தில் நிலம் பற்றிய ஒரு காட்சிகூட இல்லை என்பது படத்தை அறிந்துகொள்வதற்கான பிறிதொரு தளத்தை திறக்கிறது. நிலம் அங்கமுள்ள உடல் என்றால், நீர் அங்கங்களற்ற உடல். நிலத்தின் நிறுவன விதிகள் செயல்படாத நீர்ப்பரப்பில் நிகழும் கதையாடல்.

Time (2006) – காதலில் முக அழகும் அதன் வசீகரமும் ஏற்படுத்தும் உணர்வு என்ன? காதலுக்கும் அதற்கும் உள்ள உறவு என்ன? என்பதை சோதிக்கும் ஒரு வரைபட-ஒட்டு விளையாட்டே இப்படம். பிளாஸ்டிக் சர்ஜரியின்மூலம் அடையாளம் என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பும் நவீனகாலத்தை பிம்பமாக்கிவிடுகிறது. இதில் கதை இல்லை காலம் என்பதே கதையாகி clip_image002[26]உள்ளது. காதல் முகத்தின் அழகுடன் பொறுத்தப்பட்டதாக உள்ள சமூக அழகுணர்ச்சியை அடிப்படையாக கொண்டு அதனை விமர்சிக்கிறது இப்படம். தனது முகம் சலிப்பை ஏற்படுத்திவிட்ட்தால், தன் காதலன் மற்ற பெண்களை ரசிக்கிறான் என்கிற தன்னுடமை மனப்பிறழ்ச்சிக்கு (பொஸஸிவ்னெஸ் டிஸ்ஆர்டர்) ஆளான பெண், தன் காதலனை ரசிக்கும் பெண்களின் ஒவ்வொரு அங்கத்தையும் (கண்-காது-மூக்கு-வாய்) இணைத்து ஒரு முகத்தை பிளாஷ்டிக் சர்ஜரியில் உருவாக்கிக் கொள்வாள். தனது முகம் மாறிய நிலையில் காதலனை அணுகி புதியதொரு காதல் வாழ்வை துவங்குவாள். தனது பழைய காதலியின் நினைவில் உழலும் அவன், அவளது தன்னுடமை மனநிலை ஏற்படுத்திய சிக்கலினால், அவள் முகம்மாறியதை அறிந்து, தானும் தனது முகத்தை மாற்றி அவளிடமிருந்து மறைந்துவிடுவான். அவனது மாறிய முகத்தை தேடி மனப்பிறழ்ச்சி அடைந்துவிடுவாள் அவள். காட்சிகளும் ஒரே இடங்கள் ஒரே பெண் இரண்டு வேறுபட்ட முகங்கள் என்பதாக சலிப்பாகவே நகர்த்தப்படுகிறது. படத்தோடு நாமும் சலிப்படையும் ஒரு நகர்வை செய்கிறது இப்படம். ஆண் பெண் இருவரும் ஒருவர் மற்றவரிடம் விரும்புவது எதை? இருவரது வேறுபட்ட பால்-பேத உலகங்கள், கனவுகள், எதிர்பார்ப்புகள் என்பதாக விவரித்து செல்கிறது. நவீன காலம் எப்படி காதலில் சோர்வையும், அயர்ச்சியையும் வழங்குகிறது என்பதையும், புத்தாக்கம் செய்துகொள்ளமுடியாத ஒரு பழக்கப்படுத்தப்பட்ட வாழ்வின் அவலம்தான் இந்த காலம் என்பதை இவ்விருவரின் தீவிர உறவில் வைத்து பேசுகிறது இப்படம். நவீனகாலம் என்பது பழகிய சலிப்பும் அயர்ச்சியும் என்பதை ஒரு உணர்வாக காட்டிவிடுகிறது நமக்குள் இப்படம். ஐசல் என்ற படத்தில் காதல் என்பது ஆட்டுவிப்பு மன்பிறழ்ச்சியை (அப்ஸசிவ் டிஸ்-ஆர்டர்) பிம்பமாக்கினால், இதில் தன்னுடமை மனப்பிறழ்ச்சியை (பொஸசிவ் டிஸ்-ஆர்டர்) பிம்பமாக்கி உள்ளார் கிம் கி-டுக். ஒருவரது முகத்தை கிழித்து மாற்றும் அதிகாரத்தை எந்த அறக்கோட்பாடுமின்றி எடுத்துக்கொண்டுவிட்ட மருத்துவ உலகின் அறம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கும் படம்.

Breath (2007) – முந்தைய படத்தில் காதலின் சலிப்பை சொன்ன கால-பிம்பம் என்றால், இப்படத்தில் மனைவியின் சலிப்பை சொல்லும் கால-பிம்பம் எனலாம். கணவன் ஒரு பெண்ணோடு உறவு வைத்து உள்ளதால், மனம் பேதலித்த மனைவி, வாழ்வில் சலிப்புற்று தனது பிறழ்ச்சியை, ஒரு தூக்குத்தண்டனை கைதியுடன் களிக்கும் விளையாட்டே இப்படம். தொடர்ந்து clip_image002[28]தற்கொலைக்கு முயலும் ஒரு தூக்குத்தண்டனைக் கைதி, தொலைக்காட்சி மற்றும் மீடியாக்களால் மிகைப்படுத்தப்பட்டு மீ-யதார்த்த பிம்பமாக மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து வீட்டின் தனிமையில் தொலைக்காட்சியைத் தவிர வேறு புழங்குவெளியற்ற குடும்பத்தலைவி அல்லது மனைவியின் மீ-காணுதலில் அம் மீ-யதார்த்த பிம்பத்தொடு ஒரு உறவை உருவாக்கிக் கொள்வாள். அப்பிம்பத்தின் முன்னாள் காதலி என்று. தனது மீ-யதார்த்த பிம்பத்தால், அந்த கைதியை அவனது சிறையில் சந்தித்து அவனோடு தனது இளமைக்காலத்தில் மூச்சுமுட்டிய கதையை சொல்லி, அவனோடான தனது காதலை நாடகமாக நடத்திக்காட்டுவாள். இப்படத்தில் அவள் சிறை அறையை ஒரு சிமிலேட்டேட் பருவகால இயற்கைப்பகுதிகளாக உருவாக்கி, தானும் அப்பருவகால உடைஅணிந்து அதற்கேற்ப பாடல் ஆடல் என, ஒரு புதிய சிமிலேட்டேட் உலகை உருவாக்கி காட்டுவாள். இப்படம் போத்ரியார் சொல்லும் சிமில்க்ரா மற்றும் ஹைபர்-ரியலை உருவாக்கி காட்டமுனைந்த ஒருபடம்.

Dream (2008) – சினிமாவில் மட்டுமே சாத்தியமான ஒரு பேண்டஸிவகையான பின்நவீனத்துவப்படம் இது. கனவுக்கும் உண்மைக்குமான ஒளிப்பட விளையாட்டே இப்படம். கனவும் நிஜமும் தனது எல்லை கலைந்து ஒன்றாகிவிட்ட நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் தங்களது உறவின் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் கதை. இரண்டு காதல் ஜோடிகள், தன்னைவிட்டு விலகிப்போன காதலியின் நினைவில் வாழும் ஆணும், காதலனால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணும் ஒன்றிற்கு ஒன்று பொருந்திப்போகும் வகையில் கனவின் வழி உறவு கொள்கிறார்கள். ஆணிண் கனவில் வரும் காட்சிகள், தூக்கநடையாளராக உள்ள பெண்ணால் யதார்த்தத்தில் நடத்தப்படும். ஆண் கனவில் காணும் அவனால் நடக்கும் clip_image002[30]விபத்து, நிஜத்தில் அநத பெண்ணால் நடத்தப்பட்டு அதற்கு பொறுப்பானவளாக கைது செய்யப்பட்டுவிடுவாள். அவளை காப்பாற்ற முனையும் அவன், தனது கனவுதான் காரணம் என்பான். அவர்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தம் உருவாகும். அவன் கனவு காண்பதால், அவளுக்கு பிரச்சனை என்பதால், அவன் தூங்காமல் இருப்பதே தீர்வு என்பதால் தூக்கத்திலிருந்து தப்பிக்க அவர்கள் படும்பாடும் அதன் நீட்சியாக கொலை மற்றும் தற்கொலைவரை நீண்டுவிடும். கனவில் நிகழ்த்தப்படும் கொலைக்கு தண்டனை clip_image002[32]உண்டா? என்கிற ஒரு அவலச்சுவை நிறைந்த கேள்வி ஒன்றை எழுப்புவதன்மூலம், தண்டனை. சிறை என்கிற நிறுவனங்கள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறது. தூக்கம் என்கிற இயல்புணர்வு பற்றிய இப்படம், ஒருவரின் கனவு பிறிதொருவரின் வாழ்வு என்பதான ஒரு புதிய அறிதலை முன்வைக்க முனைகிறது. இப்படத்தில் சில காட்சிகள் சராசரி நிகழ்வுகளை தாண்டிய சினிமாவில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கொண்டதாக அமைந்து உள்ளது. இரண்டு காதல் ஜோடிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் ஒரு வெட்டவெளியில் உரையாடும் காட்சி என்பது நமது கற்பனையின் விரிவெல்லைக்கு அப்பாற்பட்டது. வழக்கமாக கிம் கி-டுக் காட்டும் காமம், குரோதம் என்பது இங்கு தூக்கம் மற்றும் கனவு என்பதாக பதிலீடாகி, கனவிற்குள் நிகழ்ந்து நிஜத்தில் வெளிப்படுவதாக உள்ளது. இறுதியில் கொலை நிகழந்தபின் குற்றவாளி யார்? கனவு கண்டவனா? நிஜத்தில் அதை நடத்தியவளா? என்கிற பிரச்சனை முன்வைக்கப்படுகிறது. உண்மையில் கொலைக்கான காரணம் அல்லது தூண்டுதல்தான் கொலையா? நிஜத்தில் நடந்ததுதான் கொலையா? இது ஒரு வகை பாராசைக்காலாஜியை போலச்செய்து பண்ணப்பட்ட படம். இப்படத்தின் கால-பிம்பம் கனவுதான். இறுதியில், வண்ணத்துப்பூச்சி வழியாக உயிர் பரிமாற்றம் நடைபெறும் காட்சி முற்றிலும் புதியதொரு உணர்வை தருவதாக உள்ளது.

தொடரும்)

-  ஜமாலன் (02-07-2011 – 05-09-2011) – நிழல் அக்.-டிசம்பர் 2011

1 comments:

Sundar சொன்னது…

Reading this article, reminded your writing and thinking. Thought of sharing with you, you may like it

http://www.tnr.com/article/books-and-arts/magazine/98567/jurgen-habermas-religion-philosophy?passthru=MThiMTY2YTY2NDNiY2MyYjFjOGU3NGQyMzI0MWZkYzI