2
பெயரிடப்பட்ட பொருட்களினை அர்த்தங்களாக (குறிப்பீடுகளாக) மாற்றியமைத்ததன் மூலம் – பெயரிடுதல் (naming) தொழில்நுட்பம் அமைப்பாக்கத்திற்கு[1] உட்படுத்தப்பட்டு மொழியின் இரண்டாம்நிலை வினையாக அறிவுருவாக்கம் நிகழ்கிறது. பொருட்கள் பெயரிடப்பட்டவுடன், அவற்றைப் புரிந்து கொள்வதற்காக.. புதிய அறிதலுக்கு உட்படுத்தி.. பொருளின்மீது மேலும் பல புனைவுகளை உருவாக்குவதே அறிவுருவாக்கம் ஆகும். இக்கட்டத்தில் பொருளினைப்பற்றிய புதிய அறிதலானது, புதிய அறிவுநிலைகளாகக் கிளர்ச்சியுறுகிறது. இக்கிளர்ச்சியே பொருளையும், மனிதனையும் வித்தியாசப்படுத்த முனைகிறது. இதன் விளைவாக ‘மனம்‘ என்கிற தொழில்நுட்பத்தின் உருவாக்கம் நிகழ்கிறது.
மனம்-என்ற மொழிச்செயல் அல்லது மொழியாலான மொழி ஒன்றை கண்டறிவித்த்தன்மூலம், மனித உடலானது பொருளினால் சூழப்பட்டு ஏதுமற்று விகசித்து இப்பிரபஞ்சத்தைத் தனது செயல்பரப்பிற்குள் ஒழுங்கமைக்க முனைகிறது. இம்முனைதல், பொருட்களை அதன் இருப்பிலிருந்து பிம்பங்களாக மாற்றயமைத்து, அதன் மீது ‘மனம்‘ எனும் அபௌதீகப் பொருள்கொண்டு அதிகாரம் செலுத்துதலாக அமைகிறது. இதிலிருந்து மனம்-என்பதே பொருட்களின் இருப்பியற் புலமாக உருவான ஒருவகை கால-வெளித்தொடர்ம்ம் (time-space continuum)[2] என்கிற மனம் பற்றிய விஞ்ஞானக் கருத்தாக்கத்தை பெருகிறோம்.
இங்கு மனித உடல் ஒழுங்கமைத்த மொழியை இரண்டாகப் பகுக்க வேண்டிய தேவை எழுகிறது. உடல் சார்ந்தும்/மனம் சார்ந்தும் பிளக்கப்பட்ட மொழியானது கீழ்கண்டவாறு நடைபெற்று முழுவினையாக நிலைபெறுகிறது.
மனித உடல் பொருளுடன் புரிந்த முதல் வினையாக மொழியும்,
மொழியுடன் புரிந்த இரண்டாம்நிலை வினையாக அறிவும்,
அறிவுடன் புரிந்த மூன்றாம் வினையாக மனமும்,
மனதுடன் புரிந்த நான்காம் வினையாக கருத்துருவமும்,
கருத்துருவங்களுடன் புரிந்த தொடர்வினையாக
தத்துவ, படைப்பிலக்கியங்களும் உருவாகுகின்றன.
இவ்வினையானது இருமுனை உறவுகளைக் கொண்டிருப்பதால் ஒன்றையொன்று வளப்படுத்தி, பல்கிப்பெருகுகின்றது. இப்பெருக்கம் மொழியின் பலதள அடுக்குகளை உருவாக்குகிறது. இவ்வடுக்குகள் ஒருவகை ஒடுக்கத்தை பொருளின் இருத்தல்மீது சுமத்துகின்றன. இவ்வாறு உடல் சார்ந்து உருவான மொழியை ஒடுக்கி வளர்ந்த மனம்சார்ந்த மொழியன் விளைபொருளே மனித உடல் இன்று பெற்றுள்ள கலாச்ச்ரம், வாழ்க்கை, தத்துவம், இலக்கியம்.... இன்னபிற எனலாம். எனவே. இன்றைய மொழிக்குள் அடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு அடுக்குகளைச் சிதைப்பது பொருளை அதன் இருப்பில் எதிர்கொள்வதற்கான ஒரு செயலாகும் என்கிற முதல்நிலை அறிதலைப் பெறுகிறோம்.
(தொடரும்..)
[1] அமைப்பாக்கம் (structuration) என்பதை வரையறுத்தால் இயங்கும் ஸ்தூல உலகை, இயக்கமற்ற மொழியைக்கொண்டு மூடுவதன் மூலம், இயங்கியல்சார் அனுபவங்களை இறுகச்செய்து (fixed) இயங்காவியல் – என்கிற அபௌதீக்க் கருத்தாக்கத்தினால் சமூகத்தில் இயங்கும் அமைப்புகளை இயக்கமற்று ஒடுக்குதலே ஆகும்.
[2] time-space continuum காலவெளித்தொடர்மம் என்பது மினோவஸ்கி (Minowsky) என்கிற கணிதவியல் அறிஞரால் உருவாக்கப்பட்ட வடிவியல் இயற்பியல் கருத்தாக்கமாகும். ஒரு ‘பொருள்‘ இருக்கிறது என்றால் ஒரு குறிப்பிட்ட வெளியை (space) நிரப்பிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்தில் (time) இருக்கிறது என்று பொருள். எனவே, பொருளின் முப்பரிமாண வெளிசார் அளவீடுகளுடன் காலம் என்கிற நான்காவது பரிமாணத்தைச் சேர்த்தே கூறமுடியும். இதையெ கால-வெளித்தொடர்ம்ம் என்கிறோம். இது நாற்பரிமாணத்தில் (four dimensional) காலத்தையும் வெளியையும் இணைக்கும் ஒரு கருத்தாக்கமாகும். இது காலத்துடன் ஒருபடித்தான நேரியல் (linear) உறவைக் கொண்டிருக்கிறது. அதனால்தான் காலம் என்ற ஒன்றினை (நேற்று-இன்று-நாளை) என நேர்க்கோடு வளர்ச்சியில் பார்க்கிறோம். “மனமானது இதேபோல் காலத்தையும் வெளியையும் இணைத்து கால ஒழுங்கிற்கு ஏற்ப வெளியைச் செயல்பட வைக்கிறது.
- ஜமாலன் (மேலும். 1991)




0 comments:
கருத்துரையிடுக