ஜெயமோகனின் அறமும் மாண்டோவின் நிராகரிப்புகளும் – பகுதி-1

அசோகமித்திரனின் 18-வது அட்சக்கோடு பற்றிய ஒருவரின் கேள்விக்கு ஜெயமோகன் தனது வலைதளத்தில் சில கருத்துக்களை விரிவாக முன்வைத்துள்ளார் (<http://www.jeyamohan.in/?p=11891>). அசோகமித்திரன் தமிழ் புனைவிலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் என்பதில் மாறுபாடு இல்லை. அவரது எழுத்தில் மெலிதான நகைச்சுவை ததும்பம் சமூக அவலம் பற்றிய எடுத்துரைப்புகள் தமிழில் மற்ற எழுத்தாளர்களால் பேசப்படாதவை. ஆனால் அரசியல்ரீதியாகவும் சமூகவியல்ரீதியாகவும் அசோகமித்திரனின் படைப்புகள் பற்றிப் பேச நிறைய உள்ளது. நடுத்தரவர்க்கம் மற்றும் நகர்சார் வாழ்க்கையை நுட்பங்களுடன் சொன்னவர் அசோகமித்திரன். "நகர்சார் நடுத்தரவர்க்கம்" என்பதே பார்ப்பன வாழ்நிலையை பிரதிபலிப்பதுதான் என்பதை இந்திய காலனியக்காலத்தில் உருவான குடும்பங்களின் மறுசீரமைப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். இதற்கான இலக்கிய உதாரணமாக மௌனியின் "குடும்பத்தேர்" என்கிற கதையை முன்வைத்து வாசித்துகாட்டமுடியும். காலனியக் கலப்பினமாதலின் சமூக விளைவாக உருவானதே "இந்திய நடுத்தரவர்க்கம்". காலனியம் தன்னை தகவமைத்துக்கொள்ள உருவாக்கிய படித்த, மேல்தட்டு, நகர்சார்ந்த இந்த வர்க்கம், "நாகரீக"-த்தையும். தனது மத, சாதிய ஆச்சார மரபுகளையும் கலந்துகட்டி உருவானது. "நாகரீக"-த்தை தனது மரபான அமைப்பிற்குள் தகவமைத்துக்கொண்டது. ஒரு வினோதமான மன அமைப்பைக் கொண்டது. இம் மனஅமைப்பை கதையாடல்களில் முன்வைத்தவர் அசோகமித்திரன்.

இத்தகைய நகர்சார் நடுத்தரவர்க்க நாயகன் ஒருவனைக் கொண்டு எழுதப்பட்ட நாவலே 18-வது அட்சக்கோடு. ஜெயமோகன் இந்நாவலை ஒருவரின் "இந்து" மனநிலை வரலாற்று தருணம் ஒன்றில் முட்டி ஆழத்து "அறபிரக்ஞை"யை கண்டடைவதாக வாசித்து உள்ளார். இது தனிமனிதன் என்கிற மையம் சார்ந்த வாசிப்பு. தனிமனிதன் வரலாற்று தருணத்தில் கொள்ளும் அடையாளச் சிக்கல்கள் அவனை எப்படி இயக்குகிறது, அவனை எப்படி உருவாக்குகிறது என்பதையும் அதன் அபத்தத்தையும் வெளிப்படுத்தி வரலாறு என்கிற அவல நாடகம் பற்றிய விமர்சனமாக இந்நாவலை வாசிக்கலாம். இது தனிமனிதனை உருவாக்கும் அமைப்பு அல்லது நிறுவனம் சார்ந்த வாசிப்பு. ஏனோ ஜெயமோகன் இதனை ஒரு இந்து-மனநிலை நாவலாக வாசிக்கிறார். ஒருவகையில் இந்நாவல் பேசும் “அறம்“ பற்றிய மதிப்பீடு “இந்து அறம்“-தான். இதனை ஜெயமோகனின் வாசிப்பும் தடம் காட்டி உள்ளது.

பல வாசிப்புகள் சாத்தியம் என்ற வகையில் இது அவரது தன்னுரிமையான வாசிப்பு என்று கொள்ளலாம். ஆனால், அசோகமித்திரன் குறித்த கருத்துக்களை முன்வைக்கும்போது இறுதியில் இப்படி எழுதுகிறார் ஜெயமோகன் "சதத் ஹசன் மாண்டோவைத் தமிழில் சிலர் திடீரென்று தூக்கிப்பிடிக்கிறார்கள். மொழிபெயர்ப்பின் கண்டுவிட்டார்களாம். மாண்டோவோ அல்லது பீஷம் சாஹ்னியோ [தமஸ்] எழுதியவை அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்புகள், செயற்கையான நாடக உச்சங்கள். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆன்மாவின் ஆழத்தால் அடையாளம் காணும் வாழ்க்கைத்தருணங்கள் அல்ல அவை. அசோகமித்திரன் எழுதுவதும் நாமனைவரும் அறியும் நமது ஆழத்தை." "கண்டுவிட்டார்களாம்" என்கிற வார்த்தையின் எள்ளல் வெளிப்படுத்தும் அரசியல்-உளவியலை பதிய வைத்துக்கொண்டு இந்த "ஆன்மஆழத்தை" கண்டுவிட முயலலாம்.

போகிறபோக்கில் பொருத்தமற்ற இடத்தில் மாண்டோ பற்றி எழுதிச்செல்லும் ஜெயமோகன் இலக்கியம் அல்லாதது என்பதாக மூன்று விஷயங்களை முன்வைக்கிறார். 1. அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்புகள் 2. செயற்கையான நாடக உச்சங்கள் 3. ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆன்மாவின் ஆழத்தால் அடையாளம் காணும் வாழ்க்கைத்தருணங்கள் இல்லாமை. இதன் எதிர்நிலைகளை அவரது இலக்கியம் பற்றிய அளவுகோல்களாகக்கூடக் கொள்ளலாம். இம்மூன்றிலும் அகம், இயல்பு, ஆன்மா என்பதுவே மையம். ஆக, இலக்கியம் இயல்பான அகச்சித்தரிப்புகளால் தனிமனித ஆன்மாவின் ஆழத்தால் அடையாளப்படும் வாழ்க்கை தருணத்தை உருவாக்குவது என்பதே. சுருக்கமாக, இலக்கியம் ஓர் ஆன்ம உணர்ச்சி அல்லது ஆன்மத்தேடல் என்று இதனை புரிந்துகொள்ளலாம். இந்தவகை இலக்கியம் பற்றிய பார்வை, இலக்கியத்தின் சமூகப்பணியை மறுப்பது மட்டுமல்ல இலக்கியத்தின் முக்கியத்துவத்தைக்கூட ரசனையாக சுருக்கிவிடுகிறது.

இலக்கியம் தனிமனித ஆன்மீக செயலாக சுருக்கப்படுவதால் எழும் கேள்வி, ஒரு படைப்பு ஆன்மாவின் ஆழத்துள் சென்று அடையாளம் காண வேண்டிய அவசியம் என்ன? அது ஏன் தேவைப்படுகிறது? ஒரு தனிஉடல் தன்னை சமூகவயப்படுத்திக் கொள்ளவோ அல்லது சமூகத்தின் முன்னணியாக தன்னை மாற்றியமைத்துக் கொள்ளவோதான். ஆன்மாவின் ஆழத்துள் அடையாளம் காணுதல் என்றால், அடையாளம் என்கிற புறமான ஒன்றைத்தான் அல்லது அடையாளமாக ஏற்கனவே புழங்கிவரும் ஒன்றைத்தான் காணமுடியும். அல்லது ஒரு வாழ்க்கை தருணத்தை ஓர் ஆன்மீக உணர்வாக அடையாளம் காணுதல் என்பது, முற்றிலும் புதிதான ஒரு ஆன்மீக வெளிப்பாட்டைக் கொள்ளவேண்டும். அப்படி ஒரு ஆன்மீக வெளிப்பாட்டைக் கொள்வதன் வழியாக அவன் தன்னை சமூகத்தின் முன்னணியாக நிலைநிறுத்திக் கொள்கிறானே ஒழிய காட்டில் சென்று தன்னந்தனியனாக அந்த ஆன்மீக உணர்வுடன் வாழ்வதில்லை. இலக்கியப்படைப்பு வாழும் சமூகத்தில் முன்னணிகளையும், வருங்கால சமூகத்தின் போக்குகளையும், எதிர்கால சமூகத்தின் பொது மனஅமைப்பையும் உருவாக்குவதாக உள்ளது. சங்க இலக்கியங்கள் இல்லாமல் இன்றைய இலக்கிய போக்குகளோ, தமிழ்மனம் என்ற பொதுமனமோ இல்லை.

இலக்கியத்தின் ஆன்மீகப்பணி அதன் மற்றமையான லௌகீகத்தால்தான் அடையாளப்படுத்தப்படுகிறது. அதாவது, ஒருவரின் ஆன்மீகத்தை மற்றமைகளின் லௌகீகமே அர்த்தப்படுத்துகிறது. ஜெயமோகனின் இலக்கியக்கோட்பாடு இந்த ஆன்மீக-லௌகீக எதிர்மையில்தான் தனது கட்டுமானத்தைக் கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தை முதன்மைப்படுத்துவதன் வழியாக லௌகீகத்தை விளிம்புக்கு தள்ளுதல் நிகழ்கிறது. லௌகீகம் என்பதைக்கூட ஆன்மீகத்திற்குள் அடக்க முனைகிறது. ஆக இலக்கியம் சாமான்யர்களின் லௌகீகம் எனப்படும் "தினவாழ்வு" சார்ந்தது அல்ல என்பதே இதன் நீட்சி. இதன் மறுதலை இலக்கியம் சாமான்யர்களுக்கானது அல்ல என்பதே. இப்படித்தான் "இலக்கிய உன்னதம்" சாதரணர்களின் பிரச்சனைகளிலிருந்து விலகி ஆன்மீகப் பயணமாக மாறிவிடுகிறது. இலக்கியம் தெரியாதவர்கள் என எள்ளிநகையாடும் "கண்டுவிட்டார்களாம்" என்கிற மனப்போக்கு இப்படித்தான் வெளிப்படுகிறது. மாண்ட்டோவின் எழுத்து சாதரண மக்களின் விளிம்புநிலை வாழ்வைச் சொல்வதால், அதில் ஆன்மீகம் இல்லை என்றும், அதனால் அது இலக்கியம் இல்லை என்றும் ஒதுக்கும்படி செய்கிறது.

உண்மையில் இலக்கியம் இப்படியான குறுகிய எல்லையில் செயல்படுவதில்லை. இலக்கியம் ஒவ்வொரு சமூக அமைப்பையும் மொழிவழியாக புத்தாக்கம் செய்து கொண்டே உள்ளது. அந்தவகையி்ல் இலக்கியம் ஒரு மொழிநிறுவனமாக அல்லது மொழிஎந்திரமாக செயல்படுகிறது. ஜெயமோகன் தனது இலக்கிய கோட்பாடாக கொள்ளும் “ரசா-கோட்பாடு“ இலக்கியத்தின் மொழிச்செயலை மறுப்பது. சான்றாக விஷ்ணுபுரம் வாசித்தவர்கள் அனைவரும் அதில் அடையாளம் கண்ட ஆன்மாவின் ஆழத்து உணர்வை, தங்களுக்குள் வைத்து பாதுகாப்பதில்லை. இந்த ஆழத்து உணர்வு மொழியாக அதாவது உணர்வின்மையாக (நனைவிலியாக) கட்டப்படுகிறது என்கிற லக்கானிய விளக்கத்தைக் கொண்டது. அதாவது ஆழத்து உணர்வு என்பது உணர்வின்மையாக (நனைவிலியாக) அமைந்து விடுகிறது. ஒன்று உணர்வின்மையாக மாறியபின் அது உடலின் ஒரு அனிச்சை செயல்போக்காக மாறிவிடுகிறது. அது சூழலில், வாழ்நிலையில் ஒருவர் அறிந்தோ அறியாமலோ இயங்குகிறது. அவ்வியக்கம், ஒருபோக்காக மாறி சமூகத்தில் பற்றிப் பரவிவிடுகிறது. வாசிப்பவர்களின் வலைபின்னலில், விஷ்ணுபுரத்தை பார்க்காத-படிக்காத-கேட்காத ஒருவர்கூட அது ஏற்படுத்திய ஆன்ம உணர்வில் செயல்பட்டுக் கொண்டிருக்க முடியும். இப்படித்தான் இலக்கியம் மொழிவழியாக சமூகத்தின் போக்குகளை உருவாக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. சங்கப்பாடல்கள் எப்படி பிந்தைய சாமான்ய தமிழர்களிடம் காதலையும் போரையும் சமூகவயப்படுத்தியதோ அப்படித்தான் இலக்கியம் எதிர்கால சமூகத்தின் சமூவயமாக்கலை உருவாக்கும் நிறுவனங்களாக செயல்படுகிறது.

இலக்கியத்தின் இச்சமூகவயமாதலை நிரகாரிக்கும் ரசனைவாதம், மாண்டோவின் கதைகளை எதிர்கொள்ளும்போது அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்பு என்பதாக வெளிப்படுகிறது. இதன் துணைபிரதி அதிர்ச்சியூட்டுவது இலக்கியத்தின் பணி அல்ல என்பதுவே. அப்படி அதிர்ச்சி ஊட்டினாலும் அது புறத்தில்தான் நிற்கிறது அகத்தில் அல்ல என்பதாக இது நியாயப்படுத்தப்படுகிறது. ஒருவன் வாழ்வில் சந்திக்காத தருணங்களை சொல்வதன் வழியாக அதிர்ச்சியூட்டுவது இலக்கியத்தின் பணிகளில் ஒன்றே. ரசனைக்கோட்பாட்டின் அடிப்படைகளான எட்டு மெய்ப்பாடுகளில் (இதில் ஸாந்தம் சேர்க்கப்பட்டு பிறகு நவரசமாக அறியப்பட்டது) ரௌத்ரம், பயம் என்கிற பாவங்கள், உணர்வுகள், அதிர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டவைதான். நாடகம் என்கிற நிகழ்த்துக்கலைகளுக்கு உருவாக்கப்பட்ட ரசா-கோட்பாட்டை எழுத்திலக்கியத்திற்கு பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் பற்றி விரிவாக ஆராயப்படவேண்டும். அக்கோட்பாட்டை பிற்காலங்களில் காவியங்களில் பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் சமஸ்கிருத அறிஞர்களால் விரிவாக நடத்தப்பட்டுள்ளது. இதனை இங்கு குறித்துக்கொண்டு தொடர்வோம்.

(தொடரும்)

- ஜமாலன் (13-02-2011)

குறிப்பு – இக்கட்டுரை நண்பர் ஒருவரின் பத்திரிக்கைக்காக எழுதப்பட்டது. இதுவரை இது வெளியிடப்பட்டதா என்கிற தகவல் இல்லை. அதனால்,தாமதம் (வெறும் 6 மாதங்கள்தான்) கருதி இங்கு பதிவில் வெளியிடப்படுகிறது.

2 comments:

அருண்மொழிவர்மன் சொன்னது…

// இந்தவகை இலக்கியம் பற்றிய பார்வை, இலக்கியத்தின் சமூகப்பணியை மறுப்பது மட்டுமல்ல இலக்கியத்தின் முக்கியத்துவத்தைக்கூட ரசனையாக சுருக்கிவிடுகிறது.//

ஜெயமோகனின் இலக்கியம் பற்றிய கோட்பாடுகளில் நான் முரண்படும் மிக முக்கிய புள்ளி இதுவே.

நல்ல பதிவு ஜமாலன்

ஜமாலன் சொன்னது…

நன்றி அருண்மொழிவர்மன்