அடையாளமாதல் மற்றும் இருப்பாதல் பற்றிய ஒரு வாசிப்பு.

ஈவ் இன்ஸ்லரின் ”சுவர்” கவிதை  – பற்றி முன்பு எழுதிய இப்பதிவு திருத்தி கட்டுரையாக மாற்றப்பட்டு உன்னதம் ஜீன்-2010 இதழில் மேற்கண்ட தலைப்பில் வெளிவந்துள்ளது. இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

"Text is read without the Father's signature" - Roland Barthes.

எத்தனையோ கவிதைகளை வாசிக்கிறோம் என்றாலும், சில கவிதைகளை கடக்கும் தருணங்களில் அவை தனக்கென பிரத்யேக வாசிப்பை கோருவதையும், வாசிப்பின் வழியாக அது நமக்கான பிரதியாக உருவாகிவிடுவதையும் ஒரு களிப்பான தருணம் எனலாம். ஒரு பிரதி வாசிப்பவனை நுகர்பவனாக மாற்றினால் அதனை வாசக-பிரதி என்றும், புரிதலையும், சிந்தனையையும் உருவாக்கினால் அதனை எழுத்தாளர்-பிரதி என்றும் கூறலாம் என்கிறார் ரோலாண்ட் பார்த். வாசகனை மந்தையான நுகர்விலிருந்து மீட்டு அவனது இருப்பை அசைத்து புரிதலை அதிகப்படுத்தும் அல்லது சிந்தனையை தூண்டுவதன் மூலம் பிரதி என்பது தனக்கான செயலைச் செய்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வாசகனை எழுத்தாளனாக மாற்றுவது ஒரு பிரதியின் தனித்தன்மை எனலாம். அதே நேரத்தில் பிரதி என்பது முற்றும் முழுதானதோ தனித்தன்மை வாய்ந்ததோ யாருக்கும் பிடிபடாத அந்தராத்மாவோ அல்ல. “விமர்சனம் சார்ந்த அனைத்து எண்ணப் போக்குகளும் முடிவுகளும் உண்மையில் பல தளங்கள் கொண்ட ஏதேனும் அரசியல் பொருளாதார சிந்தனையோட்டத்தின் முகமூடிதான். ஆகவே, எந்தவிதமான சார்பும் அற்ற நடுநிலையான -மாசற்ற விமர்சனநோக்கு சாத்தியமே இல்லை” என்றும் பார்த் கூறுகிறார் (1). ஆக, விமர்சனம் என்பதும் ஒரு அரசியல் செயல்பாடுதான். அது அதற்கான அரசியலைக் கொண்டே அமைகிறது. அதேபோல் வாசிப்பு என்பதும் ஒரு அரசியல் செயல்பாடுதான். அது அதற்கான தேர்வு விதிகளைக் கொண்டே அமைகிறது. அப்படி ஒரு வாசிப்பின் அரசியல் செயல்பாட்டிற்கான முயற்சியே இது.

பெருந்தேவி தனது 'இன்ன பிற' என்கிற வலைப்பதிவில் ஈவ் இன்சுலர் என்கிற அமேரிக்க பெண்ணியாளளரின் “சுவர்” என்கிற ஆங்கிலக் கவிதையை மொழியாக்கம் செய்துள்ளார். அக் கவிதை குறித்த மேற்சொன்ன அடிப்படையிலான ஒரு வாசிப்பே இது. கவிதைகள் குறித்த பல வாதங்கள் கோட்பாட்டு சர்ச்சைகள் உள்ளன. கவித்துவம் என்றால் என்ன? ஒரு கவிதையை கவிதையாக ஒரு வாசகன் உணர்வதற்கான கூறுகள் எது? கவிதையை உரைநடை புனைவுகள் இவற்றிலிருந்து பிரிப்பது எது? இப்படியாக பல அடிப்படை கேள்விகள் உள்ளன. இத்தகைய கேள்விகளை இலக்கிய கோட்பாட்டாளர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுவோம். இங்கு நாம் செய்ய முனைவது பிரதி-வாசிப்பு-புரிதல் என்கிற தளத்திலான ஒரு வாசக செயல்பாட்டிற்கான முயற்சியே.

சுவர்

ஜெருசலம், இஸ்ரேல்

என் தோழி அதீனா என்னை மேற்குக்கரைச் (West Bank) சுவரின்
அந்தப்பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கே அது இருக்கும்விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன்.
உயரமாக இருக்கிறது அது இன்னும்.
தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.
கடினமான சிறுமைகொண்ட சிமெண்ட்டின் பிரிவுச்சக்தி, வீடுகள்,
நிலம், மற்றும் நண்பர்கள்
திரும்பப் போகிறேன்
நிறைய கதைகளைக் கேட்கிறேன்.

இந்தப்பக்கத்தில் தண்ணீர் இல்லை
கிணறுகள் இல்லை
மாதுளையோ அத்தியோ இல்லை
வேலைகள் இல்லை

வெளியேபோக வழியுமில்லை.
வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு
போராட்டம் செய்கிறேன்.
ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்
என்பது புரியவில்லை அவர்களுக்கு.

ரகசியமாக அது.
வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.
மாதங்களாக தொடர்கிறது.

சுவர் என்னை மாற்றுகிறது.
நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.
மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.
அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.

என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்
அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.
திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
முன்பெல்லாம்போல என் தந்தை
என்னைப் பார்ப்பதில்லை.

அண்ணனோ உரத்துப் பேசுகிறான்
என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்
இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.
இப்போதும் முடியாது என்கிறேன்.
எனக்கு உளச்சிக்கல்கள் இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.
துப்பாக்கிசுட நான் பழகமாட்டேன்.
சிறைக்குப் போகிறேன்.
ராணுவத்தின்/சிறையின் சீருடையை அணிய மறுக்கிறேன்.
தனிச்சிறையில் வைக்கப்படுகிறேன்
அது என்னை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறது என்பதைச் சொல்லவில்லை.
ஒவ்வொரு இரவும்
என் வயதொத்த ஒரு இளம்பெண், பதினெட்டுபோல வயதிருக்கும்,
என் செல்லில் உலாவுகிறாள்.
அவள்தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.
அவள் நிர்வாணமாக இருக்கிறாள். பசியோடு இருக்கிறாள்.
எனக்கு எதையோ தெரியப்படுத்த நினைக்கிறாள்.
அவளுக்குத் தொண்டை அடைக்கிறது.
எலும்பின் அவள் கைகள்
சுவரைப் பிறாண்டுகின்றன.
அவள் ஒரு கனவா, இல்லை ஒரு நினைவா,
சொல்லத் தெரியவில்லை எனக்கு.
என்னை அவள் பீடிக்கிறாள்
அல்லது
விடுவிக்கிறாள்.

- ஈவ் இன்ஸ்லர் (”நானொரு உணர்வுபூர்வமான பிறவி” I am an emotional creature (2010) என்கிற புத்தகத்திலிருந்து.)

ஈழப் போராட்டத்துடன் தமிழ்சூழலுக்கு அறிமுகமான கதையாடல் வகைப்பட்ட கவிதை இது. அரசியல் கவிதைகள் என்றால் முழக்கங்கள், ஓங்கி ஒலிக்கும் வாசகங்களைக் கொண்டவை என்கிற புரிதலே 80-களில் தமிழ் சூழலில் நிலவியது. அப்பொழுது நிகழ்ந்த ஈழத்தின் இனக்கலவரங்களுடாக, தமிழில் அறிமுகமான ஈழக்கவிதைகள் குறிப்பாக சேரனின் கவிதைகள், அரசியல் கவிதைகளில் கதையாடல் உத்திகளைக் கொண்டு வெளிப்பட்டது. பொதுவாக, அரசியல் கவிதைகள் கதையாடல் வழியாகவே ஒரு தன்னெழுச்சி உணர்வை உருவாக்கக் கூடியவை. இவ்வகைக் கவிதைகள் பிரச்சாரமாக ஓங்கி ஒலிப்பதோ, தனது அரசியலை நேரடியாக வைப்பதோ இல்லை. ஒரு கதையாடலை பிரதியாக முன்வைத்துவிட்டு நகர்ந்துவிடும் கதைசொல்லி, பிரதியின் வாசல்களை திறந்து வைத்து விடுகிறாள். ஒவ்வொருவரும் ஒரு வாசல் வழியாக நுழையலாம். அப்படி ஒரு வாசல்தான் இது.

பாலஸ்தீனிய ”தீவரவாதி”-களிடமிருந்து 'யூதர்களை பாதுகாக்கிறோம்' என்ற காரணத்தை சொல்லி, சர்வதேச விதிமுறைகளையும், மனித உரிமைகளையும், சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி இஸ்ரேலிய அரசால் கட்டப்பட்ட மிக நீளமான சுவரே ”மேற்குகரை சுவர்”. சுமார் 650 கி.மி. நீளமும் 25 அடி (8 மீட்டர்) உயரமும் உள்ள கான்கிரீட் சுவர். ஒரு நாட்டிற்குள் நடத்தப்பட்ட பாகப்பிரிவினை இது. இனவெறி சுவர் (Apartheid Wall) என்று பாலஸ்தீனியர்களாலும், பாதுகாப்பு சுவர் (Security Wall) என்று இஸ்ரேலியர்களாலும் அழைக்கப்படும் இச்சுவரை, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட உலக-அமைதிக்கான அமைப்புகள் “சுவர்” என்ற சொல்லால் மட்டுமே கவனமாக அழைக்கின்றன. அதையே தலைப்பாகக் கொண்ட, இக் கவிதை சொல்லாடல் அரசியலின் முதல் தடத்தை பதிக்கிறது. “சுவர்“(2) யூதர்களின் மத-இன-தொன்ம அடையாளத்துடன் உறவு கொண்ட வழிபாட்டு அடையாளமாகவும், வரலாற்று அடையாளமாகவும் மட்டுமின்றி ஒரு நில அடையாளாகவும் மாறியிருப்பதை கவனப்படுத்துகிறது இக்கவிதை. மதம், இனம் என்கிற கருத்துருவங்களால் பிரிக்கப்பட்ட பாலஸ்தீன்-இஸ்ரேல் வரலாற்றை, மேற்குக்கரையில் பிரிக்கப்பட்ட ஒரு சுவரை உருவகப்படுத்தி பேசுகிறது இக்கவிதை.

அதீனா என்ற தோழியால் மேற்குகரைச்சுவருக்கு அப்பக்கம் அழைத்துச் செல்லப்படும் பிரதியின் “நான்“ என்ற அடையாளம், இப்படிக் கூறுகிறது, “அங்கே அது இருக்கும் விதத்தைப் பார்த்து ஆச்சர்யமடைகிறேன், அந்த பக்கச் சுவர் உயரமாகவும் உள்ளது” என்று. அதாவது, இந்த பக்கச் சுவர் உயரமாக இல்லை என்பதுடன், இப்பக்கச் சுவருக்கு பழகிய நானாக உள்ளது என்பதே இதன் உட்பொருள். நிலத்தை அபகரித்தவனுக்கு சுவர் பாதுகாப்பு என்பதால் உயரம் குறைவானது, நிலம் அபகரிக்கப்பட்டவனுக்கு சுவர் தடுப்பு என்பதால் உயரமானது. ஒரே சுவரின் இருபுறப் பார்வைகளால் உருவாகும் உயர வேறுபாடு முக்கியமாகிறது. இதனை வெறும் உயரவேறுபாடாக மட்டுமே கருதமுடியாது. இரண்டு மன அமைப்புகளின், அவற்றின் வாழ்தல் உருவாக்கிய புரிதலின் வேறுபாடு எனலாம். இந்த வேறுபாட்டை உணர்ந்த மாத்திரத்தில் “நான்“ இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து பாலஸ்தீனிய அடையாளத்திற்கு மாற்றமடைந்து விடுகிறது.

”உயரமாக இருக்கிறது அது இன்னும்.
தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.”

இங்கு பிரதியின் அகப்பரப்பிற்குள் அழைக்கப்படும் வாசிக்கும் நாம் தாண்ட ஹெலிகாப்டர் வேண்டுமெனில், கவிதையின் நான் எப்படி போனது? என்கிற கேள்வி உள்ளது. அந்த நான் சுவருக்கு அப்பாலான அடையாளமாக மாறியதால், அதன் இருப்பும் சுவருக்கு அப்பாலானதாகவே உள்ளது. இந்த சுவர் தாண்டல் அடையாளமாதல் எனும் மொழிச் செயலால் நடக்கிறது. வாசிக்கும் நாம் இன்னும் நமது அடையாளத்தில் இருப்பதால், தாண்ட அதாவது சுவரின் அப்பக்க நிலமைகளை புரிந்துகொள்ள நமக்கு “ஹெலிகாப்டர்“ வேண்டும் என்கிறது பிரதி. அதாவது ”ஹெலிகாப்டர்“ என்பது நமது புரிதல் அடையவேண்டிய உயரத்தை சொல்வதற்கான கருவியாக காட்டப்படுகிறது. பிரதியின் “நான்“ இப்புரிதலை கவிதையின் மொழிவழித் தாண்டியதால் தன்னடையாளத்தை அழிக்கிறது. அது ”மற்றமை”-யாக மாற்றமடைகிறது. அதனை விவரிக்கும் விவரணைகள் வருகின்றன. இருபக்கமும் உள்ள வேறுபட்ட நிலமைகளை நமது புரிதலுக்காக கவிமொழியானது விவரிக்கத் துவங்குகிறது.

கடினமான சிறுமைகொண்ட சிமெண்ட்டின் பிரிவுச்சக்தி, வீடுகள்,
நிலம், மற்றும் நண்பர்கள்
திரும்பப் போகிறேன்
நிறைய கதைகளைக் கேட்கிறேன்.

இந்த விவரணையில் ”சிறுமைகொண்ட சிமெண்டின் பிரிவுச்சக்தி” என்பதிலிருந்து நமக்கு உருவாகும் சித்திரம் ஒரு சிறைக்கான அமைப்பே. ஒரு தேசத்தையே சிறையாக மாற்றிவிட்டதான ஒரு உருவக அமைப்பை உருவாக்கிவிடுகிறது. பாலஸ்தீனம் இவ்வாறாக சுவர்வழியாக சிறைபிடிக்கப்பட்ட ஒரு தேசமாக மாற்றப்படுகிறது. “திரும்பப் போகிறேன்“.. என்பதன் மூலம் இந்த ஊடுறுவல் தொடர் நிகழ்வாக மாறுகிறது. “நிறைய கதைகளை கேட்கிறேன்“ இங்கு கதைகள் வழியாக இந்த அடையாளச் செயலாக்கம் மேல்நிலையாக்கம் (over-determined) பெறுகிறது.

இந்தப்பக்கத்தில் தண்ணீர் இல்லை
கிணறுகள் இல்லை
மாதுளையோ அத்தியோ இல்லை
வேலைகள் இல்லை
வெளியேபோக வழியுமில்லை.

இவ்வரிகளில் நான் என்பதன் அடையாளம் முழுமையாக மாறி மற்றமையின் குரலாகவே ஒலிக்கத் துவங்குகிறது. வாழ்க்கை என்பது ஈரமற்று உலர்ந்து சிறைத்தன்மையுடன் இருப்பதை விவரிப்பதாக உள்ளது. பிரதியானது சுவருக்கு அப்பாலான பாலஸ்தீனம் என்கிற தேசத்தின் வாழ்வு சிறைவாழ்வாகிவிட்டதை விளக்க முனைகிறது. அதன் தொடர்ச்சியாக,

ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்
என்பது புரியவில்லை அவர்களுக்கு

என்பதுவரை இந்த மற்றமையாகவே நான் செயல்படுகிறது. இங்கு சிறுமி என்கிற பெண்-அடையாளம் பெறும் நான், இனம் என்கிற மற்றொரு அடையாளத்தையும் பெறுகிறது. பெண் மற்றும் பாலஸ்தீனியவள் என்ற இரண்டு மற்றமைகளாக இங்கு அடையாளப்படுகிறது. இந்த இரு மற்றமைகளும் ஒடுக்கப்பட்டவை என்கிற அடிப்படையில் ஒருமை அடைகிறது.

“இந்த ரகசிய செயல்பாடு பல மாதங்களாகத் தொடரப்படுவதன்” வழியாக, அதாவது, சுவருக்கு அப்பால் சென்று அங்கு நிகழும் செயல்களி்ல் பங்கு பெறுவதால், ஒடுக்கப்பட்ட இன-அடையாளமான பாலஸ்தீனிய அடையாளத்திலிருந்து பாலஸ்தீனிய “இருப்பு“-(3)க்கு மாற்றமடைகிறது. இதற்குபின் கவிதை ஒடுக்கப்பட்ட-இருப்பு அல்லது சிறுபான்மை-இருப்பு என்கிற வெளியிலேயே பயணிக்கிறது. கவிதையின் நுட்பம் இந்த தளமாற்றம்தான். இது அடையாளம் சார்ந்த பிரதிநிதித்துவ அரசியல் அல்ல என்பது முக்கியம். இக்கவிதையில் உள்ள நான் வழக்கமான கவிதைகளில் காணப்படும் ஒடுக்கப்பட்டவரின் பிரதிநிதியாக இல்லாமல், சூட்சமமாக ஒடுக்கப்பட்ட மற்றமையின் இருப்பாக மாறிவிடுகிறது. அடையாளமாதலில் இருந்து இருப்பாதலை நோக்கி நகரும் இந்த மாற்றம் முக்கியமானது.

”சுவர் என்னை மாற்றுகிறது” என்பதற்குப்பிறகு எல்லா நிகழ்வுகளும் மற்றமையின் இருப்பிலிருந்து விவரிப்பதாக மாறிவிடுகிறது. குரலில் நுட்பமான மாற்றங்கள் ஏற்படுவதை கவிதை மொழியில் உணரலாம். அதாவது ஆதிக்கத்தை மறுப்பது என்பதாக குரல் இறுக்கமானதாக மாற்றமடைகிறது. முன்பிருந்த ஆச்சர்யம் கலந்த, இரக்கம் நிறைந்த கருணை அடிப்படையிலான சாகசக்குரல் (என்பது) கவிதையின் மொழியமைப்பில் மறைந்து, இறுக்கமானதாக எதிர்ப்பதாக மாறிவிடுகிறது. இங்கு கவிதையின் “நான்“ மற்றமையின் இருப்பையே தனது தன்னிலையாக உணர்கிறது. இந்த “நான்“ யூத தன்னிலைக் கட்டமைவிற்கான அரசு, மதம் மற்றும் இராணுவம் சார்ந்த சடங்குகளை நிறுத்திக் கொள்ள முனைகிறது,

”நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.
மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.
அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.”

முன்பு கவிதை மொழியல் போகிறேன், கேட்கிறேன், செய்கிறேன் என்ற உடன்பாட்டு வினைவடிவங்கள், இங்கு நிறுத்துகிறேன், மறுக்கிறேன் என்கிற எதிர்மறை வினைவடிவங்களாக மாறிவிடுகிறது. இவ்வரிகளில் உள்ள சவரம் செய்தல், மாமிசம் உண்ணாமை இவற்றிற்கான கலாச்சார சங்கேதங்கள் நமக்கு புரிபடவில்லை. ஒருவேளை இவ்வரிகளில் இராணுவ ஒழுங்கமைப்பிற்கான சடங்குகளான நேர்த்தி, வலு என்பதை மறுப்பதற்கான குறிப்பாக இருக்கலாம்.

இதற்கு பிறகு, கவிதை பல நுட்பமான வரலாற்றை உள்ளடக்கி எழுதிச் செல்கிறது. இதனுள் இயங்கும் அமைப்பு, உருவாக்கும் வரலாற்றுக் காரணிகள் பற்றிய புரிதல்தான் முக்கியம் எனக் கருதுகிறேன். இக்கவிதையில் சுவர் துவங்கி கவிதைக்குள் வரும் பாலஸ்தீனப் புரட்சியாளர்கள், தாத்தா, அப்பா மற்றும் அண்ணன் என்கிற ஆணடையாளங்கள் வரலாற்றின் இயக்க சக்தியாக காட்டப்படுகிறது. வரலாறு என்பது ஆண்களுக்காக கண்டடையப்பட்ட ஆணிய கதைசொல்லல் என்பதை சொல்வதைப்போல உள்ளது.

இதற்கு பிந்தைய வரிகள் யூத வரலாற்றின் 3 முக்கியக் காலகட்டங்களை குறிப்பதாகப் படுகிறது. யூதர்கள் மோசஸ் காலத்தில் எகிப்திலிருந்து இன்றைய இஸ்ரேல்/பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியேறி, அங்கிருந்து ரோமப்பேரரசால் துரத்தப்பட்டு புலம்பெயர்ந்த காலகட்டம். அதன் குரலாக இருப்பவர் தாத்தா. இழந்துபோன நிலம் பற்றிய உடைந்த இதயங்களைக் கொண்டவராக, அந்த தலைமுறையின் சொல்லொண்ணா வேதனைகளை உடையவராக உள்ள அவரது இதயத்தை பரிவுடன் காண்கிறாள். அவரோடு அவளுக்கு உரையாட முடிகிறது. இஸ்ரேல் என்கிற நாடு உருவாக்கப்பட்டதிற்கான அடிப்படையான உரையாடல் இது.

”என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்
அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.
திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம். ”

இந்த வரிகளின் வழியாக அவள் பாலஸ்தீனிய அடையாளத்திற்குள் இருப்பதை கவிதையில் உள்ள ஆண்கள் புரிந்துகொள்கின்றனர். அதாவது ஒடுக்கப்பட்ட தன்னிலையாக அவள் மாறிவிட்டிருக்கிறாள் என்பதை இந்த ஆண்களின் எதிர்கொள்ளல்மூலம் பிரதி நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இது ஒருவகை ”சிறுபான்மை இருப்பாதல் (becoming-minor)” என்கிற நிலை. சிறுபான்மை இருப்பாதல் என்பது எண்ணிக்கை சார்ந்த சிறுபான்மை அல்ல. எந்த ஒரு அமைப்பிலும் ஆதிக்கத்தினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையாக இருத்தல். அப்படி இருப்பதின் வழியாகவே பாசிசமாதலில் இருந்த ஒரு தன்னிலை தன்னை தப்ப வைத்துக் கொள்ளமுடியும். பிரதியின் “நான்“ யூத பாசிசமயமாதலில் இருந்து தப்பவே தன்னை சிறுபான்மையாக ஆக்கிக் கொள்கிறது. பிரதியில் சொல்லப்படும் “திருப்பித் தரவில்லை“ என்ற வரி, இஸ்ரேலியர்களுக்கு நிகழ்த்தப்பட்ட வரலாற்றுக் கொடூரத்தை, அதாவது அவர்களது “பூர்வீக நில“-த்தை திருப்பித் தரவில்லை என்பதாக பொருள்கொள்ளமுடியும். ஆக, அவள் இஸ்ரேலிய அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்படுகிறாள். அதாவது அவளுக்கு அவர்களது மண் பாலஸ்தினிய-அரபிகளின் அபகரிப்பாக சொல்லப்படுகிறது.

“முன்பெல்லாம்போல என் தந்தை
என்னைப் பார்ப்பதில்லை.”

இங்கு தந்தை என்பவன் இரண்டாவது காலகட்டத்தின் அதாவது இஸ்ரேலியர்கள் புலம்பெயர்ந்த நிலையில் உள்ளவன் என்பதால், அவளை புறக்கணிக்கிறான். இந்த தந்தைதான் “தாய் நாட்“-டை உருவாக்குபவன். தனது தாய்நாட்டை உருவாக்க மற்றவரது தாய்நாட்டை அபகரிக்கும் இந்த தந்தையுடன் அவளுக்கு உரையாடல் சாத்தியமற்றதாகிவிடுகிறது. அதனால், அவள் இத் தந்தையால் புறக்கணிக்கப்படுகிறாள்.

”அண்ணனோ உரத்துப் பேசுகிறான்
என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்
இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.”

அண்ணன் இஸ்ரேல் உருவாகிய பிறகானவன் என்பதால் முழுக்க இராணுவமாக இருக்கிறான். கொலை என்பது அவனிடம் மறமாக வெளிப்படுகிறது. ஆதிக்க இனத்திற்கான அறமாக மாற்றப்படுகிறது. இங்கு வரலாற்றில் நிகழ்ந்த வன்முறை முறைப்படுத்தப்பட்ட அதிகார எதிர்-வன்முறையாக தொன்மக் கதையாடல்கள் வழியாக மாறியுள்ளது. கவிதையில் உள்ள சொல்லாட்சியானது பிரதியின் ஆழ்தளத்தில் உள்ள அரசியலை வெளிப்படுத்திக் காட்டுகிறது. முதல் பகுதியில் அவளுக்கு பாலஸ்தீனியனாக உள்ள புரட்சியாளர்கள்.. அண்ணனால் இங்கு அரேபியனாக எடுத்துரைக்கப் படுகிறார்கள். முறைப்படுத்தப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் என்கிற வார்த்தை பிரதியில் இங்கு அரேபியனாக மாற்றீடு செய்யப்படுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனை என்பது நிலம், நாடு அதன் இறையாண்மை என்பதிலிருந்து, இனம்-மதம் என்பதற்குள் அடக்கப்பட்டுவிடுகிறது. அதாவது

'வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு
போராட்டம் செய்கிறேன்"

என்று முன்பு இஸ்ரேலிய-தன்னிலையாக கவிதையில் துவங்கிய “நான்“ போராடியதை சொன்ன பிரதியானது, சுவரின் மூலம் அடைந்த மாற்றத்தால், அண்ணனின் யூத-இனவாத(ஜியோனிச) குரலை அம்பலப்படுத்திவிடுகிறது. இந்த வரிகளில் உள்ள வெள்ளிக்கிழமைகளில் என்கிற சொல்லின் தேர்வு நுட்பமானது. இஸ்லாம் மதம் முன்வைத்த புனிதநாள். இது பாலஸ்தீனிய புரட்சியாளர்களின் மதம் சார்ந்த உணர்வை வெளிப்படுத்தும் சொல் மட்டுமின்றி அப்பையன்களுடன் போராட்டம் செய்வதற்கான நாட் தேர்வாக சொல்லப்படுவது அதன் மத தன்மை குறித்த ஒருவகை விமர்சனம் எனலாம். பாலஸ்தீனிய இனப்பிரச்சனை, சர்வதேச மற்றும் இஸ்லாமிய சமூகங்களால் ஒரு மதப்பிரச்சனையாக குறுக்கப்பட்டுவிட்டதன் ஒரு அடையாளம்தான் கவிதையில் சொல்லப்படும் வெள்ளிக்கிழமைப் போராட்டம் எனலாம்.

பிறகு தன்னினத்திற்குள்ளேயே மற்றமையாக இருப்பவள் உளச்சிக்கல் உள்ளவளாகவும், தண்டிக்கப்பட வேண்டியவளாகவும் கருதப்படுகிறாள். தனிமைப்படுத்தப் படுகிறாள். வரலாறு விளிம்புகளை இப்படித்தான் உருவாக்குகிறது. கட்டாய இராணுவமாக்கலை மறுத்ததால், சிறைக்குள் அடைக்கப்பட்ட அவள், இங்கு மற்றமை என்கிற பாலஸ்தீனிய பெண்ணிருப்பாக முழுமையாக்கம் பெறுகிறாள். இதற்கு பிந்தைய கவிதை வரிகளை உணர்வுகளால்தான் புரிந்துகொள்ளமுடியும். இறுதியில் நான்-மற்றமை என்கிற எதிர்-இருப்புகளை சிதைத்து, கவிதை மொழி, பிரதியை துவங்கியபோது வந்த அதீனா என்கிற பாலஸ்தீன தோழியாகவே கவிதை சொல்லியாகிய நானை உருமாற்றிவிடுகிறது. இங்கு அதீனாவும்-நானும் வேறல்ல “அவள்“ என்ற ஒன்றாக மாறிவிடுகிறார்கள். தனிமைச்சிறையில் உள்ள அவள், அவளுக்கே அந்நியமாக மாறி, ஒடுக்கப்படுகிறாள். கவிதை மொழி இங்கு மனச்சிதைவின் மொழியாகிவிடுகிறது. வேறு என்ன செய்யமுடியும், மழிக்கப்பட்ட தலையுடன், நிர்வாணமாக, சிறைச்சுவரை பிராண்டுவதை தவிர.

அதாவது, கவிதைக்குள் செயல்படும் நான் இப்படியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதியாக இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களது இருப்பாக மாறிவிடுகிறது. கவிதை எழுதியவர் அமேரிக்க-யூதர் என்பதை மறக்கடித்துவிட்டு, ஒரு இஸ்ரேலியப் பெண் என்பதாக துவங்கி, அவள் தன்னை ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியவளாக மாற்றிக் கொள்கிறாள். அதாவது சிறுபான்மை-இருப்பாதல் என்கிற நிலையை அடைகிறாள். “ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண், ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்தவளை பீடிக்கிறாள் அல்லது விடுவிக்கிறாள்“. இங்கு சுதந்திரம் விடுதலை என்பதெல்லாம் வேறு பொருள்கொள்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைதான் ஒடுக்குபவர்களையும் விடுவிக்கும் என்கிற இந்த செய்திதான் முக்கியம். வேறுவிதமாகச் சொன்னால், ஒடுக்குபவன், ஒடுக்கப்பட்டவன் என்கிற பிரிவனை தகர்க்கப்பட்டால்தான், மனிதவாழ்தல் என்பது அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

பின்குறிப்பு: யூதராக பிறந்த ஈவ் இன்ஸ்லர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உலகெங்கிலும் கவிதைகள், நாடகங்கள் வழியாக ஒலித்துக் கொண்டிருப்பவர். ஒரு யூதராக பாலஸ்தீனியர்களது ஒடுக்கமுறைக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது இக்கவிதை. பிரதிகளை விட்டுவிட்டு எழுதியவரின் அடையாளங்களை தேடும் நமது இலக்கியப் பார்வைக்கு சவாலாகவும், மாற்றாகவும் உள்ளது.

ஆசிரியர் பற்றிய குறிப்பு: ஈவ் இன்சுலர் (Eve Ensler) அமேரிக்க நாடகாசிரியர், கவிஞர், பெண்ணியவாதி, செயல்பாட்டாளர். The Vagina Monologues என்கிற தனது நாடகத்தை உலகெங்கிலும் நடத்தி வருபவர். 45 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 119 நாடுகளில் நிகழ்த்தப்பட்ட புகழ்பெற்ற நாடகம் இது. பல விருதுகளைப் பெற்றவர். பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறைக்கு எதிரான செயல்பாட்டாளர். இந்த நாடகத்தின் மூலம் பெண் மீதான வன்முறைக்கு எதிரான V-Day (Victory, Valentine and Vegina என்பதைக் குறிப்பதே இந்த V-Day) என்கிற உலகளவிலான இயக்கத்தை உருவாக்கி நடத்தி வருபவர். 60-மில்லியன் அமேரிக்க டாலர்களை தனது நாடகங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் உருவாக்கி உலகளவிளான பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான பல செயல்களை செய்து வருபவர். பெண்களுக்கான இல்லங்கள், கல்வி போன்ற பல தன்னம்பிக்கைதரும் செயல்பாடுகளை செய்து வருபவர். ஆப்கானியப் பெண்களின் புரட்சிகர அமைப்பின் (Revolutionary Association of the Women of Afghanistan RAWA) நெருங்கிய ஆதரவாளர். தலிபான் ஆட்சியில் ஆப்கானிற்கே சென்று அங்குள்ள பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்.

குறிப்புகள்:

1. ரோலண்ட் பார்த்தின் இக்குறிப்பு “அமைப்பு மையவாதம் பின்அமைப்பியல் மற்றும் கீழைக்காவியஇயல்” என்கிற சாகித்ய அகாதெமி வெளியிட்ட கோபி சந்த் நாரங்க்-கின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட உருது நூல் பக். 160-ல் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

2. ”சுவர்” என்பது யூதர்களின் ஒரு தொன்ம-வரலாற்று-நம்பிக்கையை குறித்து நிற்கும் ஒரு புனித இடமாகும். கி்.பி. 70-ல் ரோமானியர்கள் யூதர்களின் எழுச்சியை அடக்கி இடித்து தள்ளிய சாலமன் மன்னால் கட்டப்பட்ட யூதர்களின் புனித ஆலயத்தில், இடிபாடுகளுக்கிடையே மிஞ்சிய ஒரு சுவர்தான் அது. உலகெங்கிலும் உள்ள யூதர்களை ஜெருசலம் நோக்கி மையங்கொள்ள வைத்த ஒரு உள்ளுரை ஆற்றல் அது. அது அவர்களது புனித தலமாகும். இந்த சுவர் இஸ்லாமியர்களுக்கா? யூதர்களுக்கா? என்பதில் பெரும்போரே நிகழ்ந்தது. காரணம், முகமது நபி முதலில் இந்த ஆலயத்தை மையமாகக் கொண்ட - அல் குத்ஸ் என்பதை இறை ஆலயமாக நோக்கித் தொழுது கொண்டிருந்தார். அதனை அரபியில் பைத்-அல்-முகுத்தஸ் என்பார்கள். அவரது மெஹராஜ் எனப்படும் வானியல் பயணம், மெக்காவில் துவங்கியது. வெண்ணிற இறகு கொண்ட புர்ஹா என்கிற குதிரையில் அவர் அழைத்து செல்லப்பட்டார். அக்குதிரை அவரை இந்த இடத்தில்தான் முதலில் இறக்கியது. இங்கு அல்லாவை தொழுதுவிட்டு, அதன் பின்னே 7 வானங்களைத்தாண்டி அல்லாவை சந்தித்து இஸ்லாமிய 5 நேர வழிபாடு மற்றும் 30 நோன்பு போன்றவற்றை பெற்று வந்ததாக இஸ்லாமிய நம்பிக்கை. அதனால் இஸ்லாமியர்களுக்கு காபாவிற்கு பிறகான ஒரு புனிதத் தலமாக இது உள்ளது. ஆனால், இச் சுவரை யூதர்கள் அவர்களது கடவுளின் இருப்பிடமாக புனிதத்திலும் புனிதமாக கருதுகிறார்கள். இடிபாடுகளில் மிஞ்சிய இச்சுவர் அவர்களது இடிந்துபோன வரலாற்று அடையாளமாக இருப்பதாலும், இதில் யூதர்கள் தங்களது பிரார்த்தனைகளை முன்வைத்து அழுது வழிபட்டதாலும், இது Wailing Wall என அழைக்கப்படுகிறது.

3. இருத்தல், இருப்பு என்பது இருத்தலியல் வாதம் முன்வைக்கும் existence என்கிற புரிதலில் இங்கு பயன்படுத்தவில்லை. becoming-minor என்கிற கோட்பாட்டு அடிப்படையில் becoming என்பதற்கு இருப்பாதல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. Being, Existence போன்ற சொற்களுக்கு இருத்தல், இருப்பு என்கிற தமிழ் சொல்லை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து நாகார்ஜீனனின் பதிவில் உள்ள விவாதத்தை வாய்ப்புள்ளவர்கள் வாசித்தறியலாம். இத்துடன் Becoming என்கிற சொல்லிற்கான தமிழ்ச்சொல்லையும் சேர்த்து சிந்திக்க வேண்டியுள்ளது.

 
- ஜமாலன் 06-05-2010.

பின்குறிப்பு -  becoming என்பதற்கு “உருவாகுதல்” என்கிற சொல்லே பொருத்தமுடையதாக இருக்கும் என்று தற்பொழுது தோன்றுகிறது.  இந்த வார்த்தையை பயன்படுத்தியும் இக்கட்டுரையை வாசித்து பார்க்கலாம், பொழுதுபோகாவிட்டால்.

பதிவிரதா தர்மம் எனும் கருத்தியல் பர்தா


image மார்க்சியம்(2) எந்த உற்பத்தியும் அதற்கான “உற்பத்திநிலமை“ இல்லாமல் உயிர்வாழ முடியாது என்கிறது. உற்பத்திநிலமை என்பது உற்பத்தியில் ஈடுபடும் உழைப்புச்சக்திகளை (மனிதர்களை) மறு-உற்பத்தி செய்வதற்கான சமூகச் சூழல் எனலாம். இச்சூழலுக்குள் மொத்த சமூக கலாச்சார-ஊடக-கல்வி-மருத்துவ-இலக்கிய-வரலாறு-புவியியல்-அறிவியல்-இன்னபிற-நிறுவனங்கள்-உள்ளிட்டவை அடங்கும். இவை “தினவாழ்வை“ உற்பத்தி செய்யும் சமூகக் களன்கள்.

இச்சமூகக் களனுக்குள் இருத்தப்பட்ட ஒரு மனிதன், தொழிலாளியாக 8-மணிநேரம் உற்பத்தியில் ஈடுபடும்போது, இழப்பது தனது உழைப்புச்சக்தியை. இதனைப் பெற்றுக்கொண்டு அதற்கு பகரமாகவே கூலி தரப்படுகிறது. கூலி உழைப்புச்சக்தியின் பொருளியல் வடிவமே. அதாவது, மனிதன் தனது உழைப்புச்சக்தியை பண்டமாக விற்று பெரும் காசு. மார்க்சிய பாடத்தை நிறுத்திவிட்டு பிரச்சனைக்கு வருவோம்.

மனிதன் உழைப்புச்சக்தி என்கிற பண்டமாக மாற்றப்பட்ட ஒரு சமூக அமைப்பில், அதை தினமும் உற்பத்தி செய்தால் மட்டுமே உற்பத்தி-மறுஉற்பத்தி தொடரும். சமூகப் பொருளியல் எந்திரமும் உடல்களைப் பிழிந்து ஆற்றலை உறிஞ்சுக் கொண்டிருக்க முடியும். இந்த உழைப்புச்சக்தியை உற்பத்தி செய்பவர்கள் யார்? தினசரி மறு-உற்பத்திக்கான உழைப்பை பெருவாரியான அளவிற்கு உற்பத்தி செய்பவர்கள், இல்லத்தரசிகள் (மக்கள் தொலைக்காட்சியின் தமிழ் வளர்ப்பு) என்று பெருமையாக பட்டம் சூட்டி அழைக்கப்படும் பெண்களே. இவர்களது உற்பத்திக் களம் வெளிச்சமுள்ள முன்கட்டுகள் ஆண்களுக்கும், இருண்ட பின்கட்டுகள் பெண்களுக்குமாக ஒதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வரும் வீடு அல்லது இல்லம். “வீடென்று எதனை சொல்வீர், அதுவல்ல என்வீடு, எட்டடி சதுரம் உண்டு, பொங்கிட மூலையுண்டு, புணர்வது மற்றொன்றில்” என்கிற மாலனின் கவிதைதான் நினைவிற்கு வருகிறது. சமூக உற்பத்தியில் பெண்களின் மைய இடம் என்பது என்ன? பெண் ஏன் ஒடுக்கப்படுகிறாள்? பெண் ஏன் ஒடுக்கப்பட வேண்டும்? என்பதற்கான முதலாளித்துவ-தர்க்க நியாயம் இதுதான்.

சமுக பொருளுற்பத்திக்கு உழைப்பாளிகளை மறு-உற்பத்தி செய்யும் (ஆண்களை மறுநாள் பணி செய்ய தயாரிக்கும்) மிக முக்கியமான பெண்களின் வீட்டுப்பணிகள் உழைப்பாக கணிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளாக இருத்தப்பட்டுள்ள பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பிடுவது? பெண்களுக்கு மாதக்கூலி நிர்ணயம், வாரவிடுமுறை, வருடாந்திர ஊக்கத் தொகை உள்ளிட்ட குறைந்தபட்சம் ஒரு தொழிலாளிக்காக நிர்ணயிக்கப்பட்ட பல சலுகைகள் பேசப்பட வேண்டியதாக உள்ளது. இதன் உள்ளார்ந்த அரசியல் சீர்திருத்தம் செய்வதன் வழியாக பெண்களை இல்லத்தரசியாக நீட்டிக்கும் குரலே உள்ளது. வளர்ந்துவரும் பெண்ணியக் குரல்களை, இச்சீர்திருத்தத்தின் வழியாக அடக்க முயல்கின்றன என்ற போதிலும், குறைந்தபட்சம் இல்லத்தரசிகளை இத்திசையில் நகர்த்தும் துவக்கநிலை பிரக்ஞையை இவை வழங்கக்கூடும். தனது பெற்றோரின், சகோதரர்களின், சகோதரிகளின் மருத்துவச் செலவிற்குகூட கணவனை கெஞ்சிக் கொண்டிருக்கும் மணைவிகள் பலர். ஆனால் மணைவிகளோ கூடையில் கணவனை தாசி வீட்டிற்கு தூக்கிச் செல்வார்கள். எமனிடம் தன்னுயிரை எடுத்துக்கொள்ள வாதாடி கணவனைக் காப்பாற்றுவார்கள். இப்படியாக, பல “பதிவிரதா“-க் கதையாடல்கள் நம்மிடம் காலங்காலமாக உள்ளன.

வரலாற்று ஆய்வாளர் உமா சக்ரவர்த்தி சொல்வதுபோல் “பதிவிரதா தர்மம் என்கிற கருத்தியல் பர்தா“ (3) அணியப்பட்டு காக்கப்பட்டுவரும் இந்தியப் பெண்களின் உழைப்புச் சுரண்டல் கவனிக்கப்படுவதில்லை. பெண்கள் மீதான வன்முறை துவங்கி இல்லத்தரசி என்கிற அரசி பட்டம்வரை, எதுவும் அவர்களது இந்த மறு-உற்பத்திக்கான உழைப்பை கவனத்தில் கொள்வதில்லை. தமிழ் பெண்ணியச் சிந்தனை என்பது இன்னும் யோனி-லிங்க மையவாதத்தில் நங்கூரமிட்டு நகர முடியாமல் உள்ளது. பெண்களின் காமம் அதிலும் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட மிகுகாமம் மட்டுமே இலக்கியங்களின், பெண்ணியச் சிந்தனையின் பேசுபொருளாக உள்ளதே தவிர அதை தாண்டிய தினவாழ்வின் இத்தகைய சுரண்டல்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் உணரப்படவில்லை. இந்நிலையில், தெஹல்காவில் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி URVASHI Butalia அவர்களால் எழுதப்பட்டுள்ள இச்செய்தி பெண்களின் இல்லப்பணிகளின் மதிப்பீடு பற்றி பேசுகிறது.

முதலாளியம் ஆண்களை கூலி குறைவாக கொடுத்து சுரண்டுவதுடன், ஆண்களை (தொழிலாளிகளை) மறுபடியும் உழைப்பதற்கான சக்தியாக மாற்றும் பெண்களுக்கு என்ன வழங்குகிறது?

அடுக்களை இருட்டும், அடுப்பு புகையும், அழும் சீரியல்களும், மல்லிப் பூவும், அல்வாவும்(1), அடிமைத்தனமும் தவிர....

பின்குறிப்பு

1. மல்லிப்பூவும், அல்வாவும் தமிழ் சினிமா கட்டமைத்துள்ள கணவன்-மணைவி அந்நியோன்னியம் பற்றிய ஆகச்சிறந்த காமெடி. கணவன் மறைத்து மறைத்து எடுத்துச் செல்வான். அம்மா கண்கொத்திப் பாம்பாய் அதை கவனிப்பார். ஒரு 100 கிராம் அல்வாவிற்காக குடும்பமே சிக்கி சீரழிந்து, குத்துவிளக்கை குப்புறக் கவிழ்த்துவிட்டு.. கண்ணீர் விட்டு ஆளாளுக்கு ஒரு பக்கம் நின்று பாடுவார்கள். இது குறித்து களஆய்வுகள் தேவை. சினிமா பார்த்து மக்கள் இதை கற்றார்களா? மக்களைப் பார்த்து சினிமா இதைக் கற்றதா? என்று.

2. மார்க்ஸ், மார்க்சியம் என்ற பெயரைப் பார்த்தவுடன் பதறி அடித்துக்கொண்டு இங்கு வந்து.. ரஷ்யாவைப்பார், ஸ்டாலினைப்பார், சீனாவைப் பார், மாவோவைப் பார், போல்போட்டைப் பார், கொல்லப்பட்ட மக்களைப்பார், கண்ணைப்பார் சிரி என்று திருஷ்டிப் பரிகார டெம்புளேட் பின்னூட்டங்களை அனானிகள் போடவேண்டாம். …. முடியல...

3. உமாசக்ரவர்த்தியின் Gendering Caste – Through a Feminist Lens என்கிற நூலில் இது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வாசிக்காமல் இங்கு வந்து ஆளாளுக்கு எங்க மதம் உங்க மதம் என்று மதம் பிடித்து பின்னூட்ட வேண்டாம்.


அன்புடன்

ஜமாலன். 04-08-2010