இலக்கிய படைப்பு அதிர்ச்சி ஊட்டித்தான் உரையாடலை வாசகனுடன் துவங்குகிறது. “இலக்கியஅமைதி“ என்பது இலக்கியத்தின் அமைதியாகிவிடாது. அந்த அதிர்ச்சிதான் அவனது பழகிய இயல்பான வாழ்வில் சிந்தனையை தூண்டுவதாக அமையும். அது அகத்தில் நடக்கலாம், மாண்டோவிடம் அது புறத்திலேயே நின்றுவிடுகிறது என்கிறார் ஜெயமோகன். இந்த அக-புற விளையாட்டில் உள்ள சிக்கல், புறத்தை தள்ளிவிட்டு அகத்தை முதன்மைப்படுத்தும் மேற்சொன்ன அதே போக்குதான். முகம் எப்படி ஒன்றாக இல்லையோ அதைப்போலத்தான் அகமும் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. முகங்கள்போல அகங்கள் உண்டு. முகங்கள்கூட ஒருவருக்கே ஒன்றாக இருப்பதில்லை. அது அனுபவங்களின் வார்ப்பில் சூழலின் தருணங்களின் மாறிக்கொண்டிருப்பது. ஒருவருக்கே பல அகங்கள் உண்டு என்றால், எந்த அகத்திற்கான சித்திரிப்பை இலக்கியம் ஒருவருக்கு வழங்கும். அப்படியே அகம் என்ற மையம் மட்டுமே இருந்தாலும் புறம் இன்றி அகம் சாத்தியமா? புறச்சித்தரிப்புகள்தான் அகச்சித்தரிப்பை உருவாக்கும். புறமின்றி அகம் எதனுடன் தொடர்புகொள்ளும். இலக்கியம் அகத்திலோ அல்லது புறத்திலோ இயங்குவதில்லை. அக-புற இணைப்பில் உள்ள அடையாள வெளியில்தான் இயங்குகிறது. அதைத்தான் கதையாடல் வெளி என்கிறோம். மாண்டோவின் கதையாடல்-வெளி இந்த அக-புற விளையாட்டை தள்ளிவிட்டு, சமூகத்தின் கதையாடல் வெளியில், அகமும், புறமும் எப்படி அரசியல் அடையாளங்களால் மாறிக்கொண்டே உள்ளது என்பதை சொல்கிறது. அதிகாரத்தின் அடையாள வெளியாக உள்ள அரசியல் வெளியை கதையாடல் வெளியாக மாற்றி வைக்கிறார் மாண்டோ.
ஓர் எழுத்தாளரை மற்ற எழுத்தாளருடன் ஒப்பிட்டு விரிவாக எழுதாமல் அவசரகதியில் ஒரு கருத்தை போட்டுவிட்டு அது வளரட்டும் என போகும் செயலே இது. கடிதத்திற்கான பதில் என்பதால் விரிவாக இன்றி ஒரு கருத்தாகக்கூற உரிமை உண்டு. ஆனால் அக்கடிதம் பொதுத்தளத்தில் வைக்கப்படும்போது, அது உருவாக்கும் அல்லது வளர்த்துவிடும் கருத்து கவனப்படுத்த வேண்டியதாக உள்ளது. 18-வது அட்சக்கோடு ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது உருவான கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால், ஜெயமோகனுக்கு இந்திய-பாகிஸ்தான் பிரிவினையினால் ஏற்பட்ட கலவரங்களை எழுதிய மாண்டோ நினைவிற்கு வருகிறார். ஒருவகையில் இது மாண்டோ குறித்த அவரது வாசிப்பின் ஆழத்தைக்காட்டுகிறது. ஆனாலும், மாண்டோவின் படைப்புலகை செயற்கையான நாடக உச்சங்களாக பார்க்கிறார். மாண்டோவின் பிரிவினை பற்றிய கதையாடல் தனிமனிதனின் உடலில் உருவாக்கிய அடையாள நெருக்கடி பற்றியது. இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட "பிரிவினை" என்கிற அரசியல் எப்படி தனிமனிதனை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது என்பதையும், வரலாறு என்கிற ஒன்றின் கட்டமைப்பு ஏற்படுத்திய அரசியலையும் அம்பலப்படுத்துகிறது. தனிமனிதன் என்பவன் சாராம்ச இருப்பைக் கொண்டவன் அல்ல, அவன் வரலாற்றில் எப்படி பொருண்மையற்ற வெற்று அடையாளங்களாக உருவாக்கப்படுகிறான் என்பதை கிழித்து காட்டுகிறது. தனிமனிதன் என்கிற உள்ளீடற்ற வெற்றுக்குள் எப்படி அரசியல் தனது பொருண்மையை அடையாளமாக திணிக்கிறது என்பதை சொல்கிறது.
ஜெயமோகனின் அடிப்படையான "வரலாறு" மற்றும் "மனிதன்" பற்றிய புரிதலே அவரை மாண்டோவின் படைப்புலகை நாடக காட்சியின் உச்சமாக பார்க்க வைக்கிறது. மனிதன் என்கிற கார்டிசீயம்-உருவாக்கிய இருமைவாதத்தை அடிப்படையாகக் கொண்டே அவரது தர்க்கம் கட்டப்படுகிறது. (இந்திய தத்துவத்தின் சுதேசியத் தன்மைபற்றி அதிகம் பேசும் இவர், இப்படியாக காலனிய கருத்தாக்கத்திற்குள் நின்றே சிந்திக்கிறார் என்பது பிறிதொரு ஆய்விற்கானது.) இப்பிளவில் மனதை முதன்மைப்படுத்தும் போக்கில் அகம் என்பதை முன்வைக்கிறார். தமிழில் “அகம்“ என்பது ஒரு உள்-வெளி. அதை மனமாக கற்பிதம் செய்துகொள்வது கார்டிசிய பிளவின் விளைவுதான். அகத்தெழுச்சியை ஒரு மனவெழுச்சியாக புரிந்துகொள்ள முடியாது. இப்படியொரு மனவெழுச்சியாக புரிந்துகொள்வது அசலான தமிழ் கோட்பாட்டுச் சிந்தனையாகுமா? என்பது விவாதத்திற்கு உரியது. அகம் சமூகம் என்கிற புறவெளி உடலக்குள் பதிவுற்று, உடலை சமூகத்துடன் இயைபு படுத்தும் ஒரு உடல்-வெளி. வரலாறு என்பதும் சமூக-அரசியல் தருணங்கள்தான். அந்த தருணங்களுக்குப் பின் வரலாறு ஒரு புனைவாகவும் கதையாடலாகவும்தான் உள்ளது.
இக்கதையாடல்தான் மாண்டோ மற்றும் அசோகமித்திரனின் கதைதளம். 18-வது அட்சக்கோட்டில் சொல்லப்படும் வரலாற்று தருணத்திற்கும் தனிமனிதனுக்கும் இடையிலான சிக்கல்தான் பிரிவினை காலத்திய மாண்டோவின் பேசுபொருள் என்றாலும், மாண்டோ நகர்புற நடுத்தரவர்க்க போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறார். மாண்டோவின் காலம் ஜெயமோகன் குறிக்கும் அசோகமித்திரனின் காலத்தைவிட கொந்தளிப்புகள் அதிகம் இருந்த காலம் என்பதை கவனத்தில் வைப்பது அவசியம். தனிமனிதன் வரலாற்றின் உருவாக்கமாகவும், அவன் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் ஒரு அடையாளமாக உருவாகுதலையும் எடுத்துக்காட்டுகிறார் மாண்டோ. வரலாற்றை புனைவாகவும் அதில் ஒரு அடையாளமேற்கும் பாத்திரமாகவும் தனிமனிதன் மாறுவதைச் சொல்லிச் செல்கிறார். மனிதன் ஒரு நிகழ்வின் பங்கேற்பாளனாக மாறும்போது, அவனது உடல்-மனம்-ஆத்மா என்கிற பிளவுகள் எல்லாம் அர்த்தமற்றதாக மாறி வெறும் அரசியல் அடையாளமாக மாறும் தருணங்களை சொல்லிச்செல்கிறார். அசோகமித்திரனின் நாவலிலும் இதைதான் அவர் காட்டிச் செல்கிறார். இரண்டிலும் இலக்கிய குணாம்சம்தான் வேறுபாடு என்றும், ஒன்று புனைவு மற்றது நாடகம் என்றும் சொன்னால், புனைவையும் நாடகத்தையும் வரையறுத்து சொல்லவேண்டும். அப்புறம் நாடகம் எந்தவகையில் புனைவைவிட கீழானது என்பதையும், நாடகத்தின் உச்சகாட்சி ஏன் இலக்கிய குணாம்சமாகக் கொள்ளப்படக்கூடாது என்பதையும் விளக்கவேண்டும். இவற்றை எல்லாம் விட முக்கியம் ஜெயமோகனின் இலக்கியக் கோட்பாட்டிலிருந்தே இந்த பிரச்சனைகள் துவங்குகிறது.
(தொடரும்)
- ஜமாலன் (13-02-2011)
picture courtesy: http://www.positive-thinking-for-you.com/positivethinking-selfesteem.html




0 comments:
கருத்துரையிடுக