1990-ல் குடந்தையில் நண்பர் தேனுகா அவர்கள் சிறப்பாசிரியராக இருந்து தயாரித்த “கவிதா இண்டியா“ என்கிற ஆங்கில-ஹிந்தி-தமிழ் மும்மொழிப் பத்திரிக்கையில் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் எழுதக்கேட்டுக் கொண்டதால் குறிப்பாக எழுதப்பட்டது. இதன் கருத்தாக்கங்கள் விரிவாக எழுதப்பட வேண்டியவை. இதுபோன்று அப்போது அறிவியலையும் கலையியக்கத்தையும் கலந்து ஒரு சில கட்டுரைகள் புரிதல் நோக்கில் எழுதப்பட்டது. இக்கட்டுரை மொழியும் நிலமும் தொகுப்பில் வெளிவந்தது. இதன் கருதாக்கங்களை விரிவுபடுத்தி ‘கவிதையும் சிதைவாக்கமும்’ என்கிற கட்டுரை அதன் பின் “மேலும்“ இதழில் வெளிவந்தது. தட்டச்ச முடிந்தால் அதை அடுத்த பதிவாக வெளியிடலாம். கலையை அறிவிலாக புரிய முயற்சிப்பதே இக்குறிப்பு. சமீபத்தில் மூளையின் வினோத செயலமைப்புகள் பற்றிய பல வாசிப்புகள் இந்த கட்டுரையை பதிவில் வெளியிடும் எண்ணத்தை அதிகப்படுத்தியதே காரணம்.
எந்த ஒரு செயலும் (1) ஆற்றல் மாற்றம் என்கிற பௌதீகச் செயலில் துவங்கி (2) உணர்வுறுப்புகள் – மூளைக்கு இடையிலான மின்னியக்கமாக (electrodynamics) செயல்பட்டு (3) நினைவகத்தில் செயலியக்கப்பட்ட உயிர்வேதி (bio-chemical) எழுதுதலாக நடைபெறகிறது. கவிதை ஒரு மனிதச் செயல்பாடாக இருக்கிறது. ஒரு மனித உடல் தான் எதிர்கொள்ளும் பொருள் / நிகழ்வு/ கருத்து என்கிற புறநிலைகள் மனித உடலுக்குள் செயலியக்கப்படும் மேற்குறித்த மூன்று வினைக் காரணிகளே கவிதை உருவாக்கத்திற்கான விஞ்ஞானச் செயல்பாடாக அமைகிறது.
ஒரு மூடிய அமைப்பின் மொத்த ஆற்றல் மாறாததாகவும், அமைப்பிற்குள் ஆற்றல் மாற்றம் என்து சாத்தியமானதாகவும் அமைகிறது. அளவுநிலைகளை அடிப்படையாகக் கொண்ட மேற்குறித்த விதியானது, பண்புநிலை வேறுபாடுகள் பற்றிய நுண் ஆய்வாக அமைகிறது. மனித உடல் எதிர்கொள்ளும் பொருள்/நிகழ்வு/கருத்துடன் ஆன வினை என்பது வெளிப்பொருள் செலுத்தும் ஆற்றலை, மனித ஆற்றலாக மாற்றுவதே. இவ்வாற்றல் மாற்ற வினையானது உணர்வு உறுப்புகளின் உடலியங்கியல் (physiology) விதிகளான நரம்புகளின் செயல்பாடாக (neuronal activity) மூளையின் நினைவகத்திற்குச் செல்கிறது. இச்செயல் நரப்பங்களினால் தூண்டப்பட்ட மின்னியக்க விசையாக (electro dynamical forces) செயல்பட்டு, உயிர்வேதிமூலங்களைத் தூண்டி அணுத்திரள் வினைகளை (molecular reaction) செயல்பட வைத்து அளவுருமாற்றம் (வெவ்வெறு புலன்வழி பதிந்த சங்கேதப் பதிவுகளுடன் வினைபுரிந்து) பண்புரு மாற்றமாகி வேறொரு செயல்வடிவமாக மனிதனிலிருந்து வெளிப்படுகிறது. இந்நிலையில் மனித வரலாறு என்பது நினைவக/செயலகப் பதிவுகளின் உருவாக்க வரலாறாகவே அமைய முடியும்.
மனித மூளையின் மொழி என்பது உயிரகம் (oxygen), நீரகம் (hydrogen), கரிமம் (carbon), அவியம் (nitrogen) போன்ற வேதிமங்களின் அணுத்திரள் வினைகளே ஆகும். மனித உடல் எதிர்கொள்ளும் ஒன்றினை வேதிமச் சங்கேதப் பதிவுகளாக பதிவுறுத்துவதும் பிறகு அப்பதிவுகளை சிதைத்து, சிதைச்சங்கேத செயல் (coding and decoding process) நடைபெறவதால் உருவாகும் வேதிமங்களின் மின்னியக்கு ஆற்றலானது சப்த/எழுத்து ரீதியான இயல்மொழிச்செயலாக அமைகிறது. வளைகுடா யுத்தம் பற்றிய கருத்தோ பார்வையோ/அனுபவமோ... மனித உடலுக்குள் ஒருவகை ஆற்றலை புலன்வழிச் செலுத்தி, அவ்வாற்றலை மூளையின் சங்கேத சிதைச்சங்கேத செயலால் நினைவகங்களில் பதிவுறுத்துகிறது. இவ்வாறு பதிவுறுத்தப்பட்ட எண்ணற்ற செயல்களினால் உருவான வேதிம அணுத்திரள்களால் ஏற்படும் அளவுருமாற்றம் பண்புரு மாற்றமாக மாறி வேறொரு ஆற்றல் வடிவமாக வெளிவருகிறது. இவ்வாற்றல் மாற்றம் சாத்தியமற்ற நிலையில் மனித மூளை அழுத்தங்களுக்கு உட்படுகிறது. எனவே, கவிதை என்பது மனித வினைபடுதலின் ஆற்றல் மாற்றமாக இருப்பதால், கவிதைப் பற்றிய ஆய்வு மனித உயிர்த்தலின் ஆற்றல் மாறக்கோட்பாட்டால் ஆளப்படுவதாகக் கொள்ளலாம்.
வளைகுடா யுத்தம் பற்றிய ஒருவரின் அரசியல், வரலாறு மற்றும் இதர வகைப்பட்ட பார்வைகள் எல்லாம் நமது மூளையின் நினைவகத்தில் பதிவறுத்தப்பட்ட வேதிமச் செர்க்கைகளாக (chemical compounds) உயிர்மொழியால் எழுதப்பட்டுள்ளது. இவற்றின் உள்வினைபடுதலின் சேர்க்கை மற்றும் பிரிகைகளால் ஏற்படும் அளவுரு மாற்றம் பண்பமைப்பாக மாறுதலே கவிதையாக உருவாக்கம் பெறுகிறது. இவ்வாறாக, கவித்துவத்திற்கான சமன்பாட்டை (poetic equation) உயிர்மொழியியலால் சாத்தியமாக்க முடிகிறது.
வளைகுடாயுத்தம் கவிதையாக, அரசியலாக, செயலாக, கட்டுரையாக பல வடிவ மாறுபாடுகளை அடைவது என்பது மனிதனுள் செயலியக்கப்படும் சங்கேத மற்றும் சிதைச்சங்கேத செயலமைப்பின் வேறுபட்ட மூலகங்களின் கூட்டிணைவே ஆகும். இங்கு வர்க்க வேறுபாடு என்பதும்கூட வேறுபட்ட வாழ்நிலைகளால் உருவான வேறுபட்ட சங்கேத மற்றும் சிதைச்சங்கேத அமைப்பின் கட்டமைப்பால் உருவமைந்ததாகவே உள்ளது. கலைஞர்களின் உள்மனம் சிதைந்திருப்பதாகவே உளவியலாளர்கள் கூறுகின்றனர். இச்சிதைவு வேதிமங்களின் நுண்ணியக்கச் செயலின் சீரற்ற வினைபடுதலே ஆகும். இவ்வாறே.. படைத்தல்/சிருஷ்டி என்பதான உருவாக்க நிலைகள் சாத்தியமாகின்றன. நல்ல படைப்பாற்றல் உள்ள கலைஞன் உள்மனச்சிதைவு உடையவனாக இருக்கிறான். அவனது பாதுகாப்பு செயலியக்கம் (defense mechanism) படைப்பு நிலையில் செயலற்றதாக உள்ளது என்கிற உளவியல் கோட்பாடு இதையே தனது மொழியில் கூறுகிறது.
வர்க்கமாக பிளவுண்டுவிட்ட இச்சமூகத்தில் மனித உடலின் வினைபடுதல் அதிகாரமயப்படுத்தப்பட்டுவிட்ட சங்கேத மற்றும சிதைச்சங்கேத அமைப்பைக் கொண்டிருப்பதால், மனித மூளையின் நினைவகம்/செயலகம் ஆகியன அதிகாரமயமாதலுக்கு உள்ளாகி உள்ளது. கவிதை இந் நினைவகம்/செயலகங்களைக் கொண்டு எழுதப்படுவதால், அதிகாரத்தின் நுண்வேதிச் செயலாகவே உள்ளது. இவ்வாறே கவிதைக்குள் செயல்படும் பலவித சமிக்ஞைகளாக அதிகாரமயமான மொழிச்செயல் உருவாகிறது.
இந்நூற்றாண்டின் கவிதை என்பது அதிகாரத்தினை சிதைப்பதாக அமைவதன் மூலம் மட்டுமே மனித நினைவக/செயலக – அமைப்புகளின் நுண்செயலன்களை (micro-processor unit) மாற்றியமைப்பதாக அமையும். அம்மாற்றத்திற்குப் பின் மனித வரையறை இன்றைய மொழியளவில் சாத்தியமற்றதாகவும், புதிய வரையறை என்பது உயிரிமொழித் தளத்தில் சாத்தியமானதகாவும் அமையலாம்.
-ஜமாலன்.
-Kavitha India – ஆண்டு. 1990. (மொழியும் நிலமும் நூலில் தொகுக்கப்பட்ட கட்டுரை. ஆண்டு 2003)




2 comments:
மிக அருமை ,நானும் கவிஞனாக முயற்சித்து கொண்டிருக்கிறேன்.சில புரிதல்களையும் தெளிவையும் கொடுத்திருக்கிறது இந்த கட்டுரை.
நன்றி ஸ்டாலின் குரு
கருத்துரையிடுக