நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழா

ஆதவன் தீட்சண்யாவின்  'நான் ஒரு மநு விரோதன்" என்கிற அவரது நேர்காணல்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பற்றி எனக்கு வந்த அஞ்சலை பதிவுலக நண்பர்களின் பார்வைக்கு இங்கு வெளியிடுகிறேன். அப்புத்தகத்தின் அறிமுகமாக  வெளியிடப்பட்டுள்ள சிலகுறிப்புகள் தற்சமயம் நடந்துவரும் பதிவுலக விவாதங்களை ஒட்டி இருப்பதும்... யோனி, கலகக்காரி, சுஜாதா, பார்பனீயம்,சுந்தரராமசாமி போன்ற பதிவுலக ஹாட் போஸ்டிங் குறிச்சொற்கள் இதில் இருப்பதும் யதேச்சையானதே. மற்றபடி நண்பர்களிடையே நடைபெறும் காரசாரமான விவாதததிற்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை புதிர்கதைபோடும் எகிப்தின் ஸ்பிங்கஸ் மீது சத்தியமடித்து சொல்கிறேன்.
புத்தகத்திலிருந்து:

"....வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?..."
"...யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி என்று இங்கு மதிப்பிடப்படுகிறது. இது நகரம் சார்ந்த நடுத்தரவர்க்க மனோநிலை. அவளுடைய படிப்பும், நாசூக்கும் யோனி என்கிற வார்த்தையை தன் சகமனிதர்களுடனான உரையாடலில் பேசுவதற்கு அவளுக்கு பெரிய மனத்தடையை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கலகக்குரலாக நமக்குத் தெரிகிறது. ஆனால் கிராமத்திலோ நகரத்திலோ ஒரு அடித்தட்டு பெண் ஒரு நாளைக்கு நூறுமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறாள். இதற்காக ‘நானும் கலகக்காரி’ என்று அவள் தோள் தட்டிக் கொள்வதில்லை. ..."
"...சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது. இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்? இந்த பார்ப்பனக் கிழடின் வக்கிரத்தை, துவேஷத்தை எதிர்த்துப் பேச எந்த வெள்ளைத்தோலிகளும்/தோழிகளும் முன்வராமல் இருப்பதற்கும் சாதிதானே காரணமாயிருக்கிறது? ..."
"... ‘சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தேவ வார்த்தைகள். அதை குறை காணும் தகுதி மனிதப்பிறவிகளுக்கு கிடையாது. நம் புலன்களுக்கு அது எட்டாது. இது உடன் இருந்தவர்களுக்குத் தெரியும், அவரை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆதவன் போன்றவர்களுக்கு அது தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முயற்சிகளின் மூலம் தான் அவர் தவறு செய்தார் என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது...."
"..ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்..."
 
நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழாaadhavan_340
(ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள்)
தலைமை : தோழர். பிரளயன், நாடகவியலாளர்
வரவேற்க : தோழர். மினர்வா, கீற்று.காம்
வெளியிட : தோழர். வ.கீதா, ஆய்வாளர்
பெற்றிட : மரு. ஜெயராமன், அபெகா நூலகம், புதுகை
கருத்துரை : தோழர். கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
தோழர். புனித பாண்டியன், ஆசிரியர், தலித்முரசு
தோழர். பி.சம்பத், அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
ஏற்புரை : ஆதவன் தீட்சண்யா
நன்றியுரை : கா.பிரகதீஸ்வரன்

நாள் : 2008 மார்ச் 19நேரம் : மாலை 5 மணி
இடம் : தேவநேய பாவாணர் நூலக அரங்கு, சென்னை-2

வருவீரென : கீற்று.காம் (www.keetru.com) & பூபாளம் புத்தகப்பண்ணை

நண்பர்களே! அயல்தேசத்தில் இருக்கும் எங்களால்தான் முடியாது.. நீங்களாவது இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
-அன்புடன்
ஜமாலன்.

தமிழவன், நாகார்ஜீனன், பிரேம் மற்றும் நான்.

நேற்று நண்பர் பைத்தியக்காரன் ஒரு பதிவு பொட்டிருந்தார் உம்பர்ட்டோ ஈகோவும் உம்மணாம் மூஞ்சியும் - 1! என்று. அதில் என்னைப்பற்றி அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

//உம்பர்ட்டோ ஈகோ எழுதிய புதினங்களில், முதல் இரண்டு நாவல்களை குறித்து பதிவில் எழுதலாம் என நினைக்கிறேன் (ஏன், மத்த மூணு புதினங்கள் பத்தி நாகார்ஜுனன், ரமேஷ் - பிரேம், ஜமாலன், தமிழவன்... யாரும் எழுதலையா? எழுதினது உன் கண்ணுல படலையா?).//

அதற்கு எனது பதில்:

மேற்கண்டவர்களின் வரிசையில் என்னை சேர்க்காதீர்கள். நான் அவர்களது வாசிப்பில் 10 சதமானம்கூட வாசித்தவன் அல்ல. தவிரவும் அவர்களை ஆச்சர்யத்துடன் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு வாசகன் நான். அதனால் அந்த வரிசையில் ஒரு பொறுத்தமற்றவன்.

அப்பதிவில் தமிழவனின் 'ஜே.கே. எழுதிய மர்மநாவல்' பற்றி குறிப்பிட்டிருந்தார்.

//தமிழவன் இதே அமைப்பில் ‘ஜி. கே. எழுதிய மர்ம நாவல்’ என்ற புதினத்தை எழுதியிருக்கிறார். இப்போது பிரதி கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இதில் தமிழகத்தில் நிகழ்ந்த பவுத்த சிதைவுகளை ஆராய்ந்திருக்கிறார்.//

அதற்கு மதி கந்தசாமி பின்வருமாறு பின்னோட்டம் இட்டிருந்தார்.

//தமிழவனின் புதினத்தை எப்போது யார் வெளியிட்டார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? முடிந்தார், அந்தப் புதினத்தைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

உம்பர்ட்டோ ஈகோவின் Name of the Roseமாதிரி இருக்கிறதென்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது. எங்காவது கிடைக்கிறதா என்று தேடப்போகிறேன்.//

நண்பர் பைத்தியக்காரன் மறு பின்னொட்டம் இவ்வாறு இட்டிருந்தார்.

//தமிழவனின் புதினம் குறித்த விவரம் கிடைத்ததும் கண்டிப்பாக தங்களிடம் தெரிவிக்கிறேன். நண்பர் ஜமாலனுக்கு இந்த புதினம் குறித்து என்னைவிட அதிகமாக தெரியும். அவர் தமிழவனின் புதினம் குறித்து ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறார்.//

அவர்களது பின்னோட்டததிற்கான எனது பதிலே இது. இதை சாக்காக வைத்து தமிழவன், நாகார்ஜீனன் மற்றும் பிரேம் குறித்து சில....

என்பதுகளில் தமிழில் இயங்கிவந்த 3 அறிவுஜீவிகள் தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி (சாருநிவேதிதா என்பதிகளில் கலை இலக்கியம் என்கிற நூலில் இவர்களை intellectual giants என்று குறிப்பிட்டிருந்தார்.). இவர்களில் இங்கு தமிழவன் நாவல்கள் குறித்து சில குறிப்புகளை பகிரலாம்.

நண்பர் நாகார்ஜீனன் தனது பதிவொன்றில் எனது ஆசிரிதமிழவன்யர் தமிழவன் என்று குறிப்பிட்டு தமிழவனின் சமீபத்திய நாவலான 'வார்ஷாவில் ஒரு கடவுள்' பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்நாவல் குறித்த கருத்துக்களை தீராநதி பேட்டியில் சினிமாக்காரர்கள் பெரியாரைத் தொலைத்துவிட்டார்கள்-என்கிற தலைப்பில் கடற்கரயிடம் விவாதித்துள்ளார் தமிழவன்.

'ஜே.கே. எழுதிய மர்மநாவல்' என்ற நாவல் அநேகமாக காவ்யா வெளியீடாகத்தான் இருக்கும். காரணம் தற்சயம் என்னிடம் அந்த நாவல் கைவசம் இல்லாததால் சரியாக சொல்ல இயலவில்லை. எனது நண்பர் ஒருவர் பெங்களுர்காரர். அவரை தமிழவனை சந்தித்து சில நூட்கள் வாங்கி வரும்படிச் சொன்னபோது, இந் நாவலை தமிழவன் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பியிருந்தார். (இதை சொல்வதில் ஒரு 'சின்னப் புள்ளத்தனமான' ஆட்டோகிராப் சந்தோஷம்தான். இருந்தாலும் தமிழவன் உங்கள் விமர்சனத்திற்காக என எழுதும்போது அங்கீகாரம் கிடைத்து விட்டதான ஒரு அற்ப சந்தோஷமே.) ஏற்கனவே சென்னை நண்பர் மூலமாக எனக்கு இது அனுப்பப்பட்டது. இரண்டு பிரதிகளும் என்னிடம் இங்கு இல்லை. இந்நாவல் குறித்து எழுதும் எண்ணம் அன்று முதலே உண்டு. இடையில் சில ஆண்டுகள் எழுதுவதை விட்டு விட்டதால் அதில் கவனம் செலுத்தவில்லை. தற்சமயம் பதிவுகள் வந்தபின்தான் எழதத் துவங்கியுள்ளேன். சீக்கரத்தில் அதனுடன் சேர்த்து அவரது புதிய நாவலான 'வார்சாவில் ஒரு கடவுள்' பற்றியும் எழுத வேண்டும்.

ஏற்கனவே தமிழவனின் 'எற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' என்கிற நாவல் மார்க்குவெஸ்ஸின் 'ஒருநூறு வருஷத்து தனிமை' போன்று நாஞ்சில் நாட்டில் நடந்த சுதந்திர போராட்டக்காலம் துவங்கி சமீபத்திய சாதிய முரண்களினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'மாஜிக்கல் ரியாலிஸ' நாவல். அது குறித்த எனது விமர்சனம் ஒன்று தீபம் பத்திரிக்கைக்கு எழுதியது. அந்த பிரதி என்னவாகியது என்றே தெரியவில்லை. அது தீபத்திலும் வெளியாகவில்லை. இந்நாவல் குறித்து வந்த எதிர் வினைகளை தொகுத்து தனது பதில்களுடன் தமிழவன் ஒரு சிறு பிரசுரம் ஒன்றை 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டார்.

அதன்பின் 'சரித்திரத்தில் படிந்த நிழல்கள்' என்கிற நாவல் வெளிவந்தது. அந்த நாவல் மில்லார்ட் பாவிக்கின் (நாகார்ஜீனன் பாவிக்கின் எழுத்துபற்றி இங்கு பதிவிட்டுள்ளார்.) 'கஸாக்கர் டிக்ஷனரி்' என்கிற நாவலை ஒட்டி அமைந்துள்ளதாக ஒரு விமர்சனம் உண்டு. அந்நாவல் இந்திய திராவிட இயக்கங்கள், ஈழப்போராட்டம், பாபர் மசூதி இடிப்பும், இந்துத்வா இயக்கங்கள் பற்றியதான விமர்சனங்களை அடிப்படையகாகக் நாகார்ஜீனன்கொண்ட இன்றைய கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் எம்ஜியார் ஆகியோரின் பிம்பங்களை அடிப்படையாகக் கொண்டு எழதப்பட்ட ஒரு 'அழித்தெழுதப்பட்ட பிரதி' வடிவிலான நாவல். அது குறித்து ஒரு விரிவான விமர்சனம் காலக்கறி (நகலச்சு இதழில் - Xeroxed magazine) வெளிவந்தது. அதை தமிழவன் படித்து எனது சில விமர்சனங்கள் குறித்து ஒரு விளக்க கடிதம் எழுதி அதையும் காலக்குறியில் வெளியிட்டுள்ளோம். பிரச்சனை அதன் கோப்பு என்னிடம் இல்லை. மறு தட்டச்சு செய்ய உள்ள அலுப்பால் பதிவில் வெளியிடவில்லை. பிறகு எனது 'மொழியும் நிலமும்' கட்டுரைக்கு ஒரு நீண்ட கடிதம் அவர் எழுதி அதற்கு நான் பதில் எழுதி அதில் ஒரு விவாதம் நடந்தது.

அடுத்த நாவலே 'ஜே.கெ. எழுதிய மர்ம நாவல்'. இது உம்பர்த்தோ எக்கோவின் 'நெம் ஆஃப் த ரோஷஸ்' நாவலைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. (உம்பர்ததோ எக்கோ பற்றிய ஒரு அறிமுகக்கட்டுரை காலக்குறியில் எழுதினோம். அது காலக்குறி மீளபதிவில் வரும்.) இந்நாவல் பழைய புத்தகக் கடையில் கண்டெடுக்கப்பட்ட அழிந்து போன ஒரு பழைய நாவலினை மீள்கட்டமைப்பு செய்யும் வண்ணம் எழதப்பட்ட நாவல். பெளத்த மடாலயங்கள் குறித்தும் ஈழப்போராளிகள் குறித்தும் மதம் சார்ந்த விசாரணையாகவும் நகரும் நாவல் இது.

தற்சமயம் 'வார்ஸாவில் ஒரு கடவுள்' என்கிற நாவல் வெளிவந்துள்ளது. அந்நாவல் என்னிடம் இல்லை. புத்தகக் கண்காட்சியில் எனது மகனை விட்டு வாங்கி வைத்துள்ளேன் (நண்பர் சுந்தர் உதவியுடன்). தமிழவனின் எழுத்துக்களின் மீது எனக்கு தீவிர ஈடுபாடு உண்டு. காரணம் 'கன்னீர் பூக்கள்' 'வைகைறை மேகங்கள்' என்று எனது பதின்ம வயதில் படித்து கிளர்ச்சியுற்று 'பாவாடை கட்டிய பாவைகள் மற்றும் சன்னல் பூக்கள்' பற்றிய தன்னெழுச்சிக் கவிதகளை கக்கிக் கொண்டிருந்த காலங்களில் தமிழவனின் 'புதுக்கவிதை நாலு கட்டுரைகள்' தான் எனக்கு இந்த இலக்கிய உலத்தையே காட்டியது. எங்களுர் பழைய நூலகத்தில் இந்த நூலை எதேச்சையாக எடுத்துப் படிக்க அன்று ஏற்பட்ட ஒரு மனக்கிளர்ச்சியின் விளைவே இன்றைய எனது தேடல்கள். எனது ஒரு நூலையாகவது எங்களுர் நூலக அடுக்கில் வைத்து விடவேண்டும் என்கிற 'லட்சிய வெறி' ஏற்பட்டது அன்றுதான். கருப்பு நிற அட்டையில் அட்டைப் பூச்சிகள் போல நெழியும் எழுத்தக்களில் உள்ள அந்த நூல் புதுக் கவிதைகளை புறவயப் பார்வையில் கோட்பாட்டு அடிப்படையில் விமர்சிக்கும் ஒரு நூல். அதில் 'ரெய்னீஷ் அய்ய்ர் தெருக்காரனும் சாணை பிடிப்பவனும்' என்கிற வண்ணநிலவன் கவிதைப் பற்றிய திறணாய்வுதான் தீவிரமாக இலக்கியங்களை நோக்கியும் எனது 'நெம்பகோல்' கவிதைகளை பார்த்து என்னையே வெட்கப்படவும் வைத்தவை. இலக்கியத்தை ஆழ்தளத்தில் சென்ற அனுகும் முறையை உருவாக்கியது அப்பார்வை.

மத்திய கால கிறித்துவ மடாலயங்கள் பற்றிய ஒரு வரலாறே எக்கோவின் நாவல் என்றால் அதனை தமிழக சூழலில் வைத்த புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மறுவாசிப்பு நாவலே ஜே.கே. எழுதிய மர்மநாவல். பெங்களுர் காவ்யாவில் பெரும்பாலான தமிழவன் நூற்கள் கிடைக்கும். தமிழவனின் 'ஸ்டரெக்சரலிஸம்' 'தமிழும் குறியியலும்' மற்றும் 'படைப்பாளி படைப்பு வாழ்க்கை' என்கிற 3 நூற்களும் அமைப்பியல் துவங்கி பின் அமைப்பியல் வரை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூற்கள். இன்று பின்நவீனத்தவம் என்று பேசப்படும் வார்த்தைக்கு அடிப்படை போட்டது அந்த நூலே. அதனை நாகர்ஜீனன், எம்.டி.எம், அ. மார்க்ஸ் மற்றும் பிரேம் ஆகியோர் தொடர்ந்தனர்.

அரசியல் மற்றும் கோட்பாட்டுரீதியான சிந்தனைகள் தமிழவன், கொவை ஞானி மற்றும் எஸ்.வி.ஆர் அளவிற்கு இன்றைய அறிவுஜீவிகளால் காத்திரமாக செய்யப்படவில்லை என்கிற ஒரு சின்ன வருத்premதம் எனக்கு இப்பொழுதும் உண்டு. நண்பர் பிரேம் (பிரெம் பற்றிய அறிமுகம் இங்கு மதிகந்தசாமி அவர்களால் DJ விடமிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.) மற்றும் நாகார்ஜீணனின் எழுத்துக்கள் ஓரளவு கோட்பாட்டுரீதியாக பேசக்கூடியவை. எம்.டி.எம்-மின் பின் அமைப்பியல் அறிமுகம் பற்றிய நூலுக்குப்பின் எதுவும் படிக்க கிடைக்கவில்லை. இவைகள் எனது புரிதலுக்கு ஏற்புடையவையாக உள்ளன. மற்ற விமர்சன எழுத்துக்களில் அகவய நோக்கு அல்லது அழகியல் ரசனைவாதப் புரிதலே அதிகமாக உள்ளது. இக்கருத்தை ஒப்பீட்டுரீதியில் எடுத்துக் கொள்ளுங்கள். நான் படித்தவை என்பதில் எனக்கு தெரியாத சிறந்த விமர்சனங்கள் இருக்கலாம். சுட்டிக்காட்டினால் பயனுள்ளதாக இருக்கும். இங்கு பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக கருதியே இதனை எழுதினேன். பிரேமின் பேச்ச - மறுபேச்சு பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பை இங்கு பார்க்லாம்.

நண்பர்கள் நாகார்ஜீனன் மற்றும் பிரேமிடம் நாட்கணக்கில் உடன் தங்கியும் பேசியும் பழகியும் உள்ளேன். தமிழவனை ஒருமுறைதான் சந்தித்துள்ளேன் இல்லை பார்த்துள்ளேன். அதுவும் அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி மற்றும் ரவிக்குமார் அடங்கிய நிறப்பிரிகை குழுவால் தஞ்சையில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில். கூட்டம் முடிந்து நாங்கள் எல்லோரும் அருகில் உள்ள ஓட்டலில் இரவு உணவு முடித்துவிட்டு உடனே தமிழவனை பெங்களுர் பேருந்தில் ஏற்றிவிட்டோம். அப்பொழுது அவரிடம் நான் பேசியது ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளே. அதன்பின் அஞ்சலில் கடிதத் தொடர்பில் என்னை அவர் அந்த ஒரு சில நிமிட பழக்கத்தில் அடையாளம் கண்டுகொண்டார். அவர் போலந்து வார்சா பல்கலைக்கழகம் போனபின் ஒரு அஞ்சல் மட்டுமே. எம்.டி.எம். நடத்திய மேலும் பத்திரிக்கையில் எனது கட்டுரைகள் வெளிவந்தபோது அதைப்பற்றி பேசியதாக நண்பர் பொதி கூறினார். தமிழவனைப்போலவே எம்.டி.எம்.மையும் பலமுறை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்னும் எண்ணமாகவே உள்ளது. தற்சமயம் தமிழ் பத்திரிக்கை சூழல் அந்த பழைய காலங்களுக்குள் திரும்பியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றில் இரண்டுமுறை நடக்கும் என்கிற மார்க்சின் கூற்று இதிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் நேரடித்தொடர்பு அருகிவிட்டது ஆனால் அவர்களை வாசிப்பது மட்டும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

பின்குறிப்பு: தமிழ் பதிவுலக முன்னொடிகளில் ஒருவரான மதி கந்தசாமிக்கு பதிவுலக வீச்சின் விளைவு பற்றிய ஒரு சிறுகதையாடல். இன்று இப்பதிவு எழுதிக் கொண்டிருந்த வேளையில் நண்பர் பிரேம் உரையாடியில் (சாட்டில் நண்பர் டிபீசீடி உபயம்) பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தை ஆச்சர்யமாகக் கேட்டார். அவர் கோவை சென்றிருந்தபோது சில ஆய்வு மாணவர்கள் அவரிடம் நானும் அவரும் 90-களில் பழகிய நாட்களைப் பற்றிக் கூறியுள்ளார்கள். அவர் என்னிடம் இவைகள் எப்படி அவர்களுக்கு தெரிந்தன என்று? நான் எனது பதிவொன்றில் கோபி கிருஷ்ணன் பற்றி எழுதியதில் அந்த அனுபவங்களைப்பற்றி கதைத்திருந்தேன். அதைதான் அவர்கள் அவரிடம் பேசியிருக்க வேண்டும். பதிவுலகம் இப்படி முகந் தெரியாதவர்களிடமும் அறிமுகத்தைக் கொண்டு செல்கிறது என்பது நமக்கு எல்லாம் மகழ்சியான ஒன்றுதானே.

அன்புடன்
ஜமாலன்.

படங்கள்: தமிழவன், நாகர்ஜீனன் மற்றும் பிரேம்.

மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்

மொழியும் நிலமும் என்கிற இந்நூல் 2003-ல் பதிபிக்கப்பட்டது. இது 1990-துவங்கி 2000-ம் வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு நண்பன் கானின் முயற்சியால் வெளியடப்பட்டது. இந்நூல் வெளிவந்தபோது சிறுபத்திரிக்கை ஒன்றில் எழுதப்பட்ட இந்த அறிமுகக் குறிப்பினை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தார். அதுவே இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. வலைப்பதிவு நண்பர்கள் சிலர் இதன் பதிப்பகம் பற்றிய விபரங்களை கேட்டள்ளனர். அவர்களுக்கும் மற்றும் பொதுவாகவும் ஒரு அறிமுகமும் இதில் செய்யப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------

மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்

----------------------------------------------------------------

PICT1899





மொழியும் நிலமும் (கட்டுரைகள்) -ஜமாலன்

வெளியீடு: புதுமலர் பதிப்பகம்

176-10, வைகை தெரு,

ஈரோடு 638 004.

பக்: 240. விலை: ரூ. 100. (பதிப்பு: 2003)

விளிம்பு நிலையில் அரை நாடோடி வாழ்க்கை வாழும் இனத்தாரின் பஞ்சாயத்திற்குப் போயிருந்தேன், அங்கு செருப்பினால் இன்னொருவரை அடித்தவருக்கு ரூ. 2 அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் 'செருப்பால் அடிப்பேன்' என்று பிறரைத் திட்டுகிறவருக்கு ரூ. 250 அபராதம் என்று கேள்விப்பட்டேன். காரணம் கேட்டபோது, "ஒரு சொல் வெல்லும்: ஒரு சொல் கொல்லும்" என்று பதில் கிடைத்தது. புலவர் யார் மீதாவது 'அறம்' வைத்து பாட்டு இயற்றினால் சம்பந்தப்பட்டவர் இறந்துவிடுவார் என்பது நாட்டார் நம்பிக்கை. தமிழர்களுக்கு எப்பவும் மொழிமீது ஒருவிதமான பயம். மொழி வழியே புனையப்படும்போது மந்திரங்கள் அதியற்புதமான ஆற்றல் மிக்கவை என்ற நம்பிக்கை நிலவுகிறது. மொழியின் சாத்தியப்பாடுகள் யாவை? மொழியின் விநோதங்கள் என்ன? பல்வேறு கேள்விகள் புதிராக வெளிப்படுகின்றன. இந்நிலையில் மொழி பற்றிய விசாரணையைத் தொடங்க பின்நவீனத்துவக் கோட்பாடுகள் பெரிதும் உதவுகின்றன. கலவைத் தொடர்கள் மூலம் வாசகரை கதறடித்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சூழழில், எளிய முறையில் கோட்பாடுகளை விவாதிக்கும் ஜமாலனின் 'மொழியும் நிலமும்' புத்தகம் அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான வரவு ஆகும்.

மார்க்சிய பின்னணியில் பின் நவீனத்துவக் கோட்பாட்டினை பயன்படுத்தி இலக்கியத்தினையும் சமூகத்தினையும் ஆராய்ந்நதிடும் இவரது விமர்சன அனுகுமுறை தனித்துவமானது. ஒரு பிரச்சனையின் பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தீவிரமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் தமிழ் இலக்கியம்/சமூக விமர்சனஙகளுக்கு வளம் சேர்க்கின்றன.

தமிழர்களுக்கு எல்லாமே நம்பிக்கை சார்ந்தவை. மனித இருப்பு முதலாகப் பிரபஞ்சத்தின் பேரியக்கம் வரை, 'காப்ஸ்யுல்' வடிவில் விடைகள் தெளிவாக உள்ளன. யார் வேண்டுமானாலும் தத்தம் நோக்கத்தினுக்கேற்ப உருவேற்றிக் கொள்ளும் வகையில் தமிழ்ச் சூழல் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஜமாலனின் கட்டுரைகள் தமிழரிடையே அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன், வறண்டு இறுகியிருக்கும் தமிழ் மனோபாவத்தில் ஊடுறுவ முயலுகின்றன.

மொழியானது மனிதனுக்கு ஆறாவது புலன், அது சமூகத்தினைக் கட்டமைப்பதுடன், கடந்தகாலம் என்ற வரலாற்றினையும் ஏற்படுத்துகிறது. 'அர்த்தப்படுத்துதல்' மூலம் ஒவ்வொரு மொழியும் புதிர்த் தன்மையுடையதாகின்றது. ஒரு மொழிக்கு எழுதப்படும் இலக்கணத்தின் தேவை என்னவென்பது முக்கியமான கேள்வி. பண்டைத் தமிழின் இலக்கணம் பற்றி விளக்கிடும் 'தொல்காப்பியம்' குறித்து ஏற்கனவே தமிழவன், பிரேம்-ரமேஷ் பின் நவீனத்துவ நோக்கில் ஆராய்ந்துள்ளனர். அவர்களுடைய வழியில் பயணப்படும் ஜமாலன், இன்னும் ஆழமான நிலையில் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் நுட்பமாக ஆராய்ந்து தொல்காப்பியப் பிரதியை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். இலக்கணம் மூலம் பல்வேறு வட்டார மொழிகள், குறுமொழிகளை ஒருங்கிணைத்துப் பேரினச் சமூகம் தோற்றுவிக்கப்படுகின்றது. மொழியானது செறிந்த சமூகக் கட்டமைப்பின் அடித்தளம் என்ற புரிதலுடன் தொல்காப்பிம் ஆராயப்பட்டுள்ளது. "தொல்காப்பியமானது தமிழின் ஐந்திணை வாழ்விற்கு வரையறைகளும், இலக்கணங்களும் தொகுக்கும் போக்கில் ஒரு பொது அறிதலைக் கட்டமைக்கிறது. அல்லது சிறுசிறு குடிகளிடம் நிலவும் அறிதல்களை ஒருமுகப்பட்ட அறிதலுக்குள் தொகுக்கிறது" என்று மொழியைச் சமூக செயற்பாட்டின் தளமாக ஜமாலன் அறிமுகப்படுத்துகின்றார்.

பண்டைத் தமிழரின் மதமானது, ஊழ்வினை பற்றிய நம்பிக்கை, நாட்டார் தெய்வ வழிபாடு, வெறியாட்டம், நடுகல், சகுனம் பார்த்தல், இயற்கை வழிபாடு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. பல்வேறு தொன்மங்கள், பழமரபுக் கதைகள் வடமொழி இலக்கியத்திலிருந்து தமிழ் மையப்படுத்தப்பட்டதன் விளைவாகத் தமிழரின் மதநம்பிக்கையானது வைதிகத்துடன் கலந்தது. இத்தகைய போக்கு காரணமாகத் தமிழக நில எல்லைகள், இந்தியப் பரப்புடன் உள்ளடக்கப்பட்டு, அதற்கேற்ப தமிழ்ப் பெருங்கதையாடல் தொடங்கப்பட்டது. தமிழ்க் கட்டுமானத்துடன் கலந்திடும் புதிய கலப்புகள், நாளடைவில் எல்லாவற்றையும் மாற்றி எழுதுவதற்கான களத்தினை உருவாக்கின. தமிழர்களின் மனவோட்டம் மறுகட்டமைப்பிற்கு உட்படுவது மெல்லத் தொடங்கியது. இத்தகைய மறுகட்டமைப்பினை நிறுவுவதே மொழியின் முக்கியச் செயற்பாடு. இச் செயற்பாட்டின் முதன்நிலை முயற்சியாகத்தான் தொல்காப்பிம் பிரதி உருவானதா? அல்லது தொல்காப்பியம் உருவாக்க விரும்பிய தமிழன் யார்? என்று அடிப்படையான கேள்வியை ஜமாலன் எழுப்புகின்றார். இதுவரை தமிழ்ப் பேராசிரியர்களால் தொல்காப்பியம் என்றாலே புனிதமானது எனவும் தமிழ் அடையாளத்துடன் தொடர்புடையது எனவும் முன்னிறுத்தப்பட்ட சொல்லாடல்கள் தருக்க நெறியில் மறுதலிக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு அடையாளத்தினைத் தாங்கிக்கொண்டு விரைத்து நிற்கும் எல்லா மேன்மைகளையும் கவிழ்த்துப்போட வேண்டிய காலகட்டத்தில், தொல்காப்பியப் பிரதியும் விதிவிலக்கு அல்ல.

மொழியானது அடிப்படையில் அதிகாரத்தன்மையுடையது. மொழியின் வழியாக நிறுவப்படும் நிறுவனங்கள் அதிகாரத்தின் மையங்களாக விளங்குகின்றன. அதிகாரம் ஒவவொரு உடலிலும் பாய்ந்து பாசிசத்தின் வேர்களைப் பரப்புகின்றது. அதிகாரங்களுக்கிடையிலான மோதல் இன, மத, மொழி, சாதிப் பேராட்டங்களாக வடிவெடுக்கின்றன. இந்தியாவில் மொழியானது மதத்தின் பெயரால், பாசிச வடிவமெடுத்து, அதிகாரத்தின் குவிமையமாகிவிட்டது. மொழி, மத ரீதியில் புனித உடல்களைக் கட்டியமைப்புதாகக் கூறி, பாசிச உடல்களைக் கட்டியமைக்கிறது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த பிரதேசத்திலிருந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தோன்றின என்று எளிதாகச் சொல்லாடலை வடிவமைத்திருக்கலாம். ஆனால், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது என்ற புனைவு மொழியானது, தொடாந்து இரு நாடுகளிலும் பாசிச உடல்களைத் தயாரிக்கின்றது. இதற்கு எதிரான கலகமே இன்றைய அவசரத் தேவையாக இருக்கின்றது என்று வலியுறுத்தும் ஜமாலனின் அரசியல் பார்வை தொலைநோக்குடையது.

இலக்கியத்தின் ரசனைவயப்பட்ட நிலையில் அனுபவித்து நலம் பாராட்டுவதனையே விமர்சனம் என்று கருதிடும் பொதுப்புத்தி தமிழில் உள்ளது. அழகியல் வயப்பட்ட பார்வை என்று பிரதியினை அப்பழுக்கற்றதாகக் கருதி, புனிதப்படுத்தும் போக்கு, ஒரு வகையில் அதிகாரத்துடன் தொடர்புடையது. இத்தகைய அழகியல், நாட்டார் கலைகள், விளிம்புநிலை மக்களின் பண்பாட்டு மீது செலுத்தும் மூர்க்கமான வன்முறை என்பது ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. தேவரடியார் ஆடினால் 'சதிர்' என்ற இழிவாகக் கருதப்படும் கலை, உயர்ஜாதிப் பெண்கள் ஆடினால் 'பரதம்' என்று புனிதப்படுத்தப்படுகின்றது. எனவே இலக்கியப் பிரதியனை அழகியல் ரீதயில் அனுகுதல் என்பது பொருத்தமற்றது என்ற ஜமாலனின் வாதம் ஏற்புடையதகாகவே உள்ளது.

யதார்த்தம் என்பது மொழி விளையாட்டின்மூலம் எற்படுத்தப்படும் புனைவு. அது வாசிப்பில் ஒருவகையான மயக்கத்தினைத் தரக்கூடியது. இதனால் வாசகன், மொழியின் வழியே கட்டமைக்கப்பட்டஒழுங்கமைவிற்குள் சிக்கிக் கொள்கின்றான். இலக்கியத்தில் ஒற்றைப் போக்கு மட்டும் சாத்தியம் என்ற நிலைப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனால் அதிகார கட்டமைவிற்குள் வாசகன் சிக்கும் நிலையேற்படுகிறது. தமிழின் தொடக்க கால நாவலான கமலாம்பாள் சரித்திரம் அருமையான இலக்கியப் பிரதியென்று தொடர்ந்து விமர்சகர்களால் போற்றப்படுகின்றது.

புராணக் கதைமாந்தர் போல லட்சியமயப்படுத்தப்பட்ட் பாத்திரங்கள், வைதீக மதத்தின் தத்தவத்தினை உள்ளடக்கிய கதைப்போக்கு என்று நாவலானது ஒற்றை மையக் கதையடலை வாசகருக்குப் போதிக்கிறது. இந்நாவல் வேதாந்தப் போக்குக் காரணமாகச சிறப்பிக்கப்பட்டமையினால், தமிழின் மரபு வழிப்பட்ட கதையாடல் சிதைக்கப்பட்டுவிட்டது. இதனால் 'யதார்த்தம்'என்ற ஒற்றைப் போக்கிலிருந்து தமிழ் கதையாடல் விலகிட ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்காலம் கடந்து விட்டது. நாவலின் மூலம் அறம் காக்கும் உடல்களும், தூய்மையான உடல்களும் முன்னிலைப்படுத்துவது, வாசகரின் பன்முகத் தேடலினைச் சிதைத்துப் பாசிசத்தினை ஏற்கும் உடல்களைத் தயாரிப்பதற்கான களமாகி விடுகின்றது.

புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நரகம்' 'நாரத ராமாயணம்', மெளனியின் சிறுகதைகள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில், மூலப் பிரதிகள் நுட்பமாகக் கட்டுடைக்கப்பட்டுள்ளன, பிரதி ஆக்கத்தில் புதைந்துள்ள நுட்பமான அம்சங்களை விளக்குவதில் ஜமாலனின் கோட்பாட்டு அறிவு வெளிப்பட்டுள்ளது. இலக்கியப் பிரதிகளைக் கட்டுடைக்கும் பணியை இன்னும் விரிவான தளத்தில் ஜமாலன் தொடர்ந்து செய்திட வேண்டும். ஏனெனில் அதற்கான தேவை தமிழில் உள்ளது.

'மத அடிப்படைவாதம்' குறித்து விரிவாக ஜமாலன் எழுதியுள்ள கட்டுரை முக்கியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. 'மதவாதம் பற்றி ஊடகங்களினால் வடிவமைக்கப்படும் பொதுப் புத்திக்கு எதிராக விழிப்பு அடைய வேண்டிய நேரமிது. இந்து/இந்தியா/இந்துத்துவா என்று மையப்படுத்தப்படும் அரசியல் சூழலில், மத நம்பிக்கையற்ற முஸ்லிம்களுக்குக்கூட பெரும் பிரச்சினை எதிர்நோக்கியுள்ளது. பரஸ்பர அவநம்பிக்கை, பதற்றம், கையறுநிலை, கண்காணிப்பிற்குள்ளாவது காரணமாக முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுங்கும் நிலையேற்பட்டுள்ளது. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அதிகார பீடங்கள் கிறிஸ்தவ மதத்துடன் உற்சாகமாகக் கைகோர்த்துள்ளன. அரேபிய நாடுகளில் ஜனநாயகம் துளியும் வளர்ந்த விடாமல் தடுத்திடுவதற்காக அரசியலில் மதவாதச் சக்திகளைத் திட்டமிட்டு வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கும் அமேரிக்க ஏகாதிபத்தியம் இன்னொருபுறம் 'முஸ்லிம் மத அடிப்படைவாதம்' என்று சொல்லாடலைக் கட்டியமைக்கின்றது. அமேரிக்காவின் இரட்டை வேடமானது, அரேபிய நாடுகளிலுள்ள எண்ணெய் வளத்தினைச் சுரண்டுவதற்காகத்தான். இதனால் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று பட்டியல் தொடர்கிறது. தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகில் 'மத அடிப்படைவாதம்' குறித்து நிலவும் கருத்தியலுக்கு மறுதலையாக ஜமாலனின் கட்டுரை உள்ளது. அரசியலை அடிப்படையாகக் கொண்டு மதரீதியில் அதிகாரம் ஏற்படுத்தும் விளைவுகளை நுணுக்கமாக விளக்கியுள்ளது கட்டுரை.

இன்று உலகமயமாக்கலின் கோர விளைவுகள் ஒருபுறம், உலகத்துச் சண்டியரான அமேரிக்கா திட்டமிட்டு ஏற்படுத்தும் போர்கள் இன்னொருபுறம்... இத்தகைய சூழலில், 'தூய இலக்கியவாதி' என்று யாரும் ஒதுங்கிவிட இயலாது. நெருக்கடிகள் மிகுந்திடும் காகலகட்டத்தில் வாழ்வின் ஒவ்வொரு புள்ளியிலும் நுண் அரசியல் ஏற்படுத்திவரும் தாக்கங்களை மார்க்சியம், பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் ஜமாலன் விளக்கியவற்றைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இரு மாறுபட்ட கோட்பாடுகளிலிருந்து வேண்டியவற்றை மட்டும் எடுத்துப் பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது. அவற்றில் ஜமாலனின் ஆழ்ந்த புலமையும் சுய சிந்தனையும் வெளிப்பட்டுள்ளன. தமிழில் நவீன இலக்கியத்தினையும், இலக்கிய விமர்சனத்தினையும் அடுத்த தளத்திற்கு நகர்த்திட முயலும்/விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் இந்தப் புத்தகத்தினை வாசித்து விவாதத்தினை தொடங்கிட வேண்டும். ஏனெனில் இது அடிப்படையில் வாசிப்பினை மட்டுமல்லாமல், செயலூக்கம் மிக்க நடைமுறையினையே கோருகின்றது.

-ந. முருகேச பாண்டியன்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.