அவர் இலக்கியவாதிகள் பற்றிய தொடராக எழுதிய நூல்வரிசைகளின் முன்னுரையில் தனது இலக்கியக் கோட்பாடு ரசனை சார்ந்தது என்று முன்வைத்துள்ளார். அது குறித்து தனது அடிப்படைகளை விரிவாக எழுதி உள்ளார். சாரமாக அதில் அவர்சொல்வது, "இலக்கிய விமரிசன அணுகுமுறையை ரசனை விமரிசனம் என்ற வகைக்குள் அடக்குவேன். இதன் அடிப்படைகளாக அமைவது என் சொந்த வாழ்க்கையனுபவங்களும், என் படைப்பனுபவங்களும், என் வாசிப்பனுபவங்களுமே." (பக்.3:முதல்சுவடு:ஜெயமோகன்:2003) இலக்கிய அளவுகோல் அவரது தனிப்பட்டரசனை சார்ந்தது என்றால், அதை மாண்டோ முற்றிலுமாக நிராகரிப்பவரே. அப்படி நிராகரிக்கும் இலக்கியவாதியை, ரசனைசார்ந்த விமர்சனமுறையில் தான் முன்வைக்கும் இலக்கியவாதியுடன் ஒப்பிடக்கூடாது. வாசித்தவரை அசோகமித்திரனின் இலக்கியக் கோட்பாடு ரசனைவாதமாக இருக்க வாய்ப்பில்லை. அவர் குறித்த விரிவான ஆய்வின்மூலமே அதைக் கண்டடைய முடியும்.
ரசனைவாதம் உயர்நவிற்சிக் கற்பனாவாதம் மற்றும் சமூகத்தின் வாழ்நிலையில் புழங்கும் அழகியலுடன் அதிக உறவு கொண்டது. அதன் மற்றொரு பிரச்சனை எது ரசனைக்கு உரியது என்பதை வரையறுப்பதும் அதன் வழியாக கீழ்-மேல் மதிப்பீடுகளை உருவாக்குவதும். அதுதான் மக்களை அதிலும் இலக்கியம் அறியாத எளிய மக்களை சாமான்யர்கள் என்றும் அவர்களது ரசனை தாழ்வானது என்றும் சொல்ல வைப்பது. ரசனை ஒரு சமூக அடையாளமாக உள்ளது. அதன்வழியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும், மேல்நிலையில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதுதான் தன்னை அறியாமல் தன்னை ஒரு அதிகார மையமாகக் கட்டிக்கொள்கிறது. இலக்கியத்தைத் தீர்மானிக்கும், உற்பத்தி செய்யும் மையமாக மாற்றிவிடுகிறது. தனது ரசனைக்கு ஒத்துவராத ஒன்றை நிராகரிக்கவும் அதற்கு இருப்பே இல்லை என்கிற எதேச்சதிகாரக் குரலாக வெளிப்படுகிறது. ரசனைவாதத்திற்குள் இத்தனை சிக்கல்கள் உள்ளன. மாண்டோ இத்தகைய ரசனைவாதத்தை முற்றிலும் நிராகரித்தவர். அதுதான் இலக்கியத்தில் அவர் நிகழ்த்திய கலகம். அவர் ஒருவகையில் அழகியலுக்கு எதிரானவர் பிறிதொருவகையில் விளிம்புநிலை அழகியலை முதன்மைப்படுத்தியவர். பாலியல் தொழிலாளி (விலைமாது), பெண் தரகர்கள் துவங்கி தன்னை காக்க வந்த பணிப்பெண்ணையே உறவு கொள்ளும் காந்தியவாதியான பேராசிரியர் வரை ஒதுக்கபட்ட விளிம்பிற்கு தள்ளப்பட்டவர்கள் பற்றி எழுதியவர். (மாண்டோ குறித்து மிகவிரிவாக 2 கட்டுரைகள் ஏற்கனவே எழுதிவிட்டதால் இங்கு விரிவாக சொல்ல தவிர்க்கிறேன்.)
ஜெயமோகனின் பதிலில் முதல்வாக்கியம் இப்படி துவங்குகிறது. "18 வது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப் பார்க்கும்கதை. ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்த்தால் அந்தக்கதையின் முக்கியத்துவம் தெரியும். நாம் அந்த வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக்கொள்வதுவரை எதையுமே கவனிக்காமல் நம் அன்றாட எளிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம்." எந்த வரலாற்று தருணத்திலும் நிகழ்வின் பாத்திரமாக உருவாகுதல், அச்சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் நிர்பந்தமாகிறது. வரலாற்றை மீறி நிற்கமுடியாது என்பதால் அதன் உருவாகுதலில் ஓர் அடையாளமாக எஞ்சுதல் நிகழ்கிறது. அந்த "வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக் கொள்வதுவரை", என்று எழுதுவதன் உள்ளமைப்பில், வரலாற்றில் நாம் முட்டாமலும் போகலாம் என்கிற தேர்வு சாத்தியம் இருக்கிறது என்பதே. அப்படி ஒரு சாத்தியத்தை வரலாற்றின் நிகழ்வுக் கணங்கள் யாருக்கும் தருவதில்லை. வரலாற்று எந்திரம் இயங்கத் துவங்கியபின் சமூகத்தின் அனைத்து எந்திரங்களையும் அது முட்டி மோதி உரசி தள்ளி இயக்குகிறது. தனிமனிதன் என்கிற உடலியந்திரம் அதனுள் அரைபடுகிறது. தனிமனிதனின் எந்த விருப்பமும், வரலாற்றின் விருப்பத்தில் ஒன்றை தேர்ந்து அதன் அடையாளத்தை பெற்று இயங்குவதை தவிர ஏதுமற்றதாக மாறிப்போகிறது. இதைத்தான் மாண்டோவின் கதைகளில வரும் சாமானியர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் எந்த அறப்பிரக்ஞையும் அத்தகைய தருணங்களில் செயல்படாது. காரணம் பொது அறம் ஒன்று அங்கு இல்லை. அரசியல் கலவரம் பொதுஅறமற்றது. அக்கலவரங்களில் வரலாறு முன்வைக்கும் அறத்திற்குள்தான் தனிமனிதன் நிற்க நிர்பந்திக்கப்படுகிறான். அப்போது சாமான்ய பிரக்ஞை மற்றும் அதிமானிட பிரக்ஞை என்பதெல்லாம் அந்த வரலாற்று அறத்திற்குள் அடிபட்டு போய்விடும். மனிதன் எந்த தயாரிப்பும் அற்ற கைவிடப்பட்ட நாடக பாத்திரமாக மாறிவிடுகிறான்.
மாண்டோ இங்குதான் நேர்மையாக அறம் பற்றிய இத்தகைய சாராம்சப் பார்வைகளை கேள்விக்கு உட்படுத்துகிறார். இத்தகைய கேள்விகள் நாடக உச்சமாக தெரிவது, இலக்கியம் பற்றிய பழகிய “அழகியல் ரசனைவாத“ பார்வையான "உன்னத உணர்வு" "உள்ளொளி" "பொறி" "சுயவிசாரம்" "அறப்பிரக்ஞை" போன்ற காரணிகளால்தான். இலக்கியம் தனிமனிதனை சமூகவயப்படுத்துகிறதே தவிர சமூகமனிதனை தனிமனிதவயப் படுத்துவதில்லை. 18-வது அட்சக்கோடு நாவலில் வரும் சந்திரசேகரன் இறுதியில் "அறப்பிரக்ஞை" கொள்வதாகவும் அதனுடன் அவன் தனித்து வாழப் போவதாகவும் காட்டுவதாக குறிப்பிடுகிறார். அவரது வாதப்படி இப்படி அவன் பெறும் அறப்பிரக்ஞையால், வரலாற்று தருணத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சாமான்யன், காந்தி கொலைக்கான தவறான ஊகத்தில் (இத் தவறான ஊகம் அன்றைய இந்துக்களை இந்துத்துவவாதிகளாக கருத்தியல் கட்டமைப்பு செய்தது என்பதுவேறு) இந்துவாக அடையாளம் பெறும் அவன், தனக்குள் உள்ள ஆழத்து அறத்தைக் கண்டுகொள்கிறான். அதாவது அடையாளம் துறந்த சமூக அறத்திற்குள் மனிதர்கள் அனைவரும் சமம், தனித்த அடையாளம் அற்றவர்கள் என்பதை உணர்கிறான் என்பதே பொருள். இங்கு அசோகமித்திரன் துவங்கி ஜெயமோகன் வரை அறமாக முன்வைக்கப்படுவதின் உள்தர்க்கம் “மதச்சார்பின்மை” என்பதே. மதச்சார்பின்மை என்கிற கருத்தியலை இந்திய குறிப்பாக இந்துத்துவ அரசியல், பெரும்பான்மை/சிறுபான்மை என்கிற புள்ளியியல் சார்ந்த ஒன்றாக மாற்றி உள்ளது. அதாவது பெரும்பான்மையினரின் பரிவில், பாதுகாப்பில் வாழும் உயிரிகளாக சிறபான்மையிரைக் கருதுவது என்கிற ஒரு பெருந்தன்மை அல்லது பெருநோக்காக உள்ளது. இது ஒருவகை மிரட்டலை, அச்சத்தை உள்ளடக்கியது. எந்த தருணத்திலும் தலைகீழாகக்கூடிய கருத்தியலாக உள்ளது. அதாவது மதச்சார்பின்மை ஒரு அறமாக இருப்பதான ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது. அது அறமல்ல, ஒரு அரசியல் சார்ந்த கருத்தாக்கமே. அறம் என்பது மற்றமையை தானாக உணர்வது. எச்சூழலிலும் சிறுபான்மையாக உணர்தலும் மற்றும் உருவாகுதலுமே.
18வது அட்சக்கோடில் சந்திரசேகரன் ஆழத்து அறஉணர்ச்சிபெற்று சமூகவயப்படுவதன் வழியாக வாசிக்கும் நாமும் சமூகவயமாகிறோம். அதாவது அங்கு நிகழ்ந்த வரலாற்றின் கணத்திலிருந்து, வரலாற்று இயக்கத்திலிருந்து விடுபட்டு, தனக்கான சமூகப்பாத்திரத்தை ஏற்பதையே இங்கு சமூகவயம் என்று குறிக்கிறேன். அல்லது அப்படி ஒரு வரலாற்று தருணத்தை எதிர்கொள்ளும்போது நாம் இந்நாவலின் உந்தம் தரும் அறப்பிரக்ஞையைப் பெறுகிறோம். அச்சமூகப்பாத்திரம் அல்லது அறப்பிரக்ஞை என்பது மதச்சார்பின்மை என்கிற அறத்தை பெறுவதுதான் என்பதாக இந்நாவல் வழியாக குறிக்கப்படுகிறது. அதாவது ஒரு யதார்த்தவாத புனைவினுள் வாழ்ந்து பழகும் ஒரு உடல், நிஜத்தில் அதை எதிர்கொள்ளும்போது, அதனை கையாள்வதற்கான முன்அனுபவத்துடன், உணர்வுடன், தயாரிப்புடன் உள்ளது. இதைதான் யதார்த்தவாத இலக்கியங்களின் ஆகப்பெரும் சமூகப்பயனாக கொள்ளலாம்.
இந்நாவல் தரும் அறப்பிரக்ஞை மதச்சார்பின்மை என்கிற பெரும்பான்மையினரின் பரிவுணர்ச்சிதான். ஒரு மன்னிக்கும் குணம். இதனுள் “இந்து“ பெரும்பான்மை என்ற மனநிலைப் பெருமிதம் ஒளிந்துள்ளதைக் காணலாம். அது இன்னொரு வரலாற்றுத் தருணத்தில் வேறுவடிவில் வெளிப்படலாம். இதுதான் இந்தவகை மையத்துவ-யதார்த்தவாத-அழகியல் எழுத்துக்களின் பிரச்சனை. ஒன்றை வெளிச்சமாக்கி மற்றதை இருட்டாக்கி காட்டுவது. மாண்டோ இந்த மதச்சார்பின்மையின் இருட்டை வெளிச்சமாக்குகிறார். அவரது கதையில் எல்லா மதத்தினரும் வன்முறையாளர்களாக உள்ளனர். வெளிச்சமும், இருட்டுமாக மாறி மாறி வருகின்றனர். வெளிச்சத்தில் கொல்பவனும், இருட்டில் கொல்லப்படுபவனும் நிற்கிறார்கள். யார் யாரைக் கொல்கிறார்கள் என்பதை பொறுத்து இருட்டும் வெளிச்சமும் மாறிவருகிறது. இங்கு ஒன்றை நினைவு கொள்வது அவசியம். தனது மதத்தை மிகக்கடுமையாக விமர்சித்தவர் மாண்டோ. அதற்கான தண்டனைகளை வறுமை துவங்கி சிறைவரை அனுபவித்தவர். மதச்சார்பின்மையை மாண்டோ பயனபடுத்தியவரோ, அதை ஒரு அறமாகவோ முன்வைத்ததில்லை. மாறாக, மனிதனாக இருப்பது, சாத்தியமற்றதாக மாறிவிட்ட வரலாற்று அவலத்தின் குரலே மாண்டோவினுடையது.
ஆனால், 18-வது அட்சக்கோடு தரும் அறப்பிரக்ஞை மூலம் ஜெயமோகன் சொல்லும் சாமான்ய மனிதனாக எளிய மனிதனாக இல்லாமல் ஒரு சமூக மனிதனாக மாற்றப்படுகிறோம். இதுதான் இலக்கியத்தின் சமூகப்பயன். அல்லது இலக்கியம் இந்த உலகை உருவாக்குவது இப்படித்தான். அதாவது, சமூகத்திற்குள் ஒரு மனிதன் வாழ்வதற்கான பாத்திரங்களை உருவாக்கி தருகிறது. மனிதர்களை சமூகவயப்படுத்துகிறது. இப்படி சமூகவயப்படுத்துவதால், மனிதனை சமூக அதிகாரத்தின் ஊடகமாக மாற்றிவிடுகிறது. ஆனால், ஜெயமோகன், இத்தகைய இலக்கியத்தின் பணி தனிமனித அறப்பிரக்ஞையை உருவாக்குவது என்பதாக அதன் சமூகவயத்தையும், முக்கியத்துவத்தையும் விட்டுவிடுகிறார். இவர் இலக்கியத்தை முதன்மைப் படுத்தவதைப்போன்று தோன்றும் ஆனால், இவர்கள் முதன்மைப் படுத்துவது தன்முனைப்பான அழகுணர்ச்சியை, அழகியலை, அது தரும் அதிகார சுகத்தை. இலக்கியத்தை அல்ல இலக்கிய கர்தாக்களை.
அடுத்து, தனிமனித அறம் என்று ஒன்று உண்டா என்பது விவாதத்திற்கு உரியது. காரணம் அறம் என்பதே பொதுமையானதுதானே. தனக்கு மட்டுமே ஒருவன் அறம் என்கிற ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறம் மற்றொருவர் உள்ளபோதே அவசியப்படுகிறது. அதனால் தனிமனித அறம் அல்லது பிரக்ஞை என்பதே தர்க்கரீதியாக ஏற்கத்தக்கது அல்ல. அல்லது தனிமனிதன் தன்னையே பிறராக உணராமல் அறம் சாத்தியமில்லை, அது தேவையுமில்லை. "தனிமனித அறம்" என்பதே விவாதத்திற்குரிய கருத்தாக்கம். பொதுஅறமும் தனிமனித அறமும் பிளவாக, இரண்டாக இருப்பதில்தான் எல்லாவிதமான அறச்சிக்கலும் வருகிறது. இந்த சிக்கல்தான் அசோகமித்திரனை உயர்த்திப்பிடிக்க மாண்டோவை போகிறபோக்கில் “கண்டுவிட்டார்களாம்” என்று தட்டிச் செல்லும் குறிப்பாக வெளிப்படுகிறது.
குறிப்பு-1. "உலக இலக்கியத்திலேயே குறைவுதான். நான் ஐசக் பாஷவிஸ் சிங்கரை மட்டுமே அவருக்கு நிகராகச் சொல்வேன்." இப்படி எழுதப்படும் வரிகளில் எனக்கு எப்போதும் பிரச்சனை உண்டு. காரணம் இந்த வரிகள் காட்டும் உட்பொருள் அல்லது சொன்னவர் தனக்கு தானே உருவாக்கிக்கொள்ளும் "அத்தாரிட்டி" (அதிகாரம்) முக்கியமானதாகப்படுகிறது. உலக இலக்கியம் என்பது பரந்து விரிந்தது என்பதால் உலக இலக்கியம் என்ற சொல்லை பயன்படுத்தும் சாத்தியம் பிரச்சனைக்குரியது. வணிகநோக்கில் சொல்லப்படும் உலக இலக்கியம் என்பது வேறு. ஒப்பீட்டளவில் ஒரு இலக்கியவாதி பற்றிப் பேசும்போது இத்தகைய வாசகங்கள் சொல்பவரின் பரந்த அறிவை நிலைநாட்டுவதுடன், வாசிப்பவருக்கு ஓர் ஒப்பீட்டு வாசகத்தை தருகிறது. மற்றபடி இப்பதிலில் ஜெயமோகன் இந்திய அரசியலில் தேசிய உருவாக்கம் பற்றியும், காந்தி பற்றியும் குறிப்பிடும் விஷயங்கள் விமர்சனத்திற்கு உரியவை. மாண்டோ பற்றிய குறிப்பு என்பதால் அவற்றை விரிவஞ்சி விட்டுவிடலாம்.
குறிப்பு-2. "கண்முன், நம் சமகாலத்தில், இலக்கியமேதை ஒருவர் தன் மகத்தான ஆக்கங்களுடன் வாழ்கிறார். நாம் தொலைநோக்கி வைத்து திசைகளை துழாவிக் கொண்டிருக்கிறோம்." என்கிற அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் இக்கருத்து தமிழ் இலக்கிய விமர்சனம் பற்றிய விமர்சனமாக கருதி அவரது உணர்வை நாமும் பகிர்ந்து கொள்ளலாம். பிளஸ் டூ படித்தபோது நாங்கள் நடத்திய "ஜனகணமண" என்கிற பத்திரிக்கையுடன் மூன்று நண்பர்கள் கும்பகோணத்திற்கு வந்திருந்த அசோகமித்திரனை “லாட்ஜ் லவுன்ச்சி“-ல் சந்தித்தோம். அவரது ஒற்றன் மற்றும் 18 வது அட்சக்கோடு பற்றி பேசினோம். சிறுவர்களான எங்களிடமும் மதித்து உட்கார்ந்து சமமாக பேசிக்கொண்டிருந்தார். நான் முதன்முதலாக சந்தித்த எழுத்தாளர் அவர்தான். பயமுறுத்தாத பந்தா இல்லாத அவரது எளிமை எழுத்தாளனாக ஆக வேண்டும் என்கிற நம்பிக்கையை தந்தது. அசோகமித்திரன் குறித்து பரவலான கவனம்பெறும் இச்சூழல் அவர்குறித்த ஆய்வுகள், மதிப்பீடுகள் நிறைய வருவது தமிழின் புனைகதை சூழலுக்கு ஆரோக்கியமானது.
-ஜமாலன் (13-02-2011)




0 comments:
கருத்துரையிடுக