கவிதையின் மயிலாட்டம் அல்லது உரையின் அர்த்தப் பகடைகள்

Perundevi wrapper 1 சொற்பானைகளின் அர்த்தத்தை

காலப்பூனை கவிழ்த்துக் கொட்டிவிட்டது.

- பெருந்தேவி

 

 

பெருந்தேவியின் இத்தொகுப்பை வாசித்தபின் தமிழில் கவிதையாக அறியப்பட்டவற்றை மீளாய்வு செய்வதற்கான சில கேள்விகள் தோன்றின. கவிதை என்றால் என்ன என்பது அதில் ஒரு ஆதாரமான கேள்வி. அதனால் கவிதை பற்றிய புரிதலை இங்கு ஒழுங்குபடுத்திக்கொள்வது அவசியம். கவிதை என்பது ஒருவகை உள்-மொழி; மொழிக்குள் இயங்கும் மொழி என்பது எனது அடிப்படை எடுகோள். இந்த எடுகோளை கொஞ்சம் விளங்கிக்கொள்ள முயலலாம். மொழியில் ஒரு பொருள் சார்ந்து நிற்கும் சொற்களை உணர்வேற்றம் செய்து, புதிய அர்த்தங்களை உணரச் செய்வது இலக்கியத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று என்று கொண்டோமானால், சொல்லின் உணர்வுசார்ந்த தளத்தை விரிவுபடுத்துவது கவிதையின் செயலாக உள்ளது. இன்று நாம் உணரும் காதல், அச்சம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்த படிமங்களின், சொற்சேர்க்கைகளின் வாயிலாகக் குறிப்பிட்ட உணர்வுத் தொகுதிகளின் ஆழ்படிமங்களாக நம்முள் இறக்கியதில் கவிதையின் பங்கு முக்கியமானது. மற்ற உரைசார்ந்த புனைவுகள்கூடக் கவிதையால் உருவமைக்கப்பட்ட வார்த்தைகளில்தான் மேலதிக அனுபவங்களை வாசிப்பவரிடத்தில் படியவிடுகின்றன. காரணம் கவிதைக்கு அடிப்படையாக இருப்பது கவித்துவம். அது மட்டுமல்லாமல், பொதுவாகப் புனைவிலக்கியத்தின் அடிப்படை அழகியல் அளவீடாக இருப்பதும் கவித்துவமே. சிறுகதை, நாவல் போன்ற புனைவு தரும் அழகியல் உணர்வை நாம் கவித்துவத்தாலேயே அளவிடுகிறோம். இதிலிருந்து விரித்து மொழி எங்கெல்லாம் கவித்துவமாக வெளிப்படுகிறதோ அதைக் கவிதை எனச் சொல்லலாம். ஆகவே கவிதை என்பது வடிவ ஒழுங்கு மட்டும் அல்ல ஒரு வெளிப்பாட்டு நிலைகூட. அதாவது கவித்துவம் முழுக்க வெளிப்பட்டு நிற்கும் நிலை என்றாகிறது.

அடுத்து எழும் கேள்வி: கவித்துவம் என்று எதைச் சொல்கிறோம்? இக்கேள்வி கடவுள் என்றால் என்ன என்னும் கேள்வியைவிடச் சிக்கலானது. காரணம், கவித்துவம் என்பது ஒருவகையான உணர்தலாக உள்ளது. உணர்தல் புலன்சார்ந்த அனுபவமாக உள்ளது. ஆக, புலனுணர்வை பயிற்றுவிக்கும் ஒருவகை மொழிதலைக் கவித்துவம் எனக் கொள்ளலாம். பழகிய சொல்லை அல்லது நிகழ்வை முற்றிலும் புதியதொரு உணர்தலாக அல்லது புலன் அனுபவமாகக் கவிதை மாற்றிவிடுகிறது. இந்த மாற்றத்தை உணரும் வாசிப்பாளனின் புலன்கள் அந்த அனுபவத்தை அழகியலாக தனக்குள் பதித்துக்கொள்ளும் நிகழ்வையே கவித்துவம் என்கிறேன். கவிதைக்குள் வரும் ஒவ்வொரு சொல்லும் கவித்துவக் குறித்தலாக இயங்குவதே கவிதையின் அடிப்படைப் பண்பு. இவ்வாறாக வாசிப்பின் முதற்படியில் அர்த்தமாவதைவிட உணரப்படுவதற்கான சாத்தியத்தைக் கவிதை அதிகமாகக் கொண்டிருக்கிறது. உணர்தல் அறிதலுக்கு முன்பான வினை. இந்த வினைதான் கவிதையை மொழிக்குள் உருவாகிவரும் ஒரு மொழியாக மாற்றுகிறது. இந்த மொழியைத் தனக்கும் மற்றவருக்குமான புரிதலாக அதாவது புழங்குமொழியாக மாற்றுவதற்கான முயற்சியே கவிதைக்கான உரைவிளக்கமாகவும் விமர்சனமாகவும் அமைகிறது.

கவிதையின் மேற்சொன்ன புரிதலோடு இன்று தமிழில் கவிதை என எழுதப்படும் பெருவாரியான பிரதிகளை வாசித்தால், அயர்ச்சியே ஏற்படுகிறது. காரணம், மிகவும் பழக்கமான அனுபவங்களையே இயற்கை சார்ந்த கற்பனார்த்தம் நிறைந்த புனைவுகளாக அவை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. வார்த்தைகளின் ‘சூளைச்செங்கற் குவியலாக’ பெரும்பாலான கவிதைகள் உள்ளன. சொற்கட்டு என்பது அறவே இல்லை. நவீன வாழ்வு ஏற்படுத்தியிருக்கும் அந்நியத்தன்மை, பொருட்சார் பண்பாடு, அழகியல், சுவை ஆகியவற்றில் உருவாகியுள்ள ஒருவிதமான ஒட்டுதலின்மை, வாழ்வில், உணர்வுகளில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம் போன்றவற்றைப் பேசும் கவிதைகள் குறைவே. வார்த்தைகளை வாரியிறைத்து உணர்வுகளை மொண்ணையாக வெளிப்படுத்தும் மிகைநவிற்சி சார்ந்த உணர்வுகளோ அல்லது இயல்புநவிற்சி சார்ந்த வர்ணனைகளோ கவிதையாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

மேலும் தமிழ்க் கவிதையுலகின் தொண்ணூறு சதமானத்தைக் கைப்பற்றி கோலோச்சுபவை காதல் சார்ந்த மிகைநவிற்சிக் கவிதைகள் அல்லது காமத்தின் அதீதத்தை அல்லது காம ஒடுக்குதலை உரைக்கும் உடல், கூடல், ஊடல், சாடல் கவிதைகள். அந்நியத்தன்மையின், அலுப்பின், ஒவ்வாமையின், ஒட்டாமையின் நகல்களைப் பெருக்கும் நவீன வாழ்வை இன்றைய கவிதைகள் நுட்பமாகக் கவனிப்பதாகக் தெரியவில்லை. பண்டைய காதலும் தமிழ் சினிமா பேசிப் பேசி அலுத்த காதலும் அல்லது வேறொரு தளத்தில் உடல் கிளர்ந்த வெளிப்படைக் காமமுமே அதிகம் தமிழில் பேசப்படுகின்றன. இவற்றிலிருந்து விலகிச் சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல்-போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக்காட்டி வாசிப்பாளரை ஏற்க வைப்பதையோ இக்கவிதைகள் செய்யவில்லை. உடன்பாட்டுநிலையில் இல்லாமல் கொடுக்கப்பட்ட ‘உண்மைகளாக’ நம்பப்படுவனவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கின்றன என்பதே இக்கவிதைகளின் முக்கியத்துவம். வாசிப்பாளனின் தன்னடையாளத்தை விமர்சிப்பதாக, அவன் உணர்வுகளை எள்ளலுக்கு உட்படுத்துவதாக உள்ளன இக்கவிதைகள். அதாவது, தினசரி புழங்கக்கூடிய சொற்களின் மற்றும் பொருட்களின் மீது இருத்தப்பட்டுள்ள உணர்வைச் சிதைத்து மாற்றுபவையாக இவை உள்ளன.

இவ்வுணர்வு மாற்றத்தை அறிய இத்தொகுப்பில் அமைந்த கவிதைகளை வாசித்துப் பார்க்கலாம். இக்கவிதைகளின் களன்களாக மூன்று முக்கியப் புலன்-வெளிகள் அமைந்துள்ளன. 1.இன்றைய இளந்தலைமுறைகளின் வாழ்களமாக உள்ள நவீனத் தொழில்நுட்ப-இணையப் புலன்வெளி. 2. காலம் தாண்டியதாக உணரப்படும் வன்முறை, ஏக்கம், பிரிவு, துயரம், கனவு போன்றவை இன்றைய சூழலில் இயக்கம் கொள்ளும் யதார்த்தப் புலன்வெளி. 3. பாலினங்களாக வாழும் உடல்கள் பற்றிய நவீன வாழ்வு கட்டமைத்துள்ள உடலியக்கப்-புலன்வெளி. இம்மூன்று பகுதிகளும் மூன்று தலைப்புகளின் கீழ் வாசிப்பின் வசதிக்காக பிரித்துத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

முதல் பகுதியான உலோகருசி என்னும் தலைப்பின் கீழுள்ள கவிதைகள் மீ-யதார்த்தக் கூறுகளைக் கொண்ட இன்றைய நவீன வாழ்வு குறித்தவை. உள்ளார்ந்து இவை நவீனத்துவத்தின் மீதான எள்ளல் கொண்டவையாக, நவீன வாழ்வின் அபத்தம் ஏற்படுத்தும் அவலத்தை அதன் வலியுடன் சொல்லிச் செல்வதாக அமைகின்றன. வாசித்தலில் இவை ஏற்படுத்தும் உணர்வு பழகிய அனுபவங்களை முற்றிலும் புதிதான உணர்தலுக்குள் நகர்த்திவிடுகிறது. முக்கியமாகத் தொழில்நுட்ப-இணையப் புலன்வெளியால் எண்மயப்படுத்தப்பட்ட வாழ்க்கை அதன் நகல்தன்மையோடு கவிதைகளில் முன்வைக்கப்படுகிறது. தொலைக்காட்சிகள், விளம்பரங்கள், தெருவில் உள்ள மெகா சைஸ் டிஜிட்டல் போஸ்டர்கள், இணையம் உருவாக்கும் காட்சிகள், வெப்காம், அரட்டை அறைகள், அவை உருவாக்கியுள்ள சங்கேத மொழிகள், மொபைல் போன்கள், குறுஞ்செய்திகள் எனத் தொழில்நுட்பப் பிரதிகளாகப் பெருக்கப்படும் நவீன வாழ்வில் பங்குகொள்ளும் உடல்கள் ஒளிர்திரை நீலச்சுடர் பிம்பங்களாகக் கவிதைகளில் விரிகின்றன.

தன்னை முழுமையாகக் காட்சிப்படுத்திக்கொள்வதன் வழியாக உருவாகும் புலனின்பம் என்பதே நவீனத்துவ வாழ்வின் அடிப்படை. இது ஒருவகையான பிறழ்ச்சியும்கூட. இப்பிறழ்ச்சியால், புலன்கள் தற்கொலையைக்கூட எவ்வித ஒட்டுதலுமற்றுக் காட்சித் திரைப் பிம்பமாக உணரும் வண்ணமே கட்டப்படுகின்றன. காதல் என்பது இணையத் தொடர்பு எனும் பிராட்-பாண்டுக்குள் (அகலப்பட்டைக்குள்) அலைபாய்கிறது அல்லது சிக்கிப் பெருகுகிறது. ‘ஆறோடி நனைக்கும்’ அரட்டை அரங்கில் உடல் என்பது பிம்பங்களின் ஒளிர்திரைக்குள் மாட்டிக்கொள்கிறது. விளம்பரப்பலகைக்கு உள்ளேயே கொக்கோகோலா ஆடி விழுந்துவிடுவதை மோனித்துப் பார்க்கும் புலனாகக் கண்கள் மாறிவிடுகின்றன. லாப்டாப் - களில் வாழும் வாழ்க்கை தனது இறுகின கால்களுக்குள் நசுங்கிவிடும் கிளிக்குஞ்சுகளாகக் காயடித்து விரட்ட, இரண்டு வருடங்களுக்குப் பின் நடக்கப்போகும் காதணிவிழா பூந்தித்துகள் நாவில் இனிக்க, காதில் நரையோடும் முதிர்கன்னிகளாக/முதிர்கண்ணன்களாகப் பெண்களும் ஆண்களும் செல்போன்களில் வாழ்ந்து களிக்கிறார்கள். கணிப்பொறியும் இணையமும் உருவாக்குகிற வாழ்வெளியில் கடவுளின் இடத்தைக் கணிப்பொறியின் நீலச்சுடர் கைப்பற்றிக் கொள்கிறது. உருச்சிதைந்த தொழில்நுட்பங்களின் கொலாஜ் ஆன நவீன வாழ்வு தருகிற மாற்றங்களை விசாரணைக்குட்படுத்தும் இக்கவிதைகள் தமிழில் ஒரு புதிய முயற்சி.

இப்பகுதிக் கவிதைகளில் சிலவற்றை இங்கு வாசித்துப்பார்க்கலாம். தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில் என்கிற கவிதையில் விடியல் எப்படி அமைகிறது எனப் பார்ப்போம்.

மயக்கம் தராத மாலை

இன்றும் வந்தது.

விடியலின் கிரணத்தை

ஸன்ரைஸ் காப்பி விளம்பரத்தில்

அருமையாய் எடுத்திருந்தான்.

புல்லின் நுனியில் பனித்துளி ஒளிர, புல்லாங்குழலாய் மூங்கில்கள் பூபாளம் பாடப் புலரவில்லை. நவீன வாழ்வில் பொழுது ‘ஸன்ரைஸ் காப்பி’ விளம்பரத்தைப் போல விடிகிறது. இனி, சூரியன் ஸன்ரைஸ் காப்பி விளம்பரமாகத்தான் உதயமாகும். இந்த விளம்பரக் காட்சியைச் சிதை-சங்கேதப்படுத்தினால் (decoding) அது மத்தியதர வாழ்க்கையின் காலைப்பொழுதுகளை எப்படி உருவாக்கி ஒழுங்கமைக்கிறது என அறியலாம். அப்பா ஈசிசேரில் அமர்ந்து பேப்பர் படிக்க, அம்மா அருகில் காப்பிக் குவளையுடன் நிற்கும் 60-70களின் வாராந்திரப் பத்திரிகைப் படங்கள் ‘சும்மா கிடந்து சுவடு பதியாமல் நடந்து சமன் சற்றேனும் குலையாத’ மத்தியதரவர்க்க குடும்பங்களின் காலைப்பொழுதுகளை வடிவமைத்தன. இங்கோ சூரியன் ஒரு விளம்பரத்தின் நகலாகவும் விளம்பரம் அதன் காலை நிஜமாகவும் மாறியுள்ளது.

கவிதையில் தொடரும் வரிகள் இவை:

இருளின் மின்மினி

எதுவும் சொல்லாமல்

நேற்று பூச்சி கடித்தது.

பொதுவாக இருளின் மின்மினிகள் தமிழ்க் கவிதையில் மகிழ்ச்சியை அவலத்தை, இப்படி ஏதாவதொன்றைச் சொல்லும். ஆனால் இங்கே அவை பூச்சி கடித்ததாக மாறிவிட்ட தாம்பத்தியத்தைக் குறிப்பால் உணர்த்துவதைத் தவிர எதுவும் சொல்வதில்லை. உருண்டு படுக்க மெகாசீரியல் நாயகன்தான் கற்றுக்கொடுக்கிறான் ‘இப்படி இப்படி.’ இன்றைக்கு ஒரு நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என்பதை, துக்கத்தை, மகிழ்ச்சியை மெகாசீரியல்கள்தாம் கற்றுத்தருகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், நமது இயல் வாழ்வில் நினைவாகும், அடையாளப்படுத்தும் பலவற்றுக்கும் இத்தகைய மெகாசீரியல்களும் சினிமாக்களும்தாம் சட்டகங்களாகின்றன. விளம்பரம்சூழ் உலகின் இன்று நாம் எதிர்கொள்ளும் நுட்பமான மாற்றத்தை அவதானிக்கிறது இக்கவிதை. ‘ஸ்வீட்டி’ என்று இடையில் வரும் சொல்லில் உள்ள எள்ளல்தான் இந்த வாழ்வு பற்றிய எள்ளலைக் குறிப்பதாக உள்ளது. காமம் எப்படிப் பூச்சிக்கடியாக மாறியுள்ளது என்பதில் தாம்பத்யத்தின் தாம்பூலச் சுகம் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இங்கு மறைபொருளாகக் காமம் இயக்கம் கொள்வதே கவிதையாக மாறுகிறது. பெண் உடல் கிளர்ச்சி மறுக்கப்படுவதைப் பற்றிய உரத்த பேச்செதுவும் இல்லை, மறைபொருளாகத் தாம்பத்ய வாழ்வு எள்ளலுக்கு உட்படுத்தப்படுவதைத் தவிர.

இவ்வாறு எள்ளலுக்கு உட்படுத்தப்பட்ட வாழ்வில், இன்றைய நவீன உலகின் மின்வணிகப்பரத்தமையின் அவலமாக வெளிப்படும் கணிப்பொறியில் வாழும் பிறழ்ந்த மனநிலை இன்னொரு கவிதையில் வருகிறது. அது தொலைக்காட்சியின் முக்கியச் செய்திகள் ஓடுவதைப் போலத் தொடர்வரிகளாக . . . நிலாவே என்முன்னே கண்டேன் பொன்வண்ணங்கள் என் ஆசைவானில் நிலாவே என் முன்னே கண்டேன் பொன்வண்ணங்கள் என் ஆசை . . . என்று தலைப்பிடப்பட்ட கவிதை. மேசையில் வரையப்படும் இனிஷியல்கள் ஒருவகைச் சித்தப்பிரமையாகக் கவிதைக்குள் உள்ள கவிதை-உருவை வெளிப்படுத்துகின்றன. இக்கவிதையை இன்றைய ‘ஹைடெக்’ தொழில்நுட்பம் வடிவமைக்கும் பாலியலின் அவலமாகவும் வாசிக்கலாம். இதில் வரும் புணர்ச்சியின் ஆதிக்கப் பிம்பமான ஈயை, ‘வைன் கிளாஸில் ஒரு ஈ துடிக்கிறது ... ஆன்மாவைக் கழுவி எடுத்து அணிய முடியவில்லை’ என்ற மற்றொரு கவிதை வரியில் மனிதனின் ஆன்மா என்கிற மொழியமைப்பு பற்றிய விசாரணையாக எதிர்கொள்கிறோம். ஆன்மாவின் இந்த நவீன உருவகம் முக்கியம். ஈ என்பதற்குமேல் ஆன்மாவுக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆன்மத்தூய்மை என்கிற நமது மத-தத்துவ-ஆன்மீக மரபுகளின் இதுவரையிலான கருத்துகளை ஒற்றைவரியில் இக்கவிதை நிராகரிக்கிறது. ஆன்மா பற்றிய நமது பழகிய அறிதலைக் கலைத்துவிட்டுப் புதியதான ஒரு குறிப்பீட்டைச் செய்துவிடுகிறது. ஆன்மாவின் புனிதம் ஒழிய, ஞாபகங்கள் நாயாகிக் குறைக்க, இருள்மூலையில் காத்திருக்கும் நப்பாசைதான் ‘நான்’. இந்த நான் ஒரு பால்தன்மையற்ற வெற்றுக்குறிப்பான். இதற்குள் எந்தப் பால் அடையாளத்தையும் நிரப்ப முடியும். இத்தகைய குறிப்பான்களால், கவிதை பொதுக்குறித்தலுக்கு உரியதாக மாறிவிடுகிறது.

கனவின் கதிரியக்கத்தில் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் இரண்டாம் பகுதி உணர்வுகளின் கதைக்கூறல்களுக்கான களனாகியுள்ளது. தினவாழ்வில் உழலும் மனிதர்கள், அவர்களது உணர்வுகள், விழுமியங்கள், அரசியல், சமூகம் என அது விரிகிறது. அடைக்கலமற்ற காதை ஈழப்படுகொலை தொடங்கி உலகில் தனது சொந்த மக்கள்மீதே படுகொலைகள் நடத்தும் அனைத்து அரசுகளும் ‘தன்னைத்தானே வன்புணரும் பேய் வெளிச்சமாக’ வெளிப்பட்டிருப்பதைப் பேசுகிறது. அடைக்கலமற்ற அகதிகளாக மாற்றப்பட்ட குறிப்பிட்ட மக்களின் துயரம் பற்றியது இக்கவிதை என்றால், ஒழுகுமாடத்தின் கருப்பு வெள்ளை எனும் கவிதை ஓவியம் வரைதல் வழியாகப் பொது ஒழுக்கத்தை விமர்சிக்கிறது. ஒழுக்கத்தைக் கருப்பு வெள்ளையாக காணும் உலகிற்கு எண்ணற்ற நிறங்கள் எதற்கு? விழிகளின் வழியாக இறங்கும் நிறங்கள், தீர்ப்பளிக்கும் நெஞ்சுக்குள் கருப்பு வெள்ளையாய் ஆகிவிடுகின்றன. பறவை பாம்பான கதை-யில் அறியாமைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊடாடும் உடல்களின் உருமாற்றம் பறத்தல், ஊர்தல் என்கிற படிமங்களாகச் சொல்லப்படும்போது தினவாழ்வின் உருமாறும் அனுபவங்களைச் சொல்வதற்கான மொழி உருவாகிவிடுகிறது. கேசவா என்ற கவிதையில் உருவாக்கப்படும் நகைச்சுவைச் சித்திரம், நாட்டுப்புற நையாண்டியைப் போலக் கடவுள் என்கிற பிம்பத்தைத் தலைகீழாக ஆக்கிவிடுகிறது. வேகத்துடன் இணைக்கப்பட்ட கடவுள் பெயரால் வெளியேறிச் செல்கிறான் நண்பன். கனவில் விழிக்கும் ஆழ்மனதிலும் கடவுள் உட்கார்த்தி வைக்கப்பட்டுள்ளார். கற்புக்கரசியை மட்டுமே காதலியாகப் பெறக் கனவிலும்கூட எண்ணுகிறது ஆண் மனம். கடவுளுடன் புணர்ச்சி வேகத்தை இணைப்பதன் வழியாகப் புனிதக்கவிழ்ப்பை நிகழ்த்துகிறது இக்கவிதை.

சொல் பொருள் நியதி, நேரும் கவிதைகள் எனது வாசிப்பில் முக்கியமானவை. மொழி பற்றிய நவீனச் சிந்தனைகளை முன்வைப்பவை. ஆண்களின் பெண்களின் வேறுவேறு மொழிதல்கள் இக்கவிதைகளில் சுட்டப்படுகின்றன. சொல் ஒன்றுதான், பொருள் வேறுவேறு. நிகழ்வு ஒன்றுதான், அர்த்தம் வேறுவேறு. இறுதியில் சொற்பானைகளின் அர்த்தத்தைக் காலப்பூனை கவிழ்த்துக் கொட்டிவிடுகிறது. சொற்பானை, காலப்பூனை என்கிற உருவகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. சொற்பானைக்குள் அர்த்தங்களைப் போட்டுக் கொதிக்கவைப்பதுதான் கவிதையின் உருவாக்கம் என்று சொல்லலாம். சொற்கள் மீண்டும் அர்த்தங்களாக அடுக்கப்பட வேண்டும். காலப்பூனை திரும்பவும் கொட்டிக் கவிழ்த்துவிடும். இப்படித்தான் நேருகின்றன சொல், பொருள் ஆகியவற்றின் நியதிகள்.

தொகுப்பின் மூன்றாம் பகுதி பாலினவரி. பெண், ஆண் என்கிற பாலினங்கள் சமுதாய, கலாச்சாரத்தின்வழிக் கட்டப்படுவதைப் பேசுகிற பகுதி இது. பெண்ணுடலில் ஆதிநிலையைத் தேடுதல், அடங்காக்காமம், மிகுகாமம், பேய்க்காமம், பொருந்தும் காமம், பொருந்தாக் காமம், லிங்கமையக்காமம், யோனிமையக் காமம், பெண்ணுடலை இயற்கையின் நீட்சியாகக் கருதுதல் எனப் பெண் உடல் என்பதைச் சாராம்சமான ஒன்றாகச் சுருக்கிப்பேசும் தமிழ்க் கவிதையின் அலுப்பூட்டும் சூழலில்தான் பெருந்தேவியின் இப்பகுதிக் கவிதைகளின் பேசுபொருள்கள் கவனம்பெறுகின்றன. இவை ‘பெண்’ என்பவளைச் சாராம்சப்படுத்துவதிலிருந்து விலகிப் பெண்கள் என்கிற பன்மைத்துவ நிலைப்பாட்டில் நின்று நவீன வாழ்வின் அனுபவங்களைச்சுட்டுபவையாக, அவற்றை மீள்பரிசீலனைக்குக் காட்டித்தருபவையாக வெளிப்பட்டுள்ளன. காமத்தை, உடலைக் கொண்டாடுதல் என்பதாகத் தமிழில் எழுதப்படும் ‘பெண்மொழி’ என அறிவிக்கப்பட்டிருக்கிற கவிதைகளிலிருந்து விலகி இவை முற்றிலும் வேறான தளத்தில் இயங்குகின்றன. குறிப்பாகச் சொன்னால், இன்றைக்குத் தமிழில் பெருமைப்படுத்திப் பேசப்படும் உடல் ‘கொண்டாட்டக்’ கவிதைகளில் உள்ளிருத்தப்பட்டுள்ள பெண் உடல் என்பது நவீனத்துக்கு முந்தைய, பண்டையச் சமூகத்தில் சாராம்சப்படுத்தப்பட்ட உடலாகக் காணக்கிடைக்கும் ‘லட்சியப்’ பெண் உடல், ஆண் உடலை எதிர்வாகக் கொண்டு ஆணிய-லிங்கமையவாதத்தால் கட்டமைக்கப்பட்ட உடல். பெண் உடல் பற்றிய இப்படியான சாராம்ச மொழிதலிலிருந்து விலகி இக்கவிதைகள் நவீனச் சமூகத்தின் பிம்பப் பரப்பில், தொழில்நுட்பம் சார்ந்த சுரண்டலில், ஆண், பெண் இருமையில் சிக்கிக்கொண்டுள்ள உடல்களையும் மனிதர்களையும் பேசுகின்றன.

இப்பகுதியில் விலக்கப்பட்ட உறவு (incest) பற்றி உரையாடும் கவிதை (புஷ்பா சேலையணிந்த முதல் நாள்) வயதுக்கு வருகிற பெண் உறவுகளான மற்றவர்கள் அடையும் கிளர்ச்சியின் ஊடாகப்பொம்மையாக, உடையை மீறிய அம்மணமாகக் கட்டப்படுவதைச் சொல்லுகிறது. சில ஆலோசனைகள், பூமிபோலும் வலிய, படையல் ஆகிய கவிதைகளும் வெவ்வேறு பேசுபொருள்களின் சூழலில் ஆண், பெண் என்ற இறுகிப்போன பாளங்களான கட்டமைப்புகளைப் பிரச்சினைக்குட்படுத்துகின்றன. இங்கே, இன்னொரு குறிப்பிடத்தக்க கவிதையாக நான் எண்ணுவது இருத்தல் நிமித்தம். குடும்ப வாழ்வில் மனைவியாகப் பாத்திரமேற்கும் பெண்ணுடலுக்குச் சமூகத்தால் இருத்தப்பட்டுள்ள பெண்மை என்னும் நடிப்பில் முலை அறுக்கும் சடங்கு மிகைநாடகீயக் காட்சி. கண்ணகி தனது முலையைத் திருகி எரிகிறாள். பெண்மையின் குறியீடாகக் காலங்காலமாகக் காட்டப்பட்டு வந்த முலைகளை அறுப்பதன் வழியாகப் பெண்மை எனும் பிம்பத்தைச் சிதைத்தெறிகிறாள். சதத் ஹசன் மாண்டோவின் ஜுபைதா கதையில் வரும் பெண் பால்தராத தன் முலையை அறுத்தெறிவதன் வழியாகத் தாய்மையைக் கேள்விக்குட்படுத்துகிறாள். புதுமைப்பித்தனின் வழி கதையில் வரும் அலமு, இளம் விதவையாகச் சமூகம் நிர்ப்பந்திக்கும் வலியிலிருந்து விடுபடத் தனது முலையைக் கிழித்துக் கொள்கிறாள். பாலுந்த ஆற்றல்மையமாக இருத்தப்பட்டுள்ள பெண்மை பங்கேற்கும் நாடகத்தில் ஒரு உடல் பெண்மையை விட்டு வெளியேறும் உச்சநிகழ்வாக முலை அறுத்தலைக் கொள்ளலாம். வெவ்வேறு சமூகங்களின் வெவ்வேறு காலகட்டக் கதையாடல்களில் இந்நிகழ்வு சடங்குபோல் பரிமாணம் கொள்ளுகிறது. சமூகக் கலாச்சாரம் வடிவமைக்கும் பெண்மையைச் சிதைக்கும் இச்சடங்கு பாலியல் பிம்பமாக மட்டுமே கட்டப்பட்ட பெண் உடலின் எதிர்க்குரலைப் பதிகிறது. இதைப் பெண்மையாக உள்ளிறுத்தப்பட்டுள்ள ஆற்றலின் வலிமையான வெளிப்பாடு எனலாம். இங்கே நவீனப் பெண்ணாக வரும் கவிதையின் நாயகி, அந்நாடகத்திற்குப்பிறகு நன்றாகத் தூங்க எண்ணுகிறாள். இதன் மூலம் எதிர்க்குரலின் சடங்கும்கூட அர்த்தமற்ற நாடகப் பகுதியாகவே அமைக்கப்படுகிறது. நவீன உலகில் உடலும் அதன் உறுப்புகளும் தமது தொன்மையான அர்த்தங்களை இழந்துள்ள அறிதலை முன்வைக்கிறது இக்கவிதை. நவீன வாழ்வில் முலையறுத்தல் என்கிற சடங்கும்கூட அதன் சடங்குத்தன்மையிலிருந்து, அது உருவாக்கும் தெய்வாம்சத்திலிருந்து விலகிச் சாதாரண ‘உருச்சிதைவு’ காட்சிக்கான நிகழ்வாக மாறிவிடுகிறது. கண்ணகிகூட அர்த்தமற்ற பிம்பமாகவே இயக்கமடைவதைச் சொல்லாமல் சொல்கிறது இக்கவிதை.

மனைவி எனும் பாத்திரத்தில் காத்திருத்தல் முலை அறுபடலாக விரிவதைப் போல இன்னொரு கவிதையில் (என் புனல்) காமம் புனலாக ‘கொப்பும் நுரையும் நிறைந்ததாக’, ‘பழையவெள்ளத்தின் பயணம் தெரிந்தாக’, ‘அபாயத்தின் நுட்பம் கூடியதாக’ வாசிப்பின்முன் காட்சியாகிறது. ஆணையும் புரட்டி அப்புனலில் இணைக்க முயல்வது முக்கிய அவதானம். ஆணுடலை எதிர்மையாகவோ எதிரியாகவோ கட்டமைக்காமல், இணைவாதலின் ஒரு கூறாக எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்க அறிதல் புள்ளி எனலாம். ‘பேராண்மையின் சில கூரைகள் தடுமாறுதல்கண்டு ஒரு சுழிப்பில் பெண்புனல் சிரிக்கிறது.’ இச்சிரிப்பில் ஆண்-பெண் படிநிலை உறவிலும் நேரக்கூடிய அங்கதக்காட்சிகளைக் கண்டு மெல்ல நகும் ஒரு பெண்ணை எதிர்கொள்ளலாம். புனல் எனும் படிமத்தைத்தாண்டியும் அதனால் இணைக்கப்பட்டும் நகர்கிற படிமங்கள் பாலின உறவுசார் சிக்கல்களின் பல அர்த்தப்பாடுகளை வாசிப்பவரிடம் கோரிச்செல்லுகின்றன.

பெண் என்பவளைக் காமத்தின் களமாக (erotic site) மட்டுமே குறியிட்டு, ஒடுக்குமுறை என்பது அவளது மிகுகாம உடல்பாலியலில் மட்டுமே நிகழ்வதாக மிகுகாமப் பெண்ணுடலைச் சாரப்படுத்தி விதந்தோதிப் பேசும் வழமையான பெண்ணியச் சிந்தனையைத் தாண்டி நிற்பவை இக்கவிதைகள். பெருந்தேவியின் பிரதியில் தாய், தங்கை, மனைவி, காதலி, முதிர்கன்னி, பெண்ணாக நடிக்கும் ஆண், பெண் தெய்வம் எனப் பல பாத்திரங்கள் பாடுபொருள்களாகப் பங்கேற்கின்றன. இத்தகைய பன்மைத்தன்மையோடுகூட ஆண்- பெண் எதிர்வை அப்படியே அடிப்படையாகக் கொள்ளாத பெண்ணியச் சிந்தனைத்தளத்தை வலிமையுடன் முன்வைத்துள்ளது இந்தக் கவிதைப்பிரதி. கவிதைகள் வெறும் பிரகடனங்களாக இல்லாமல் இலக்கியத்தன்மையுடன் வெளிப்பட்டிருப்பது ஆகப்பெறும் ஆறுதல்.

‘ஒரே கண்ணைச் சிமிட்டிச் சிரித்தது சின்ன மயிலிறகு’ போன்ற வரிகளில் வெளிப்படும் எள்ளல். ‘உணவுமேசைமேல் சுடுகலனில் ஆறிக்கொண்டிருக்கிறது இரவு’, ‘நிலா முழுக்கக் கறையான்கள்’ என்பது போன்ற புதிய உருவகங்கள், இப்படி நிறைய வரிகளை அவற்றின் இலக்கியத்தன்மைக்காக, நவீன எடுத்துரைப்புகளுக்காக இந்தப் பிரதியில் எடுத்துக்காட்ட முடியும்.

இலக்கியப் பனுவலை அதிலும் கவிதையை இப்படி உரையாக விளக்கிச் சொல்வது அதன் வாசிப்பை திசைதிருப்பிவிடக் கூடியது என்றாலும், தற்போதைய தமிழ்ச் சூழலில் வாசிப்பை நெறிப்படுத்திக்கொள்ளவோ அல்லது நிராகரித்துத் தனக்கான வாசிப்பை ஒருவர் உருவாக்கிக்கொள்ளவோ ஏதேனும் ஒருவகையில் இவ்வுரை பயன்படலாம் என்பதாலேயே இந்தப் பின்னுரையை எழுதுகிறேன். எனக்கு மட்டுமல்ல, எந்த எதிர்பார்ப்புமற்று இலக்கியப் பிரதிகளையும் விசாரணைகளையும் தமது உயிர்வாழ் உழைப்பிற்கு மத்தியில் உருவாக்கிப் பதித்துக்கொண்டிருக்கும் எல்லோருக்குமே பெருந்தேவியின் இந்தக் கவிதை வரிகள் பொருத்தமாக இருக்கும்:

சுவைக்காத இன்றோ

தெரியாத நாளையோ

எது விழுந்தால் என்ன

என்னுடையது

எண்ணற்ற பகடை.

பெருந்தேவியின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட இப்பின்னுரையும்கூட எண்ணற்ற பகடைகளில் ஒன்றுதான்.

அன்புடன்
ஜமாலன்

07-11-2010 ஜெத்தா - சவுதி அரேபியா.

இப்பின்னுரையில் பேசப்பட்ட  பெருந்தேவியின் கவிதைகளை இணையத்தில் இங்கே பார்க்கலாம்:

http://www.kalachuvadu.com/issue-118/page46.asp  (க்ராஸ்டாக் அல்லது குறுக்குச்சால், சில ஆலோசனைகள், பகல்போல் இல்லை இரவு)

http://www.kalachuvadu.com/issue-127/page42.asp  (சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு, மதிப்பு, ஒழுகுமாடத்தின் கருப்பு வெள்ளை, ஆகாயத்தின் எட்டாவரி, உரையாடல்)

http://www.kalachuvadu.com/issue-104/page23.asp   (நல்ல, கிறுக்கன், எதிர், தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில், குட்டிப்பன்றியே, விழைகிறேன்)

5 comments:

uma varatharajan சொன்னது…

பெருந்தேவியின் இந்தக் கவிதைத் தொகுதியை நான் இது வரை படிக்கவில்லை. ஆனால் தற் போது வெளி வந்து கொண்டிருக்கும் பெரும் பாலான கவிதைகள் பற்றிய உங்களுடைய மன அயர்ச்சியை நானும் அனுபவித்திருக்கின்றேன்.தற்போதைய கவிதைகளின் பின் புலத்தில் பெருந்தேவியின் கவிதைகளைப் பற்றி எழுதப் பட்ட நிதானமான மதிப்பீடு இது.பொருத்தமான தருணத்தில் எழுதப் பட்டிருக்கும் ஆழமான விமர்சனக் குறிப்புகள்.வாழ்த்துகள் நண்பர் ஜமாலன்.

செல்வராஜ் ஜெகதீசன் சொன்னது…

நல்லதொரு மதிப்புரை.

ஜமாலன் சொன்னது…

நன்றி உமா வரதராஜன்.

நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஒரு விமர்சனமே இவ்வளவு இலக்கிய நயத்துடன் இருக்கமுடியுமா.. வியந்து நிற்கிறேன் ஜமாலன்..

நான் இன்னும் கவிதை புத்தகம் வெளியிடவில்லை.. பலதும் பகிரும் சின்ன வலைப்பதிவர்தான்..ஆனால் வெளியிட ஆசை உண்டு.. இவ்வளவு நயமாய் இருக்குமா தெரியவில்லை என் படைப்பு.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ..அதற்கு உங்கள் விமர்சனம் கிடைத்தால்தான் அதன் மிக உச்சமான அங்கீகாரமாய் இருக்கும்..

ஜமாலன் சொன்னது…

நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்.