| இலங்கை நண்பர் ஒருவரால் வெளியிடப்பட உள்ள ”எதுவரை” என்கிற பத்திரிக்கைக்கு எழுதப்பட்ட கட்டுரை இது. சூழல் கருதி இங்கு பதிவிடப்படுகிறது. |
எந்த ஒன்றைப்பற்றியும் எழுதுவதற்கு முன்பாக எனது மனதில் ஓடும் முதல் வாசகம் 'check your politics, before you enter it' என்கிற எட்வர்ட் சைத்தின் வாசகம்தான். முதலில் எனது அரசியலை நான் பரிசோதித்துக் கொள்வது அவசியம். காரணம் நான் ஏற்றுக்கொள்ளும் அரசியல் குறித்து எப்பொழுதும் ஒருவகை சந்தேகம் எனக்கு உண்டு. அந்த சந்தேகத்துடன் எனது அரசியலை முதலில் சரிபார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக இங்கு குறிப்பிடப்படும் 'நான்' என்பது ஒருவகை அடையாளத்தை அடிப்படையாகக்கொண்டே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இவ்வாறு வெளிப்படும் தன்னடையாளம் குறித்து ஒரு விமர்சனத்துடன எழதத்துவங்குவது அவசியம். இந்த நானிற்குள் மதம், தேசியம், இனம், மொழி, பால், சாதி எனப் பல பிறப்படிப்படையிலான அடையாளங்கள் உள்ளது. மற்றவகை வர்க்கம் உள்ளிட்ட துணை அடையாளங்கள் இதன் மேல்தான் கட்டப்பட்டுள்ளது மற்றும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆக அடையாளம் என்பது பல பிடிப்புகளாக ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளது. இவ்வடுக்கில் சமூக இயக்கமானது ஒற்றை அடையாளத்தை இயக்கத்தளத்திற்கு கொண்டு வந்து மற்ற அடையாளங்களை உள்ளே மடிக்கிறது. அடையாளம் என்றவுடன் ஏதோ இது காலகாலமாக நமது உடலுடன் பிறந்த அல்லது நமக்குள் இருத்தப்பட்டுள்ள சராம்ச உணர்வாகக் கருதவேண்டியதில்லை. யதார்த்தத்தில், அப்படி ஒரு சாராம்ச அடையாளம் இருப்பதாக நம்பப்படுவதிலும், அதற்கான கருத்தியல், வராலாற்று, இலக்கிய, பண்பாட்டு வேர்தேடி அலைந்து வரலாற்றை அடையாளத்திற்கேற்ப மறுவாசிப்பு செய்து கட்டமைப்பதின் வழியாக அதனை உடலின் ஓர் அரசியல் நிலையாக மாற்றுவதிலும்தான், அடையாள அரசியலின் மையமான இறுகலும், பாசிச மனப்போக்கும் உருவாகுகிறது.
அடையாளம் என்பது இரண்டு உடல்கள் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதன் வழியாகவே உருவாகுகிறது. இந்த எதிர்கொள்ளல் என்பது சமூக எதிர்வுகளாகக் கட்டப்படுகின்றன. இந்த எதிர்வுகள் தாம் X பிற என்கிற எதிர்வுகளாக அரசியல் வாசிப்பிற்கு உட்படுத்தப்படுவதன் வழியாக அடையாளங்களாக இறுகுகிறது. இவ்வாறாக இறுகிய ஒரு அடையாளமே தமிழன் X சிங்களன் இன்னபிற இன அடையாளங்கள் எனலாம். உண்மையில் அடையாளம் நீக்கப்பட்ட ஒரு நிலையையே நமது அரசியலாக முன்வைக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு, என்றாலும் தற்போதைய பேதமுள்ள சமூக இயக்கத்தில் அது சாத்தியமற்ற நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்கள் அந்தந்த அரசியல் நிலைபாடுகளில் ஏற்பது என்பதே தற்போதைய நிலைப்பாடு. எனவே தமிழன் என்கிற அடையாளம் ஒடுக்கதலுக்குள்ளாகும்போது அதனை ஏற்று அதன் அரசியல் நிலையில் நிற்பது தவிர்க்க முடியாதது. அதே நிலை சிங்கள இன அடையாத்திற்கும் நடக்குமெனில் நாம் சிங்கள அடையாளத்தை ஏற்பதுவே ஜனநாயக அரசியலாக இருக்கும். தமீழீழப் பிரச்சனையில் தமிழகத்தில் பின்னப்படும் வலையில் எனது பிறப்படிப்படையிலான தமிழன் என்கிற இன அடையாளத்தை தவிர்த்து புறநிலையில் நின்று இதனை எழுத முனைவதற்கான ஒரு அலைதலே இது.
1983-ஜீலைக்கலவரம் ஏற்படுத்திய பாதிப்பில் முக்கியமானது நண்பர் எஸ். சண்முகம் குறிப்பிட்டதுபோல தமிழகத்தில் தமிழக அறிவுஜீவிகள் பலரும் தமிழ்தேசியம் நோக்கி நகர்ந்ததுதான். குறிப்பாக மார்கசிய அறிவஜீவிகள்கூட இந்த தேசிய உணர்வால் பாதிக்கப்பட்டு பின் தேசியவாதத்தால் பீடிக்கப்பட்டனர். 1969-களில் உருவான தமிழ்தேசிய அலையை மட்டுப்படுத்தி மார்கசிய மற்றும் தமிழக இந்தியப் பிரச்சனைகளை மையமாக வைத்து எழுந்த அறிவுஜீவிகள், திடிரென இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தமிழ்தேசியம் பற்றிய மறுவாசிப்பை நிகழ்த்தினர். இந்த 25-ஆண்டுகளில் தமிழகத்தின் பல முக்கியப் பிரச்சனைகள் குடிநீர், மணல்வேட்டை, விளைநிலங்கள் அழிப்பு, பண்ணாட்டு மூலதனக் குவிப்பு, சூழல் சீர்கேடுகள், பெருகிவரும் வறுமை என பலவும் பின்னுக்குத் தள்ளப்பட்டன அல்லது தமிழகத்தின் பிரச்சனகைளை அனுகுவதற்கான ஒரு ஆதிக்க கருததியலாக இந்த இனப்பிரச்சனை முன்னுக்கு வந்து, ஆழ்மனத் தணிக்கையாக இதனை ஒட்டியும் வெட்டியும் விவாதங்களை கட்டமைத்தது எனலாம். இந்நிலையில் இன்று இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் மீண்டும் தமிழ்தேசிய உணர்வு ஒன்று மேலெழும்பி வந்துள்ளது. திலீபனின் உண்ணாவிரத மரணம், திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரவுப்பின் தீக்குளிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக இன்று முத்துக்குமார், மதுரை ரவி, மலேசியத்தமிழர் என தீக்குளிப்புகளும், மரணமும் நிகழ்ந்துள்ளது. இவை தமிழ் தேசியம் வினைபுரியம் ஈழம், தமிழகம், இந்தியா ஆகியவற்றின் அரசியல் நிலைபாடுகள் குறித்து புரிந்துகொள்ளத் தூண்டுவதாக உள்ளது.
பிரித்தானிய ஏகாதிபத்தியம் தெற்காசியாவில் 1947-ல் இந்தியா பாகிஸ்தான் என்று இந்து, முஸ்லிம் என்கிற மத அடிப்படையில் இரண்டு நாடுகளையும், 1948-ல் தமிழ் சிங்களம் என்கிற இன அடிப்படையில் இருந்த இலங்கை என்கிற நிலப்பரப்பை சிலோன் என்கிற ஒரே நாடாகவும் விடுதலை செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு வெளியேறியது. இந்த “விடுதலை“ என்கிற காலனிய அரசியலில் மத அடிப்படையில் இரண்டு நாடுகளிலும் அமைதியின்மைக்கான விதையையும், இன அடிப்படையில் இலங்கையில் அமைதியின்மைக்கான விதையையும் ஊன்றிவிட்டு சென்றது. “சர்வதேசியம்“ என்கிற உலகஅமைப்பிற்குள் இரண்டாம் உலகப்போருக்கு பின்பாக விடுவிக்கப்பட்ட பல காலனிய நாடுகளில் உருவான பின்காலனிய அரசியலின் மையமாக மதவாதம் மற்றும் இனவாதம் என்கிற சொல்லாடல்கள் கட்டமைக்கப்பட்டு, உலகம் மற்றும் இச்சமூக மனிதர்களின் தினவாழ்வு உட்பட அனைத்தும் இச்சொல்லாடல்கள் வழி அடையாளமாக்கப்பட்டு அர்த்தமாக்கப்பட்டன. காலனியம் தான் கொன்று புதைத்த நவீனத்திற்கு முந்தைய மனித உடலை தனது இச்சொல்லாடல்கள் வழி உயிர்ப்பிக்க முனைவதறகான ஒரு பின்காலனிய அரசியலை உருவாக்கி தந்தது. இந்தியா என்கிற தீபகற்பத்தை மதபிரிவினைகள் மூலமும், இலங்கை என்கிற தீவை இனஅடிப்படையிலும் அதாவது ஒன்றை பிரிப்பதன் மூலமும், மற்றொன்றை பிரிக்காமல் இனைப்பதன் மூலமும் இந்நாடுகளை அமைதியற்ற நாடுகளாக இருக்க வைத்ததுதான் பிரித்தானிய காலனியத்தின் மிக முக்கிய அரசியல் ஆகும். அதன் தொடர்ச்சியே இன்றைய பிரச்சனைகளாக வடிவெடுத்துள்ளன.
இன்று இலங்கையில் உருவாகி உள்ள தமிழ் இனவாதம் என்பது சிங்கள இனவாதத்திற்கு ஒரு எதிர் குரலாகவே உருவானது. இந்த சிங்கள இனவாதம் என்பது ஆங்கிலேயக் காலனியக் காலங்களிலேயே கட்டமைக்கப்பட்ட ஒன்று ஆகும். ஆங்கிலேயே காலனிய ஆட்சியில் புராட்டஸ்டன்ட் கிறித்துவ மதத்தை தழுவியதால் உருவான தமிழ் மற்றும் சிங்கள மேட்டிமைக்குடி ஒன்று கல்வியில் வளர்ச்சிப்பெற்று அரசின் முக்கியப் பணியிடங்களில் அமர்ந்து ஒரு மத்தியதரவர்க்க அதிகார வர்க்கம் ஒன்று உருவாகியது. அந்த அதிகார வர்கக்த்திற்கு எதிராகவே, சிங்கள இனஉணர்வு கொண்டவர்களாலும், பௌத்த துறவிகளாலும் சிங்கள இனவாதம் என்பது கட்டமைக்கப்பட்டதாக குமாரி ஜெயவர்த்தனா விவரிக்கிறார். இந்த இனவாதம் சிங்கள மொழி, சிங்கள இனம், பௌத்தம் என்கிற அச்சி்ல் தனது அடையாளத்தை கட்டமைத்தது. காலனீய அரசை எதிர்ப்பதைவிட கிறித்துவ வளர்ச்சிக்கு எதிரான “தர்மயுத்தம்” எனப்படும் புனிதப்போர் ஒன்றை இந்த மேட்டிமை கிறித்தவர்களுக்கு எதிராக துவக்கினர். இந்த சிங்களர்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கோரும் இன உணர்வு என்பது ஆரிய-பௌத்த அதாவது இன-மத மேலாண்மை என்கிற உணர்வின் அடிப்படையில் இனவாதமாக வளர்கிறது. இலங்கை என்பது தம்மதிவிபா (dammadvipa - island of faith) என்கிற புத்த-சிஙகள-ஆரிய மேலாண்மை என்கிற கருத்துருவாக்கத்தால் இனவாதமாகவும், பௌத்தத்தை காப்பது என்பது தனது இனத்தூய்மைக்கான அடிப்படை என்கிற உணர்வுடன், கிறித்துவத்திற்கு எதிரானப் போராட்டம் புனிதப்போராக பௌத்த துறவிகளால் கட்டமைக்கப்பட்டது. 1880-ல் கலோனல் ஓல்காட் மற்றும் பிளாவட்ஸ்கி அம்மையாரால் பரப்பப்பட்ட தியாசபிகல் சொசைட்டியின் புத்த கல்வியால் ஊட்டம் பெற்ற சிங்கள சுதந்திர சிந்தனையாளர்களின் வளர்ச்சி என்பது இந்த சிங்கள இனவாதக் கருத்தியலை இனவெறியாக காலனியத்திற்கு பிந்தைய சமூகத்தில் கட்டமைத்தது. இக்கட்டமைவு கீழ்கண்ட காரணங்களால் கட்டப்பட்டதை விளக்குகிறார் குமாரி ஜெயவர்த்தனா.
1. தென்னிந்திய மன்னர்களின் தொடர் படையெடுப்புகள் பௌத்த வரலாற்றை அழித்ததாகவும், அதனால் சிங்கள இனம் ஒடுக்கப்பட்டதாகவும் ஆன தமிழ் வரலாற்றுடன் சேர்ந்து கட்டமைக்கப்பட்ட வரலாறு, பாடநூல்கள் வழியாக சிங்களரிடம் தென்னிந்திய பற்றிய ஒரு வரலாற்று அச்சத்தைக் கட்டமைத்தது. (இங்குதான் ராஜராஜன்-புலிக்கொடி-புலிச்சின்னம்-வெற்றிவாகை-தமிழினப்பெருமை இன்னபிற பிம்பங்களின் மீள்கண்டுபிடிப்பும் ஊடாட்டமும் முக்கியமான தமிழனப் பெருமையாக முன்வைக்கப்பட்டதை இணைத்து காணவேண்டும்.)
2. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய வரலாற்றுடனும், இந்திய பெங்கால் பகுதியிலிருந்து வந்து புர்வீகக் குடிகளான சிங்களர்கள், பௌத்ததத்தினால் அதன் தூய்மையை காப்பதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக தங்களை உணரும்படியும், இலங்கை வரலாற்றில் புர்வீக வரலாறு தங்களுடையதே என்கிற மரபின் அடிப்படையிலும் சிங்களம் என்கிற இனப்பெருமிதம் கட்டமைக்கப்பட்டது. தங்களை ஆரியர்களாக அவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டனர். இந்தியாவில் உருவான ஆரிய-திராவிட என்கிற காலனியக் கருத்தாக்க கட்டுமானத்தில் ஆரியர்களாக தங்களை உணருமாறு வரலாறு வாசித்துக் காட்டப்பட்டது. (தமிழின மேலாண்மை கைக்கொண்ட சைவமதப் பெருமிதத்திற்கு எதிராக இந்த ஆரிய-பௌத்த மேலண்மைக் கட்டப்பட்டது.)
3. சிங்களருக்கு என்று உலகில் வேறு நாடுகள் இல்லை, இது மட்டுமே தங்களது நிலம், தாங்கள் இதைவிட்டால் உலகில் தஞ்சம் புகுவதற்குக்கூட ஒரு மாற்று நிலம் தனது மொழி, இன அடிப்படையில் இல்லை என்கிற முற்றுகையிடப்பட்டுள்ள ஒரு மனநிலையும் அதை ஒட்டிய அச்சமும் பெருக்கிக் காட்டப்பட்டது. (இதில் பௌத்த மீட்டெடுப்பாளரான அனகாரிக தர்மபாலாவின் பங்கு மிகமுக்கியமானது. தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கென்று ஒரு நாடில்லை சிலவேளை நாதியில்லை என்கிற கோஷத்துடன் இது இணைத்து நோக்கத்தக்கது.)
4. இலங்கையில் உருவான இந்திய முதலாளி வர்க்கம் ஒன்று அந்த மக்களை சுரண்டுவதும், தங்களது வளங்களை கொள்ளையிட்டு இந்தியாவில் ஒருகால் இலங்கையில் ஒருகால் என வாழும் அவர்களுக்கு சிங்களநாட்டின் தனிச்சிறப்பு தெரியாமல் அது அழிக்கப்படுவதான உணர்வு மேலெழும்பியது. (இதில் இந்திய சிந்திகள், பார்சிகள், தமிழக செட்டியார்கள், மலையாள மேனன்கள் என இந்தியாவிலிருந்து பல சாதியப்பரிவினர் சிலோனின் வணிகப்பொருளதாரத்தை தங்கள் கையில் வைத்திருந்தனர்.)
5. பௌத்தம் என்பது தனிச்சிறப்பான மதமாக தன்னை காப்பதற்கான நிலமாக இலங்கையை தேர்ந்துகொண்டது என்பதால் அதனை அந்நிய மதங்களான, கிறித்துவம், இந்து, இஸ்லாம் போன்ற மதங்களின் தாக்குதலிலிருந்து காக்க அம்மதங்களை எதிர்த்து தர்மயுத்தம் (புனிதப்போர்) செய்யவேண்டும் என்றும் பௌத்த துறவிகளால் இந்த இனவாதம் ஊட்டி வளர்க்கப்பட்டது. (இது நவீன சமூகத்தின் மதஅடிப்படைவாதக் கருத்தியலான “மத-காப்புறுதி(இன்சூரன்ஸ்) புனிதப்போர்” என்கிற “கருத்தியல் பண்டத்தின்” ஒரு பின்காலனியத் தாக்கமாகும்.)
அனகாரிக தர்பாலாவின் புராட்டஸ்டண்ட் புத்தமதம் என்று அழைக்கப்பட்ட சீர்திருத்தவாதம், பௌத்த பொற்காலம் பற்றிய கனவுகளை பரப்பி சிங்களிரிடம் பௌத்த அடையாத்தை ஆழப்படுத்தி ஒன்றினைத்தது. ஆக, சிங்கள இனவாதம் என்பது ஒரு காலனிய எதிர்ப்பு வடிவமாக இல்லாமல், காலனியக்கால வர்க்க கட்டமைப்பில் முகிழ்த்து வந்த சிங்கள தேசியமுதலாளி வர்க்கத்தின் அதிகார பகிர்வுக்கான ஒரு பேரியக்கமாகவே உருவானது. (இதற்கு சமகாலத்தில்தான் இந்தவகை பேரியக்கமாக உருவானதே பெரியாரால் முன்வைக்கப்பட்ட தமிழ்தேசிய முதலாளித்துவக் குரலான திராவிட நாடு என்கிற கருத்தாக்கமும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.) இப்பேரியக்கம், காலனியம் உருவாக்கிய கிறித்துவ அதிகார வர்க்கத்திற்கு எதிரானதாக உருவானது. வரலாற்றின் நகைமுரண் என்னவென்றால், ஒரு மரபான கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவரான ஜெயவர்த்தனேதான் தமிழர்களுக்கு எதிரான சிங்கள் இனவெறியை அதன் முழுவீச்சில் கட்டமைத்து, சிங்கள இனத்தின் ஒரு ஒருமித்த குறியாகவும், பௌத்த துறவிகளின் மதவெறிக்கு ஒரு வடிகாலாகவும் இருந்தார். மதம் என்பதை இனம் என்பதால் மாற்றீடு செய்த பெருமை இவருடையதே. தனது சிஙகள இனவெறியின் தூய்மையைக் காக்கவும், அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் அவர் பின்னால் பௌத்த மதத்தை தழுவினார்.
காலனியக்காலத்தில் 1883 ஏப்ரல் மாதம் நடந்து மிகப்பெரும் கலவரம் பௌத்தர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையில் நடந்தது என்றால், சரியாக 100 ஆண்டுகள் கழித்து 1983 ஜீலையில் தமிழர்களுக்கும் சிங்களருக்கும் இடையில் மிகப்பெரும் கலவரம் நடந்தது. இரண்டு கலவரங்களில் ஒன்று மத அடிப்படையிலும், பிறிதொன்று இன அடிப்படையிலும் நிகழ்ந்தது. காலனியத்திற்கு பிறகான தேசம் மற்றும் தேசியம் பற்றிய சொல்லாடல்கள் இந்த கலவரங்களுக்கான அடிப்படை கருத்தியல் கட்டுமானமாக இருந்தன. ஆக, சிங்கள இனஅடையாளம் தவிர்க்க முடியாமல் இலங்கையில் அடுத்து பெரும்பான்மையாக உள்ள தமிழ் என்கிற இன அடையாளத்தை தனது மற்றமையாகக் கட்டியது.
இனஅடையாளம் என்பது ஒரு கற்பிதம். அதற்குள் இனம் சார்ந்ததான எந்தவொரு சாராம்ச உணர்வும் இருப்பதில்லை என்பதை முன்பே சொன்னோம். தேசியவாதம் தனது வேர்தேடிச் சென்று ஒரு புர்விக வரலாற்றை, தேசம், தேசியம், இனம் என்கிற நவீன சொல்லாடல்கள் வழி மீள்வாசிப்பு செய்து, இந்த இனம் என்கிற உணர்வை வரலாற்றுக்கு முந்தையதான சாராம்சமான ஒரு அடிப்படை உணர்வாக, ஒரு உடலுக்குள் கண்டடைகிறது. ஒரு மக்கள்தொகுதியை உருவாக்கும், ஒரு அடையாளக் காரணியே இனம் என்பதற்கு பதிலாக, இனம் என்கிற அடையாளத்தால்தான் ஒரு மக்கள் தொகுதி உருவாகுகிறது என்பதாக இது சொல்லப்படுகிறது. இந்த கற்பித அடையாளத்தைக் கொண்டுதான் சிங்கள இனம் என்கிற பேரினவாதம் தன்னை அடையாளப்படுத்தி தமிழர்களை அழித்தொழிக்கிறது.
எதிரி ஒரு அடையாள நெருக்கடியை நோக்கி உந்தி தள்ளும் ஒரு நிலையில் தவிர்க்கமுடியாமல் ஒரு தன்னடையாளத்தைப் பெற்று தன்னை ஒரு இனமாக உணரும் நிலை தமிழர்களுக்கு ஏற்படுகிறது. ஒருவன் தன்னை “தமிழனாக“ ஒரு தேசிய இனத்தவனாக உணர்வது என்பது இன்றைய அரசியல்-சமூக-பொருளியல்-உளவியல் வலைப்பின்னலில் தவிர்க்க முடியாததாக உள்ளது. அல்லது அந்த வலைப்பின்னலுக்கு ஏற்ப ஆடும் பாத்திரங்களாக மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த வலைப்பின்னலூடாக பிறிதொரு இணை வலைப்பின்னலை கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் இன் உணர்வினால் அச்சமூட்டப்பட்ட சக்திகள் தமிழீழத்திற்கு எதிரான தங்களது “வஞ்சம்“ தீர்க்கும் நிலைப்பாட்டால் பின்னலாக்கி உள்ளன என்பது மிகையாகாது. இந்திய தேசியத்தில் தமிழ் தேசியம் கரைக்கப்பட வேண்டும் என்கிற கருத்துடன் இந்த வலைப்பின்னல் பின்னலாக்கப்பட்டு வருகிறது. இவ்வலைப்பின்னலினை உருவமைக்கும் சக்தியாக இநதியாவின் ஆதிக்க சொல்லாடலாக உள்ள மதவாதம் உள்ளது. அதாவது, இனம் சார்ந்த சொல்லாடல்களை இந்திய தேசியம் என்கிற ஒரு கலாச்சார தேசியத்தின் அடிப்படையாக உள்ள மதவாத சொல்லாடல் தனக்குள் அடக்க முனைகிறது.
ஆனால், தேசியஇனச் சொல்லாடல் மதவாத சொல்லாடலுக்கு எதிர்சக்தியாக அல்லது பிறிதொரு அரசியல் துருவமயமாக்கலுக்கான சக்தியாக உள்ளது. அதே நேரத்தில் ஈழத்தில் முன்வைக்கப்பட்ட தமிழ்தேசியம் என்கிற சொல்லாடல் முற்றாக முஸ்லிம்களை வெளித்தள்ளி ஒரு மதவாதச்சொல்லாடலுக்கான தேசியமாக மாறியது. இம்மாற்றத்தை குறிப்பாக விடுதலைப்புலிகள் முன்னின்று “சிறப்பாக“ நடத்தி முடித்தனர். ஆக, ஈழத்தமிழ் தேசியம் என்பதற்குள் முஸ்லீம்கள் உள்ளடக்கப்படாத ஒருவகை தூய-மதவாத-தேசியத்தை புலிகளின் ஈழத்தமிழ் தேசியவாதிகள் முன்வைத்தனர். இது ஈழத் தமிழ் தேசியத்தின் முதல் சக்திச் சிதறலாக ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்தியது. அதன்பின் இலங்கை புவிப்பரப்பில் யாழ்ப்பாணத் தமிழர்கள் அல்லது உயர்சாதி சைவவெள்ளாள தமிழர்கள் பிறசாதி மற்றும் தலித் தமிழர்களை தங்களது சொல்லாடலிலும், பொருளியல் மற்றும் வாழ்வியல் நிலையிலும் விளிம்பிலேயே வைத்திருந்தனர். இந்த சாதிய மனோபாவம் விடுதலை இயக்கங்களுக்குள் ஒரு சாதிய மனோபாவமாக மாறியதில், வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இச்சக்திகள் வெளியேறியதன் மூலம் மற்றொரு பலவீனத்தை சந்தித்தது. மலையகத் தமிழர்களை புறம் ஒதுக்கி அவர்களது வாழ்வியலுக்கான உத்திரவாதத்தை உருவாக்கும் கோரிக்கைகளை இணைக்காமல் ஈழத்தமிழ்தேசியம் அவர்களை இந்திய வம்சாவழியினர் என்று பிரித்ததின் வழியாக மூன்றாவது பலவீனத்தை சந்தித்தது. அதன் பின் மற்ற விடுதலை இயக்கங்களையும், அவற்றின் பிரதிநிதித்துவக் குரல்களையும் ஒடுக்கியதன்மூலம், ஒற்றை பிரதிநிதியாக மாறியதன்மூலம், விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத் தமிழ் தேசியத்தின் ஒற்றைக்குரலாக மாறியது. அவ்வியக்கம் வெறும் இராணுவப் போர்தந்திரங்களை மட்டுமே நம்பியதின் விளைவாக, தமிழ்தேசியத்தை பண்டைய புறநானூற்றுக்கால போர்பரணி பாடும் நிலைக்கு பின் தள்ளியது. சிங்கள இனத்தின் கொடுங்கனவுகளில் ஒன்றான ராஜராஜன் படையெடுப்பை நினைவுட்டும் வண்ணம் தன்னை புலியாக ராஜராஜனாக புலிக்கொடியுடன் அடையாளப்படுத்திக் கொண்டது. ஒரு தேசிய இனத்தையே இராணுவமாக (போராளிகளாக அல்ல) மாற்ற முயன்றது. ஒவ்வொரு குடும்பத்தினரும் இவ்வியக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களாக, அக்குடும்பத்தில் ஒருவரை தனது இராணுவத்திற்குள் இணைத்தது. போராளிகள் வேறு பொதுமக்கள் வெறு அல்ல என்ற நிலையை உருவாக்கியது. போராளிகள் மக்களிடம் தங்கியிருப்பது என்பது மக்கள் சக்தியின் பலத்தைப்பெற்று மக்களைப் பாதுகாக்க என்கிற கோட்பாட்டை, மக்களை ஆயுதம் கொண்டு அச்சமூட்டி ஆதரவு திரட்டும் ஒரு சர்வாதிகாரப் போக்காக நடைமுறைப்படுத்தியது. ஜனநாயகத்தின் அனைத்து வழிகளையும் அழி்த்தொழித்துவிட்டு பின், தவிர்க்க முடியாமல் இன்று தமிழீழப் பிரச்சனை ஒரு சிக்கலான காலகட்டத்தில் சிக்கவைக்கப்பட்டுள்ளது.
ஈழத்துயரம், மனித அவலம் பற்றிய பெருந்துயரை நமக்குள் உறையச் செய்கிறது. வாழ்வதற்கு இடமற்றதாக துரத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் இன்று சாவதற்கும் தனது சொந்த மண்ணற்றவர்களாக சிதறடிக்கப்படுகிறார்கள். மரணம் என்பது எண்ணிக்கையாக மாறிவிட்ட இந்த அவலத்தில் மனிதம் என்பது வெறும் காட்சிகளின் நகல்களாக மாறிவிட்டது. தமிழக மக்களிடம் இந்தபோர் பெரும் பதற்றத்தை உருவாக்கவில்லையே ஏன்? என்கிற கேள்வி நம்முன் எஞ்சியுள்ளது. ”புலியை முறத்தால் அடித்து துரத்தியதாக புறநானூற்றுப் பெருமை பேசும் நாம் இன்று ஏன் இந்த நிலைக்கு ஆளானோம்“ என்கிற கேள்வி நமது தமிழ் சமூகவரலாற்றை சமூக உளவியல் மற்றும் அரசியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. இதன்பொருள் புலியை முறத்தால் அடித்தவனும் இன்றைய தமிழனும் உடலினால் ஒன்றாக இருக்கலாம் உணர்வினால் ஒன்றல்ல. இருவரிடமும் ஒரு வரலாற்று தொடர்ச்சியின்மை உள்ளது என்பதுதான். மணிரத்தினத்தின் “இருவரி“-ல் வரும் தமிழ்ச்செல்வன் பேசும் கவிதை வரிகள் போல “நமது புறநானூற்று வீரம் எங்கே? போர்பரணி எங்கே?“ தமிழ்திரையின் பாத்திரங்களாக மாறிப்போன நமது அரசியல் வரலாற்றுத் தலைவர்கள் உருவாக்கி உள்ள ஒரு மீ-யதார்த்த (ஹைபர்-ரியல்) உலகில் தமிழனின் அகம் புறம் எல்லாம் அதீத உணர்விற்கு ஆட்பட்டு உண்மைகளின் நகல்களின் நகல்களின்….. நகல்களை அடைந்து, அது ஏற்படுத்தும் அதீ-யதார்த்த உணர்விலும்/உலகிலும் சஞ்சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம். போர் என்பது தொலைக்காட்சியின் மின்திரைப்பரப்பில் வந்துபொகும் ஹாலிவுட் படக்காட்சிகளைப் போல எந்த உறைப்பும், உணர்வும் இல்லாமல் ஒரு “காட்சிகானும் எந்திரமாக“ மாறிவிட்டோம். தொலைக்காட்சியின் நெடுந்தொடர், விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு மத்தியில் கட்டமைக்கப்படும் செய்திகள் என்கிற “உண்மைகளில்“ வரும் காட்சிகள்கூட நம்மை உறையவோ அல்லது உலுப்பவோ இல்லை என்பது கடந்த 25 ஆண்டுகாலமாக ஈழத்தை வைத்து செய்யப்பட்ட தமிழக அரசியலின் ஒரு உச்ச விளைவு எனலாம். இந்த உணர்வு புலிகளையும் அவர்களது செயல்பாடுகளையும் முன்வைத்து சிறுக சிறுக கட்டமைக்கப்பட்டது. இன்று ஈழத்தமிழினம் என்கிற ஒன்றே இல்லை அவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான் என்று திராவிடர்கள் பெயரில் கட்சி நடத்தும் அம்மையார் ஜெயலலிதா பி.பி.சி. என்கிற உலகச் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும் ஒரு வெளிப்படையான நிலையை அடைந்துள்ளது. தமிழகமக்களிடம் இதற்கு ஒரு முனுமுனுக்கும் எதிர்ப்புக்கூட இல்லை என்பது அதைவிட வியப்பளிக்கக் கூடியது.
ராஜிவ்கொலை என்பதை முன்வைத்து ஒரு இன அழிப்பிற்கு தூபம்போடும் கட்சிகள், ராஜிவைக் கொல்லவேண்டிய தேவை ஏன்? அதில் உண்மையில் நலம் அடைந்தவர்கள் யார்? அதை செய்யத் தூண்டிய சக்திகள் எவை? அச்செயலால் பலன் அடைந்தவர்கள் யார்? என்பதை வெளிப்படையாக அறிவிக்கவுமில்லை. குறிப்பாக, ராஜிவ் கொலைக்குப் பிறகான இந்திய அரசு முற்றிலும் வேறுமுகம் கொள்வதை நுட்பமாக அவதானிக்க முடிகிறது. இந்திய அரசியிலில் மதச்சார்பற்ற குரல்கள் அதோடு ஒருமுடிவிற்கு கொண்டுவரப்பட்டது என்பது முக்கியமான விஷயம். அதன்பின் காங்கிரஸ் என்கிற ஒரு பேரியக்கம், பிராந்திய கட்சிகளின் அளவிற்கு சுருங்கியும், பாரதிய ஜனதா ஒரு தேசியக் கட்சிக்கான அந்தஸ்த்தையும், ஆதரவையும் பெற்றது. ராஜிவிற்கு பின் உடனடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள், பாபர் மசூதி இடிப்பினால், ஒரு அமைதியற்ற மதவாத நாடாக இந்தியாவை மாற்றியதும், உலக பொருளாதராத்திற்கு இந்திய சந்தையை திறந்துவிட்டதும் அவதானிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனைகளாகும். ஈராக்கை ஆதரித்த ராஜிவ், அமேரிக்காவிற்கு எதிரான தெற்காசிய சக்தியாக வளரத் துவங்கியதையும் இதனுடன் இணைத்து நோக்குவது அவசியம். ராஜிவ் கொலை என்பதன் பின்னணியில் உள்ள பல அரசியல் சார்நத நகர்வுகள், இயக்கங்கள் அலசப்படவேண்டியவை. அதற்காக அந்த ஒரு காரணத்தை முன்வைத்து ஒரு இனத்தை அழிப்பதற்கு அனுமதி தருவதுபோல நடந்தகொள்ளும் இந்திய அரசின் நிலை என்பது இந்திய தெற்காசிய வல்லரசுக் கனவுத்திட்டத்தின் ஒரு பகுதியே.
இங்கு இந்திய தேசவெறியில் இந்திய ஆதிக்கம் ஈழத்தில் ஏற்படுவதால் இந்திய ஸ்திரத்தன்மை காக்கப்படும் என்பதான ஒரு இராஜதந்திர விவாதம் முன்வைக்கப்பட்டு, இந்தபோர் ஆதரிக்கப்படுகிறது. இந்திய அரசு என்பதன் ஆதிக்கம் ஈழம் போன்ற நாடுகளில் உருவாகுவது என்பது எந்தவகையில் இந்திய மக்களுக்கு சாதகமாகும் என்பது கேள்விக்குறியே? அப்படியே இந்திய மக்களுக்கு சாதகம் என்பதாக வைத்துக்கொண்டாலும், மற்றொரு நாட்டை அடிமையாக்க முனைவது இந்தியா தன்னை ஏகாதிபத்தியமாக மாற்றிக்கொள்வதற்கான முயற்சியே. இந்தியாவின் இந்த ஏகாதிபத்தியக் கனவு அடிப்படையில் மக்கள் விரோதமானது என்பதால் இது உடனடியாக எதிர்க்கப்பட வேண்டியது இந்திய ஜனநாயகவாதிகளின் கடமையாகும்.
தற்சமயம் அழுத்தம் திருத்தமாக பத்தரிக்கைகள் கூறும் அமேரிக்க இராணுவ அமைச்சகம் திரிகோணமலை படைத்தளத்தை பார்வையிட்டது தளம் அமைக்கும் நோக்கில் இல்லை என்பது மற்றுமொரு அவதானத்திற்குரிய முக்கிய விஷயமாகும். திடிரென அமேரிக்கா புலிகளின் ஆதரவுநிலையிலிருந்து சிங்கள இராணுவப் பக்கம் சாய்ந்தது ஏன்? என்பதும் இதனுடன் இணைத்து சிந்திக்கத் தக்கது. உண்மையில் ஈழப் பிரச்சனையின் மையமாக கருதத்தக்கது அதன் திரிகோணமலைப் படைத்தளத்தைதான். இஸ்ரேல் போன்ற ஒரு முக்கிய புவிசார் அரசியல் புள்ளி அது. அங்கு உலக ஆதிக்கம் தெற்காசிய நாடுகளின் பிராந்திய அமைதியை குலைப்பதற்கான முயற்சியில் இந்த பிரச்சனையை கையாளுவதாக ஒரு சந்தேகம் 1983-லிருந்தே உண்டு. ஒருவகையில் சோவியத்-இந்திரா அரசு புலிகளை 70-களில் அமேரிக்க-திரிகோணமலை-படைத்தளம் என்கிற கோணத்தில்தான் அனுகினவோ என்கிற ஐயம் உண்டு. இன்றும்கூட சீன-பாகிஸ்தான்-உறவை சொல்லி சிங்கள அரசு இந்திய அரசை “பிளாக்-மெயில்“ செய்வதாகவே கருது இடமிருக்கிறது.
இந்திய அரசின் நிலை இது என்றால், தமிழினம் குறிப்பாக இந்திய தமிழர்கள் ஏற்படுத்தி உள்ள அரசியல் கசப்புணர்ச்சியின் விளைவாக, இன்று இந்தியாவின் எந்த மாநிலமும் குரல்கொடுக்கத் தயாரில்லை என்பது மற்றொரு பேரவலம். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிப்பவர்களின் சொந்த வெறுப்புணர்ச்சியின் விளைவாக, சிங்கள பேரினவாத அரசு இன்னும் ஊக்கமும் உற்சாகமும் பெற்று ஈழத்தமிழர்களை புவியில்ரீதியாக நெருக்கி முல்லைத் தீவு என்கிற சிறு நிலப்பரப்பிற்குள் அடைத்துவிட்டது. உணவு, மருந்து மற்றும் வாழிடம் என்கிற எந்த அடிப்படை வசதியுமற்ற நிலையில் நெருக்கடியான நிலையில் மக்கள் வசிக்கும் ஒரு பெரிய சிறைச்சாலையாக மாறியுள்ளது முல்லைத்தீவு.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேனன், ராஜபக்ஷே சந்திப்புக்குப் பின்னர் “இந்திய, இலங்கை உறவு வரலாறு காணாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு பாரம்பரியமானது. ஆழமானது. காலத்தையும் கடந்து இது நிலை பெற்றுள்ளது. சர்வதேச அளவிலான தீவிரவாதத்திற்கு எதிரான போரில், இலங்கை, இந்தியாவுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது” என்றார் மேனன். இலங்கை வெளிஉறவு அமைச்சர் ரோகித போகல்லகாமா, ”நிலைமையைப் புரிந்து கொண்டு இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது பாராட்டுக்குரியது. இலங்கை இனப் பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு காண வேண்டும். இந்திய, இலங்கை ஒப்பந்தம்தான் தீர்வுக்கான சாத்தியமாகும்.“ என்று கூறியுள்ளார். இந்திய அரசின் தமிழினம் மற்றும் இலங்கை குறித்த வல்லாண்மை செய்யும் அல்லது தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு “தாதாவாக“ மாற்றிக்கொள்ளும் நிலையை வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு பேச்சே இது. உண்மையில் தற்போதையபோர், இந்தியாவின் ஆசியுடன் நடத்தப்படும் அல்லது இந்தியாவே நடத்தும் ஒரு மறைமுகப்போர் (proxy war) எனலாம். அதற்கான அறிவிப்பே இது. அதாவது, இலங்கை அரசு இன்று பிரிட்டன், பாகிஸ்தான், சீனா, ஜப்பான், ஈரான், இந்தியா மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகளுக்கு இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லி்ம்களின் வடகிழக்கு பகுதிகளை பங்கிட்டு கொடுத்து இந்த யுத்தபேரத்தை நடத்திவருகிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காரணம், இப்பகுதிகளை உலக நாடுகளுக்கு திறந்துவிட்டு, அதன்மூலம் சிங்களப் பகுதிகளை ஸ்திரமானதாக மாற்ற முனைவதற்கான ஒரு திட்டம் யுத்தம் ஆரம்பித்த நாள்முதல் சர்வதேச அமைப்புகளிடம் கொண்டுள்ள இலங்கை அரசின் இராஜாங்க உறவில் வெளிப்படுவதாக உள்ளது. இது ஒரு புதுவகையான உலக-ஆதிக்கத்தையும், புதுவகையான உலகமய-காலனியமுறையையும் உருவாக்குவதாக உள்ளது.
இந்நிலையில், இலங்கையின் இந்த யுத்தம் ஈழத்தமிழக மக்கள் மட்டுமின்றி இந்திய தமிழர்களுக்கும், இந்தியாவிற்குமான ஒரு யுத்த அச்சத்தை எதர்காலத்தில் உருவாக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. இச்சூழலில், தமிழக மக்களை அரசியல் படுத்தி பரவலான எதிர்ப்பை நாடு தளுவிய அளவில் இந்தியா முழுமைக்குமானதாக கொண்டு செல்வதற்கான ஒரு மக்கள் கட்சி என்பதோ ஒரு மக்கள் முன்னணி என்பதோ இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் பெரிய இரண்டு கட்சிகள் கள்ள மௌனமும் நல்ல மௌனமும் சாதிக்கின்றன. மற்ற கட்சிகள் புலிகளின் தேசியவாதத்தால் பீடிக்கப்பட்டு ஓட்டு அரசியல் நடத்துவதாக உள்ளன. எதிர்கட்சித் தலைவரான ஜெயலலிதா நேரடியாக எதிர்நிலையை எடுத்துள்ளார். ஆளுங்கட்சியான கருணாநிதியோ இந்திய அரசையும் உள்ளடக்கிய ஒருவகை தேசியத்தை பேசிக்கொண்டும், தனது பழம்பெருமையைக் கூறிக்கொண்டும் அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார். தமிழக மக்களிடம் 25 ஆண்டுகாலமாக ஏற்படுத்தப்பட்ட புலிகள் மீதான பல அபிப்ராயங்கள், தமிழ் ஈழம் என்றாலே புலிகள் என்பதான ஒரு சங்கேதமாக மாறிவிட்டது. ஒருவகையில் புலிகள் தவிர பிற ஜனநாயக அமைப்புகளோ அல்லது ராணுவ அமைப்புகளோ இல்லை என்கிற ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஈழப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுவிட்டது. பலகுரல்களை நசுக்கி தன்னை ஒற்றைக் குரலாக மாற்றிக்கொள்ளும்போது பேச்சின் பிரதிநிதித்துவம்கூட அந்த ஒற்றைக் குரலின் பிரதிநிதித்துவமாக மாறிவிடுவதும், அந்த ஒருவரின் பலம் பலவீனம் அந்த பேச்சின் நியயாத்தை சிக்கலாக்கிவிடுவதும் ஆன ஒரு கையறுநிலைதான் இன்று எஞ்சி உள்ளது. புலிகளின் பலவீனம் தமிழினத்தின், ஈழ விடுதலை என்கிற உணர்வின் பலவீனமாக மாற்றப்படுகிறது.
தமிழகம், இந்தியா, சர்வதேசநாடுகள் மற்றும் தமிழீழப் பிரச்சனைக் குறித்த பல விஷயங்களை இந்த யுத்தம் தெளிவாக்கியுள்ளது. 1. இந்தியா தனது மேலாதிக்கத்தையும் இலங்கையுடன் ஆன நட்பையும் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டது. தமிழர்கள் குறித்து இந்திய தேசியம் கொண்டிருக்கும் அலட்சியமும், தமிழர்களின் உணர்விற்கு ஒரு போலித்தனமான மதிப்பளிக்கக்கூடத் தயாரில்லை என்பதை அறிவித்துவிட்டது. பிரச்சனை இந்திய அரசிற்கு எதிரானதாக தமிழக மக்களின் உணர்ச்சிகள் கிளர்வதற்கு வழிவகுத்துவிட்டது. 2. தமிழக மக்களிடம் வழுக்குரைஞர்கள் மற்றும் மாணவ சமதாயம் ஏறபடுத்திய எழுச்சி இன்று பல போராட்ட வடிவங்களையும் மேலோ கொண்டுவரத் துவங்கி உள்ளது. 3. இப்போரை அடிப்படையாகக் கொண்டு உள்ளடங்கியிருந்த தமிழின விரோத சக்திகள் ஒன்றினைந்து தமிழ் என்கிற இனத்திற்கு எதிராக இதனை பயன்படுத்த முனைப்புகொள்கின்றன. 4. தமிழக ஓட்டுக்கட்சிகள் தமிழினத்தை எப்படி தங்களது அதிகாரத்திற்கு பயன்படுத்தகின்றன என்பது அம்பலமாகி உள்ளது. 5. புலிகள் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த ஒருவித “வெறுப்பும், எரிச்சலும்” கலந்த ஆழ்மன உணர்வு மக்களிடம் கட்டிப்போட்டிருந்த செயலின்மையால் தங்களுக்கு கீழ் திரட்டமுடியாமல் இருந்த தமிழக ஓட்டுக்கட்சிகள், திகைத்துப்போய் உள்ளன. 6. மீண்டும் வரலாற்றில் மாணவர்கள் தலைமை ஏற்கும் ஒரு அரசியல் நிகழ்வாக இது மாறியுள்ளது. 1983- ஜீலைக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள்தான் இன்றைய அரசியல் சக்திகளாக உள்னர். தற்சமயம் அடுத்த பத்திருபது ஆண்டுகளுக்கான அரசியல் சக்திகளை தயாரித்தளிக்க இவை உதவி உள்ளது. 7. மறந்துபோன தமிழ் இனநினைவை கட்டமைக்க மீண்டும் இந்திய தேசியம் தனது ஈழப்பிரச்சனையின் மீதும், அதை ஒட்டிய தமிழர்களது உணர்வுகளிலும் காட்டிவரும் மெத்தனத்தால் காரணமாகிவிட்டது. 8. இரண்டரை லட்சம் மக்கள் பலி பீடத்தில் இருத்தப்பட்டுள்ளனர். சிங்கத்திற்கும் புலிக்கும் நடுவில் சிக்கிக்கொண்டுவிட்ட அப்பாவி மக்களை சர்வதேச சமூகமும் கண்டு கொள்ளாமல் தங்களது மேலாதிக்கத்திலேயே குறியாக உள்ளது. புவிசார் அரசியிலின் இரானுவ முக்கியத்துவத்திற்கான ஒரு பரப்பாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. 9. மனிதசமூகத்திற்கு வரப்போகும் பேரவலங்களை சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வாக இது மாறிவிட்டது. உலக அதிகாரம் மக்கள் சார்ந்த ஜனநாயகப் போராட்டங்களை, அதற்கான முன்னணிகளாக கட்டப்படும் இயக்கப் போரளிகளை அவர்களது இயக்கத்தை கொன்றொழிக்க ஒரு இராணுவ நுட்பத்தை கண்டடைவதற்கான சோதனையாக இப்போர் மாறி உள்ளது. 10. மனித அறம் பற்றிய அக்கறை உள்ள அரசு எதிர்ப்பு மற்றும் விடுதலை மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை எப்படி கட்டமைக்கக்கூடாது என்பதை கற்றுக் கொள்வதற்கான படிப்பினைகளை இது வெளிப்படுத்தி உள்ளது. உலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு போராளி இயக்கம் தனது கடந்தகால மற்றும் அடிப்படை மக்கள் நலக் கருத்தியலற்ற நடவடிக்கைகளால் இன்று தனது மக்களாலும், மற்ற உலக ஜனநாயக அமைப்புகளாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. 11. இந்தியாவில் தனது சொந்த சாதிய முரண்பாடுகளால் சிக்கித்தவிக்கும் தமிழ் தன்னிலைகளில், அரசு அதிகாரத்தில் ஆதிக்கம் வகிக்கும் மேல்சாதி குறிப்பாக பார்ப்பனீயத் தன்னிலைகள் தங்களது மனிதநேயத்தையும் மீறி பழி உணர்ச்சியில் திளைப்பதை இது வெளிப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அ-பார்ப்பனிய மேல்சாதி சக்திகள் மீண்டும் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள ஒரு தளத்தை உருவாக்கி உள்ளது. 12. தமிழின் உன்னதம், வீரம், மறம் போன்ற சங்ககால இனநினைவு ஒன்று மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. 13. 1967- இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன உணர்வு என்பதும் மீண்டும் முன்னணி அரசியலுக்கான சொல்லாடல்களமாக வந்துள்ளது. இதனை ஒட்டி கட்டமைக்கப்பட்ட ஆரிய திராவிட முரண் என்பது மீண்டும் புதிய தலைமுறைக்கு நினைவுட்டப்பட்டுள்ளது. 14. இலங்கை உலகமய-காலனியமாதல் என்கிற ஒரு புதிய சர்வதேச ஆதிக்க முறைக்கான சோதனைக்களனாக மாற்றப்பட்டுள்ளது.
ஆக.. இந்நிகழ்வுகள் படிக்க பல பாடங்களை ஒரு சமூகவிஞஞான பார்வையாளர்களுக்கு தந்தாலும், இம்மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு? அவர்களை எப்படி காப்பாற்றுவது? என்பது கேள்விக்குறியாகி ஒரு தீர்க்க இயலாத குழப்பமான பிரச்சனையாக மாறி உள்ளது. இந்நிலையில் புலிகள் செய்த அரசியலற்ற இராணுவத்தனமும் பாசிச மனமும்தான் காரணம் என்று விமர்சித்துக் கொண்டிருப்பதோ அல்லது சிங்கள இராணுவத்தின் பாசிச போக்கை பற்றி கதைப்பதோ காரிய சாத்தியமான தீர்விற்கு வழியாகாது. இந்திய அரசின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தவதும், சர்வதேசத்தின் மனசாட்சியை உலுக்கி அம்மக்கள் காப்பாற்றப்படுவதும் உடனடியாக செய்யப்பட வேண்டியது. புலிகள் தங்கள் இறுதி நிலையை அடைந்துள்ளனர். தனது கருத்தியல் மேல் நம்பிக்கை அற்றவர்கள் மட்டுமே காட்டிக்கொடுத்து விடக்கூடிய அச்சத்திற்கு ஆளாக நேரிடும். அதன் ஒரு விளைவே சாவைக் கோரும் சயனைட் குப்பி மாலைகள். புலிகள் தற்கொலை என்கிற நிபந்தனையுடன்தான் போராட்டத்தை துவக்கினார்கள். அச்சடங்கின் இறுதிநிலைக்கு இயக்கம் வந்துள்ளது. இராணுவ பலத்தில் மட்டுமின்றி மக்களிடமும் அவர்களது செல்வாக்கு சரிந்துவிட்ட நிலையே உள்ளது. இப்போதைய போர்நிறுத்த நடவடிக்கையும் மக்களை மீண்டும் வாழ்க்கைக்கு திருப்புவதும் மட்டுமே புலிகளை ஒட்டுமொத்தமாக மக்களிடம் அந்நியப்படுத்தும் நடவடிக்கையாக அமையும். அதேநேரத்தில் சிங்கள இராணுவம் தொடர் போரினால் மனநோய்க்கொண்ட இராணுவமாக மாறிவிட்ட நிலையில் முற்றிலுமாக இராணுவம் பின்வாங்கி சிங்கள அரசு அதனை சீரமைப்பது அவசியம். சமீபத்தில் கொலும்பில் தங்களது உறவினரான இறந்த இராணுவத்தினர் உடலைக்கோரி சிங்கள மக்கள் பேரணி நடத்தி உள்ளனர். யாழ்பானத்தில் தங்கள் உறவினரை விடுதலைப்புலிகள் விடுவிக்கவேண்டும் என்று கோரி தமிழர்கள் பேரணி நடத்தி உள்ளனர். இதுதான்நிலை. இந்த இரண்டு பேரணிகளும் ஒன்றாக நடத்தப்பட முடியாத நிலைதான் இதன் அடிப்படை சிக்கல்.
கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான போரில் எண்ணற்ற தமிழர்கள் கொல்லப்பட்டும், துரத்தப்பட்டும் ஒரு அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டபோது, தமிழகத்தில் எந்தவிதமான கொந்தளிப்பையும் அது ஏற்படுத்தவில்லை. தமிழக மக்களிடம் ஒரு நாடகத்தின் உச்சக்காட்சிக்காக காத்திருக்கும் உணர்வற்ற மரத்த நிலையே நிலவியது. ராஜிவ்கொலை மற்றும் புலிகள் குறித்து நிலவிய அதிருப்தி ஆகியன இந்த மனநிலைக்கு ஒரு காரணம் எனலாம். பிறகு, கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்த முத்துக்குமாரின் “உயிராயுதம்“ தேவைப்பட்டுள்ளது. இன்று மக்களை விழிப்புக் கொள்ளச்செய்வது என்பது இதுபோன்ற ஒரு மிகை நாடகத்தின் உச்சக்கட்ட விளைவுகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலை உருவாகி உள்ளது. இதன்பொருள் முத்துக்குமாரின் மரணத்தை நாடகமாக கருதுவது அல்ல, மாறாக, முத்துக்குமாரின் மரணம் அவர் முன்வைத்த தெளிவான அரசியல் பிரதியின் வழியாக, ஒரு உணர்வுப் பெருக்கத்தையும், மரணத்தின் காரணத்தையும் ஆழமாக மக்கள் மனதில் எழுதிச் சென்றுள்ளது என்பதே. இதையே முத்துக்குமார் மரணம் இல்லாமல் பிரதியாக எழுதி பரப்புரை செய்திருந்தால் இந்த கொந்தளிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்க முடியாது என்பதுடன் அதை ஒரு அரசியல் பிரதியாகக் கருதக்கூட மக்கள் தயாராக மாட்டார்கள் என்பதும் இணைத்து சிந்திக்கத்தக்கது. முத்துக்குமார் தனது உடல் என்கிற வரைதோலில் நெருப்பால் எழுதிச்சென்ற பிரதி என்பதால்தான், அது தமிழக மக்களிடம் ஒரு பற்றிப் படர்ந்த போராட்ட மனநிலையை உருவாக்கியது.
ஆக, மிகவும் முரண்பட்ட ஒரு நிலையில் ஒரு பெருஞ்சிக்கலில் இன்று மாட்டிக் கொண்டிருப்பது தமிழீழ மக்கள் மட்டுமல்ல உலகில் விடுதலைப்பற்றிய அத்தனை கனவுகளும்தான். உலகில் ஒரு விடுதலை இயக்கத்தை எப்படி அழிப்பது என்பதற்கான சோதனை முயற்சியை இன்று இலங்கை இராணுவம் தலைமையேற்று நடத்தி உள்ளது. ஒருவேளை புலிகள் இன்று போரை நிறுத்தி விலக்கிச் சென்றால் தமிழீழ மக்களின் நிலையை மேம்படுத்த இலங்கை அரசின், ஏன் உலகின் மற்ற எந்த அரசின் அல்லது ஐக்கிய நாட்டுசபையின் உத்திரவாதம் உண்டா? யார் அவர்களுக்காக களத்தில் நின்று உதவப்போவது? யார் அவர்களை மீண்டும் வாழ்க்கை நடத்துவதற்கான உத்திரவாதத்தை தருவது?
ஆக, முத்துக்குமாரின் மரணம் எழுப்பும் பலகேள்விகளில் ஒன்று. தீர்வி்ற்கான வழி என்ன? முத்துக்குமாரின் மரணநிலை என்பது இந்த தீர்க்க இயலாத முட்டுச் சந்தில் கொண்டுபோய் தமிழக மக்களையும், பலிகடாவாக தமிழீழ மக்களையும் நிறுத்தியதன் கையறுநிலைதான். உலகநாடுகள் இந்தப் போரை நிறுத்திவிட்டு புலிகளை தனிமைப்படுத்த முனைவதோ அல்லது தமிழீழ மக்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்வை உத்திரவாதப்படுத்துவதன் மூலம், புலிகளை மக்களிடமிருந்து கருத்தியல்ரீதியாக அந்நியப்படுத்த முனைவதோ தான் இப்பிரச்சனைக்கான உடனடி தீர்வாக அமையும். அதைவிட்டு இராணுவரீதியான தீர்வு என போர் செய்வது அனைத்து மனித அறத்திற்கும் எதிரானது. இராணுவரீதியான மற்றும் அரசியல்ரீதியான தீர்விற்கு முன்பாக மனிதநேயரீதியான தீர்வு இன்று அடிப்படை தீர்வாக உள்ளது என்பதை புரிந்துகொள்வது அவசியம். அதை புரிந்துகொள்வதற்கான ஒரு அடையாள-அரசியலற்ற மனநிலையே இன்றைய தேவை என்பதை வரலாறு மீண்டும் சொல்லிக் காட்டியுள்ளது.
-ஜமாலன் 07-02-2009
பின் குறிப்பு இக்கட்டுரை எழுதப்பட்ட பிறகு நிகழ்ந்த தீக்குளிப்புகள் மற்றும் ஈழம் சார்ந்த இறப்புகள் இதில் பேசப்பட வாய்ப்பில்லை என்பதை வாசிப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவும்..
---------------------------------------------------------------------------------------------------------------

சாம்ஸ்கியின் சிந்தனையான இயல்புக் கொள்யை (Innate Principle) இன்று பலருக்குப் பரிச்சயமானது.மொழியானது அகில உலக மனிதர்களின் ‘உறைந்த இயல்பு’ என்பது போன்ற சிந்தனைஇது. மொழியும் மனிதச்சிந்தனையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எல்லா மனிதர்களும், சாதி, இன, மத, மொழி வேறுபாடற்றுஉயர்ந்தவர்கள் என்ற சிந்தனையைக் கூறுகிறது இக்கோட்பாடு.



