
பயங்கரவாதம் என்கிற “பக்க“வாதம் - பகுதி-1
பிரச்சனை யார் வைக்கிறார்கள் என்பதல்ல? இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் எத்தன்மை வாய்ந்தவை என்பதுதான். மத பயங்கரவாதிகள், அரசு, அதிகாரிகள், காவல்துறை, ஊடகங்கள், மதவாத அறிவுஜீவிகள், இராணுவம் என ஒரு பெரும்படையே இன்று மதவாத அடையாளம் கொண்ட ஒரு அமைப்பாக மாறி குடியாண்மை (சிவில்) வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்ட நிலையே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் இத்தகைய குண்டுவெடிப்புகளின் பயங்கரங்கள் யாரால் செய்யப்படுகிறது? என்கிற ஆய்வுகள் முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில் நேரடியாக இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்களும், அதற்கு ஆதாரமாக காட்டப்படும் மின்_அஞ்சல் உள்ளிட்ட மற்ற தகவல்கள் ஆகியன எல்லாம் சேர்ந்து என்ன நடக்கிறது? என்பதே புரியாத ஒரு குழப்பமான நிலையே நீடிக்கிறது. இங்குதான் நாம் இந்த நிகழ்வுகளின் பின்னணிகளும் இதனை கையாள்பவர்கள், இதனை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் பொதுவானதாகக் கருதப்படும் அரசு எந்திரம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் என எல்லாம் நிகழ்த்தும் ஒருவித செயல்போக்கின் விளைவுகள் மற்றும் நோக்கங்களை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
பயங்கரவாதம் என்பது ஒரு அரசியலற்ற நடுநிலை சொல்லாடலாக ஊடகங்கள் மற்றும் அரசின் ஆய்வறிக்கைகள் செய்திகள் வழியாக கட்டமைக்கப்படுகிறது. ஒருகாலத்தில் உள்நாட்டு கலகமாக, விடுதலைப்போராக, புரட்சியாக, தீவிரவாதமாக கருதப்பட்ட இத்தகைய எதிர்நடவடிக்கைகள் இன்று பயங்கரவாதம் என்கிற ஒற்றைச் சொல்லாக பாவிக்கப்படுகிறது. இந்த சொற்கள் ஒவ்வொன்றிலும் அரசின் ஒடுக்குமுறை வடிவங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, அரசு எதிர்ப்பு போராட்ட வழிமுறைகளும் அந்தந்த கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறுபாடுகள் அடைந்து வந்துள்ளது. இன்றைய அரசுகள் மற்றும் அரசியலுக்கான வளர்ச்சியடைந்த சொல்லாடலாக உள்ள ஜனநாயகம் என்பதன் அடிப்படை வடிவங்களிலும் ஏற்பட்ட மாறுதல்கள் இந்த எதிர்வடிவங்களிலும் மாறுபாடுகளை ஏற்படுத்தி வந்துள்ளது. எதேச்சதிகார முடியாச்சிகளில் நிகழ்ந்த உள்நாட்டு கலகங்கள் தேசிய அரசுகளின் தோற்றத்தில் விடுதலைப் போர்களாக வடிவமடைந்து பின் அரசை தூக்கி எறியும் புரட்சிகளாக மாறி அதன் பின் ஜனநாயக அரசுகளின் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களால் தீவிரவாதமாகி இன்று அரசு மற்றும் மக்கள் எதிர்ப்பு என்கிற பயங்கரவாதமாக மாறியுள்ளது.
இதன் மற்றொருபுறம் ஜனநாயக அமைப்புகளை முற்றிலுமாக மறுத்து ஒதுக்கும் ஒருவகை இணை அரசுகளாக அதாவது மக்களை ஒடுக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்ட எதிர் - அதிகார அமைப்புகளாக இவை மாறியுள்ளன. அரசு மக்களை எப்படி பார்வையாளர்களாக வைத்துக் கொள்கிறதோ, அதேபோல இத்தகைய இயக்கங்களும் மக்களை ஒரு பார்வையாளர்களாகவே வைத்துக் கொண்டுள்ளன. காரணமற்ற முறையில் தங்களது உடலும், உயிரும் சிதைக்கப்படும் அரசின் ஒடுக்குமுறைகளில் அல்லது இத்தகைய பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்படுபவர்களாக மட்டுமே மக்கள் பங்கேற்பு என்பது உள்ளது. அதிகாரம் இந்த இரு எதிர்நடவடிக்கைகள் வழியாக இறுகி மக்களின் குரல்வளையை நெரிப்பதாக மாறியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை இனத்தினரை தனிமைப்படுத்தும் ஒரு மதவாத கருத்தியலை ஏற்றுக்கொண்ட ஒரு அமைப்பாக இன்றைய இந்திய அரசும், அரசியலும் மாறியுள்ளது. அரசு எந்திரத்தின் உறுப்பமைவுகளை இயக்கி வழிநடத்தும் கருத்தியலாக மதவாதம் உள்ளது. இதன் ஒரு வெளிப்பாடே பயங்கரவாதம் குறித்து பெருக்கப்படும் சொல்லாடல்களில் பரப்பப்படுகிறது.
உண்மையில் மதத்தை நம்பிக்கையாக கொண்ட பாமர மக்களுக்கிடையில் வேறுபாடுகளோ, வெறுப்போ, பிரச்சனைகளோ இல்லை. பிரச்சனைகளின் மையம் மதத்தை ஒரு கருத்தியலாக முன்வைக்கும் அரசியல் மதவாத அமைப்புகளே. உண்மையில் இந்த அமைப்புகள் மதத்தை காப்பதற்கானவை அல்ல, அடிப்படையில் இவைகள் மதங்களை பயங்கரவாதம் என்கிற அழிவுப்பாதை நோக்கியே அழைத்துச் செல்கின்றன. தனது குரல் நசுக்கப்பட்ட, தனது ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியாத இந்திய பெரும் சிறுபான்மையினரான முஸ்லிம்களில், உரிமைக்கான போராக ஆயுதம் தாங்கிய முஸ்லிம்களாக ஒரு சிறுபிரிவினர் மாற்றப்பட்டுள்ளனர். மற்ற பாமர முஸ்லிம்களின் வாழ்விற்காக தங்களது வாழ்வை பணயம் வைப்பதாக சொல்லும் இந்தப் பிரிவினர், நேற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களாகவும், இன்றைய வன்முறையாளர்களாகவும் மாறியுள்ளனர். அல்ஜீரிய விடுதலைப் போராளியான பிரான்ஸ் பேனன் கூறியதுபோல் `இத்தகைய வன்முறைகளின் நோக்கம் பிறரைக் கொல்வதல்ல, தங்களது சொந்த வாழ்வை தனது சொந்த பொறுப்பில் பணயம் வைப்பதே'. ஆனால், ஒரு பிரச்சார தந்திரமாக, பொதுமக்கள் அல்லது பொதுஇடங்களின் மீதான இவர்களது தாக்குதல் என்பது அரசை தண்டிப்பதற்கு பதிலாக மக்களை தண்டிப்பதாக மாறுகிறது. இத்தகையவர்களை குறிவைத்து பிடிக்க முடியாத அரசு, ஒரு மீனைப் பிடிக்க தொட்டி தண்ணியையும் திறந்துவிட்டு எல்லா மீன்களையும் பாதிப்பிற்குள்ளாகும் நிலையே உள்ளது.
பொதுவாக, பயங்கரவாதம் என்பது இரண்டு வடிவங்களைக் கொண்டது. 1. அரசு எதிர்ப்பாக உருவாகும் பயங்கரவாதங்கள், கலகக்காரர்கள், புரட்சியாளர்கள், தீவிரவாதிகள், விடுதலைப் போராளிகள் இப்படி பல பெயர்களால் அழைக்கப்பட்டவர்களும் இன்று பயங்கரவாதி என்கிற ஒற்றைச் சொல்லிற்குள் அடக்கப்பட்டுவிட்டார்கள். 2. சில அரசுகளே தங்களது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ளவும் பிற நாடுகளின் போராளிக் குழுக்களை பயன்படுத்தி தனக்கு எதிரான அரசுகளுக்கு நெருக்கடிகளை தருவதுமாக பயங்கரவாதத்தை பயன்படுத்துவது. அதாவது அரசு பயங்கரவாதம். இன்று இஸ்லாம் பயங்கரவாதத்தை தலைமை ஏற்றும் நடத்தும் முஜாகிதீன்கள் அமெரிக்க அரசால் வளர்க்கப்பட்ட பயங்கரவாதிகள் என்பது பேசிப் பேசி சலித்துப்போன ஒன்றே. அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ரொணால்ட் ரீகன்தான் பெப்சி, கொக்ககோலா, ஆயுதங்கள், உயிர்கொல்லி எய்ட்ஸ் போன்ற அமெரிக்க பண்டங்களுடன் முதன்முதலாக சுதந்திரம், விடுதலை, ஜனநாயகம் போன்ற கருத்தியல் பண்டங்களையும் (ideological commodities) உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். அடிப்படையில் ரீகன் அமெரிக்க அரசின் கருத்தியலாக கிறித்துவத்தை மாற்ற முயன்றதின் ஒரு விளைவே இது. அவரது ஆட்சியில்தான் ஆப்பிரிக்க, தென்அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் விடுதலைப் போராளிகள் என்ற பெயரில் பல குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்த கருத்தியல் பண்டங்களை விநியோகிக்க முயன்றன. இக்குழுக்களே பயங்கரவாதக் குழுக்களாக மாறின. ஆக, உலக பயங்கரவாதத்திற்கான முகவராக இருந்த அமெரிக்காதான் இன்று உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போராளியாக தன்னைக் காட்டிக் கொள்கிறது.
குறிப்பாக, பயங்கரவாதம் என்பது ஒரு குறிப்பிட்டவகை அடையாளமிட்ட மக்களின் பெயரால் நடத்தப்படும் மக்களை உள்ளடக்காத குழுக்களின் நடவடிக்கையே. சமீபத்திய இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளை எடுத்துக்கொண்டால் அவை எந்த சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக வைக்கப்பட்டதான அறிவிப்புகளுடன் நிகழ்த்தப்பட்டாலும் அடிப்படையில் அது அரசையும், முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் குழுக்களையும் வளர்ப்பதாகவே மாறி உள்ளது கண்கூடு. இந்திய முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு ஜனநாயக அரசியல் அமைப்போ, அரசியல் தலைவரோ அற்ற நிலையில் முஸ்லிம்ளின் குரல்களை தாங்களே பிரதிபலிப்பதாகவும், தாங்களே முஸ்லிம்களின் பிரதிநிதி என்பதான ஒரு பொய்த்தோற்றத்தையும் இவை உருவாக்குகின்றன. உண்மையில் இவை முஸ்லிம்களின் அரசியலுக்கு எதிரான ஒரு அரசியலை வளர்ப்பதாகவும், முஸ்லிம்களின் அரசியல் வெளிகளை முற்றிலுமாக அழிப்பதுமாக உள்ளது.
இன்றைக்கான அரசியல் செயல்படும், மனத்தளம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. நேர்மறையான அரசியல் போக்குகளுக்கு பதிலாக எதிர்மறையான அரசியல் போக்குகளே இன்றைய அரசியல் அமைப்புகளை வளர்ப்பதாக உள்ளது. அதாவது தன்அடையாள அரசியலின் ஒரு பாரதூரமான விளைவு தனது வரையறைக்கு வெளியில் தள்ளப்படும் ``பிற'' என்பவையே, மையத்தை கட்டுவதாக இருப்பதே. அல்லது தன் அடையாள அரசியல் பிறவற்றை அம்பலப்படுத்தும் செயல்கள் மையத்துவ அரசியலால் ஏற்புடையவையாக மாறுகிறது. சான்றாக, அமெரிக்க தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷின் வெற்றிக்கு தேர்தலின் முன்பாக வெளியிடப்பட்ட பின்லாடனின் ``எச்சரிக்கை'' ஒளிப்படம் ஒரு முக்கிய பங்காற்றியதைப்போல, சென்ற குஜராத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தெகல்ஹா அம்பலப்படுத்தல்கள் மோடியின் வெற்றிக்கு ஒரு பங்களிப்பைச் செய்ததைப்போல, தன் அடையாள அரசியல் என்பது எதிர்மறைச் சொல்லாடல்களில் கட்டப்படும் மற்றமைத் தளத்திலான நிகழ்வாக மாறியுள்ளது. இறுதியில் `தர்மம் வெல்ல பாடுபடும் நன்மை பயக்கும்' நாயகர்களைவிட, சதிகளில் ஈடுபடும் வில்லன்களே இன்று பெருமைக்கு உரிய எதிர் நாயகர்களாக மாறிவிட்ட ஒரு அவலநிலை இது. நன்மைகள் பற்றிய கனவுகளுடன், தீமைகள் ஆளும் ஒரு எதிர்மன உலகில் நாம் வாழ்கிறோம் என்பதுதான் இன்றைய அரசியலின் பேரவலம் எனலாம். விதிகளைவிட எதிர்விதிகள் ஆதிக்கம் செய்யும் ஒரு சமூக அமைப்பாக உள்ளது. அதனால்தான் பயங்கரவாதம் என்பது எதிர்விதிக்கான தளத்தில் செயல்படுவதால் வெற்றியடைவதாகவும், அதனால் உருவாகும் வெறுப்பின் அரசியல் என்பதே இன்றைய மையமான அரசியலாகவும் இந்தியாவில் உருவாகி வருகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இன்றைய இந்திய அரசியலின் அதிகார விறுப்புறுதிக்கு இந்த பயங்கரவாதம் என்பது தேவைப்படுகிறது என்பதுதான். விருப்பின் அரசியலுக்கு மாற்றாக வெறுப்பின் அரசியல் என்பது வளர்ந்து இந்திய சமூக அமைப்பு ஒரு பாசிச நிலைநோக்கி நகர்வதாக உள்ளது.
உண்மையில் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது இந்தவகை பயங்கரவாதங்கள், அரசியலற்று, இஸ்லாமிய ஜனநாயக அமைப்போ தலைவர்களோ அற்ற நிலையில், தனக்கும் தனது மக்களுக்கும் குழி தோண்டும் வேலையையே செய்கிறது. இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் பயம் மற்றும் பதற்றத்தையும், தாங்கள் தனிமை
ப் படுத்தப்பட்டுள்ளதான கையறுநிலையையும் உருவாக்குவதில் அரசைவிட ஒருபடிமேலாக இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் புதிய புதிய பெயர்களால் உருவாக்கிக் கொண்டே உள்ளன. சென்ற பிஜேபி ஆட்சியில் இத்தகைய பயங்கரவாத குண்டுவெடிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவும் கட்டுப்படுத்தப்பட்டும் இருந்ததான தோற்றம், இஸ்லாமிய மக்களிடம் ஒரு எதிர்மறையான அரசியல் சார்பநிலையை அல்லது ஓட்டுவங்கி அரசியலில் எதிர்நிலை எடுப்பதற்கான போக்கையே துரிதப்படுத்துகிறது. இந்தவகை சொல்லாடல்களின் துணைப்பிரதியான ஒரு வாசிப்பு. அமைதியாக வாழ மதவாத சக்திகளுக்கு ஓட்டளிக்கும் வெறுப்பின் அரசியலாக உருவாகி வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் ஒரு கடினமான காலகட்டத்தை கட்டியங் கூறுபவையாக இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்றால் மிகையாகாது. குஜராத் சோதனைச்சாலை கலவரங்களுக்குப் பின்னும் மோடி சிரித்துக் கொண்டே ஓட்டுக்கேட்க முடிவது அதனால்தான்.
உண்மையில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? யாரை நம்புவது? யாரிடம் சொல்வது? யாரை பின்பற்றுவது? என்பதே அறிய முடியாத நிலை உருவாகி உள்ளது. இத்தகைய குண்டுவெடிப்புகளில் அரசும் ஊடகமும் சொல்லிவரும் வாசகங்கள் பொதுவாக மாற்றப்படாத ஒரேவகைப்பட்ட வாக்கியங்களே. சிலவேளைகளில் குண்டுவெடித்துக் கொண்டிருக்கும்போதே, இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டுவைத்துவிட்டதான பிரச்சாரங்கள் குண்டைவிட வேகமாகப் பரப்பப்படுகிறது. இத்தகைய குண்டுவெடிப்புகள் குறித்த முறையான விசாரணைகளோ, கைதுகளோ, தண்டனைகளோ தர இயலவில்லையா? அல்லது விருப்பமில்லையா? என்பதை புரிந்து கொள்ளமுடியாத ஒரு மர்மபடுத்தப்பட்ட நிலையே நீடிக்கிறது. உண்மையில் இந்தியாவின் `குடிமகன்களாக' உள்ள எல்லா மதத்தினரும் இன்னும் குறிப்பாக சிறுபான்மையினரும் விரும்புவது ஒன்றுதான் அரசு இத்தகைய நடவடிக்கைகளை முறையாக கண்காணித்து விசாரித்து தண்டனை வழங்கவேண்டும் என்பதுதான். குடிமக்களின் பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை அரசால் ஏன் வழங்க இயலவில்லை என்பது ஒரு புதிராக உள்ளது. இங்குதான் அதிகாரத்தின் விளையாட்டை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பங்காரவாதம் என்பதை அரசு ஒரு பொதுசொல்லாடலாக மாற்றுவதையும் அதன் வழியாக தனது அதிகாரத்தை பரவலாக்கிக் கொள்வதையும், தனது வன்முறைசார் நிறுவனங்களான காவல்துறை, நீதித்துறை மற்றும் இராணுவத்தை நியாயப்படுத்துவதையும், தனது அதிகார இறையாண்மையை உறுதி செய்துகொள்வதையும் புரிந்து கொள்ளவேண்டி உள்ளது.
மற்றொருபுறம் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் 4 முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. 1. முஸ்லிம்களை அரசானது தனிமைப்படுத்துவதற்கும் நேரடியாக அவர்கள்மீது ஒடுக்குமுறைகளை செய்வதற்குமான நியாயம் வழங்கப்படுகிறது. 2. இந்திய முஸ்லிம்களுக்கான உரிமைகைளக் கோருவதற்கான ஒரு ஜனநாயக வெளி மறுக்கப்படுகிறது. 3. எந்த மதக்கருத்தியலும் அற்ற அப்பாவியான முஸ்லிம்களும் இதனுடன் சேர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். 4. முக்கியமாக முஸ்லிம் எதிர்ப்பு மதவாத அமைப்புகள் சொல்லும் இஸ்லாம் மதமே அடிப்படையில் ஜனநாயக விரோதமான சகிப்புத்தன்மையற்ற ஒன்று என்கிற கருத்திற்கான நடைமுறைச் சான்றை வழங்குவதாக உள்ளது.
ஆக, யாருக்கு ஆதரவாக இந்த பயங்கரவாதங்களை செய்வதாக சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு எதிரானதாகவே இவை யதார்த்தத்தில் செயல்படுகின்றன. உண்மையில் இந்தியாவில் வளர்ந்து வரும் மதவாத `இந்துத்துவா' பாசிசத்திற்கு துணைபோவதாகவே இத்தகைய நிகழ்வுகளின் விளைவுகள் அமைகின்றன. ஒருபுறம் இந்துத்துவா அமைப்புகள் கிறித்துவ சிறுபான்மையினராக உள்ள மாநிலங்களில் கிறித்துவர்கள் குறிவைத்து தாக்குவதும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள மாநிலங்களில் முஸ்லிம்களை தாக்குவதுமான நடவடிக்கைகளில் இறங்குவதும், அதனை கண்டிப்பதற்கான ஒரு ஜனநாயக தளமும் அற்ற நிலையே இன்றைய இந்திய அரசியல் போக்காக உள்ளது. குண்டுவெடித்து இறப்பதைவிடக் கொடுமையான மனிதத் தன்மையற்ற முறையில கிறித்துவர்களும், முஸ்லிம்களும் உயிருடன் கொழுத்தப்படும் ஒரு கொடூரம் `அஹிம்சையை உலகுக்கு ஒரு அரசியல் நெறியாக, அறநெறியாக அறிவித்த புண்ணிய பூமியில்தான்' நிகழ்கிறது. பெரும்பான்மை மக்களின் பாதுகாப்பு என்பது முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அவர்களது தினவாழ்வை பதற்றத்திற்குள்ளும், பயங்கரத்திற்குள்ளும் வைப்பதன்மூலம், அவர்களையும் மத துவேஷத்திற்குள் ஆளாக்கும் ஒரு அரசியல் போக்கை விரைவுபடுத்தும் நடவடிக்கையாகவே இவை உள்ளன. அடிப்படையில் மதவாத பாசிச அமைப்புகளின் வளர்ச்சிக்கு ஒரு திட்டமிட்ட செயல்திட்டம் போன்று அமைந்துள்ளன இத்தகைய நடவடிக்கைகள்.
இவற்றின் வழியாக திரும்ப திரும்ப, இஸ்லாம் அடிப்படையில் ஜனநாயகமற்ற மதம் என்கிற கருத்தியல் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முகலாய மன்னர்கள் எதேச்சதிகாரிகள் எனவும், அவர்கள் இந்திய மக்களை கொடுமைப்படுத்தினார்கள் என்பதான ஒரு வரலாற்றுக் கதையாடல் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. குறிப்பாக கஜனி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து கோவில்களை கொள்ளை அடித்தான் என்கிற வரலாற்று நிகழ்வு ஒன்று `ஆறா மனப்புண்ணாக'' திரும்ப திரும்பச் சொல்லப்படுகிறது. கஜினி முகமது இஸ்லாமின் வழிகாட்டுதல் அடிப்படையிலோ அல்லது இஸ்லாத்தை பரப்பும் நொக்கிலோ, இந்த கொள்கைகளை நிகழ்த்தவில்லை. அதாவது இதனை ஒரு மதரீதியான படையெடுப்பாக பார்க்க முடியுமா? என்பதுதான். ராஜராஜசோழன் இலங்கைமீது படையெடுத்ததை இலங்கைமீதான இந்து மேலாண்மைக்கான முயற்சியாகவோ, அல்லது அவனது சைவநெறி பரவலாக்கத்திற்கானதாகவோ, அதாவது ஒரு மதஅடிப்படையிலான படையெடுப்பாகவோ புரிந்துகொள்ளமுடியுமா? கஜனி முகமது ஒரு மன்னன் என்கிற அடிப்படையில் தனது ஆதிக்கத்திற்கான போரைத்தான் நடத்தினான். போர்களின் அடிப்படை பொருளை கொள்ளை அடிப்பதுதானே. தற்போது பெட்ரோலை கொள்ளை அடிக்க அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கான் மீது போர் தொடுத்ததைப்போல. அதனால் கஜனியை முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதியாக கொள்வது என்பது ஒரு வரலாற்று நிகழ்வை தொன்மமாக மாற்றி கட்டப்படும் கதையாடலே. இதுபற்றி ரொமிலா தாப்பர் முன்வைக்கும் வரலாற்றுத் தகவல்கள் வரலாற்று உருவாக்கத்தில் இந்தவகை கதையாடலின் (narrations) அரசியலை அவை நிகழ்த்தும் வன்முறையை வெளிப்படுத்துகிறது. (இப்பகுதியை எனது மொழியும் நிலமும் என்கிற நூலிலிருந்து பொருத்தப்பாடு கருதி அப்படியே தருகிறேன்.)
இப்படையெடுப்பு குறித்து 5-வகை கதையாடல்கள் உள்ளன என்கிறார் தாப்பர்.
1. துருக்கிய-பார்சிய கதையாடல் - தென்மேற்கு ஆசிய வரலாற்றில் அரேபிய - பார்சிய அதிகார உருவாக்கம், இஸ்லாத்துடன் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டே உருவாகுகிறது. கஜனி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு, பார்சிய கதையாடலில், கஜனியை ஒரு `இஸ்லாமிய வீரனாக' (Champion of Isalm) காட்டுவதன் மூலம், அரேபிய இஸ்லாமின் மீது ஆதிக்கம் வகிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதாவது குர்ரானில் சொல்லப்பட்ட அரேபிய சமூகத்திற்கு முந்தைய லாட் (Lat),உஸ்ஸப (Uzza) மற்றும் மனாத் (Manat) என்கிற மூன்று கடவுள் சிலைகள் உடைக்கப்பட வேண்டியவையாக இஸ்லாமை உருவாக்கிய தூதர் முகம்மதுவால் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இரண்டு முகம்மது காலத்திலேயே உடைக்கப்பட்டது. பிறிதொன்றான மனாத் (சோமனாத் என்பதை ஷி–விணீஸீணீ‡ மனாத்தின் இடம் என்கிற அரபி சொல்லாக கூறப்படுகிறது.) சோமநாத புரத்தில் இருப்பதாக நம்பப்பட்டு அதனை உடைக்கும் ஒரு புனிதப் போராக வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் பார்சி_துருக்கிய ஆதிக்கம் இஸ்லாத்திற்குள் நிறுவப்படுவதற்கான முயற்சியை உணரலாம். தென்மேற்கு ஆசியாவில், அரேபிய, துருக்கிய, பாரசீக வரலாறு என்பது இஸ்லாமின் வளர்ச்சி/வீழ்ச்சியுடன் தொடர்பு கொண்டதாக இருந்ததை, அவ்வரலாற்றை படிப்பவர்கள் காணமுடியும்.
2. ஜைன-சைவ முரண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கதையாடல், சிவனைவிட மகாவீரர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவரது சிலைகள் உடைக்கப்பட வில்லை என்பதைப்போல இப்பிரச்சனையை சைவ/ஜைன முரணாக விளக்குகின்றன.
3. சமஸ்கிருத கல்வெட்டுகள் சோமநாதபுரம் கோவில் தாக்கி அழிக்கப்பட்டதைப் பற்றி அதிகமாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. 12-ஆம் நூற்றாண்டில் அக்கோவிலுக்கு செல்லும் யாத்ரீகர்களை தாக்குவதும், திருடுவதும் அருகில் இருந்த இந்து மன்னர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. சோமநாத புரத்தில் மசூதி ஒன்று கட்டுப்படுவதற்காக, அங்கு குடியேறி இருந்த அரேபிய மு:ஸலிம்களுக்கு நிலம் ஒன்று விற்கப்பட்டதிற்கான பத்திரம் அன்றே அரேபி சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து, சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த துருக்கிய சுல்தான்களுக்கு எதிராக, சோமநாதபுரத்தைச் சேர்ந்து அரேபிய முஸ்லிம்களும் போராடி உள்ளனர். அப்போராட்டத்தில் இறந்து போன பரீத் என்கிற முஸ்லிமின் நினைவாக ஒரு கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது.
4. பிரிட்டிஸ் House of Commence-ல் இப்பிரச்சனை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு, இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக கூறிக் கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்பட்ட இரண்டு சோமநாதபுரம் வாயிற்கதவுகளை, ஆங்கிலேயப்படை பாரசீகத்திலிருந்து மீட்டு வந்தது. ஆனால், அவ்விரண்டு கதவுகளும், எகிப்திய வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதால் இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதில்லை என நிரூபணம் ஆனவுடன், அதனை ஆக்ராவில் ஒரு கோட்டைக்குள் தூக்கிப் போட்டுவிட்டனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியமே முதன் முதலாக இந்த பிரச்னையின் வகுப்புவாத விதையை ஊன்றி, நீரூற்றி வளர்த்தது.
5. K.M. முன்சி என்பவரால் முன்வைக்கப்பட்ட `இந்துக்களின் ஆழ் மனதிற்குள்ளான அவமான உணர்வு' துடைத்தெறியப்பட வேண்டும் என்பதான வகுப்புவாத கதையாடல். (Somanatha and Mahmud - Romila Thapar - Frontline April 23, 1999)
ஆக, ஒரு வரலாற்று நிகழ்வு என்பது பல்வேறு கதையாடல்மூலம் அரசியல் நிகழ்வுகளாக மாற்றப்பட்டு, மக்களினத்தின் வாழ்வுடன் பங்கு பெறுவதாகிறது. ஒவ்வொரு சமூகமும், வரலாற்றை வாசிப்பதன் மூலம், தனதுகால அரசியல் வரலாற்றாக அதனை மாற்றிவிடுகிறது. கஜினி முகமதுவின் சோமநாதபுர படையெடுப்பு என்பது இந்திய வகுப்புவாத சக்திகளின் கையில் நிகழ்கால வரலாறாக மாற்றப்பட்டுள்ளது. அது முன்சி கூறியதுபோல `இந்துக்களின் ஆழ்மனதில் ஒருவகை `அவமான உணர்வாக' இறக்கப்பட்டதாக கூறி அதனை கிளறிவிடுவதாக இன்றைக்கான அரசியல் நிகழ்வுகள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டுள்ளன. ``இந்நீண்ட பகுதியில் உள்ள ஒரு முக்கிய குறிப்பு கஜனி முகமதுவை எதிர்த்து சண்டையிட்ட ஒரு இஸ்லாமியரும் குறிப்பிடப்படுவதுதான். ஆக, கஜனி படையெடுப்பு என்பது ஒரு வழக்கமான ஆக்ரமிப்பு போரே தவிர அதில் இஸ்லாமின் மதரீதியான பங்கு என்ன? என்பது அதை முன்வைப்பவர்களுக்கே வெளிச்சம்.
இறுதி முகலாய மன்னரான பகதூர் ஷா-வின் ஜனநாயகப் பண்புகள் நண்பர் ராமானுஜத்தால் கட்டுரை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளது. (பார்ப்பனிய இந்திய தேசியம் உருவாக்கத்தின் தொடக்கப்புள்ளி; 1857, ராமானுஜம், தீராநதி) இந்தியாவை ஆண்ட பேரரசர்களில் ஒருவரான அக்பர் மிகப்பெரிய ஜனநாயகப் பண்புகளைக் கொண்டவராக மாற்று மதங்களை அங்கீகரித்து அதற்கு முழு வழிபட்டு உரிமைகளையும் அனுமதித்தவராகவும், ஒருபடி மேலாக அவரே ராஜபுத்திர பெண்களை திருமணம் செய்துகொண்ட மதச்சார்பற்ற மன்னராகவும் இருந்துள்ளார். முஸ்லிம் மன்னர்கள் ஜனநாயகப் பண்புகளைக் கொண்டவர்களாக சுட்டிக்காட்டுவது நமது நோக்கமில்லை. ஒருவருக்கு ஜனநாயகப் பண்பையோ, சகிப்புத் தன்மையையோ ஊட்ட மதங்கள் மட்டுமே அடிப்படை காரணங்களாகிவிடாது. கிறித்துவரான ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் பாசிஸ்டுகளாக ஆனதற்கு கிறித்துவத்தை குறைகூற முடியாது. பிறமத வெறுப்பு என்பது எல்லா மதங்களினதும் அடிப்படையாக உள்ளது. இந்துமதம் என்று சொல்லப்படும் ஆரிய - வேதமதம், பழமையான மதம் என்பதால் தன்னை பிறமதத்துடன் ஒப்பிட்டு மதவெறுப்பை விதைப்பதற்கான வாய்ப்பற்ற காலத்தில் அது நிறுவனமானதே காரணம் எல்லாம். அதே மதம் வரலாற்றில் பௌத்தத்தை அழித்ததை வைத்து அதனை பொதுப்பண்பாக வரையறுக்க முடியுமா?
ஆக, அடிப்படையில், மதங்கள் எல்லாமே ஜனநாயகத் தன்மை அற்றவைதான். காரணம் அவை ஒரு குறிப்பிட்ட மனிதர்களை தனது மத அடையாளத்திற்குள் வரையறுப்பதும், தனது மதமே, நிலைபாடே உயர்ந்தது என்று சொல்வதும் அடிப்படையில் அவற்றில் பிற மத நிராகரிப்பு இருப்பதையே காட்டுகிறது, தவிரவும், இன்று நவீன தேசியப்பார்வை கொண்ட ஒரு சொல்லாடல்களத்தில் மதங்களின் ஜனநாயகம் பற்றி பேசமுடியாது. காரணம், ஜனநாயகம் என்பது முதலாளித்துவ காலத்தில் உருவாகி வந்த பகுத்தறிவுக் கருத்தியல் அடிப்படையைக் கொண்ட ஒரு அரசியல் சொல்லாடலாகும். அது இன்றைக்கான அரசியல் பார்வையே ஒழிய அதைக்கொண்டு பண்டைய மதங்களை நாம் அறுதியிட முடியாது. ஜனநாயகம் என்பதன் அடிப்படை படிநிலை அமைப்பாகும். மேற்கத்தியம் பின்பற்றும் கிறித்தவ மதத்தில், இந்த படிநிலை அமைப்பு இருப்பதால் பெரும்பான்மை, சிறுபாண்மை என்கிற ஜனநாயகக்கருத்தியல் அவசியமானதாகும். இஸ்லாமில் இந்த படிநிலை அமைப்போ அல்லது உலகம் முழுவதற்குமான ஒரு தலைமையை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ இல்லை. அதனால், அம்மதத்திற்குள் ஜனநாயகம் என்கிற பண்பிற்கு பகரமாக சமத்துவம் என்கிற பண்புநிலை இருப்பதைக் காணமுடியும். ஆயுத்துல்லா கோமேனிக்குப் பிறகே உலகத் தலைவர் என்பதான கருத்தாக்கம் இஸ்லாமிற்குள் நுழைந்ததை மம்தானி சுட்டிக் காட்டுகிறார்.
சான்றாக, வேதமதங்களில் நிலவிய சமத்துவமின்மை என்பது அன்றைய சமூக வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக பணியை ஆற்றியிருக்கலாம், ஆனால் இன்று அது என்னவாக இயக்கம் கொள்கிறது என்பதே அதன் தன்மையை தீர்மானிக்கிறது. இஸ்லாம் ஒரு முடியாச்சிமுறையை மட்டும் கொண்ட அரசு மதமல்ல. அதில் `உம்மா'என்கிற ஒரு ``சகோதரத்துவ'' அரசாட்சிமுறை உள்ளது.அது ஒருவகை வணிக ஜனநாயக்ததை அல்லது உரிமைகளைக் கொண்டது. அது சரியானது என்பதோ அதுவே உலகை உய்விக்கும் வழி என்பதோ அல்ல இங்கு நாம் சொல்ல வருவது. இஸ்லாம் தனது மத அடிப்படைகளில் ஒன்றாக சகிப்புத்தன்மையின்மையையும் ஜனநாயக மறுப்பையும் கொண்டதாக இல்லை என்பதே. ஆக, ஜனநாயகம் என்கிற பண்பை பண்டைய மத அமைப்புகளில் தேடுவது, நவீன அறிவியலை புனிதமறைகளில் தேடுவதைப்போலத்தான்.
சான்றாக, இன்றைய சவுதிஅரேபிய இஸ்லாமிய முடியாச்சியை எடுத்துக் கொள்வோம். அந்நாட்டின் அரசாட்சி முறையை இஸ்லா
மிய அரசாட்சிமுறை என்று கூறிவிட முடியாது. ஆனால், தனது ஆளுகை தொழில்நுட்பத்திற்கு இஸ்லாமிய நவீன தேசியக் கருத்தியலைக்கொண்ட வகாபிமிசத்தை ஆளும் கருத்தியலாகக் கொண்டிருக்கிறது. இங்கு நாம் கூறவருவது இந்து மதம் என்பதை எப்படி ஒற்றையான அல்லது ஒருபத்தானதாக வரையறுக்க முடியாதோ அப்படியே இஸ்லாமையும் வரையறுக்க முடியாது அது ஒவ்வொரு தேசியத்திலும் ஊன்றப்பட்டு அந்த தேசியத்தின் பெரும்பான்மை மதங்களின் பாதிப்புகளில் திருத்தி தன்னை தகவமைத்துக் கொண்டதால்தான் அது பல தேசிய இனங்களின் பண்பாட்டிலும் தனது இருப்பைக் கொண்டிருக்க முடிகிறது. இந்து பௌத்த மத பாதிப்பைக் கொண்ட இந்தோனேசியாவில் உள்ள இஸ்லாமும், இந்துமத பாதிப்பைக் கொண்ட இந்தியாவில் உள்ள இஸ்லாமும், பார்சி மத பாதிப்பைக் கொண்ட ஈரானில் உள்ள இஸ்லாமும், நவீன வகாபிசத்தின் ஓரமைவாக்க மதத்தன்மைக் கொண்ட அரேபியாவில் உள்ள இஸ்லாமும் ஒன்றல்ல. இஸ்லாம் பல பண்பாடுகளைக் கொண்ட மதம். அதனை ஒருபடித்தான ஒற்றைப் பண்பாட்டைக் கொண்டதாக சுருக்க முடியாது.
குறிப்பாக தமிழகத்திற்குள்ளேயே உருது பேசும் முஸ்லிமும் தமிழ் பேசும் முஸ்லிமும் ஒருபடித்தானவர்கள் அல்ல. இன்னும் குறிப்பாக தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் கலாச்சாரமும் நம்பிக்கைகளும், தென்னாற்காடு முஸ்லிம்களின் கலாச்சாரமும் நம்பிக்கைகளும் வெவ்வேறானவை. பிரச்சனைஇன்று இஸ்லாமிய வகாபிச தீவிரவாத அமைப்புகள் ஒருபடித்தான இஸ்லாமை கட்டமுயல்வதைப்போலவே இந்து தீவிரவாத அமைப்புகள் ஒருபடித்தான இந்து மதத்தை கட்ட முயல்கின்றன. இவை வரலாற்றின் வழியாகப் பெறப்படும் ஓரமைவாக்க கருத்தியலின் வன்முறை சார்ந்த பிரச்சனையே ஒழிய, அடிப்படையில் இரு மதங்களுக்கிடையிலான பிரச்சனை அல்ல. பிரச்சனையின் அடிப்படை இவை தேசியக்கருத்தியல் போன்ற ஒற்றை அடையாளத்தை திணிக்க முயலும் நவீன அரசியல்வாதத்தின் விளைவே. இது ஒருவகை நவீனத்துவத்தின், தேசியத்தின், உலகமயமாக்கலின் ஒரு படித்தான அரசியல் கருத்தியலின் விளைவாகும். மதங்களுக்கும் ஜனநாயகத்திற்கும் உள்ள உறவு என்பது நேரெதிரானது என்பதைவிட இன்றைய ஜனநாயக சொல்லாடலைக் கொண்டு பண்டைய மதங்களின் தன்மைகளை வரையறுக்க முடியாது என்பதே முக்கியம்.
உண்மையில் முகலாயர்கள் இஸ்லாமைவிட தாங்கள் பிறந்து வளர்ந்த நாடுகளின் குடியாண்மைக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களே. இன்னும் குறிப்பாகச் சொன்னால், முகமது நபியால் உருவாக்கப்பட்டு, அதன்பின் வந்த 5 கலீபாக்களால் பரவலாக்கப்பட்ட இஸ்லாமியக் முடியரசு என்பது தனது ஆளுகைக்கு உட்பட்ட எல்லா நாடுகளையும் இஸ்லாமிய நாடுகளாக மாற்றவில்லை. மேலும், அவை மாற்றுமத நம்பிக்கைகளை ஒழித்ததாகக் கூறமுடியுமா? வழக்கமாக இந்திய முஸ்லிம்களை முகலாய வரலாற்றுடன் இணைத்து அவர்களை வரையறுப்பது என்பது இந்திய தேசிய நீரோட்டத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தி வெறுப்பை விதைக்கும் வேலையே. நுட்பமாக இந்திய முஸ்லிம்களை தேசியத்திற்கு வெளியில் நிறுத்தும் முயற்சியே. முகலாயர்கள் இஸ்லாத்தை தங்கள் மதமாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதால் அவர்களது ஆட்சிமுறையை ஒரு மதவாத ஆட்சிமுறையாக பார்க்க முடியுமா? அது மதவாத ஆட்சிமுறை என்றால் பெரும்பாண்மையான இந்து மக்கள் அதை எதிர்த்து போராடாமல், முகலாயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற ஆங்கிலேயர்கள் வரவேண்டிய நிலைக்கு ஆளானது எப்படி? முகலாயர்கள் பல நூற்றாண்டுகள் இந்நாட்டை ஆண்டபோது அவர்கள் முற்றிலுமாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி முஸ்லிம் மதத்தை பரப்பியிருக்க முடியும். அதேபோல் கிறித்துவ பிரிததானியர்கள் ஆண்டபோது இந்தியாவில் கிறித்துவத்தை முழுமையாக பரப்பியிருக்க முடியும். அப்படி ஒன்று வரலாற்றில் நிகழுவது சாத்தியமில்லை. காரணம் அன்று மதம் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்ததே ஒழிய, அரசியலாக இல்லை. ஆனால், இன்று மதம் என்பது மனித வாழ்வில் அங்கமாக இல்லை அரசியலாக உள்ளது.
சுருக்கமாகக் கூறுவது இதுதான், மதங்கள் ஜனநாயகத்திற்கும் இன்றைய புதியவகை அரசியல் அமைப்பிற்கும் தகவமைத்துக் கொள்ளமுடியாதவை. சமூகத்தை பின்னோக்கிய `உன்னத கற்பிதங்களுக்கு' இழுப்பவை.அவை இன்றைய மனிதன் முகங்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எந்தவித தீர்வையும் தராதவை. அதனால் மதத்தின் பெயரால் செய்யப்படும் எல்லா அரசியல் நிலைபாடுகளும் நிராகரிக்கப்பட வேண்டியவை. பயங்கரவாதம் என்பது மதங்களின் வரலாற்றுத் தன்மையால் ஒரு வன்முறையை நிகழ்த்தும் உரிமை பெற்றதாக தங்களைக் கருதிக் கொள்கின்றன. அரசும் இந்த வரலாற்றை பெருக்கியபடி இருப்பதில்தான் தனது அதிகாரத்தை தக்க வைக்கிறது. ஆக, பயங்கரவாதம் என்பது அதிகாரத்தின் ஒரு நுண்விளையாட்டே அதிலிருந்து தப்பி பிழைப்பதே இன்றைக்கான ஜனநாயக அரசியலுக்கான அடிப்படையாகும். இந்திய முஸ்லிம்கள் ஒரு ஜனநாயக அமைப்பை கண்டடைந்து அதை வலுப்படுத்துவது மட்டுமே இந்த பாசிச அவலச் சூழலில் அவர்களை காத்தருளுவதாக இருக்குமே ஒழிய புனித ஜிகாத்துகள் மேலும் அவர்களை கொன்றொழிப்பதற்கும், தனிமைப்படுத்தி அடக்கி ஒடுக்குவதற்குமே தள்ளிச்செல்லும். `அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம். யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல்' என்றார் லெனின். இன்றைக்கான இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினருக்குத் தேவை அரசியல் அதாவது ரத்தம் சிந்தாத ஒரு யுத்தம். பயங்கரவாதம் எனும் இரத்தம் சிந்தும் அரசியல் அல்ல.
-ஜமாலன். தீராநதி-01-01-2009.