3
‘ஷரிபான்’ கதையில் அடையாள வன்முறை அதன் உச்சநிலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. காசிம் என்கிற தந்தையாகத் துவங்கிய குடும்ப அடையாளம், தன் மகளின் சிதைக்கப்பட்ட நிர்வாண உடலைக் கண்டவுடன் வன்முறையாளனாக மாறி மத அடையாளத்திற்குள் சென்று பிறரான உடல்களை வெட்டிச் சாய்க்கிறது. திடீரென தடுக்கி விழும் காசிம், தான் தாக்கப்படுவதாக உணர்ந்தவுடன் உள்ளார்ந்த அச்சம் அவனைச் சுய விழிப்படையச் செய்கிறது. உடனே சுய அடையாளத்தைப் பெற்றுத் தனது குற்றச் செயல்களை உணர்ந்து தன்னைக் கொல்வதுதான் தனக்கான தண்டனை என்று கருதி தன்னைக் கொல்லும்படிக் கத்துகிறான். அங்கு தன்னைத் தவிர யாரும் இல்லை என்று உணர்கிறான். சாகவே விரும்பிய அவனுக்குத் தனது மகளின் நிர்வாண உடல் தோன்றுகிறது. மனதின் உள் அடுக்குகளில் உட்கார்ந்துவிட்ட இப்பிம்பங்கள் தான் இந்த வகை வன்முறையின் அச்சாணியாக மாறித்தொடரச் செய்கிறது. மீண்டும் அவன் மத அடையாளத்தால் வழிநடத்திச் செல்லப்படுகிறான். அதனால் தான் முசல்மான்கள் வசிக்கும் பகுதி அவனுக்கு எரிச்சலூட்டி வேறு திசையில் திரும்பி ஓர் இந்திப் பெயர்ப்பலகை கொண்ட வீட்டிற்குள் நுழைய வைக்கிறது. பிறரான உடல் தேடி இதன் தொடர்ச்சியாக ஒரு இந்துப் பெண்ணை தனது மகளைவிடவும் சிறியவனைத் சிதைத்துக் கொன்ற பிறகே அவன் சுய அடையாளத்தைப் பெறுகிறான். இங்கு நுட்பமாகக் கதையானது இந்தி-இந்து-இந்தியா என்கிற அடையாளத்தைக் காட்டிச் செல்கிறது. வன்முறையில் சிதைக்கப்பட்ட அடையாளம் எதிர் வன்முறையின் மூலம் மீட்டெடுக்கப்படுகிறது.
இக்கதையில் யார் நீ என்ற கேள்விதான் முக்கியமானது. இதுதான் ஒரு தன்னிலையை அடையாளப்படுத்தும் கேள்வி. ஒவ்வொரு வாழும் உடலுக்கு முன்பும் இந்தக் கேள்வி தொங்கிக்கொண்டிருக்கிறது. இக்கேள்விக்கு அப்பெண் தன் பெயரைச் சொல்லாமல் இந்து மத அடையாளத்தால் நங்கூரமிடப்பட்ட இந்து என்கிறாள். தன் மகளைக் கொன்ற பிறரைப் பலிவாங்குவதற்குத் தன் மகள் போன்ற ஒரு பெண்ணை அதே வகை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொல்கிறான். இது இஸ்லாமிய மத அடையாளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் காசிம் என்கிற ‘தானுக்கு’ (முஸ்லிமிற்கு) பிறர் (இந்து) என்கிற அடையாளத்தைக் காட்டித் தருகிறது. கொலை நடந்தபிறகு உள்ளே ஆயுதத்துடன் வரும் ஒருவர் “யார் நீ” என்று கேட்கிறான். “காசிம்...! என்று கூறும் அவன் தன்னை காசிமாக உணர்ந்து மத அடையாளத் தன்னிலையிலிருந்து வெளியேறுகிறான். “நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்கிற கேள்விக்கு காசிம் போர்வையை நோக்கிக் கையை நீட்டி “ஷரிபான்...” என்கிறான். இந்த ஒற்றைச் சொல்லில் காசிம் தனது செயல் அனைத்தும் தனக்கு எதிரானதுதான் என்பதைப் பதியவைத்து விடுவதுடன் அவனும் மனச்சிதைவிற்கு ஆளாவதைப் பிரதி சுட்டிவிடுகிறது. அவனுக்குள் மிஞ்சியிருப்பது தனது மகள்மீது நடத்தப்பட்ட வன்முறை மட்டுமே. இனி தனது மகளைத் தவிர வேறு சிந்தனையற்றவனாக ஆகி விடுகிறான்.
வந்தவன் போர்வைக்குள் ஒரு பெண்ணின் நிர்வாண உடலைக் கண்டு கையில் பிடித்திருந்த வாளைப் போட்டுவிட்டு “பீம்லா .... பீம்லா” என்று கத்திக் கொண்டே ஓடுகிறான் வெளியே. இங்கே குறிப்புணர்த்தப்படும் விஷயம் ஏலவே ‘இந்து’ (தான்) மத அடையாளத்துடன் தன் பங்கிற்கான வன்முறையை முடித்துக் கொண்டு சுய அடையாளத்துடன் வந்தவன் தனது மகளின் சிதைந்த உடலைக் கண்டு மனச்சிதைவிற்கு ஆளாகிறான் என்பதுதான். அப்பெண்ணின் தந்தைக்கும், காசிமிற்கும் இடையில் ஒரு உரையாடலை மௌனமான நிலையில் பிரதி உருவாக்குகிறது. இரண்டு தந்தைகளும் இழந்திருப்பது எதை? பெற்றிருப்பது எதை? என்கிற சங்கிலித் தொடர் ஒரு கட்டத்தில் குற்றவுணர்வாக மாறி விடுகிறது. அதனால் தான் நான் அந்த வயதான பெண்மணியைக் கொன்றபோது, ஏதோ கொலையே செய்து விட்டது போல உணர்ந்தேன். என் மத அடையாளத்தின் நங்கூரத்தால் தன்னிலை மறந்து வன்முறையில் ஈடுபட்டு வெளியேறிய ஒரு சுயதன்னிலையின் குரலைக் கேட்க முடிகிறது.
காசிம் தனது மகளான ஷரிபானின் நிர்வாண உடலைப் பார்ப்பதற்கும் தன்னால் சிதைக்கப்பட்ட பிறிதொரு பெண்ணின் நிர்வாண உடலைப் பார்ப்பதற்கும் ஒரே வாக்கியங்களும் (ஒரு அடி தள்ளி அப்பெண்ணின் . . . முகத்தை மறைத்துக்கொண்டான்’. பக். 151 பக். 153) சூழல் விவரணைகளும் தரப்படுவதில்தான் கதையின் இறைச்சி எனப்படும் உட்குறிப்பு அடங்கியிருக்கிறது. உடல்களும் சிதைவுகளும் நிகழ்வுகளும் ஒன்றுதான். அது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடையாளங்களும் களங்களும் வெவ்வேறு அது இந்தியாவோ? பாகிஸ்தானோ? அவ்வளவுதான். இந்த அடையாளங்கள் வரலாற்றின் அரசியலின், அதிகாரத்தின் ஒரு விளைவு. அதிகார வர்க்க அமைப்பானது தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மனித உடல்களை அடையாளங்கள் வழியாக தாம் X பிறர் என்கிற முரணாகக் கட்டமைக்கிறது. இம்முரண் ஒவ்வொரு வரலாற்றுக் காலக் கட்டத்திலும் ஒரு அடையாளத்தின் மூலம் இயக்கப்படுகிறது. அரசியலாக இந்த அடையாளங்களின் உட்செறிந்துள்ள அதிகாரத்தைப் புரிந்துகொண்டதால்தான் மண்ட்டோ முற்றிலுமாக வரலாற்றை நிராகரிக்கிறார். தனது பாத்திரங்களுக்குத் தந்த கலாச்சார அடையாளங்களைக் கதையின் இறுதிவரை கொண்டுசெல்லாமல் மறைந்து நீர்த்துப்போகச் செய்கிறார். மத-தேசிய அடையாளமற்ற மனிதர்களை மீட்டெடுக்க முனைகிறார்.
சஹாய் என்கிற கதையில் நீ கொலை செய்தது உன்னுடைய நண்பன் மும்தாஜோ அல்லது முஸ்லீம் மும்தாஜோ இல்லை. மும்தாஜ் என்ற மனிதனை அவன் ஒரு பொறுக்கி என்றால் நீ கொன்றது அந்தப் பொறுக்கித்தனத்தை இல்லை. ஒரு மனிதனைத்தான். அவன் ஒரு முஸ்லீம் என்றால், நீஅவன் மதத்தைக் கொலை செய்யவில்லை. அவனைத் தான் அழித்திருக்காய்” (சஹாய் பக். 308) இதற்கும் மேலாக ஒரு படி போய் மும்தாஜ் கூறுகிறான். “என்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்னைத் தியாகி என்று கூட சொல்லியிருக்கக்கூடும். மேலும் எனக்கு இந்த கௌரவம் தேவையில்லை. நான் தேர்வு எதுவும் எழுதித் தேர்ச்சி பெறாத இந்தப் பட்டம் எனக்கு அவசியமில்லை." மதத்திற்காக இறந்தவன் அமரத்துவம் அடைந்தவனாகக் குறியிடப்படுவது எத்தனை கேலிக்குரியது என நிராகரிக்கப்படுகிறது. "செத்தவர்கள் நாய் போலச் செத்தார்கள் கொலை செய்கிறவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் அப்பாவி மக்களின் இரத்தத்தைச் சிந்தியவர்கள் ஆகிறார்கள். இந்தக் கொலைகளின் அடிப்படையாக இயங்கும் வெவ்வேறு மதக் கோட்பாடுகளான மஸாப், தின், ஈமான், தர்மா நம்பிக்கை இவையெல்லாம் மனிதனின் உடலில் இல்லை. ஆன்மாவில் இருக்கிறது. இவற்றைக் கொலைகாரர்களின் கத்திகளாலும் வாள்களாலும் தோட்டாக்களாலும் ஒழித்துக்கட்ட எப்படி முடியும்?" (சஹாய் பக். 305) என்கிறான் மும்தாஜ். ஆன்ம மோட்சத்தை அடிப்படையாகக் கொண்ட மதங்கள் உடல்களைக் கொல்வதன் மூலம் தனது கோட்பாடுகளுக்கே எதிராக இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. கொலை என்பது ஒரு மனிதனை அவனது இரத்தமும் சதையுமான உடலை இந்த உலகிலிருந்து இல்லாது ஒழிப்பது. அதற்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் உண்மை இதுதான். இதற்கான உரிமையை யார் தந்தது? இது தான் அடிப்படைக் கேள்வி. ஒருவன் பொறுக்கியோ, முஸ்லீமோ, இந்துவோ, இந்தியனோ, பாகிஸ்தானியோ, அது சமூகம் தந்திருக்கும் ஒரு அடையாளமே. இந்த அடையாளத்தின் மூலம் அதிகார வர்க்க அமைப்பானது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, ஒவ்வொரு சமூக நெருக்கடியிலும் ஒரு அடையாளத்தின் மூலம் மனித உயிர்களைப் பலியிடுகிறது. இந்திய-பாகிஸ்தானியப் பெருமுதலாளி வர்க்கம் தனது சந்தையை எல்லைப்படுத்திக் கொள்ளப் பலியிட்ட உயிர்கள் தான் இவை.
சினிமாவிற்கான மொழியில் எழுதப்பட்டிருக்கும் ‘திற’ கதையில் விளக்கப்படும் காட்சி அமைப்புகள் ஒரு திரைக்கதைக்கான விறுவிறுப்புடன் நகர்த்தப்படுகிறது. ஷகினா என்கிற 17 வயதுச் சிறுமி கலவரத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். இக்கதையில் 2 பிரச்சினைகள் பேசப்படுகின்றன. 1. கதையின் மையமான வன்முறைக் கொடுமையிலிருந்து வாசகனின் கவனம் மாறிவிடும் என்பதால் ஷகினாவைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியவர்கள் யார் என்பது கதைக்குள் மறைக்கப்படுகிறது. அதிகபட்ச சாத்தியப்பாடுகளாகக் கதை தரும் யூகம் கலவரக்காரர்கள் மட்டுமின்றிச் சமூக சேவகர்களும் என்பதுதான். இதற்குக் கதையின் ஓட்டத்தில் ஷகினா சுயப்பிரக்ஞையுடன் சமூகசேவகர்களுடன் லாரியில் வருகிறாள். அப்பொழுது அவளுக்கு உடல் பற்றிய உணர்வும் மதிப்பும் இருக்கிறது. கதையில் 8 சமூக சேவகர்கள் எனத் திரும்பத் திரும்பக் குறிப்பதன் மூலம் ஷகினாவின் மீதான பாலியல் வன்முறையால் அவளை நினைவற்ற நிலைக்குத் தள்ளுவதுயார் என்பது யூகமாக நமக்குச் சொல்லப்படுகிறது. 2 பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது வெறும் உடல் சார்ந்த ஒன்றல்ல. அது அதைவிடவும் அதிகமான மனச்சிதைவு நிலைக்கு அவர்களை ஆளாக்கிவிடுகிறது, ஷகினாவின் உணர்வில் ஒன்று மட்டுமே உள்ளது. அது திற என்கிற கட்டளை மட்டுமே. பெண் உடல் என்பது மத இன அடையாளங்களை மீறி ஆண்களால் அதிகாரத்தைப் பாய்ச்சி வெறி தணித்துக்கொள்ளும் ஒரு செயல்களமாக (site) அடையாளமிடப் பட்டிருப்பதை சொல்லிவிடுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் மத அடையாளமும், சமூக சேவகர்களின் மனித நேய அடையாளமும் அடிப்படையில் ஆணாதிக்க உடல் என்கிற பெண் உடலின் மீதான வன்முறையாக இயங்குவதைச் சுட்டிக்காட்டிவிடுகிறது. இது ஆழ் மனதில் ஒடுக்கப்பட்ட பாலுந்தங்களின் விளைவு. மதம், சமூக சேவை என்கிறபெரும் அடையாளங்களுக்குள் இருக்கும் ஆண்-பெண் என்கிற மையமான அடையாளங்கள் இங்கு நங்கூரமிட்டு விடுவதையே இது காட்டுகிறது. இங்கு தான் ராமாநுஜம் குறிப்பிடுவதைப் போல வாசகனாகிய நாம் வெட்கித் தலை குனிய வேண்டியதாக உள்ளது. (கலாச்சாரக் குறியீடுகள் அற்ற நிர்வாண உடல்கள் பின்னிணைப்பு பக். 6) டாக்டருக்கு மட்டுமல்ல நமக்கும் வேர்த்துக் கொட்டி விடுகிறது, இக்கதையை வாசிக்கும்போது.
மதத்தின் அடையாள வன்முறை உக்கிரமாகக் செயல்படும் மற்றொரு கதை “மோஸல்“ அடையாளத்திற்குள் கட்டமைக்கப்பட்டிருக்கும் சுயநலத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. திரிலோச்சன் மோஸல் என்கிற யூதப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தனது சீக்கிய மத அடையாளமான தலை முடியையும், தாடியையும் வெட்டிக்கொள்கிறான். அவள் கிடைக்காமல் போனபிறகு, தனது சீக்கியக் காதலிக்காக மீண்டும் மத அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறான். வெறிபிடித்த முஸ்லீம்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் சிறைப்பட்டுள்ள அவனது காதலியைக் காப்பாற்ற, அவன் எந்த முயற்சியுமே எடுக்கவில்லை என்பதுடன், மனதளவில் இனக்கலவரம் அவளது அண்ணன் மற்றும் பெற்றவர்களைக் கொன்றுவிட்டால் அவளைத் திருமணம் செய்துக் கொள்ள தடைகள் எல்லாம் நீங்கிவிடும் என்று நினைக்கும் அளவிற்கு அவனது சுயநலமான காதல் வேட்கை செயல்படுகிறது. கலவரங்களில் பங்குபெறுபவர்களும் பெறாதவர்களும் அதனைத் தனக்குதவப் பயன்படுத்திக் கொள்ள எண்ணும் மனோபாவம் இங்கு சித்தரிக்கப்படுகிறது. அவன் தனது மத அடையாளத்தின் மூலமே தனது காதலியைப் பெற முடியும் என்பதற்காக வாழ்வா சாவா என்கிற கலவரச்சூழலில் தப்பிக்கும் யுத்தியாகக்கூட தனது தலைப்பாகையைக் கழற்றத் தயாரற்றவனாக இருக்கிறான். அச்சூழலில் மோஸல் முற்றிலும் இந்தியக் கலாச்சாரக் கட்டமைப்பிற்குப் புறம்பானவளான பல ஆண்களுடன் தொடர்புகொள்ளக் கூடியவளாக இருந்தாலும், அவள் அவனது காதலியைக் காப்பாற்றுவதற்காகத் தனது உயிரை விடுகிறாள், கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்க அவள் பயன்படுத்தும் உத்திகள் மிக நுட்பமாகச் சித்தரிக்கப்படுகின்றன. நான் இதையெல்லாம் அனுபவித் திருக்கிறேன் என்று மோஸல் கூறும்போது யூதர்கள்மீது ஹிட்லரால் நடத்தப்பட்ட இன அழித்தொழிப்பு நம் நினைவிற்கு வருகிறது. மண்ட்டோவின் பெரும்பாலான கதைகளில் பெண் உடலின் நிர்வாணம் என்பது ஒரு எதிர்ப்பாக, ஆணை அலட்சியப்படுத்துவதாக, ஆண் என்கிற அடையாளத்தை அவமதிப்பதாகப் பதிய வைக்கப்படுகிறது. இக்கதையில் மோஸல் கலவரக் களத்தைத் தனது நிர்வாண உடலுக்கு மாற்றிவிடுவதன் மூலம் அவர்கள் தப்பிச் செல்வதற்கான ஒரு யுத்தியாக மாறுகிறது.
மதங்கள் கலவரம் என்ற பெயரில் பிணந்தின்னும் சடங்குகளை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் நடந்த பாலியல் வன்முறையின் உச்சத்தை உணர்த்தும் கதை ”சில்லிட்டுப்போன சதைப் பிண்டம்”. பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டு மண்ட்டோவை கோர்ட்டிற்கு இழுத்த கதை. கருப்பிலும் இல்லாமல் வெள்ளையிலும் இல்லாமல் சாம்பல் நிற மொழியால் எழுதப்பட்டிருக்கும் இக்கதை பல தெளிவின்மைகள், மர்மங்கள் மூலம் நகர்த்தப்படுகிறது. கதையின் மையமான பிரச்சினை இயக்கமற்ற பெண்ணுடல் X இயக்கமுள்ள பெண்ணுடல், சில்லிட்ட சதை X வெப்பமான சதை, வீரியம் அற்ற தளர்ந்த ஆண்மை X எழுச்சியுற்ற பெண்மை என்கிற முரண்களாக மாற்றம் அடைந்து தளர்ச்சியடைந்த காயடிக்கப்பட்ட ஆண்மையை இயக்கமுள்ள பெண்மை அழித்தொழிப்பதாக முடிகிறது. அதீத ஆற்றல் கொண்ட ஒரு மனிதனைத் தின்னும் ராட்சசியாக உள்ள குல்வந்கௌர் பிணத்தைப் புணர்ந்து அதனால் ஆண்மை இழந்தவனைக் கழுத்தை அறுத்துக்கொல்கிறாள். பெண் என்ற தன்னிலை கொண்ட ஜீவியைத் தனது மத வெறியையும் அதிகாரத்தையும் செயல்படுத்தும் களமாக மாற்றி விட்ட ஆண்மை பிறிதொரு எழுச்சி பெற்ற பெண்களால் அழிக்கப்படுகிறது. இந்திய மரபு என்பது அடிப்படையில் பெண் உடலின்மீது கொண்ட அச்சத்தின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது. பெண் பெரும் சக்தி கொண்டவள் என்பதான உருவகங்களின் அடிப்படையில் தனது பதற்றத்தை மறைத்து அவளைத் தாயாகக் கொண்டாடுவதன் பின்னணி இதுதான். இக்கதையில் வரும் பருத்த முலைகளைக் கொண்ட குல்வந்கௌர் இத்தகைய பெரும் சக்தி பெற்றவள் என்கிறது கதையாடல். இச்சக்தி அவளுக்குள் செறிவடைந்துள்ள பாலியல் ஆற்றல் என்பதையும் அதன் வீரியமிக்க வெளிப்பாடு அதனை எதிர்கொள்ள முடியாதவனை அழித்தொழிக்கும் என்பதையும் சொல்கிறது. இவ்வாற்றலை ஒடுக்கிக்கொள்பவள் தெய்வமாகவும் வெளிப்படுத்துபவளை ராட்சசியாகவும் குறியிடப்பட்ட ஒரு சமூக அமைப்பில் ஒடுக்குபவளைப் பிண உடலாகவும் அது சில்லிட்டுப்போன சதையாகவும் வெளிப்படுத்துபவளைப் பெண் உடலாகவும் அது வெப்பமுள்ள சதையாகவும் குறியிடுகிறது இக்கதை. ஆண்மை என்பது பிணத்தை அல்லது இயக்கமற்ற உடலைப் புணர்ந்து வெற்றிகொள்வது அல்ல, இயக்கமுள்ள சக்தி கொண்ட பெண்ணை வெற்றிக்கொள்வது தான். இதன் மறுதலையாகக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஆண்மையற்ற காயடிக்கப்பட்ட மனநிலையில் செயல்படுவதை இப்பிரதி சுட்டிக்காட்டுகிறது. இயக்கமற்ற நிலையில் இருத்தப்பட்டுள்ள சிறுபான்மையினரை, ஒரு பெரும்பான்மையினர் தாக்கி அழிப்பது ஆண்மை இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
- (தொடரும்)
- ஜமாலன் (14-12-2005)



