"இடமாற்றம்" என்கிற தலைப்பில் 11-ஆம்வகுப்பில் "நீ மலர்/நான் செடி/ஏனென்றால்/இடம் மாறுவது/நீ தானே" - என்று வகுப்பு பெண்ணை மனதில் வைத்து ஒரு கவிதை எழுதி அதை நாங்களே அச்சடித்த பத்திரிக்கையில் போட்டு இறகு முளைத்த குதிரையில் ஏறி கவிஞர்களை எல்லாம் ஏளனமாகப் பார்த்து உலகை ஒரு சுற்று சுற்றி தட்டாமலை ஆடிய தலைப்பு இது. முதல்காதல் முதல்கடிதம் முதல்மணைவி முதல்தாய் முதல்அப்பா முதல்அண்ணன் முதல்முத்தம் முதல்ஜீரம் இப்படி பல முதல் (சினமாக் கவிஞர்களுக்குத்தான் தெரியும் மற்ற முதல் எல்லாம்) போல இதுவும் ஒரு முதல்கவிதை... வார்த்தை மாம்சமானது அதனால் அதனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன் இங்கு.
ஒருவாரம் தமிழ்மணத்தின் 'பால்கனி'யில் (பால்கனி பாப்பா என்றெல்லாம் அரசியல் எல்லாம் பேசமாட்டேன்) நின்று கொண்டு எனது முதல் அறிமுகத்தில் குறிப்பிட்டது போல நடத்திய ஜீகல்-பந்தி அல்லது கதம்பக் கச்சேரி இன்றுடன் முடிவடைகிறது. அதற்கு முதலில் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.
இந்த ஒருவாரத்தில் உற்சாகப்படுத்திய நண்பர்கள், புதிதாக வந்து பின்னொட்டமிட்டு வாழ்த்திய, படித்து விமர்சித்த நண்பர்கள், எட்டிப்பார்த்துவிட்டு நேரத்தை வீணாக்காமல் திரும்பி போனவர்கள், படித்தவிட்டு 'என்னத்த எழுத' என்று பின்னோட்டமிடாமல் போனவர்கள், மின்அஞ்சலில் வாழ்த்து சொல்லிய நண்பர்கள் என எல்லோருக்கும் என் நன்றிகள்.
இந்த ஒரு வாரக்காலத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. குஜராத்தில் முஸ்லி்ம்களுக்கு எதிராக நடந்த கோத்ரா கலவரம் ஒரு இனசுத்தீகரிப்பு படுகொலைகள் என அம்பலமாக்கியிருக்கிறது தெஹல்கா. வழக்கம்போல் தமிழகம் இரண்டு வார்ததைகளை மட்டும் திருத்திவிட்டு அமைதியாகி விட்டது "தீபாவளி ரிலீஸ் என்ன?" என்று. ஒன்று 'நடந்த' என்பதை 'நடத்திய' மற்றொன்று 'கலவரம்' என்பதை 'திட்டமிட்ட படுகொலை' என்பதாக. இவ்விரு வார்த்தைகளை திருத்த தெஹல்கா பத்திரிக்கை கடுமையாக ஆறு மாதங்கள் உழைத்திருப்பது அப்படியே மெளனத்தில் காற்றில் பறந்து கலந்து விட்டது. இதற்கான கண்டணத்தை தோழர் கார்கியின் மீள்பதிவு வழியாக முன்வைத்திருக்கிறேன்.
மற்றொன்று ஈழத்தில் அதிகரிக்கும் இனப்படுகொலைகள். உலக நாகரீகம் வெட்கித் தலைகுனியும் இந்த பாசிச கொடூரத்தை பதிவு மூலமாக கண்டித்திருக்கிறேன். இவை இரண்டைத் தவிர மருத்தவர் புகழேந்தியை அறிமுகப்படுத்தி எனது செயல்பாடுகள் பற்றிய குற்ற உணர்வை சமப்படுத்த முயன்றேன். அதை ஒட்டி வந்த டாக்டர் புருணோவின் அமெரிக்க மருத்துவ சோதணையை அம்பலப்படுத்த பயன்படுத்திக் கொண்டேன். நண்பர் ராமாநுஜத்தின் 'காந்தியின் உடலரசியல்" என்கிற ஒரு நல்ல நூலை அறிமுகப் படுத்தினேன். இவற்றைத் தவிர மற்றெல்லாம் வழக்கம்போல் சுய புலம்பல்கள் அல்லது பொதுப் புலம்பல்கள்தான்.
நாளைமுதல் உங்களுடன் நானும் தமிழ்மணத்தின் உள்கட்டிற்கு இடம்பெயர்கிறேன் புதிதாக வரும் நட்சத்திரத்தை வாழ்த்தி. இனி உள்கட்டில் அலையும்போது உங்களை எதிர்கொண்டு கைகுலுக்கலாம் அல்லது மோதி கீழே விழலாம்.
எனது ஜமாலன் என்கிற புனைபெயருக்கு காரணமான வலைப்பதிவின் முன்னொடியான மாலன் மின் அஞ்சலில் வாழ்த்தினார். ஆணந்த விகடனில் பணியாற்றும் அருள் எழிலனும் மின் அஞ்சலில் வாழ்த்தினார். இருவருக்கும் நன்றிகள்.
நண்பர்களின் எதிர்பார்ப்பை ஓரளவாவது பூர்த்தி செய்திருப்பேன்.. இல்லாவிட்டாலும் உங்களை விடுவதாகவும் இல்லை.
நகுலன் கவிதைப்போல...
யாரது ராமச்சந்திரனா என்றேன்..
ஆம் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கெட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்ல.
ஆம் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கெட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்ல.
- இனி ராமச்சந்திரன்போலத்தான் நமது அடையாளங்கள் முட்டி மோதி அலைவதைத்தவிர..
மீண்டும் ஒருமுறை அனைவருக்கம் நன்றி கூறி விக்ரமாதித்யன் கவிதையுடன் முடிக்கிறேன்.
வித்தியாசம் அதிகமில்லை
நான் கவிதை எழுதுகிறேன்
என் மகன் தீப்பெட்டி படம் சேகரிக்கிறான்.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கம் நன்றி கூறி விக்ரமாதித்யன் கவிதையுடன் முடிக்கிறேன்.
வித்தியாசம் அதிகமில்லை
நான் கவிதை எழுதுகிறேன்
என் மகன் தீப்பெட்டி படம் சேகரிக்கிறான்.
அவ்வளவுதான்....
அன்புடன்
ஜமாலன்.
ஜமாலன்.





